முருகவேல் வண்டியை எடுக்க தாஸ் முன்பு ஏறி அமர்ந்து கொண்டான்.குயிலியும் அந்தப் பெண்ணும் பின்புற சீட்டில் அமர்ந்து கொண்டனர். தாசிடம் நேராக மகளிர் காவல் நிலையத்திற்கு வண்டியை விடச் சொன்ன குயிலி அந்த பெண்ணின் குடும்பத்தைப் பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டு வந்தாள்.தாசிற்கு அவர்கள் தமிழில் பேசியதால் ஒன்றும் புரியவில்லை.ஆனால் பிரச்சனை மிகப் பெரிது என்பது மட்டும் நன்றாக புரிந்தது.
தாஸ் குயிலியைப் பற்றி விசாரித்ததில் அவன் தெரிந்து கொண்ட செய்திகள் அவனை பிரம்மிக்க வைத்தது.பெண்களின் முன்னேற்றத்திற்காக அவள் எடுத்த நடவடிக்கைகள்,பெண்களின் பாதுகாப்பிற்கு கொடுத்த முக்கியத்துவம், சிறிய பெண்களை சீரளித்தவர்களை அவள் கையாண்ட முறை,பெரிய அரசியல்வாதியை எதிர்த்து ஒரு சிறு பெண்ணிற்காக போராடிய துணிச்சல் போன்ற செய்திகளைக் கேட்ட பின் அவனுக்கு குயிலியின் மேல் மதிப்பும் கூடியது.குயிலி பதவி ஏற்கும் நாளிற்காக காத்துக் கொண்டிருந்தான்.குயிலின் கீழ் வேலை செய்ய பெருமைப் பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் காவல் நிலையம் வந்துவிட தன் எண்ணத்தில் இருந்து மீண்டவன் இறங்கி மாவட்ட ஆட்சியர் வந்திருப்பதாக சொல்ல அனைவரும் அவளை வரவேற்க வெளியே வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அந்தக் காவல் நிலையத்திற்கு வந்ததும் அந்த இடமே மிகவும் பரபரப்பானது.ஆட்சியர் வந்த அன்றே அங்கு வந்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.அவரை அனைவரும் வரவேற்க தலைமை அதிகாரி சிரித்த முகத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்க குயிலியின் பின்பு இறங்கிய பெண்ணைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டு இருந்த அவரின் முகம் அப்படியே வெளிறியது.அவருக்கு உள்ளுக்குள் குளிர் பரவியது.குயிலியைப் பற்றி அவர் கேள்விப்பட்ட செய்திகள் அவருக்கு ஞாபகம் வர பயத்தில் அவர் முகம் வேர்க்க ஆரம்பித்தது.ஒரு சிறு பெண்ணிற்கு செய்த கொடுமைக்காக ஒரு பெரிய அரசியல்வாதியையே ஒன்றும் இல்லாமல் செய்தவர் தன்னை என்ன செய்வாரோ என்று நினைக்கையிலையே அவர் மனம் ஆட்டம் கண்டது.
குயிலி அந்த அதிகாரியை கூர்மையாக ஒரு பார்வை பார்க்க அவர் தலை தானாக கீழே குனிந்தது. “பணத்துக்காக நீங்க என்ன வேணுனாலும் பண்ணுவிங்களா?” என்று கேட்க அவர் ஒன்றும் பேசாமல் தலை குனிந்தபடியே இருக்க “உங்களத்தான் கேட்குற?” என்று மேலும் அழுத்தமாக கேட்க “அப்படி இல்ல மேம்...அந்த பொண்ணு கஷ்டப்பட்டு இந்த வேலைக்கு வந்திருக்கும்.மேல் அதிகாரி மேல புகார் கொடுத்த வேலை போயிரும் அப்புறம் அவங்க குடும்பத்த பாத்துக்க முடியாம போயிரும்னு தான் அப்படி சொன்ன” என்று மழுப்பிக் கூற “இப்ப கூட நீங்க பண்ண தப்ப ஒத்துக்க மாட்டிங்க இல்ல?உங்களுக்கும் ஒரு பொண்ணு இருந்து ஒருத்தன் உங்க பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்கிட்டா அவன் கிட்டயும் பணம் வாங்கிட்டு இப்படி தான் உங்க பொண்னையும் அனுசரிச்சு போக சொல்லுவிங்களா?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்க அவர் தலை குனிந்தார்.அனைவரின் முன்பும் குயிலி இப்படி கேட்டது அவருக்கு அவமானமாகி விட்டது.”சொல்லுங்க மிசஸ்.லாவண்யா” என்று விடாமல் கேட்க அவர் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
“நீங்க என்ன பண்ணிங்கனு சொல்லற வரைக்கும் இங்க இருந்து நான் போக மாட்ட” என்று சொல்ல அவர் தலை நிமிர்ந்து குயிலியைப் பார்த்து விட்டு சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தார்
.அந்தப் பார்வையின் பொருள் தனியாக பேசவேண்டும் என்பது.குயிலிக்கு அது புரிந்தாலும் “தப்பு செய்யறதுக்கு இருக்குற துணிச்சல் அந்த தப்ப ஒத்துக்கறதுக்கும் இருக்கணும்” என்று சொல்ல வெளிறிய அந்த அதிகாரியின் முகத்தைப் பார்த்த அனைவருக்கும் பாவமாக இருந்தது.
