6.கதை ஒன்று ஆரம்பம்
விழியனின் டைரி
அவள் செய்கையில் எரிச்சலாகி கிளம்ப ஆயுத்தமான என் கையை மறுபடியும் பற்றியவளிடம்,
“உனக்கு ஒரு தடவை சொன்னா அறிவில்லை! கையை விடு!”
அவள் கையைத் தட்டிவிட்டேன்!அருவருப்பாய் இருந்தது. எத்தனை நல்ல பெண் ! அவளா இப்படியெல்லாம் செய்கிறாள் ! என் மூளை அதை கிரகித்து கொள்ள மறுத்தது!
என் பையை தூக்கி கொண்டு ஆபிஸை விட்டு வெளியேறினேன்.
வாசலில் நின்றிருந்தான் மதன், அவன் என்னை பார்த்த பார்வையே அவன் நடந்த அனைத்தையும் பார்த்துவிட்டதை உறுதி செய்தது!அவனிடம் எதுவும் பேச தோன்றாமல் நான் கிளம்பிவிட்டேன்!
————————————-
அன்று வெண்பாவுக்கு முதல் தினம். காலையில் தன் வேலைக்கு கிளம்பி வாசலுக்கு வர, விழியனும் படு நீட்டாய் தன் பார்மல்ஸில் கிளம்பியிருந்தான்! தன் ‘ராயல் என்ஃபீல்ட்’ வண்டியை ஸ்டார்ட் செய்தபடி நின்றான்.வந்தவள் இவனை கேள்வியாக நீண்ட நேரம் பார்த்து கொண்டு நிற்க,
“என்ன பார்க்குறே, ஏறிக்கோ !”என்றான்.
அவன் சொன்ன பிறகும் அவள் அசையவில்லை!
“நேரமாச்சு வெண்பா! உன்னை விட்டுட்டு நானும் வேலைக்கு போகணும், ஏறு”
என்று அவன் மறுபடி சொல்ல அவர்களிடம் வந்த ரேணுகாவும் மகன் சொன்னதையே திரும்ப சொன்னாள்.
“அத்தை எனக்கு பைக்கில் பின்னால் உட்கார்த்து போய் பழக்கமில்லை!”
விழியன் அவளை ஆச்சரியமாய் பார்க்க,
“பழக்கமில்லைன்ன என்ன ? இப்ப பழகிக்கோ! நானே போவேனே , அப்புறம் சின்ன பொண்ணு உனக்கென்ன?” என்றாள் ரேணுகா!
அவளை எப்படியாவது மகனுடன் அனுப்பி விட துடித்தாள் போலும்!
ஆனால் வெண்பா,
“இல்லை அத்தை, நான் திருப்பத்தில் பயந்து போய் ஓடுற வண்டியிலிருந்து குதிச்சிடுவேன், அதான்…வேணாம்!”
அவள் சொன்ன விதத்தில் ரேணுகாவும் விழியனும் ஒன்றாய் விழுந்து விழுந்து சிரித்தனர்! வெண்பாவுக்கு அவர்களின் செயல் அவமானமாய் இருந்தாலும், இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றாள். அவள் செய்தது அவர்களுக்கு உரைக்க கூட இல்லை.
இருவரின் சிரிப்பு அடங்கும் வரை கையை கட்டிக் கொண்டு நின்றவள்,
“அத்தை இதில் சிரிக்க என்ன இருக்கு? என்ன விடுங்க , நான் ஆட்டோவில் போறேன்!” என்று இரண்டடி வைக்க.
“வெண்பா.அவசரப்படாதே! இந்திய வரலாற்றில் முதல முறையா இப்படி ஒரு பிரச்சனையா சொன்னியா , அதான் எங்களால் சிரிப்பை கன்ரோல் பண்ண முடியலை.மா போய் கார் சாவி எடுத்திட்டு வாங்க!”
