nandriSuper
nandriSuper
nandrinice ud
apdi enna thayi panna?3.கதை ஒன்று ஆரம்பம்
அன்னை சொல்லிவிட்ட வார்த்தைக்கு மறுபேச்சு இல்லை என்பதைப் பலமுறை பட்டுத் தெரிந்தாலும் இன்னும் முழுதாக புரியவில்லை போலும்! விழியனுக்கு மட்டும் இல்லை இது நம் அனைவருக்குமே பொருந்தும்.
எப்போதும் போல் இப்போதும் தாய் சொல்லை தட்டாது ஊருக்கு கிளம்பிவிட்டான்!
போன வாரம் வரை சம்பள உயர்வை முன்னிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்! அன்று போயிருக்க வேண்டிய தனது அன்னையைத் தாமதமாக கிளம்பச் சொல்லியதன் பலன் அவள் கிளம்பிய தினம் 40% டிக்கெட் கட்டணம் அதிகம்!
எதற்கெல்லாம் கவலைப்பட இந்த நாட்டில்?! லட்சங்களில் சம்பாதித்தாலும் செலவு என்பது எல்லோருக்கும் பொது தானே?நாடாளுபவர்களும் மக்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள அம்மக்களைப் போல் பொது துறைகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தால் தேவலை..!
சே! இந்த பஸ்ஸில் ஏறியதும் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறது! டென்ஷனான விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்றபடி தலையை அசைத்து விட்டபடி, வெண்பாவை மனதுக்குள் இழுத்துக் கொண்டு வந்தான்.வெண்பா…பா….என்ன பொண்ணு டா அவ!அவளை நேரில் பார்த்து, சில வருடங்களாவது இருக்கும்! ஆனால் இப்போது அவளை நினைத்தாலும் சந்தோஷம் பெருக்கெடுத்தது!
மாமன் மகள் என்பதால் ஒன்றாய் விளையாடிய காலம் எல்லாம் உண்டு! அதெல்லாம் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு. அவன் செய்த சின்னதொரு அவசரக் குடுக்கை செயலில், வெண்பா அவனைக் கண்டால் ஒதுங்கி போகுமளவிற்கு மாறிவிட்டிருந்தாள்.
பஸ்ஸில் ஏறியவன்,இளையராஜாவின் இசையை செவியில் நிரப்பி கொண்டு சாய்வாய் அமர, பழைய விசயங்கள் படம் போல் மனதில் வலம் வந்தன! டீனேஜ் பருவத்தில் இருந்தவனின் மனம் படிப்பை தவிர்த்து மற்ற எல்லாவற்றிலும் கவனம் செலுத்திய சமயம் அது!
அப்படி கவனம் செலுத்தியதில் முதல் நிலையில் வெண்பா! துறுதுறுவென்று அவள் இருப்பதற்கும், அவள் பேசும் போது கூடவே பேசும் கண்களுக்கும் , அவள் கன்னத்தில் விழும் கன்னக் குழி , அவள் சிரிப்பு எல்லாவற்றுக்கும் அவன் அப்போதே அடிமை! நண்பர்களுடன் பேசுகையில், தனக்கு ஒரு மாமன் மகள் இருக்கிறாள் என்று சொல்வதில் அவனுக்கு ஏக பெருமை!
வெண்பாவின் அக்கா தமிழ்செல்வி, அவளுக்குத் திருமணம் செய்து வைக்கும் சமையம் வெண்பா எட்டாம் வகுப்பு. அப்படி சின்னப் பெண்ணாய் இருந்தாலும் விழியன் கண்ணுக்கு அவள் அழகு தான். விழியனின் தந்தை இருந்த சமையம், தன் குடும்பத்துடன் சென்னை வந்திருந்தார் சபாபதி. மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆன சமயம் அது!
அன்று மாப்பிள்ளை வீட்டில் நடக்க இருக்கும் விசேஷத்திற்கு அவர்கள் அனைவருமே கிளம்ப வண்டி ஏற்பாடு செய்திருந்தனர்..இடப் பற்றாக்குறையால் விழியனும் , வெண்பாவும் வீட்டில் இருக்கும் படி ஆனது!
“நான் தனியா இருக்க மாட்டேன்” என்று அழுது பார்த்தாள் வெண்பா...
“பாட்டி இருக்காங்க, விழியனும் தான் கூட இருக்கானில்ல! இரு டா தங்கம் . நாங்க சீக்கிரம் வந்திடுவோம்” என்று விட்டுச் சென்றனர் அவளை. அன்று நடந்த விஷயம் அவளை விழியனிடமிருந்து விலக வைத்துவிடும் என்று யாரும் நினைக்கவில்லை!
