Sony
அமைச்சர்
Sekar tha mappillaiyaa.....
Nice ud sis
Nice ud sis
அத்தியாயம் 24:
மனதில் எண்ணங்கள் அலை மோத பூச்சி மருந்து பாட்டிலை எடுத்தாள் கீதா. சேகரோடும் கயலோடும் சிரித்துப் பேசியது, மாலு சேகர் கயல் இவர்களுடன் வண்டலூர் போனது கயலிலின் சடங்கை எடுத்து நடத்தியது என சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவில் ஊர்வலம் போயின. அப்போது வாழ்க்கை தான் எத்தனை ஆனந்தமாக இருந்தது? சே! எந்த நேரத்தில் இந்த ஊரில் மீண்டும் காலடி எடுத்து வைத்தேனோ தெரியவில்லை. வரும் போது தான் நான் எத்தனை ஆசைகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து கொண்டு வந்தேன். எல்லாம் இப்படி முடியத்தானா?
அவளது அறிவு அவளுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்த முடிவு எடுக்காதே எடுக்காதே என அலறியது. ஆனால் மனமோ இறுகிக் கிடந்தது. ராஜேந்திரனுடன் அவலம் நிறைந்த வாழ்வு வாழ்வதற்கு இதுவே மேல் என நினைத்தாள். அது மட்டுமல்ல தான் இறந்து விட்டால் அம்மாவுக்கு வீடாவது மிஞ்சும். கடைசிக் காலத்தில் அம்மா ஒதுங்க நிழலேனும் கிடைக்கும். என்னைப் பெற்றதைத் தவிர என் தாய் வேறு என்ன தவறு செய்தாள்? இள வயதிலேயே கணவனை இழந்தும் என்னை எப்படி அருமை பெருமையாக வளர்த்தாள்? என் படிப்புக்கும் என் விருப்பங்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாள்? நான் பாவி! அவளைப் பற்றியே யோசிக்காமல் என் சுகம் மட்டும் தான் பெரியது என்று இருந்து விட்டனே? அம்மா நீ என்னை மன்னிப்பாயா? இதோ உன் மகள் நீ ஆசையாக வளர்த்த உன் கீதா பிணமாகப் போகிறேன். இது கோழைத்தனம் தான். ஆனால் இதை விட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லையே அம்மா!
அழுதபடி பாட்டில் மூடியைத் திறந்தாள். அதை வாயில் கவிழ்க்கப் போகும் நேரம் அப்படியே ஒரு கரம் அதைத் தட்டி விட்டுவிட்டு கீதாவையும் செம்மையாக அடித்தது. ஒரு மூலையில் சுருண்டு போய் விழுந்தாள் கீதா. என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் அடி சரமாரியாக விழுந்தது. கண்கள் இரண்டும் நெருப்புத் துண்டாக ஜொலிக்க தலை கலைந்து ஆக்ரோஷத்தோடு கன்னியம்மாள் காளியைப் போல நின்றிருந்தாள்.
"அம்மா" என்று வெடித்தாள் கீதா.
"சீ! நாயே என்னை அப்படிக் கூப்பிடாதே! உன்னைப் படிக்கவெச்சேன் பாரு என்னைச் சொல்லணும்? இதுக்காகவா உன்னை நான் இத்தனை வருஷம் வளர்த்தேன்? இந்த முடிவுக்கு தான் நீ வரணும்னா அதை சென்னையிலேயே செஞ்சிருக்கலாமேடி! ஏன் இங்க வந்து என் நெஞ்சுல நெருப்பள்ளிக் கொட்டுற? உனக்கு நான் என்னடி துரோகம் செஞ்சேன்? ஏன் என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டேங்குற?" என்று பெரிதாக அழுதாள் அவள் தாய்.
மனது முழுவதும் குற்ற உணர்வு ஆக்கிரமிக்க தாயை அணைத்துக்கொண்டாள் மகள்.
இருவரும் அழுது தீர்த்தனர்.
"நீ ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்னு நான் கேக்கப் போறதில்ல. ஏதாவது கேவலமான காரணத்தைச் சொல்லுவ! இனியாவது என் பேச்சை மீறாம இருப்பியா? சொல்லுடி எனக்கு சத்தியம் பண்ணிக்குடு! இனிமே இந்த மாதிரியான முடிவுக்குப் போக மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு"
தாயின் கைகளின் மேல் தன் கைகளை வைத்தாள். கண்ணீரைத் துடைத்தாள் கன்னியம்மாள்.
