Murali is so great.....சனி கிழமை காலை 9: 00 மணி.
முரளி வெளியே கிளம்ப, "சனிக்கிழமை எங்க கிளம்பிடீங்க..?", என்று வெண்பா சோபாவில் அமர்ந்தபடி வினவினாள். "ஒரு நண்பனை பார்க்க போகிறேன்.. மதியத்துக்குள்ள வந்துருவேன்...", என்று கூறிக் கொண்டே முரளி வெளியே கிளம்பினான்.
"யார் அந்த நண்பன்..", என்று வெண்பா அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள் முரளி படியிறங்கி பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிருந்தான்.
முரளியின் பைக் வேகமாக பறந்தது. முரளியின் முகத்தில் எள்ளவும் சிரிப்பில்லை. அவன் பைக் ஒரு பங்களாவின் முன் நின்றது.
முரளி தன் மனதில் உள்ள தயக்கத்தை மறைத்து வேகமாக கதவருகே செல்ல, அவனை நிறுத்தி, "யாரை பார்க்கணும்..?", என்று வினவினார் காவலாளி.
"நான் சதாசிவம் சாரை பார்க்கணும்..", என்று முரளி அவர்கள் வீட்டை பார்த்தபடியே கூற, காவலாளி முரளியை கூர்மையாக பார்த்தார்.
"நீங்க யார்..?", என்று காவலாளி முரளியிடம் வினவ, "அவர் பெண்ணோட கணவன்..", என்று முரளி அழுத்தமாக கூறினான்.
அந்த காவலாளி முகத்தில் பெரிய புன்னகை தோன்றியது. "வெண்பாம்மா நல்லா இருக்காங்களா..?", என்று அன்போடு அவர் விசாரிக்க, முரளி சிரித்த முகமாக தலை அசைத்தான்.
"உங்களை உள்ள விட்டா கண்டிப்பா பெரிய ஐயா திட்டுவாரு... ஆனாலும் பரவாயில்லை நீங்க உள்ள போங்க ஐயா..", என்று கூறி கதவை திறந்தார் காவலாளி.
முரளி வேகமாக வீட்டிற்குள் நுழைய, முரளியை பார்த்த சதாசிவம் வேகமாக அவன் அருகில் வந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்து, "நீ ஏன்டா இங்க வந்திருக்க..?", என்று கோபமகா கேட்டார்.
வெண்பாவின் தாய் குறுக்கே புகுந்து, “அவரை விடுங்க.. நீங்க எவ்வளவு கோபப்பட்டாலும்.. கத்தினாலும் இவர் மாப்பிளை என்பது மாற போவதில்லை..", என்று சதாசிவத்தை பார்த்து கண்ணீர் மல்க கூறினார்.
"அதுக்காக இவனை சீராட சொல்றியா..?", என்று சதாசிவம் கோபமாக கேட்க, "உங்க மனசை காயப்படுத்தணும்னு நான் நினைக்கலை.. அது என் பொண்ணை தான் பாதிக்கும்.. என் பொண்ணு எங்கு இருந்தாலும் நல்லா இருந்தா போதும்... எந்த பிரச்சனையும் வேண்டாம்.. தயவு செய்து இங்கிருந்து போய்டுங்க...", என்று கூறி , முரளியை பார்த்து கண்ணீர் மல்க கை எடுத்து கும்பிட்டார் வெண்பாவின் தாய்.
சதாசிவம் கூறியதை தான் இவரும் கூறினார். ஆனால் கூறிய விதம் முரளியின் மனதை தொட்டது.
ஆனால் எதற்கும் அசையாமல் மறுப்பாக தலை அசைத்து அவர்களை நிமிர்ந்து பார்த்தான் முரளி.
"நீங்க வெளிய போக சொன்ன உடன் போகிறதுக்காக நான் இங்கு வரவில்லை...நாங்க செய்த தவறை நியாயப்படுத்தவும் வரவில்லை..", என்று முரளி அவர்களை பார்த்தபடி மேலும் தொடர்ந்தான்.
"நீங்க பாட்டி, தாத்தாவாக போறீங்க... வெண்பா உங்களை பார்க்கணுமுன்னு ஆசை படறா...", என்று வெண்பாவின் தாயை பார்த்தபடி கூற, அவர் முகத்தில் சந்தோஷ மின்னல் ஒன்று தோன்றி மறைந்தது.
அதை கவனித்த முரளி மேலும் பேசுவதற்க்குள், "அப்படி அவள் சொன்னாளா..?", என்று கடுமையாக கேட்டார் சதாசிவம்.
"உங்க பொண்ணு அப்படி சொல்லுவாளா...?", என்று அவரை பார்த்து அழுத்தமாக நிமிர்வாக முரளி கேட்க, "அப்ப சார் ஏன் இங்கு வரணும்..?", என்று நக்கலாக கேட்டார் சதாசிவம்.