அவனும் தான்! அதன் பின் பல முறை அவளை பார்த்த போது வலிய சென்று பேசி பார்த்திருக்கிறான்
அவள் அவனை கண்டு கொள்வதே இல்லை.. ஆனால் இப்போது அவள் அவனுக்கு மட்டும் உரிமையாக போகிறாளாம் !
“எப்படி அவ இதுக்கு ஒத்துக் கிட்டா?.. மர்மமா இருக்கே! அவ கிட்டையே நேரிடையாக கேட்க வேண்டும்!” மனதில் குறித்துக் கொண்டான்!
இவன் இங்கே வெண்பாவை நினைத்துக் கொண்டிருக்க அவளும் அதே திருமணத்தை பற்றிய எண்ணத்தில் இருந்தாள்! ரேணுகாவினுடைய இந்த முடிவு விழியனுக்கு பிடித்திருந்தாலும், தன் தந்தை சபாபதியின் இந்த முடிவு வெண்பாவிற்குப் பிடிக்கவில்லை. கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவனை பிடிக்கிறதா இல்லையா என்பதில் அவளுக்கு குழப்பம் நீடித்தாலும், வேலைக்குத் தேர்வான இச்சமயத்தில் திருமணம் அவசியமா என்றிருந்தது?!
அதை எத்தனையோ வகையில் தந்தையிடம் விளக்கிப் பார்த்துவிட்டாள்!
“பா , வேலைக்கு சேர்ந்த புதுசில் புதுசா கத்துக்க நிறைய இருக்கும் . அப்ப போய் கல்யாணமெல்லாம் எனக்கு சரிபடாது பா!”
அவர் விளக்கமெல்லாம் தரவில்லை!
“நான் முடிவு எடுத்தாச்சு! இதில் எந்த மாற்றமும் இல்லை வெண்பா!” என்றுவிட்டார் ஒற்றை வாக்கியமாய்!
பெண் பிள்ளையை எத்தனைக் காலம் தன் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்க முடியும், சீக்கிரம் அவள் வாழ்க்கையை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருந்தது அவர் பெற்ற மகளுக்குப் புரியவில்லை! அவர் மேற்கொண்ட காரியங்களில் இறங்கிவிட, வெண்பா தன் நிச்சயத்துக்காக வந்திருந்த தன் அக்காவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்!
“அக்கா..பாரு கா இந்த அப்பாவை..கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?” தங்கையின் முகத்துக்கு ஓட்ஸ் தேன் கலந்து தடவிக் கொண்டிருந்த தமிழ்செல்விக்கு இவள் புலம்பலை பத்தாவது முறையாக கேட்டும் சலிக்கவேயில்லை!
தன் இத்தனை வருடக் குடும்ப வாழ்க்கையில் நிரம்பவும் பக்குவப்பட்டு போயிருந்தாள் தமிழ் . இல்லை, எண்பது சதவீகிதம் ஊமையாகியிருந்தாள். தெரியாத இடத்தில் போய் விழுந்து தான் அல்லல் படுவது போதும் வெண்பாவாவது தன் அத்தைக்கு மருமகளாகி விட்டால், நிம்மதியாக இருப்பாள்.
“வெண்பா! நீ சின்ன பொண்ணு உனக்குப் பாதி விஷயம், இப்போ புரியாது,கொஞ்ச நாள் போனா தான் விளங்கும், அப்பா உனக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கார்னு!”
“ஆமா, வெண்பா நீ சின்ன பொண்ணு..ஒழுங்கா எங்க அம்மா சொல்லுறத கேளு..” என்று ஒத்து ஊதினாள் இவர்கள் பேச்சிற்கு நடுவில் வந்த தமிழின் மகள், பொற்பாவை.
அக்காள் மகளை முறைத்தவள்,
“ஏய்! சின்ன கழுதை, நானே சின்ன பொண்ணுனா அப்போ நீ யாரு டீ” அவளை நகர முடியாத படி பிடித்துக் கொண்டாள் வெண்பா.அம்மா என்று கத்துவாள் என வெண்பா நினைத்திருக்க, அவளோ “மாமா, மாமா” என்று அலறிக் கொண்டிருந்தாள்.
அவன் வரத் தாமதமானதும், “டேய் இலக்கியா,இங்க வந்து இவ கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து டா” என்று அலறியதில், வெண்பாவின் அன்னை சரஸ்வதியும், தம்பி இலக்கியனும் அங்கு ஆஜர்!
சரஸ்வதிக்கும் வெண்பாவிற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம், அதில் தன் செல்ல பேத்தியை அழ வைக்கிறாள் என்பதில் சரியான ஆத்திரம் அவருக்கு!
ஆனால் அவருக்கும் முன், “வெண்பா, அவளை என்ன செய்றே, விடு..! “ என்று இருவரையும் பிரித்துவிட்டான் இலக்கியன்.