காரில் பயணமாக, விழியனுக்கு இன்னமும் அவள் சொன்ன காரணத்தை நினைத்து சிரிப்பு! அடிக்கடி அவள் புறம் திரும்பி சிரித்துக் கொண்டான்!
“டர்னிங்கில் குதிக்கிற பழக்கம் பைக்கில் மட்டும் தானே? காரில் இல்லையே!” என்றான் வேண்டுமென்றே.
“நான் வேணா நீங்க சொன்ன ஜோக்குக்கு ஓரமாய் போய் சிரிச்சிட்டு வரவா” என்றாள் இம்முறை கோவமாய்.
முதல் நாளே தாயும் பிள்ளையும் தன்னை இப்படி செய்கிறார்களே! எத்தனை நேரம் தான் பொறுத்து போவாளாம்?
விழியனுக்கு பாதை புதிது!அதுவும் வெண்பாவுடன் !அவனும் என்ன தான் செய்வான்?ஒரு காட்டன் சுடிதாரில் நேற்றை விட இன்னும் லட்சணமாய் இருந்தாள். தலைக்கு குளித்திருப்பாள் போலும், அதனால் வேறு இன்னமும் அழகாய் தெரிந்தாள்.
ஒருவாராய் அவள் அலுவலகம் அடைந்ததும்,
“சாயந்திரம் நானே வரட்டுமா கூப்பிட?” இறங்கி வந்தவன் கார் பக்கம் நின்றிருந்தவளிடம் சொல்ல,
“இல்லை நானே போயிடுவேன்” என்றாள் கையில் இருந்த வாட்சை திருப்பி பார்த்தபடி! அவள் கவனிக்காத போது அவளின் போனை கையில் இருந்து எடுத்தவன் அவள் முறைப்பைக் கண்டு கொள்ளாமல்,
தன் போனுக்கு அதில் இருந்து கால் செய்துக் கொண்டான்.
வேலை முடித்து அதை திருப்பித் தர, அவள் பிடுங்கிக் கொண்டாள்.
‘ரொம்ப ஓவரா தான் போறே டா’
“ஓகே பத்திரமா இரு.எதுவானாலும் கூப்பிடு.என் நம்பர் சேவ் பண்ணிட்டேன்”
“ஓகே” என்று போய்விட்டாள்.
போகிறவளை சற்று நேரம் நின்று பார்த்த பிறகே அவ்விடத்தை விட்டு கிளம்பினான் விழியன்.
வெண்பா அக்கம்பனியின் வரவேற்பு கூடம் செல்ல, அவளை போலவே பலர் காத்திருந்தனர். ரிசப்ஷனில் உள்ள பெண் இவள் பெயரை கூப்பிட்ட லட்சணத்தில் அவள் வாயில் இரண்டு வைக்கலாம் என்றிருந்தது வெண்பாவுக்கு.
சபாபதிக்கு தமிழ் பற்று மிக அதிகம்.தினமும் தமிழ் நூல்களை படிக்கும் பழக்கம் உடையவர்.அப்படி செய்ததில் பிள்ளைகளை திட்டும் சமையமும், அறிவுரை சமையத்திலும் திருக்குறளையும், ஆத்திச்சூடியும் மேற்கோள் காட்டி சொல்வதை மறக்க மாட்டார்.
அவர் அப்படியே செய்ததில் பிள்ளைகள் மனதில் ஏறியதோ இல்லையோ, பேத்திக்கு எல்லாம் ஒழுங்கே போய் சேர்ந்தது! தமிழின் மகள் பொற்பாவை அனைத்திலும் அத்துப்படி.. தாத்தா எதையாவது சொல்ல ஆரம்பித்தால் பேத்தி முடித்துவிடுவாள்.
பொற்பாவை தமிழில் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் வைத்தது தான் சபாபதியால் விளைந்த மற்றொரு நன்மை எனலாம்.
