• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2

எப்பொழுது போலவே வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது அந்த திருச்சி மாநகரம்.. அது ஆசிரியர்கள் குடியிருக்கும் கவர்ன்மெண்ட் குவாட்டர்ஸ்.. அங்கு தங்கி இருப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் தான்..

திருச்சி மாநகரின் பரபரப்பு எல்லாவற்றையும் தன்னுடைய வீட்டின் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் துகிலன்.. அவனின் மனமோ அந்த விடியலைப் பார்த்து கொண்டிருந்தது..

அவனின் விழிகள் இரண்டும் அந்த விடியலில் இருக்க மனமோ, ‘இந்த அம்மா கொஞ்சம் கூட என்னோட பேச்சைக் கேட்கவே இல்லை.. நான் இப்பொழுது கேட்டேனா எனக்கு திருமணம் பண்ணி வைங்க என்று..?’ என்று மாடியில் இருந்த கைப்பிடி சுவற்றின் மீது சாய்ந்து நின்றான்..

காலைபொழுது எங்கிருந்த மெல்ல கூவிய குயிலின் ஓசையில் மனதை மெல்ல வருட கண்மூடி அமைதியாக நின்றான்.. அவனுக்கு எப்பொழுதும் காலைபொழுது விடியலை ரசிப்பான்.. இன்றும் அது போல மாடிக்கு வந்தவனின் உள்ளத்தில் தெளிவு இல்லை..

காலையில் எழுந்ததும் குளித்து முடித்து துணியைத் துவைத்து எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்த பூவிழியின் கண்களில் விழுந்தான் துகிலன். அவனைப் பார்த்த பூவிழி, ‘இவன் என்ன இப்படி கண்ணை மூடி நின்று கனவு காண்கிறான்.. அது நல்லது இல்லையே..?!” என்று தன மனதிற்குள் பேசியபடியே அவனைப் பார்த்தாள்..

துகிலனோ அவள் வந்ததையும், அவனைப் பார்த்து நிற்பதையும் உணராமல் அப்படியே கண்மூடி நின்றிருந்தான்.. பூவிழி அவனின் முகத்தை ஆழ்ந்து கவனிக்க அவன் யோசனையில் நின்றிருப்பது அவளுக்கு புரிந்தது.. அவளின் மனமோ, ‘இவனுக்கு என்ன அப்படி ஒரு யோசனை..?’ என்ற நினைவுடன் அவளின் அருகில் சென்றாள்..

அவனின் அருகில் சென்றபிறகும் கூட அவன் கண்மூடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பூவிழி, ‘இது சரிப்பட்டு வராது..’ என்று மனதிற்குள் சொன்னவள் அவனின் அருகில் சென்று, “துகில்..” என்று அழைக்கவும் விழி திறந்து பூவிழியைப் பார்த்தான்..

அவனின் பார்வையில் ஒரு ஆராய்ச்சி இருப்பதை உணர்ந்தவள், “டேய் என்னடா காலையிலேயே கண்ணை மூடி கனவு கண்டுட்டு இருக்கற..?” என்று கேட்டதும், “எல்லாம் என்னோட தலைவிதி..” என்று எரிச்சலுடன் கூறினான் துகிலன்..

அவனின் குரலில் இருந்த எரிச்சலைக் கண்ட பூவிழியோ, ‘இவனுக்கு என்னதான் ஆச்சு..?’ என்று யோசித்துக்கொண்டே, “டேய் துகில் உனக்கு என்னடா பிரச்சனை..?” என்று நேரடியாக கேட்டதும், “அம்மா எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க.. எனக்கு சுத்தமாக பிடிக்கல..” என்றவன் சலிப்புடன் கூறினான்..

அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி ஆச்சரியத்தில் கண்கள் இரண்டும் தெறித்து விடும் அளவுக்கு அவனைப் பார்த்தாள்.. துகிலன் மனதில் நினைப்பதையோ தன்னுடைய பிரச்சனை பற்றி யாரிடமும் சொல்லமாட்டான்.. அவனுக்கு இருக்கும் பிரச்சனையை அவனே சமாளிப்பான்.. ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக நடந்தது..

அவனைப் பற்றிய யோசனையில் ஆழந்த பூவிழி கொஞ்சநேரம் சென்றபிறகு, “யாருடா அந்த பொண்ணு..?” என்றவள் சந்தோசத்துடன் கேட்டாள்..

அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்த துகில் கமழினியின் போட்டோவை எடுத்து அவளின் கையில் கொடுக்க அதை அவசரமாக வாங்கிப்பார்த்தவளுக்கு பார்த்தும் கமழினியைப் பிடித்து போனது.. அவளின் அமைதியான முகம் பூவிழியை வெகுவாக கவர்ந்தது..

கமழினியின் முகம் பார்த்த பூவிழி, “துகில் ரொம்ப அமைதியாக இருப்பாள் போலவே..?! ஆனால் ரொம்ப அழகாக இருக்கா..” என்றவள் சொல்ல அலட்சியமாக அவளைப் பார்த்தான் துகிலன்..

அவனின் பார்வையே அவனின் மனதைப் படம் பிடித்து காட்ட, “டேய் துகில் எல்லாவற்றையும் ஒரு அலட்சிய பார்வை பார்க்காதே.. அது உனக்குத்தான் ஆபத்து..” என்று கூறியவளை முறைத்தான் துகிலன்..

அவனின் முறைப்பைக் கண்டுகொள்ளாத பூவிழி, “என்ன முடிவு எடுத்திருக்கிற..?” என்று அவனைப் பார்த்து நேரடியாக தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே கேட்டதும், “ம்ம் எங்க அம்மா சொல்லும் அவளையே திருமணம் செய்யலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன்..” என்று அவனும் தன்னுடைய மனதில் இருப்பதைக் கூறினான்..

அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி அவனையே பார்க்க அவனின் பார்வையோ எந்தவிதமான ஆர்வமும் இன்றி ஏதோ ஒரு கடமைக்காக சம்மதம் சொன்னது போல இருக்க, ‘இவன் என்ன கடமைக்கு கல்யாணம் பண்ணுகிறானா..?’ என்ற யோசனையுடன் நின்றாள்..

அவளின் மனதில், ‘என்ன எண்ணம் ஓடுகிறது..’ என்று அவளின் மனதை முழுவதும் அறிந்த துகிலன், “கடமைக்காக மட்டும்தான் பூவிழி.. மற்ற எந்த எண்ணமும் எனக்கு இல்ல..” என்றவன் வெடுக்கென்று சொல்ல பூவிழிக்கு தூக்கிவாரிப் போட அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்..

அவன் சொன்னதில் கடமை என்ற வார்த்தை அவளை ரொம்பவே பாதிக்க, “டேய் கடமை என்று சொல்லி ஒரு பெண்ணின் மனத்தைக் கலைக்க நினைக்காதே.. உனக்கு இவள் தான் சரியான ஜோடி அதை முதலில் புரிந்துக்கொள்ள முயற்சி செய்..” என்று கூறியவள் அவனை ஆழ்ந்துப் பார்த்தாள்..

அவனோ, “பூவிழி எப்படி என்னால் மஞ்சரியை மறந்துவிட்டு இவளை நினைக்க முடியும் என்று கொஞ்சமாவது பிராக்டிகலாக யோசி..” என்றவன் சொல்லும் பொழுதே, ‘அவளை பிரிந்து போக இவனால் முடியலையாம்.. திருமணம் வேண்டாம் என்பதற்கு எந்தவொரு ஆணும் இப்படி ஒரு காரணத்தை சொல்லியிருக்கவே மாட்டான்..’ என்று நினைத்தவளுக்கு சிரிப்பு வந்தது..

அவள் சிரிப்பதைப் பார்த்து அவன் கேள்வியாக புருவம் உயர்த்த, “நீ சொன்னதைக் கேட்டு சிரிக்காமல் என்ன பண்ண சொல்கிறாய்..? மஞ்சரியைப் பற்றி நீ கவலைபடாமல் திருமணத்திற்கு ஓகே மட்டும் சொல்லு அவளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தது நான் கரெக்ட் பண்ணிக்கிறேன்..” என்றவள் சிரித்துக்கொண்டே...!

அவள் சொன்னதைக் கேட்டு துகிலனுக்கு கூட சிரிப்பு வந்தது.. துகிலன் சொன்ன மஞ்சரி பக்கத்துவீட்டு நான்கு வயது குட்டிப்பாப்பா.. கொஞ்சநேரம் சிரித்து முடித்தவன், “பூவிழி எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம்..” என்று அவன் சொல்ல அவனின் பார்வையில் ஒரு அலட்சியம் குடிக்கொண்டது..

அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி, “இங்கே பாரு துகில்.. நீதான் அம்மா இஷ்டத்திற்கு விட்டுவிட்டாய் இல்ல.. அப்புறம் என்ன வேண்டாம்.. இந்த பெண்ணைப் பிடிக்கலையா..?” என்று கேட்டதும், “அது எப்படி பூவிழி உன்னிடம் சொல்ல..? எனக்கு திருமணம் பற்றி எந்த கற்பனையுமே இல்ல..” என்றவன் சலித்தபடியே கூறினான்..

“திருமணம் பற்றிய எந்த கனவும் இல்லையென்றால் கனவை வளர்த்திக்க..” என்று அவள் ஈசியாகக் கூறினாள்.. அவள் அப்படி சொன்னதும், “நான் இப்பொழுத்தான் தொழில் ஆரம்பித்திருக்கிறேன் பூவிழி.. அதில் முன்னேறனும்..” என்றவன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான்..

பிறகு அவனின் முகம் பார்த்த பூவிழி, “உன்னோட மனதில் தொழில் பற்றிய எண்ணம் இருந்தாலும் உன்னை நம்பி இங்கே வரபோவது ஒரு பொண்ணு.. அதை முதலில் நினைவில் வை.. கடமைக்காக எதையும் செய்யாதே.. அது அவளைத்தான் ரொம்ப பாதிக்கும்..” என்று சொல்ல அவள் சொன்னதை எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு அலட்சியமாக நின்றான்..

அவனைப் பார்த்து முறைத்தவள், “டேய் நீயெல்லாம் என்னைக்கு திருந்த போகிறாயோ..? எனக்கு தெரியல..” என்று கூறியவள், “நீ இவ்வளவு அலட்சியமாக இருக்கற.. பாரு மகனே இதோ இவள் பின்னாடி நீ பைத்தியமாக திரிய போகிறாய் பாரு..” என்று அவள் கமழினியின் போட்டோவைக் காட்டி பூவிழி கூறினாள்..

அவள் அப்படி சொன்னதும், “அதை நடக்கும் பொழுது பார்க்கலாம்.. இப்பொழுது எனக்கு இந்த திருமணம் வேண்டாம்..” என்றவன் அழுத்தமாகச் சொல்ல அவனை ஆழ்ந்துப் பார்த்த பூவிழிக்கு ஒரு விஷயம் மட்டும் சுத்தமாகவே புரியவில்லை..

இதுதான் துகிலன் எதைபற்றியும் அப்பொழுதே கவலைப்படவே மாட்டான்.. அது நடக்கும் பொழுது அதற்கு ஏற்றார்போல நடந்துக் கொள்வான்.. அவனுக்கு தொழில் மட்டும் முக்கியம்.. அதில் அலட்சியமாக இருக்க மாட்டான்..

‘இவனுக்கு திருமணம் ஏன் பிடிக்கல.. இவனோட மனதில் யாராச்சும் இருக்காங்களோ..?’ என்று தனது மனதில் கேள்வி எழுந்த மறுநொடியே, “டேய் உன்னோட மனசில் வேற பொண்ணு யாராவது இருக்காங்களா..?” என்று சந்தேகப் பார்வைப் பார்த்தாள்..

அவளின் பார்வையை உணர்ந்த துகிலன், “ம்ம் என்னோட மனதில் ஒரு இருபது பொண்ணுங்க இருக்காங்க பூவிழி..” என்று வெகு சீரியஸாக சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு கோபம் வந்ததும், “நீயெல்லாம் உருப்படவே மாட்ட..” என்றவள் தலையில் அடித்துக்கொள்ள சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு அகன்றான் துகிலன்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சிதம்பரம் – சாரதாவின் ஒரே தவப்புதல்வன் தான் துகிலன். சிதம்பரம் ஒரு ஆசிரியர். துகிலனுக்கு ஐந்து வயது இருக்கும் பொழுதே அவர் இறந்துவிட அவரின் வேலையை சாரதாவிற்கு கிடைத்தது.. அன்றிலிருந்து இன்று வரை தன்னுடைய மகனே தன்னுடைய வாழ்க்கை என்று வாழ்கிறார் சாரதா..

துகிலனும் சாரதாவைப் போலவே மிகுந்த பாசம் கொண்டவன்.. அவனுக்கு அம்மாவைப் பிடிக்கும் என்ற காரணத்தால் அவர் சொல்வது எதுவாக இருந்தாலும் அம்மாவின் விருப்பத்திற்கு சரியென தலையசைப்பவன்.. அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வெளியே சொல்லவே மாட்டான்..