“வாடா என் உடன்பிறப்பே ! இந்தச் சின்னக் கழுதை கூப்பிடதும் இப்படி தலைத்தெறிக்க ஓடி வரியே..என்னைக்காவது நான் கூப்பிட்டதும் இப்படி வந்திருக்கியா..?”
திட்டு வாங்கியவன் அமைதியாக இருந்தாலும், பொற்பாவை
“வெண்பா, மாமாவை ஏதாவது சொன்ன, கொன்னு..” தன் சித்தியை மிரட்டினாள். அதை பார்த்து அந்தக் குடும்ப அங்கத்தினர் அனைவரும் நகைக்க, இலக்கியன் முகத்தில் அவ்வளவு பெருமிதம்!
பொற்பாவைக்கு மாமன் என்றால் நிரம்பவும் இஷ்டம்.அவனுக்கும் சில வருடங்கள் தன் அக்காவின் மகளை தங்கள் வீட்டில் வளர்த்து வந்ததால் ஏற்பட்ட பாச பிணைப்பிது.
இதை எல்லாம் தாங்க முடியாது தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து வந்த வெண்பா,
“ஒரு நாலு வருஷம் நான் காலேஜில் படிச்சிட்டு வரதுக்குள்ள, நீ உனக்கு ஒரு அடியாள் செட் பண்ணிட்டியா டா!” இலக்கியனை ரெண்டு மொத்து மொத்தினாள்! எல்லா ஆத்திரமும் தமியை அடிப்பதில் திசைதிரும்பிற்று! ஆனால் அப்போதும் அவர்களுக்கு குறுக்கே புகுந்தாள் பொற்பாவை!
“ஐய்யோ! போயேன் டீ! என் தம்பியை நான் அடிப்பேன் உனக்கென்ன!” ! இத்தனை கைகலப்பு நடந்து கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தாள் ரேணுகா, விழியனின் தாய்!
“என்ன இங்கச் சத்தம்?!” எனவும் , அத்தனை நேரம் வாயடித்துக் கொண்டிருந்த வெண்பா அமைதி காக்க, பொற்பாவை சமயம் பார்த்து,
“பாட்டி, வெண்பா ரொம்ப வாய்! எங்களாலேயே சமாளிக்க முடியலை.. நீங்க பாவம் என்ன பண்ணுவீங்க! விழியன் சித்தப்பாவுக்கு வேற நல்ல பொண்ணா பார்க்கலாமா!”
அவள் போட்ட போடில் எல்லோரும் நகைத்தனரே ஒழிய, யாரும் அந்த வாயாடி பிள்ளையை அடக்கவில்லை. வெண்பாவிற்கு கை எல்லாம் பறபறவென்று இருந்தது. ரேணுகா மட்டும் அந்த இடத்தில் இல்லையென்றால் அவள் அக்காள் மகள் தலையில் ரெண்டு போட்டிருப்பாள்.
கூட சேர்ந்து சிரித்தாலும் ரேணுகா தன் மருமகளை விட்டுத் தராது
“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது, வெண்பா பத்தி எனக்கு தெரியாதா? தங்கமான பொண்ணு”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சபாபதியின் குரல் அந்த அறை வரை கேட்டது
“வா பா விழியா. ஏன் இத்தனை நேரம்?”
அவர் குரல் கேட்கவும், ரேணுகாவும்,
“அவன் வந்துட்டான் போலிருக்கு!” என்று அந்த இடத்தை விட்டு அகன்றாள்..
அவன் தானே போகிறாள் என்று முகத்தை கழுவி விட்டு இவள் திரும்பி வர, அந்த அறையே காலி! கடுப்பாயிருந்தது வெண்பாவிற்கு! மொத்தமா போயிடுச்சுங்க! நொந்தபடி ஒரு கதை புத்தகத்தை பிரித்து விட்டு அவள் அமர்ந்தது தான் தாமதம்
“அத்தான் உன் கிட்ட ஏதோ பேசணுமாம், உன்னை கூப்பிடுறாங்க, வா கா” என்று வந்தான் இலக்கியன்!
அவள் இப்போது இருந்த மனநிலையில் அவன் முன் போய் நிற்கவே இஷ்டமில்லை வெண்பாவுக்கு ..
விழியனின் டைரி
ஆரம்பத்தில் என்னிடம் ஒழுங்காய் இருந்தாள்! போக போக சகஜமாக பேச ஆரம்பித்தாள். ஒரு இருண்ட நாளில் தன் சுயரூபத்தை மொத்தமாக அவள் காட்ட அரண்டு போனேன் நான்.
அவள் இப்படியெல்லாம் செய்கிறாள் என்று சொன்னால் நம்புபவார்களா? மதன் கூட முதலில் நம்பவில்லை, அவனே நேரில் பார்க்கும் வரை!