அந்த மாற்றுத் திறனாளி பெண்ணைப் பார்த்தவர் “இந்த மங்கைப் பொண்ணு போன புதன்கிழமை சாயந்திரம் என்கிட்ட வந்து அவங்க கல்லூரி இயக்குனர் அவளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கறதா கம்ப்ளைண்ட் குடுத்துச்சு.நான் அதை விசாரிக்கறதுக்கு அடுத்த நாள் அங்கே போனப்ப அந்த இயக்குனர் எனக்கு 10 லட்சம் பணம் குடுத்து “இந்த கம்ப்ளைண்ட் எடுத்துக்காதிங்க.அந்த பொண்ணு இனி பிரச்சனை பண்ணாம நான் பாத்துக்குற...உங்களுக்கு ப்ரோமோசனுக்கு ஏற்பாடு பண்ற..இதை கண்டுக்காதிங்க” அப்படினு சொன்னாரு.அதனால நானும் அந்தப் பொண்ணுகிட்ட உன்னோட குடும்ப சூழ்நிலை புரிஞ்சு நடந்துக்கோ.அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க.அவங்ககிட்ட மோததைனு சொல்லிட்ட” என்றார்.
“இந்தியால மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்ததே பொண்ணுங்க தன்னோட கஷ்டத்த இன்னொரு பொண்ணு கிட்ட ஈஸியா சொல்ல முடியும்னு தான்.ஆனா நீங்களே அந்தப் பொண்ணு கஷ்டத்த புரிஞ்சுக்காம காசுக்காக விலைபோய்டிங்க...ஒரு பொண்ணா உங்களுக்கு அவ அனுபவிக்குற கொடுமை புரியலையா?பெண்களை பெண்களா பார்க்காம காமப் பொருளா பாக்குற அந்த நாய்களுக்கு நீங்களும் உடந்தையா?உங்கள மாறி ஆளுங்க இருக்கறது நால தான் அந்த நாய்ங்க என்ன வேணுனாலும் செஞ்சுட்டு காச கொடுத்து தப்பிச்சறாங்க...உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?” என்று கோபமாக கத்த சுற்றி இருந்தவர்களுக்கே அவள் பேசியத் தொனி பயத்தைக் கொடுத்தது.
அந்த அதிகாரி குனிந்த தலை நிமிரவே இல்லை.அவரிடம் ஒன்றும் பேசாமல் தாசிடம் திரும்பிய குயிலி அவர்களை தங்கள் பின்னே அவர்களை வருமாறு சொல்லச் சொல்லி விட்டு காரில் ஏறினாள்.முருகவேல் காரை எடுக்க அவர்களின் கார் கல்லூரியை நோக்கி பறந்தது.
எப்பொழுதும் போல் ஒரு ஆட்சியாளர் வருகிறார் என்று நினைத்த முருகவேல் குயிலின் இந்த செயலைப் பார்த்ததும் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தார்.தன் பெண்ணும் வருங்காலத்தில் குயிலியைப் போல் ஒரு நல்ல ஆளாக வர வேண்டும் என்று மனதினில் நினைத்தார்.