பேத்தியின் தமிழ் ஆற்றலில் இந்த குடும்பத்தினர் அனைவரும் பூரித்து போனாலும் தமிழின் மாமியார்,
“என்ன ஒரு அஞ்சு பவுன் நகை போட்டிருந்தாலும் பிரயோசனம்.இந்த தமிழை வச்சிகிட்டு என்ன பண்ண”
தங்கள் பெண் தமிழ் அவர்களிடம் அவதிப்படுவது பத்தாது என்று நம் தாய்மொழி தமிழும் அவதிப்படுவது சபாபதிக்கு பொறுக்காது!
பெயர் காரணத்தை யோசிக்க ஆரம்பித்தவள் இவையணைத்தையும் யோசித்து முடித்த பிறகே நினைவுலகிற்கு வந்தாள்.
பெயர் சொன்னால் தெரியும் அளவிற்கு சற்று பெரிய கம்பெனி தான். தன் கனவில் பாதி தான் இன்று நிறைவேறியிருக்கிறது. முடிந்த வரையில் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்!’மைல்ஸ் டு கோ’
முதல் நாள் வேலை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. மாலை நெருங்கவும், எப்படி தன் அத்தை வீட்டுக்கு திரும்ப என்று யோசிக்கையில் மொபைல் அழைத்தது. காலர் ஐடியில் ஹஸ்பெண்ட் என்றிருந்ததை பார்த்து ஜேர்க் ஆனது ஒரு நொடியே!
‘எல்லாம் அவன் வேலை தான்’
அழைப்பை ஏற்றவளிடம்,
“வெண்பா வேலை முடிஞ்சதா? வீட்டுக்கு கிளம்பிட்டியா?”
“ம்ம், ஆமா.இப்ப தான் வெளியில் வரேன்!”
“ஓகே அங்கேயே இரு. கேப் புக் பண்ணிடுறேன்.அதிலேயே வீட்டுக்கு போயிடு!”போகும் வழி எல்லாம் அவனே அடிக்கடி டிரைவரை போனில் கூப்பிட்டு சரியான பாதையை சொல்லிவிட்டான்.
அவன் செய்கையில் மகிழாமல்,‘ஆபிஸில் வேலையே பார்க்க மாட்டானோ’ சந்தேகம் வந்தது அவளுக்கு!
வீடு வந்து சேர்ந்தவள், சிறிது நேர ஓய்வுக்கு பின் தன் அத்தைக்கு கிட்சனில் உதவ போனாள்.காய்கறிகளை இவள் நறுக்கித் தர, ரேணுகா அதை சமைப்பதில் மும்முறமாக இருந்தாள்.
என்ன தான் அவன் முன் பேசாமடைந்தை போல் இருந்து கொண்டாலும் , வெண்பா நிரம்பவும் வாய் பேசும் பெண் தான்.
ரேணுகாவுக்கு அது நன்றாகவே தெரியும்.
அதனால் இப்போதும் அவள் சாதாரணமாய் பேசியதில் ஆச்சரியப்படவில்லை. அவள் கம்பெனியில் நடந்த விஷயங்களை இவள் கதை போல் சொல்ல , ம்ம் கொட்டிக் கொண்டிருந்தாள் அத்தைகாரி!
“என் கூடவே இன்னிக்கி ஒரு பொண்ணு ஜாயின் பண்ணா அத்தை. இதே ஊர் தானாம்.மெட்ராஸ்னாலும் எவ்ளோ சிம்பிளா இருந்தா தெரியுமா? ஆனா செம வாய்.”
“உன்னை மாதிரியே வா” என்றான் விழியன்!
அந்த அறை வாசலில் அவன் நின்று கொண்டு இவள் வாயடிப்பதை இத்தனை நேரம் வேடிக்கை பார்த்தது பெண்கள் இருவரும் அறியவில்லை.
அவன் குறுக்கே கேள்வி கேட்டதும் , வெண்பா பேசாமடந்தையாகி போனாள்.
“வா டா. என்ன இப்ப எல்லாம் உன்னை சீக்கிரம் விட்டிடுறாங்களா?”