"கீதா! வர ஞாயிற்றுக்கிழமை இலஞ்சி குமாரர் கோயில்ல வெச்சு உனக்குக் கல்யாணம்னு நான் முடிவு செஞ்சுட்டு வந்திருக்கேன், அது கண்டிப்பா நடக்கணும். இல்லைன்னா இந்த ஊருல என் மானம் போயிரும்டி. உனக்கு இஷ்டமில்லேன்னா சொல்லு ரெண்டு பேருமே இந்த மருந்தைக் குடிச்கிட்டு செத்துப் போயிருவோம். நீயே முடிவு பண்ணிகோ! " என்றாள்.
"நீ என்ன சொன்னாலும் கேக்கேறேம்மா! ஆனா நீ என்னை வெறுத்துடாதேம்மா !" என்று அன்னையின் மடியில் கண்ணீரில் கரைந்தாள் கீதா.
அடுத்து வந்த இரு நாட்கள் வேகமாக ஓடின. கல்யாணச் சேலைகளை எடுக்கவும் நகைகளை எடுக்கவும் என அம்மா எல்லா இடங்களுக்கும் கீதாவைக் கூட்டிக்கொண்டே போனாள். வீட்டில் தனியாக ஒரு வினாடி கூட விடவில்லை. கீதாவின் தோழி பூமாரி மிக அழகாத் தைப்பாள் என்பதால் அவளே கல்யாணச் சேலைக்கான பிளவுசை தைத்துக் கொடுத்தாள் ஒரே நாளில். அம்மா அதையும் புடவையையும் கீதா மேல் வைத்து அழகு பார்த்தாள். அம்மாவின் உற்சாகம் கீதாவுக்கு இல்லை. இனி என்ன ஆனால் என்ன என்று விட்டேத்தியாக இருந்தாள்.
ஞயிற்றுக்கிழமை மங்களகரமாக விடிந்தது. மகளை தலைக்கு ஊற்றி முடியைக் காய வைத்து அழகாக பின்னல் போட்டு தலை நிறையப் பூவையும் வைத்து அலங்காரம் செய்தாள் கன்னியம்மாள். மதிய விருந்து வேறு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருந்தது. சேலை கட்டியதும் தேவதை போல நின்றிருந்த தன் மகளை முத்தமிட்டாள் கன்னியம்மாள். ஏனோ கண்கள் கலங்கி தொண்டையை அடைத்தது கீதாவுக்கு. இதோ என் உலகம் முடியப்போகிறது இதே நேரம் தான் சேகருக்கும் திருமணமோ? அங்கேயும் இத்தனை கோலாகங்கள் இருக்குமோ? கயல் பட்டுப்பாவாடை அணிந்து சிட்டுப் போல இருப்பாளோ? என்று ஓடிய எண்ணங்களை கடிவாளம் போட்டு இழுத்தாள். வாடகைக் காரில் இலஞ்சி கோயிலில் வந்தும் இறங்கியாயிற்று. நிறை விளக்கை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் கீதா. மங்கல வாத்தியங்கள் முழங்கியபடி இருந்தன.
முகம் இறுக நின்றிருந்த ராஜேந்திரனும் அவனது தாயும் கண்ணில் பட்டார்கள். அவர்களைக் கண்டதும் இனம் புரியாத பயம் வயிற்றில் தங்கியது. தாயையும் மகளையும் கண்டதும் அவர்கள் முகங்களில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. கன்னியம்மாளைப் பார்த்து படப்டவெனப் பொரிந்தான் ராஜேந்திரன். வாத்தியங்களை நிறுத்தினான்.
"என்ன அத்தை? நான் கேட்ட பணத்தை நீங்கள் இன்னமும் தரலையே? அது இல்லாம நான் தாலி கட்ட மாட்டேன்" என்றான்.
"முதல்ல கல்யாணம் முடியட்டும் தம்பி! அப்புறமா நான் உங்களை கவனிக்கறேன்." என்றாள் கன்னியம்மாள்.
"இதைப் பாரு கன்னியம்மா! அந்தப் பேச்சே எடுக்காதே! கையில காசு வெச்சாத்தான் என் மகன் தாலியைக் கையில எடுப்பான். இல்லைன்னா நீங்க பாட்டுக்குப் போயிட்டே இருக்க வேண்டியது தான். அவனுக்கு கழுத்தை நீட்ட அவன் மாமன் மக ரெடியா இருக்கா" என்றாள் காமாட்சி.
மங்கல வாத்தியங்கள் நிறுத்தப்பட்டன. கொல்லென ஒரு அமைதி நிலவியது அங்கு. கன்னியம்மளுக்கு எங்கே எப்படி கிடுக்கிப் பிடி கொடுத்தேன் பார்த்தாயா என ராஜேந்திரனும் தாயும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.