அத்தியாயம் – 5
ஒரு மாதம் மும்பையில், எப்படி ஓடி சென்றது என்று தெரியவில்லை பவிக்கு. மும்பையின் வாழ்க்கை முறை, அவளுக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து இருந்தது.
அதில் ஒன்று எத்தனை அடிகள் பட்டாலும், பீனிஸ் பறவை போல் மீண்டும் உயிர்த்தெழுந்து அன்றாட வாழ்க்கையை கவனிக்க செல்லும் மக்களை கண்டு அவள் வியந்து போனாள்.
இதற்கு நடுவில், இவள் தனது கண்ணாமூச்சி ஆட்டத்தை அபிஜித்யிடம் தொடர்ந்து கொண்டே இருந்தாள். அவள் அவன் காணாத நேரம், அவனை ஆசை தீர பார்த்து மகிழ்ந்தாள்.
அவள் ஆடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டமும், ஒரு நாள் முடிவிற்கு வந்தது. அபிஜித் இவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தை புரிந்து கொண்டு, அதை முடித்து வைக்க எண்ணினான்.
அன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், படுக்கையில் இருந்து மெதுவாக ஒரு பத்து மணி போல் எழுந்தாள் பவித்ரசெல்வி. எழுந்ததுமே அவள் கண்டது, அவள் அறையின் உள்ளே சட்டமாக கால் மேல் கால் போட்டு சோபாவில் அமர்ந்து இருந்த அபிஜித் தான்.
அவனின் பார்வை முழுவதும், அவள் மேல் தான் இருந்தது. அவன் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்தவள், பெண்ணிற்கே உள்ள தற்காப்பு உணர்வில் தான் எவ்வாறு இருக்கிறோம் என்று தான் முதலில் சைட் கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.
இரவில் போடும் பைஜாமஸ் உடை, ஆங்காங்கு சற்று கசங்கி இருக்க, தலை முடி களைந்து இருக்க, நெற்றியில் வைத்து இருந்த ஸ்டிக்கர் போட்டு கண் இமையில் ஒட்டி இருக்க என்று பார்க்கவே கோமாளி லுக்கில் இருந்தாள்.
சட்டென்று சரி செய்ய கை பரபரத்தாலும், அவன் முன்னிலையில் அதை சரி செய்ய முடியாமல் தவித்தாள். அந்த எரிச்சலில், அவள் கோபத்தை அவன் மீது காட்டினாள்.
“மிஸ்டர் இப்படி இன்டிசென்ட்டா, ஒரு பொண்ணு தனியா இருக்கிற ரூம்குள்ள வந்து சட்டமா உட்கார்ந்து இருக்கிறது தப்பு. முதல எழுந்து வெளியே போங்க, எது பேசுறதா இருந்தாலும் நான் வெளியே வந்ததுக்கு அப்புறம் பேசலாம்” என்று சிடுசிடுத்தாள்.
“ஹா! ஹா! நல்ல காமெடி! நேத்து நடந்து உனக்கு சுத்தமா நியாபகம் இல்லை போல செல்லம். கொஞ்சம் நீ ரிவைண்ட் பண்ணி பாரேன், நேத்து என்ன நடந்ததுன்னு?” என்று அபிஜித் கூறவும், அவள் திடுகிட்டாள்.
“ஹையோ! நேத்து ஏதும் தப்பா நடந்துருச்சா? இப்படி இவன் சட்டமா உட்கார்ந்து இருக்கான்னா, அப்போ ஏதோ தப்பு நடந்து இருக்கு தான. என்ன நடந்து இருக்கும்? ஹையோ! எனக்கு ஒண்ணுமே நியாபகத்தில் இல்லையே! நான் என்ன செய்றது?” என்று நேற்று நடந்ததை நினைத்து பார்க்க முயன்றும் அவளால் முடியவில்லை.
“ரொம்ப யோசிக்காத செல்லம், நேத்து வீட்டில் புதுசா கல்யாணம் பண்ண ஒரு பஞ்சாபி ஜோடிக்கு விருந்து நடந்ததே நியாபகம் இருக்கா?” என்று கேட்டான்.
ஆம்! நேற்று வீட்டில் அந்த பஞ்சாபி ஜோடிக்கு விருந்து வைத்து, ஒரே ஆட்டமும், பாட்டமும் களை கட்டியதே! அடிக்கடி, இவன் முகத்தை வேறு பார்த்து, பார்த்து ரசித்தோமே என்று அப்பொழுது நியாபகம் வந்தது.
அதை அப்பொழுது நினைத்து பார்க்க தொடங்கினாள், அவன் அந்த அறையில் இருப்பதை மறந்து.
“ஹே கீர்த்தி! நீ ரொம்ப அழகா இருக்க, சஞ்சித் இப்போ உன்னை பார்த்து மயங்கி விழ போறார் போ” என்று கூறிக் கொண்டு இருந்தாள் பாவனா.