அவன் பார்வை வெண்பாவை விட்டு அகலவில்லை.
“ஒர் முக்கியமான வேலை இருந்தது அதான் வந்துட்டேன்!”
அன்னை தந்த காபியை ஒரு கையில் பற்றியிருந்தவன் அதை அருந்தியபடி , அவளையும் பார்த்து கொண்டு அங்கேயே இருக்க, அவள் இவனை சட்டை கூட செய்யவில்லை!
‘ரொம்ப ஓவரா போறா’ அவளை திட்டிக் கொண்டவன்,
“மா கொஞ்சம் படிக்கிற வேலை இருக்கு, மேல போறேன்!” என்று விலகிக் கொண்டான்.
ரேணுகாவுக்கு இத்தனை நாள் தான் வாழ்ந்து கொண்டிருந்த தனிமையிலிருந்து சற்று விடுதலை, வெண்பாவின் வருகையால். எல்லா வேலைகளையும் முடித்தவள் மகனை பல முறை சாப்பிட அழைக்க , பதிலே இல்லை!
“இந்த புள்ளையை வச்சிகிட்டு…” சலித்தபடி படியேற போனவளை.
“நீங்க விடுங்க, நான் வேணா போய் கூப்பிடுறேன்.” என்று அவன் அறைக்கு போனாள் வெண்பா.
அறை வாசலில் நின்று கொண்டு கதவை தட்டிபார்த்தாள். எவ்வித பதிலும் இல்லாது கதவை மெதுவாக திறக்க, உறக்கத்தில் இருந்தான் விழியன்.
எப்படி எழுப்புவது? தொண்டையை செருமி பார்த்தாள், கை தட்டி பார்த்தாள் , பெயர் சொல்லி அழைத்து பார்த்தாள்…ம்ம்ஹும் அசைவில்லை.
‘சாப்பிடாமலே தூங்கு’ என்று இவள் வாயில் புறம் திரும்ப, கட்டிலுக்கு நேர் எதிரில் இவளுடைய முழு உருவ புகைப்படம், அவள் உயரத்துக்கு ஃபிரேம் செய்து மாட்டியிருந்தான்.
அசந்து தான் போய்விட்டாள் வெண்பா! அத்தனை அழகாக தெரிந்தாள் அதில்.அந்த மயில் பச்சை நிற புடவை அவளுக்கு மிக எடுப்பாக இருந்தது!
‘நானா?’
கேண்டிட் ஷாட் என்று அன்று நடந்த அத்தனை அக்கப்போரும் இதற்கு தானா? மெய்மறந்து இவள் அதை ரசித்துக் கொண்டிருக்க, இவளின் முதல் சத்ததில் கண் முழித்தாலும் தூங்குவது போல் பாவ்லா காட்டியவன் , இப்போது முழித்துக் கொண்டான்.
வெண்பா தன் பிம்பத்தை ரசிக்க, இவனும் அவளை ரசித்தபடி அவள் அருகில் வந்தான். பூனை நடையில் அவன் செய்த காரியம் அவளின் கவனத்தை ஈர்க்கவில்லை.
அவளை நெருங்கியவன், அவள் காதோரம் குனிந்து,
“பொண்ணு செமையா இருக்கா இல்லையா?”அவன் பேச ஆரம்பிக்கையில் விலக போனவளின் கையை பற்றிக் கொண்டான்.
தூக்கிவாரி போட்டது அவளுக்கு! “அத்தை கூப்பிட்டாங்க…” என்பதை தவிர வேறு வார்த்தை வரவில்லை.அவனிடமிருந்து தன் கையை உறுவிக்கொள்ள முயன்று தோற்று தான் போனாள்.
மேலும் அவளை சீண்டுவதை போல்,வசமாய் அவளை தன் பக்கம் இழுக்க, மாலையாய் அவன் மேலேயே விழுந்தாள் வெண்பா!