மாடியில் இருந்து இறங்கி வந்த மகனைப் பார்த்த சாரதா, “டேய் துகில்..” என்று அழைக்க, “அம்மா..” என்றவன் நின்று அவரைப் பார்க்க, “பொண்ணு உனக்கு பிடிச்சிருக்கு இல்ல..?!” என்று கேட்டதும், ‘பிடிக்கல..’ என்று மனதில் சொன்னவன், “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா..” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தான்..

தன்னுடைய மகன் சரியென்று சொன்னதில் மகிழ்ச்சியடைந்த சாரதா பொண்ணு வீட்டிருக்கு அழைத்து மற்ற விஷயங்களைப் பற்றி பேச ஆரமித்தார்..

“ஹலோ நான் சாரதா பேசுகிறேன்... உங்க பெண்ணை என்னோட மகனுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாம்.. அடுத்து வர ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க நாங்க வருகிறோம்..” என்று சாரதா மகிழ்ச்சியாகச் சொல்ல, அவர் பேசுவதை எல்லாம் தன்னுடைய அறையில் இருந்து கேட்ட துகிலனுக்கு ஏனோ கமழினியைப் பிடிக்காமல் போனது.. தனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்று சொல்லாமல் கமழினியைப் பார்க்காமலே அவளை மனதில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்..

அவன் வேலைக்கு கிளம்பி வெளியே வரும் பொழுது, “என்ன கண்ணா கடைக்கு கிளம்பிட்டியா..?” என்று கேட்டதும், “ம்ம் ஆமாம்மா இன்னைக்கு ஜவுளிகடையில் வேலை கொஞ்சம் இருக்கு..” என்று கூறியவன் சாப்பிட அமர அவனுக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தார் சாரதா..

அவன் சாப்பிட்டுவிட்டு எழுந்ததும், “துகில் எல்லா வேலையையும் இந்த வாரமே முடிந்துவிடு அடுத்தவாரம் பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கு போகணும்..” என்று சொல்ல சரியென்று தலையசைத்தவன் அந்த இடத்தைவிட்டு அகன்றான்..

தன்னுடைய பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் செல்லும் மகனைப் பார்த்த சாரதா, “என்னோட மகன் அப்படியே அவங்க அப்பாவைப் போல..” என்று சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்திருக்கு கிளம்பிச் சென்றார்..

வீட்டைவிட்டு வெளியே வந்த துகிலனைப் பார்த்த பூவிழி, “எப்படியே துகில் உனக்கு திருமணம் நடக்க போகிறது..” என்று சொல்லி அவனை வம்பிற்கு இழுக்க, “நீவேற போடி கம்முன்னு..” என்று கத்திவிட்டு தன்னுடைய பைக்கை எடுத்தான் துகிலன்..

அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றாள் பூவிழி. அவளின் மனம், ‘இவன் அம்மா விருப்பமே தன்னுடைய விருப்பம் என்று இருக்கிறான்.. இவனுக்கு அந்த பொண்ணுக்கும் சரிவருமா..?! அது அவளை மீட்டு எடுக்குமா..?!’ என்று யோசித்தாள்..

பூவிழி துகிலனின் உயிர் தோழி. அதற்காக அவள் துகிலனுடன் படித்தவள் என்றோ, இல்ல அவனுடைய கல்லூரி தோழி என்றோ நினைக்க வேண்டாம்.. பூவிழி ஒரு பள்ளி ஆசிரியை. துகிலனின் அம்மா பள்ளி ஆசிரியை என்பதால் இவர்கள நட்பும் பள்ளியில் இருந்தே தொடங்கியது.. அவள் துகிலனை சந்தித்து ஒரு வருடம் தான் சென்று இருக்கிறது..

பூவிழியைப் பொறுத்தவரை துகிலன் ஒரு நல்ல நண்பன். அவனுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அதை அவனே சமாளிப்பான்.. அதனால் அவனின் வாழ்க்கையில் அவள் அதிகமாக தலையிடவே மாட்டாள்.. ஆனால் பூவிழி ஏன் அங்கிருக்கிறாள் என்று சாரதாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது..

அவனைப் பார்த்தபடியே நின்ற பூவிழியின் தோளில் கைவைத்த சாரதா, “எல்லாம் நல்லபடியாக நடக்கும் பூவிழி.. அதற்கு உண்டான காலமும், நேரமும் வந்துக் கொண்டே இருக்கிறது..” என்றவர் ஆறுதலாக அவளின் தலையை வருடினார்..

