ஷ்யாமளா அனைவருக்கும் பரிமாற “நீயும் உட்காரு டா.நாங்களே போட்டுக்கறோம் .” என்று மயில்வாகணன் சொல்ல “ஐயோ அண்ணா..அவள் நமக்கு எல்லாம் பரிமாறனும்னு சாப்பிடமா இல்லை.இன்னைக்கு சமையல் அவளோடது.அதனால அதை சாப்பிட்டு நமக்கு ஒன்னும் ஆகலேன்னா அவள் சாப்பிடலாம்னு தான் பரிமாறுற மாறி ஆக்ட் பண்ணிட்டு இருக்கா” என்று சொல்ல அர்ஜுன் நன்றாக சிரித்துவிட்டான்.
அவனை நன்றாக முறைத்த ஷ்யாமளா தனக்கும் ஒரு தட்டு எடுத்து பரிமாறி சாப்பிடத் தொடங்கிவிட்டாள்.சிரித்த அர்ஜுனின் முதுகில் அடித்த மயில்வாகணன் “டேய் என் தங்கச்சி எவ்வளவு பெரிய குக்கர் தெரியுமா?அவளை பார்த்து சிரிக்குற?” என்று மிரட்ட “தெரியாம உங்க குக்கர்ர பார்த்து சிரிச்சுட்ட மச்சான்..மன்னிச்சுரு” என்றான்.கிருபா இதை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் ஒரு வெறுமையான உணர்வு.
“என்ன கிருபா சாப்பாடு பிடிக்கலையா?சாப்டாம தட்டையே பார்த்துட்டு இருக்க” என்று மயில்வாகணன் கேட்க “சாப்பாடு நல்லா இருந்தா சாப்பிட மாட்டாங்களா?” என்று அர்ஜுன் சொல்ல “இல்லை இல்லை வேற யோசனை” என்றவள் சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.இப்பொழுது ஷ்யாமளா அர்ஜுனை நன்றாக முறைத்தாள்.அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தான்.
உண்டு முடித்தவுடன் அனைவரும் ஹாலில் அமர “சொல்லு கிருபா பர்த்டேக்கு என்ன பிளான் பண்ணிருக்க?” என்று கேட்க “ம்ம்கும்..அவள் பர்த்டேக்கு பிளான் ஒன்னு தான் குறைச்சல்” என்று அர்ஜுன் முனுமுனுக்க அவனை மயில்வாகணன் முறைக்க “நான் ஒன்னும் சொல்லல பா “ என்றவன் வாயை மூடிக் கொண்டான்.
கிருபா தன் திட்டத்தை சொல்ல அனைத்துக்கும் தலை ஆட்டியவன் “சரி டா..உன் இஷ்டப்படி எல்லாம் பண்ணிறலாம்” என்றான்.கோகிலாவும் குமாரசாமியும் வந்து விட அங்கே அரட்டைக் கச்சேரி நன்றாக நடைபெற்றது.
அவ்வளவு நேரம் மனதில் இருந்த வெறுமை இப்பொழுது இல்லை கிருபாவிடம் .மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது.அதனால் அனைவரிடமும் இயல்பாக உரையாடினாள் அர்ஜுனைத் தவிர !
சனிக்கிழமை இரவு பன்னிரெண்டு மணிக்கே குயிலியை அழைத்து வாழ்த்து சொல்லிவிட்டாள் கிருபா.ஞாயிறு அன்று காலை மயில்வாகனனும் குயிலிக்கு அழைத்து தன் வாழ்த்தைச் சொன்னான்.
மாலை கிருபாவின் ஏற்பாட்டுப் படி எல்லாம் நடந்தது.அந்த அறையில் அவர்கள் மட்டுமே இருந்தனர்.முழு அறையையும் அவர்களுக்காக புக் செய்திருந்தான் மயில்வாகணன்.அறை முழுக்க பலூன்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது.நடுவில் ப்ளூபெர்ரி ஐஸ் கேக்.