அவனிடமிருந்து விலக முயன்றவளை வளைத்துக் கொண்டவன் அவனின் வலிய கரங்கள். அதை தன்னிடமிருந்த பிரிக்க போராடிக் கொண்டிருந்தாள் வெண்பா.
“என்ன ஆச்சு இப்ப, ஏன் இத்தனை டென்ஷனாகுறே?”
செய்வதை எல்லாம் செய்துவிட்டு ,அவன் சாதாரணமாய் கேட்க
“முதலில் என்னை விடுங்க, எனக்கு இதெல்லாம் பிடிக்காது!”
“பிடிக்காதா, அது தப்பாச்சே!”என்றவன் அவள் முகத்தின் அருகே குனிய சட்டென்று தன்னை விடுவித்து கொண்டாள் வெண்பா!
கீழே சத்தம் கேட்டுவிடுமோ என்று அடிக்குரலில் சீறினாள்,
“நீ இன்னும் மாறவே இல்லையா விழியன்? இப்படி எல்லாம் செஞ்சா உன் கிட்ட மயங்கிடுவாங்கன்னு உனக்கு யார் சொல்லி கொடுத்தா?”
இத்தனை நேரமும் ஒரு புன்னகையுடன் இருந்தவன் , இப்போது பேச்சின் திசையில் இறுக்கமாகி விட்டான். அவள் தொடர்ந்தாள்.
“உன்னை ஒரு காலத்தில் எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? இதே போல் ஒரு கரியத்தை செய்து நீயே உன் மதிப்பை என் கிட்ட கெடுத்துகிட்ட!
அவளுக்கு கண்ணீர் எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டது!
அவள் பக்கம் நெருங்கியவனை பார்த்து பின்னடைந்தாள்.
“ஏன் வெண்பா இப்படி?எனக்கு உன் கிட்ட உரிமை இல்லையா?”
“உரிமை இருந்தா மட்டும் போதுமா? எனக்கு விருப்பம் இருக்கான்னு பார்க்க மாட்டியா விழியன்?”
கண்ணீரை தன் கரங்களால் துடைத்துக் கொண்டவள்,
“நீ என்னைக்கும் மாறவே மாட்டே, அப்படிதானே?”
புயலென கீழே சென்றுவிட்டாள்.
இவனுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை! வெட்கம் என்று இத்தனை நாளும் நினைத்தான்! அது இல்லை போலும். வேறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு தான் இப்படி செய்கிறாள்.அவளாக சொல்லாமல் தனக்கு எப்படி தெரியும்!
ரேணுகா மறுபடியும் அவனை கீழே இருந்து அழைக்க , அங்கு சென்றான். உணவு வேளையில் அமைதியாய் இருந்தனர் இருவரும். ரேணுகா மட்டும் எதையோ பேசி கொண்டிருந்தாள். இருவரிடமும் எந்தவித பிரதிபலிப்பும் இல்லை என்றதும் அவளும் அமைதியாகி விட்டாள்.
அடுத்து ஒரு வாரத்திற்கு அவனுடன் காரில் சென்றாலும், இருவருக்குள்ளும் ஒரு பேச்சும் இல்லை! கடைசி நாள் அதையும் முடிவுக்கு கொண்டு வருவதை போல்,
“அடுத்த வாரத்திலிருந்து ஆபிஸ் பஸ்ஸில் போயிடுவேன். நானே இனி என் வழியை பார்த்துகுறேன்!”
ஒரு தகவலை போல் அவனிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.
‘சின்னதில் கிறுக்கு பிடிச்சு தானே சுத்திட்டு இருந்தா? இப்ப அவ கூடவே அதுவும் வளர்ந்து முத்தி போச்சு!’
மனதில் அவளை வசைப்பாடியவன், தன் அலுவலகம் நோக்கி பயணமானான். வெண்பாவை எந்த விதத்தில் சரி செய்ய முடியும் என்ற யோசனையில்!