“ஏய் பாவனா! அவர் ஏற்கனவே இவ அழகுல மயங்கி போய் தானே, யாரும் தூக்கிட்டு போறதுக்கு முன்ன, இவர் தாலி கட்டிட்டாரு” என்று கீர்த்தியை கேலி செய்து கொண்டு இருந்தாள், மற்றொரு தோழி பூஜா.
இவர்கள் மூவருடன் தான் பவித்ரசெல்வி, சென்னையில் இருந்து இங்கே மும்பைக்கு ப்ராஜெக்ட் செய்ய வந்து இருந்தாள். இதில் இவள் மட்டும் தான் ஜூனியர் கிரேட், மற்ற மூவரும் இவளுக்கு சீனியர்ஸ்.
பவித்ரசெல்வி மீது முதலில் கோபத்தில் இருந்த மூவரும், அதன் பின் டீம் லீட் இவள் கூறிய அவுட்லைனால் தான் இந்த ப்ராஜெக்ட் கைக்கு கிடைத்த விவரம் கூறினார். மேலும் அபிஜித் இவளையும் இதில் இணைக்க சொல்லி கேட்டுக் கொண்டதால் தான், இவள் இங்கு இருப்பதே என்று தெரிவித்த பின் தான் சமாதானம் அடைந்தனர்.
“ஹே பவி! நீ ஏன் ஏதோ யோசனையில் இருக்க, அடிக்கடி என்ன விவரம்?” என்று கேட்டாள் பூஜா.
“ஒன்னும் இல்லை அக்கா, வீட்டு நியாபகம் அதான் வேற ஒன்னும் இல்லை” என்று கூறி சமாளித்தாள் அவர்களிடம்.
எல்லோரும் மாடியில் உள்ள அறையில் தான், கீர்த்திக்கு அலங்காரம் செய்துவிட்டு அவர்களும் தயாராகிக் கொண்டு இருந்தனர்.
அவளுக்கு அப்பொழுது, அபிஜித் உடனான திருமணம் எப்படி இருக்கும் என்பது பற்றிய சிந்தனை தான் ஓடிக் கொண்டு இருந்தது. எப்பொழுது அவன் அன்று தன்னை காக்க, அந்த செயலை செய்தானோ அப்பொழுதே அவளுக்கு நன்றாக புரிந்தது அவனும் தன்னை விரும்புகிறான் என்று.
அன்றே தந்தையிடம், இவன் தான் தன் மணாளன் என்று கூறிவிட்டாள். இவனிடம் தோன்றிய பாதுகாப்பு உணர்வும், அவனின் பால் ஏற்பட்ட காதலும் தான் அவளை அவ்வாறு கூற வைத்தது.
இப்படி அவள் அவனை பற்றிய யோசனையில் இருக்கும் பொழுது, பூஜாவும் மற்ற இருவரும் அவளை தட்டி இவ்வுலகிற்கு அழைத்து வந்தனர். அதன் பின் எல்லோரும் பார்ட்டி நடக்கும், ஹாலிற்கு வந்து சேர்ந்தனர்.
ஹாலின் ஒரு ஓரத்தில் போட பட்ட இருக்கையில், தனியாக சென்று அமர்ந்தாள். கையில் செல்போனில் வாட்ஸ் ஆப்பில் ஒரு பார்வையும், புதிதாக திருமணமான ஜோடிகளை கிண்டல் செய்துக் கொண்டும், போட்டி நடத்தி அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கும் அபிஜித் மீதும் இருந்தது.
அதுவும் அன்று அவன் அணிந்து இருந்த உடை, அவனுக்கு மேலும் அழகு சேர்த்து அவளை திணற வைத்தான்.
“ஒரு மனுஷி, எவ்வளவு நாள் தான் இப்படி வீராப்பா இருப்பா? டேய் இப்படி அழகை கூட்டிகிட்டே போனா, என்ன அர்த்தம்? இங்க ஒருத்தியை புலம்ப வச்சிட்டு, அவன் பாட்டுக்கு ஜாலியா இருக்கான்” என்று புலம்பிக் கொண்டு இருந்தாள் மனதிற்குள்.
அவளின் மன குமுறல், அவனுக்கு எட்டியதோ என்னவோ அவன் அப்பொழுது அங்கே அந்த கூட்டத்தில் இருந்து விலகி வந்து, இவள் அருகில் வந்து அமர்ந்தான்.
அவன் வருவதை உணர்ந்து, இவள் தீவீரமாக போனை நோண்டிக் கொண்டு இருந்தாள். அவனும், அவளின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை புரிந்து கொண்டு அவளை ஓர பார்வை பார்த்துக் கொண்டே, போனில் யாருடனோ ஹிந்தியில் பேச தொடங்கினான்.
“ஹையோ! கடவுளே! முதல இவனை இங்கு இருந்து, கொஞ்சம் தள்ளி போக சொல்லுங்க. பக்கத்துல வந்து இப்படி உட்கார்ந்தா, நான் எப்படி சைட் அடிக்கிறது?”.