குயிலியை வற்புறுத்தி வரவழைத்தாள் கிருபா.வழக்கமாக குயிலி தன் பிறந்தநாளை என்றும் கொண்டாடியது இல்லை.ஆனால் இன்று கிருபா மிகவும் வற்புறுத்தி அழைத்ததால் வேறு வழி இல்லாமல் வந்திருந்தாள்.நைட் டின்னர் சாப்பிடத் தான் அவள் அழைக்கிறாள் என்று நினைத்து அவள் வந்திருக்க அங்கு நடந்தவற்றை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்தவுடன் அணைத்து வைக்கப்பட்ட விளக்குகள் அனைத்தும் போடப்பட்டன.”ஹாப்பி பர்த்டே டூ யூ” என்று அனைவரும் பாட கிருபா குயிலியை அணைத்துக் கொண்டாள்.
கிருபாவுடன் செல்லா ,மங்கை,சுகன்யா ,மயில்வாகணன்,அர்ஜுன்,விமலா,ஷ்யாமளா,கிருத்திகா என அனைவரும் இருந்தனர்.செல்லா மங்கையின் வீட்டிற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு காலையிலே கிளம்பிப் போயிருந்தாள்.ஆக அனைவரும் சேர்ந்து குயிலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள். கிருபாதான் அனைத்தையும் பிளான் பண்ணி செய்திருந்தாள்.மயில்வாகணன் அவளுக்கு உதவியாக இருந்தான்.
கிருபாவின் கன்னத்தில் முத்தம் வைத்தவள் “தேங்க்ஸ் பட்டு” என்றாள்.அனைவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவிக்க அர்ஜுன் மட்டும் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.அவனுக்கு இங்கு வரவே விருப்பம் இல்லை.ஆனால் மயில்வாகனின் நச்சரிப்பு தாங்க முடியாமல் தான் வந்திருந்தான்.இப்பொழுது மீண்டும் மயில்வாகனன் வாழ்த்து சொல்லச் சொல்லி அவன் காதைக் கடிக்க வேறு வழி இல்லாமல் வாழ்த்து தெரிவித்தான்.
பின்பு கேக் வெட்டி,முகத்தில் பூசி,செல்பி எடுத்து என்று அந்த இடமே கலைக் கட்டியது.மேஜாரிட்டியான பெண்கள் அணி சந்தோசமாக பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்க மைனாரிட்டியான ஆண்கள் அணி அவர்களை வேடிக்கை பார்க்கும் வேலையை நன்றாக செய்து கொண்டிருந்தது.
அதற்குள் அர்ஜுனிற்கு தன் தம்பியிடம் இருந்து அழைப்பு வர “இவனுக்கு இப்ப தான் பாசம் பொத்துக்கிட்டு வரும்.இவ்வளவு நாள் அண்ணன பற்றி ஞாபகமே இல்லை.இப்ப நேற்றில் இருந்து ஏழாவது டைம் கூப்பிடறான்” என்று அலுத்துக் கொண்டவன் போனை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.
நன்றாக கலகலப்பாக இருந்த கிருபா திடிரென்று அர்ஜுன் சென்றதைப் பார்த்தவுடன் அமைதி ஆகிவிட்டாள்.முதலில் இதை யாரும் கவனிக்கவில்லை.அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் தான் குயிலி அதை கவனித்தாள்.”என்ன ஆச்சு பட்டு?” என்று கிருபாவிடம் கேட்க (இப்பொழுது எல்லாம் கிருபா குயிலிக்கு பட்டு ஆகிவிட்டாள்) “ஒன்னும் இல்லையே..நல்லா தான் இருக்க” என்றவள் நார்மலாக இருக்க முயன்றாள்.குயிலியால் அதை எளிதாக அடையலாம் கண்டுவிட முடிந்தது.
டின்னர் முடிந்தவுடன் எல்லாரும் முன்னாடி கிளம்ப குயிலி மயில்வாகனனிடம் “நீங்க ப்ரீயா இருக்கப்ப எனக்கு போன் பண்ணுங்க..கொஞ்சம் பேசணும்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
குயிலி வருவாள்...