முரளி, வெண்பாவின் தாய் முகத்தை பார்த்தபடி, "நாங்க அவளை எவ்வளவு சந்தோஷமாக பார்த்தாலும்.., அவள் கண்ணில் ஒரு ஏக்கம் தெரியுது.. என் சுய கவுரவத்தை விட, வெண்பாவின் சந்தோசம் எனக்கு முக்கியம்.. உங்களுக்கு என் வீட்டிற்கு வருவது பிடிக்காது.. நாங்களும் இங்க வரலை... எங்கையாவது கோவிலில் சந்திக்கலாம்.. நீங்க சொல்ற நேரத்துக்கு நான் வெண்பாவை அந்த கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன்... நீங்க அவளிடம் பேசினால் போதும்.. உங்களை பார்த்துவிட்டால் வெண்பா சந்தோஷமாக இருப்பாள்..", என்று முரளி கோர்வையாக கூறி முடித்தான்.
சதாசிவம் கோபமாக பேசுமுன், "சரி.. நாளை காலை 10.00 மணிக்கு வடபழனி கோவிலுக்கு வரேன்..", என்று சம்மதம் தெரிவித்தார் வெண்பாவின் தாய்.
"தேங்க்ஸ்...", என்று கூறிவிட்டு வாசல் வரை சென்ற முரளி, மீண்டும் திரும்பி உள்ளே வந்து, "நான் உங்களிடம் பேசியது வெண்பாவிற்கு தெரிய வேண்டாம்.. நான் யாரிடமும், எதற்காகவும் தலை குனிவது என் வெண்பாவிற்கு பிடிக்காது.. ", என்று நிமிர்வாக கூறிவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான் முரளி.
"எதற்காக சம்மதம் சொன்ன..? ", என்று சதாசிவம் கோபமாக கேட்க, "மனைவிக்காக சுயகௌரவத்தை விட்டுவிட்டு, வீடு தேடி வந்து.., உங்கள் பணம் எனக்கு துச்சம் என்று கூறி, மனைவியின் சந்தோசம் எனக்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி சென்ற இளைஞனுக்காக....", என்று வெண்பாவின் தாய் அழுத்தமாக கூறினார்.
பொதுவாக வீட்டின் முடிவை சதாசிவம் எடுத்தாலும், சில நேரங்களில் அவர் வீட்டில் வெண்பாவின் தாய் முடிவு இறுதியாகிவிடும்.
இன்று அவ்வாறு நடந்து விட்டது என்று புரிந்து கொண்ட சதாசிவம்., அவர் மனைவியை அமைதியாக பார்த்தார்.
"வெண்பா கல்யாணம் செய்த முறை தவறாக இருக்கலாம்.. ஆனால் தேர்ந்தெடுத்த மனிதன் தவறானவன் இல்லை...", என்று வெண்பாவின் தாய் கூறிவிட்டு தன் வேலையை செய்ய தொடங்கினார்.
ஞாயிறு காலை 10:00 வடபழனி முருகன் கோவில்.
"முரளி.., எதுக்கு திடிர்னு கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்க...?", என்று வெண்பா முரளியின் முகத்தை பார்த்தபடி கேட்க, "கோவிலுக்கு எதற்கு வருவாங்க.. சாமி கும்பிட தான்...", என்று கூறிக்கொண்டே இறைவனை கை கூப்பி வணங்கினான் முரளி.
முருகனை தரிசித்துவிட்டு, அவர்கள் பிரகாரத்தை சுற்ற, திடிரென்று வெண்பா முரளியின் கைகளை அழுத்தமாக பற்றி அசையாமல் நின்றாள்.
"வெண்பா என்ன ஆச்சு..?", என்று முரளி அக்கறையாக வினவ, "அ..ம்..மா..", என்று மெதுவாக கூறியபடியே தன் தாய் சென்று கொண்டிருந்த இடத்தை நோக்கி கை காட்டினாள் வெண்பா.
அவரையே பார்த்தபடி அமைதியாக நின்றாள் வெண்பா.
"நீ அம்மாகிட்ட பேசு...", என்று முரளி கூற, வெண்பா மறுப்பாக தலை அசைத்தாள்.
"அம்மா என் கிட்ட பேச மாட்டாங்க...", என்று வெண்பா கம்மலான குரலில் கூற, "நாம தப்பு பண்ணிருக்கோம் வெண்பா.. நாம தான் மன்னிப்பு கேட்கணும்.. நீ எத்தனை நாள் இப்படி மனசுக்குள்ளே வருத்தப்பட்டுட்டு இருப்ப.. இது கடவுளா பார்த்து நமக்கு கொடுத்த சந்தர்ப்பம்... போ.. பேசு....", என்று முரளி கூற, தன் தாயிடம் சென்றாள் வெண்பா.
வெண்பாவை பார்த்த அவள் தாய் ஒரு நொடி கல்லாக நிற்க, மறுநொடி தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.
"அ.. ம்... மா.......", என்று வெண்பா அழைக்க அவர் திரும்பாமல் கைகளை கட்டிக் கொண்டு இறுக்கமாக நிற்க, கோவிலில் எந்த நினைப்பும் இல்லாமல், அவர் காலில் விழுந்தாள் வெண்பா...
அவர் பாதத்தை தொட்டு.., "அம்மா மன்னிச்சிரு அம்மா..", என்று வெண்பா கூற, வெண்பாவின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவர் காலில் விழுந்தது.
இதை பார்த்துக் கொண்டிருந்த முரளியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் கைகளில் விழுந்தது.
கட்டங்கள் நீளும்....