கல்லூரியில்,
மாவட்ட ஆட்சியர் வந்த செய்தியைக் கேட்டவுடன் கல்லூரி முதல்வர் அவரை வரவேற்க வெளியே வந்தார்.அவரிடம் குயிலி நிர்வாக இயக்குனரை பார்க்க வேண்டும் என்று சொல்ல குயிலியை அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே முதல்வருடன் வந்தவர்களைப் பார்த்ததும் அவருக்கு அவர்கள் வந்த செய்தி புரிந்து விட்டது.இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் எழுந்து நின்று கை கூப்பி “வாங்க கலெக்டர் மேடம்..நீங்க எங்க காலேஜிக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோசம்” என்று கூற தாசிடம் கல்லூரி முதல்வரை வெளியே போகச் சொன்ன குயிலி கதவையும் மூடச் சொன்னாள்.முதல்வர் மரியாதை நிமித்தமாக இயக்குனரிடம் தலை அசைத்துவிட்டுச் சென்றார்.
உள்ளே குயிலி,அந்தப் பெண்,இயக்குனர்,பெண் காவல் அதிகாரி மட்டுமே இருந்தனர்.குயிலியை அமரச் சொன்னவர் “சொல்லுங்க மேடம் என்ன சாப்படுறிங்க?” என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்க குயிலிக்கு உள்ளுக்குள் இருந்த ஆத்திரம் பல மடங்காக ஏறியது.
மங்கையையும் லாவண்யாவையும் சுட்டிக் காட்டி “இவங்க ரெண்டு பேரையும் யாருன்னு தெரியலையா?” என்று கேட்க அவர் யோசனை செய்வது போல் முகத்தை வைத்துக்கொண்டு “தெரியலையே” என்று பதில் சொல்ல குயிலியின் கோபம் இன்னும் பன்மடங்காக ஏறியது.
“பொய் சொல்லாத டா பாவி” என்று மங்கை கத்த அவளை அமைதியாக இருக்கச் சொன்ன குயிலி வெளியே இருந்த தாசை அழைத்து அவனை கைது பண்ணச் சொல்ல தாஸ் திகைத்தான்.ஒரு பெரிய கல்லூரியின் இயக்குனரை அவர் கல்லூரியிலையே வைத்து கைது செய்யச் சொல்வது மிகப் பெரிய விஷயம் அன்றோ?
“இப்ப என்ன எதுக்கு அரெஸ்ட் பண்ண சொல்லறிங்க?” என்று கேட்டதற்கு “அதை போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லுவாங்க” என்று குயிலி பதில் சொல்ல “நான் எந்த தப்பும் பண்ணல..என்ன எப்படி அரெஸ்ட் பண்ண முடியும்?” என்று அவனும் திமிராகவே கேட்க இப்பொழுது குயிலின் கண்கள் அவனை எரித்து விடும் அளவு தீப்பார்வை பார்த்தது.
“நீ மங்கைய பாலியல் ரீதியா துன்புறுத்தலையா?” என்று கேட்க அவன் “யாரு மங்கை?” என்று மீண்டும் அதே எகத்தாளத்துடன் கேட்க “உன்னோட பொண்ணு வயசுல இருக்க பொண்ண போய் அசிங்கப்படுத்த உனக்கு எப்படி டா மனசு வந்துச்சு?நீ எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது.”என்றாள்.
அழுது கொண்டிருந்த மங்கையைப் பார்த்தவள் “அரெஸ்ட் ஹிம்” என்று தாசிடம் சொல்லி மங்கையை அழைத்துக்கொண்டு காரை நோக்கி நடந்தாள்.முருகவேலிடம் காரை எடுக்கச் சொன்னவள் மங்கையிடம் பேசலானாள்.
“என்ன நடந்தாலும் நான் உன்கூட இருப்பேன் மங்கை.தைரியமா இருக்கனும்.அவன் பண்ண தப்புக்கு நீ ஏன் அழனும்?” என்று அவளை ஆறுதல் படுத்த அவள் முகம் தெளியவில்லை. அழுது அழுது வீங்கிக்கிடந்தது.
முருகவேலிடம் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொன்னவள் அவரை வண்டியை விட்டு இறங்கச் சொன்னாள்.பின்பு மங்கையிடம் ஏதோ சொல்ல அதைக் கேட்ட மங்கையின் முகம் அப்படியே இறுகிற்று.அதை சொல்லும் பொழுது குயிலியின் கண்கள் கலங்கிற்றோ ?(!)