“இது எல்லாம் சரியாக நடந்தால் தான் அம்மா என்னோட வாழ்க்கை நேராகும்..” என்று சொல்லும் பொழுதே அவளின் கண்களில் ஒரு மெல்லிய தேடல்.. அந்த தேடல் யாருக்கானது என்பதை அறிந்த சாரதா, “இது எல்லாம் நல்லதாகவே நடக்கும் அதை மட்டும் முழுவதுமாக நம்புடா..” என்று சொல்லி அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் சாரதா..

அவரின் மனமோ, ‘பிள்ளையாரப்பா என்னோட பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து வாழ வேண்டும்.. அதுக்கு துணை நில்லுங்க பிள்ளையாரப்பா..’ என்று மனதார வேண்டிக் கொண்டவர் பூவிழிக்கு சாப்பாடு பரிமாற சாப்பிட ஆரம்பித்தவளின் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தது..

இந்த திருமணம் துகிலனுக்கும், கமழினிக்கும் வெறுப்பைக் கொடுத்தாலும், இந்த திருமணத்தில் மற்றொரு ஜோடியின் திருமணமும் மறைந்திருக்கிறது.. ஒரு மனதின் உண்மையான காதலும் மறைந்திருக்கிறது...

அவள் ஏதோ யோசனையுடன் சாப்பிட்டு முடித்ததும் பூவிழியை அழைத்துக்கொண்டு வேலைக்கு புறப்பட்ட சாரதாவின் மனமும் கனத்தது.. இந்த திருமணம் எல்லோருக்கும் ஒரு சவாலை வைத்திருக்கிறது..

வீட்டில் இருந்து கிளம்பிய துகிலனுக்கு திருமணம் பற்றிய நினைவே இல்லை.. அவன் அங்கிருந்து கிளம்பியதும் தன்னுடைய ஜவுளிகடையில் அடுத்து செய்யவேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே தன்னுடைய கடையின் முன்னாடி பைக்கை நிறுத்தியவன் கடையை நிமிர்ந்துப் பார்த்தான்..

அவனின் கடை சிறிதாக இருந்தாலும் துகிலனுக்கு சொந்த தொழில் என்றால் ரொம்ப பிடிக்கும்.. அதற்கு காரணம் தன்னை யாரும் கேள்வி கேட்கவே மாட்டார்கள்.. தான் யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியமும் வராது என்று உறுதியாக நினைப்பவன்..

நான்கு அடுக்குகளைக் கொண்ட ஜவுளிகடைக்கு எஸ். கே. சில்க்ஸ் என்று பெயரிட்டு இருக்க அதில் பணிபுரியும் வேலை ஆள்கள் எல்லாம் அவன் கடையைத் திறக்க காத்திருந்தனர்.. அந்த கடையில் முதல் தளம் முழுக்க முழுக்க ஆண், பெண்களுக்கு உண்டான மெட்டிரியல் எல்லாம் இருந்தது..

இரண்டாவது தளம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு உண்டானது.. மூன்றாவது தளம் முழுவதும் திருமண பெண்ணிற்கான பட்டுபுடவைகள், காட்டன் புடவைகள், டிசைனர் சாரீஸ் எல்லாம் குவித்திருந்தான்..

நான்காவது தளம் முழுக்க கல்லூரி செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான உடைகள் எல்லாவற்றையும் அடக்கியது அந்த கடை.. அதில் வேலை செய்யும் பணியாளர்கள் மட்டும் ஒரு தளத்திற்கு பத்து பெயரை நியமித்திருந்தான்..

அந்த கடையில் தன்னுடைய கனவுகள் முழுவதையும் வைத்து வடிவமைத்தவனுக்கு அவனின் தொழில் தான் அவனின் உலகம்.. அந்த கடைக்கு ஒரு முறை வந்தால் மறுபடியும் அங்கு வரும் எண்ணத்தோடுதான் செல்வார்கள்..

அதேபோல பணியாளர்களை தன்னுடைய வீட்டில் இருக்கும் சொந்தகளை போலவே நடத்துவான்.. துகிலனின் அலட்சியம் எல்லாம் வீட்டில் மட்டும்தான்.. அவனின் தொழிலில் துளி கூட கவனசிதறல் ஏற்பட்டது கிடையாது..

துகிலன் – கமழினி இருவருக்கும் திருமணம் நடக்க வீட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அவர்கள் இருவரும் தங்களின் படிப்பு, வேலை இரண்டிலும் கவனம் செலுத்துகின்றனர்.. அடுத்து என்ன நடக்குமோ..?!

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top