“கிருஷ்ணா! கொஞ்சம் உன் பக்தைக்கு, கருணை காட்டு பா!” என்று மனதிற்குள் கடவுளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
கடவுளும், இவளின் வேண்டுதலுக்கு செவி சாய்த்துவிட்டார் அப்பொழுது. அந்நேரம் அங்கு வந்த ஒருவர், இவனுக்கும் அந்த மணமகனுக்கும் வேண்டியவர் போலும் வாழ்த்த வந்து இருந்தார்.
அவரை வரவேற்று, மணமக்களிடம் அழைத்து சென்று அவருக்கு வேண்டியதை பார்த்து செய்ய இவனே எழுந்து சென்றான். அவன் அந்த பக்கம் எழுந்து செல்லவும் தான், இவளுக்கு மூச்சு சரியாக இழுத்து விட முடிந்தது.
பரேர் அங்கே கையில் சில குளிர்பானங்களுடன், சுற்றிக் கொண்டு இருந்ததை பார்த்து அவரை அழைத்து இவள் ஒன்றை அதில் இருந்து எடுத்துக் கொண்டாள்.
அந்த கிளாஸ்ஸில் இருந்த குளிர்பானத்தை ஒரு வாய் பருகியவளுக்கு, ஓமட்டிக் கொண்டு வந்தது.
“கருமோ! என்ன கன்றாவி இது? கெட்டு போனதை, ஜூஸ் போட்டுக் கொண்டு வந்துட்டாங்க போல. ச்சி! நல்லாவே இல்லை, இதை எப்படி எல்லோரும் குடிக்கிறாங்க?”
“ஒரு வேலை, இங்க இது எல்லாம் சகஜமா? குடிக்கவே பயமா இருக்கு! யார் கிட்ட இதை பத்தி கேட்கலாம்?” என்று சுற்றி எல்லோரையும் கவனித்துக் கொண்டே இருந்தாள்.
அங்கே அப்பொழுது, ஹை ஹீல்ஸ் தடதடக்க ஒரு மார்டர்ன் யுவதி, அந்த ஹாலுக்குள் பிரவேசித்தாள். புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து, அதன் பின் அபிஜித்தின் கைகளை பிடித்துக் கொண்டே அவனிடம் சரசமாக ஹிந்தியில் உரையாடிக் கொண்டு இருந்தாள்.
அது மட்டுமில்லாமல், இவள் சொன்ன கெட்டு போன ஜூஸ் ஒன்றை அவள் சர்வ சாதாரணமாக இது எனக்கு பழக்கம் என்பது போல், அதை ஒரே மூச்சில் வாயில் சரித்தாள்.
இதை பார்த்துக் கொண்டு இருந்த பவிக்கு, காதில் இருந்து புகை வராத குறை தான்.
“இப்படி ஒட்டி நின்னா தான், பேச வருமா இவளுக்கு? இவ இதை இப்படி குடிக்கும் பொழுது, ஏன் யாரும் ஒன்னும் சொல்லல? ஒரு வேலை எனக்கு மட்டும் தான், அந்த கெட்டு போன ஜூஸ் வந்துச்சோ?” என்று யோசித்தவள், அடுத்து அதே போல் இருந்த வேறு ஒரு கிளாஸ் ஜூசை எடுத்து பருகினாள்.
அதுவும் அதே போல் ஓமட்டவும், இது வேறு வகையான பழசாறு என்று நினைத்து அதை ஒரே மடக்கில் பருகினாள். கோபத்தில் இருந்த அவள், அதை ஒன்றுக்கு பின் ஒன்று என்று அருந்தி, நான்கு கிளாஸ் குடித்துவிட்டாள்.
பருகியவுடன், அவளுக்கு ஏதோ தலை விண்ணென்று வலி எடுக்கவும், வாந்தி வருவது போல் தெரியவும் உடனே அவளின் அறைக்கு ஓடினாள்.
அவள் அதை பருகிய விதத்தை பார்த்து, அபிஜித் பயந்து போனான். உடனே அவனும் யாருமறியாமல், அவள் பின்னே ஓடி அவளின் அறைக்குள் சென்றான். உள்ளே குளியறையில் உள்ள வாஷ் பேசினில், அவள் வாந்தி எடுத்துக் கொண்டு இருப்பதை அறிந்து அங்கே விரைந்தான்.
விட்டால், குடல் வெளியே வரும் அளவுக்கு அவள் வாந்தி எடுத்து விடுவாளோ என்று பயந்து, அங்கே உள்ள இண்டர்காம் மூலம் சமையல் அறையில் வேலை செய்யும் கரிஷ்மாவிடம், எலுமிச்சை சாறு கொண்டு வந்து கொடுக்கும் படி பணித்தான்.
அதன் பின், உள்ளே சென்று அவளின் தலையை தாங்கி பிடித்துக் கொண்டு அவளுக்கு உதவினான். அதற்குள் கரிஷ்மா, எலுமிச்சை சாறு கொண்டு வந்து கொடுக்கவும், அதை அவளுக்கு பருக கொடுத்தான்.