மரணத்தின் மர்மம்
அத்தியாயம் 1
காலை 6 மணி, தஞ்சாவூர், கோகிலாபுரம் மேற்கு பகுதியில் உள்ள சிறிய வீடு. படுக்கையில் இருந்து எழுகிறான் கெளதம். அழகிய கண்களும் ஈர்க்கும் பார்வையும், நார்மலான உயரமும், மாநிறமும் கொண்ட இருவத்தேழு வயதாகிய இளைஞன். முகத்தில் எப்போதும் ஒரு அமைதி இருக்கும். கண்களை கலைத்து கடிகாரத்தை பார்க்கிறான். பின்பு கண்களை மூடி கடவுளை வணங்குகிறான். எழுந்து இடதுபுறமுள்ள மேஜையில் உள்ள டிராவில் இருந்து ப்ரஷ், பேஸ்டு, சோப்பு எல்லாம் எடுத்து கொண்டு, அதன் அருகில் உள்ள பீரோவில் இருந்து துணிகளையும் எடுக்கிறான். பின்பு மெதுவாக வலதுபுறமுள்ள பாத்ரூம் செல்கிறான். அரை மணி நேரம் சென்றிருக்கும் குளித்து முடித்துவிட்டு வந்தவன், வெளியே சென்று சூரிய நமஸ்காரம் செய்கிறான்.
அது ஒரு சிறிய ஓட்டுவீடு. அங்கு அவன் மட்டும் தான் இருக்கிறான். அருகில் சில வீடுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் மட்டும் ஒரு குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களை தெரியும், ஆனால் பழக்கம் கிடையாது கெளதமிற்கு. தஞ்சை நீலமேக பெருமாள் கோவில் தெருவில் தேங்காய், பழங்கள், பூஜை பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறான். காலை ஏழு மணிக்கே கடையை திறந்துவிடுவான். பூஜை நாட்களில் ஆறு மணிக்கே கடையை திறப்பான். கடைக்கு கிளம்பும் முன் தாய், தந்தை படத்திற்கு முன்பு நின்று பேசுகிறான்.
“எல்லாம் நல்லதா நடக்கணும்பா, இன்னைக்கு ஏனோ என் மனசுல சந்தோஷம், துக்கம் இரண்டுமே சேர்ந்து இருக்கு. ஏனு தெரியல.” சிறு மௌனம், கண்களில் ஏதோ கலக்கம், “ ஏதோ நல்லதும், கெட்டதும் சேர்ந்தே நடக்க போற மாதிரி இருக்கு. இனம்புரியாத பயம் வருது. நீங்க தான்பா கூடவே இருந்து வழி காட்டனும். நல்லதே நடக்கனும்மா. நான் கடைக்கு கிளம்புறேன்.”
கடைக்கு செல்லும் வழியில் கையில் பூக்கூடையுடன் வரும் சூரிய பிரசாத்தை பார்க்கிறான். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்பத்திற்காக உழைக்கும் பதினேழு வயதான இளைஞன். பூக்கடையை நடத்தி சம்பாதிக்கும் குடும்பம். அதுமட்டுமின்றி கடைகளுக்கு பூக்கள், மாலைகள் சப்ளே செய்கின்றனர். கெளதம் கடைக்கு கூட அவர்கள் பூக்கள், மாலைகள் கட்டி தருகின்றனர்.
“ சூர்யா, சூர்யா...” சூர்யா பார்க்கிறான்.
“எப்டி இருக்க? அப்பா, அம்மா எப்டி இருக்காங்க?”
“நல்ல இருக்கோம்ணா, நீங்க எப்டி இருக்கீங்கணா?”
“ம், நல்ல இருக்கேன்பா. இன்னைக்கு பூ?”
“எப்போவும் வைக்கிற இடத்துல வச்சுட்டேணா.”
“இன்னைக்கு நான் கொஞ்சம் பூ சேர்த்து கேட்டேன். அதுவும் சேர்த்து வச்சுடீங்களா?”
“அதுவும் தான்ணா”
“சரிப்பா சரிப்பா”
“அண்ணா, முருகன் அண்ணா எப்போ கடைய திறப்பாங்க?”
அவனுக்கு என்ன பதில் சொல்ல என தெரியாமல் யோசித்தான். பின்பு “ தெரியலப்பா” என கலக்கதோடு கூறினான்.
“உங்களுக்கு கூட தெரியாதாணா?”
என அவன் யோசனையோடு கேட்டான். கெளதம் பதில் கூறாமல் நிற்கவும் அவன்,
“சரி விடுங்கணா, பரவா இல்ல. நான் கிளம்புறேன் லேட் ஆச்சு.”
“சரிப்பா போய்ட்டுவா”
சூர்யா கிளம்பிய பிறகு அவன் நடக்க ஆரம்பித்தான். கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குகிறான். காலையில் அப்பா, அம்மா படத்திற்கு முன்பு பேசியது போல் கடவுளிடம் மனதிற்குள் முறையிட்டு கொண்டான். பிரகாரத்தை சுற்றி வருகிறான். அங்கு ஒருவர் எல்லாருக்கும் பொங்கல் பிரசாதம் கொடுக்கிறார். அதை வாங்கி கொண்டவுடன் அவனுக்கு, அவனுடைய சிறு வயது நினைவிற்கு வந்தது.
இருபது வருடங்களுக்கு முன்பு, தஞ்சைக்கு அருகில் உள்ள தேவராஜபுரம் எனும் சிறிய கிராமத்தில் இருந்தனர் அவரது குடும்பம். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அனைத்து சொத்துகளையும் இழந்து, ஆதரிக்க சொந்தங்களும் முன்வராததால் அவர்கள் ஊரை விட்டு கிளம்பி இங்கு தஞ்சைக்கு வந்தனர். இங்கு வந்து இறங்கியதுமே அவனது தாயார் முருகலட்சுமி பேருந்து நிலையத்திலே துக்கத்தினால் இறந்துவிட்டார். சிறு வயதிலே தாயாரை இழந்து கெளதமும், மனைவியை இழந்த அவனது தந்தை குலசேகரனும் மிகவும் சோகத்திற்கு ஆளானர். அப்போது ஒரு வயதானவர், நீலமேக பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினால் அனைத்து துன்பங்களும் நீங்கும், நல்லது நடக்கும் என கூற, இந்த கோவிலுக்கு வருகின்றனர். அங்கு வந்ததும் இன்று போல் அன்றும் கோவிலில் பொங்கல் பிரசாதம் தந்தனர். அன்று அவர்களது பசிக்கு அது விருந்தானது. அங்கு ஊரில் பெரியமனிதரான சிவகுரு அய்யா அவர்கள், அவர்களுக்கு ஆதரவு தந்து தன்னிடம் வேலைக்கு வைத்து கொண்டார்.
“அண்ணா, அண்ணா... இங்க பாருங்க”
அவனது நினைவை கலைத்து நிஜத்திற்கு அழைத்தது, அந்த குரல். ஒரு சிறுவன் அவன் அருகில் நின்றிருந்தான். அவன் கெளதமை பார்த்து
“அண்ணா பிரசாதம் தீந்துடுச்சு. நீங்க கொஞ்சம் தருவீங்களா?”
என பாவம் போன்று கேட்டான். உடனே கெளதம் அந்த பிரசாதத்தை கொடுத்தான் சிறுவனுக்கு. அதை வாங்கியவுடன் சிறுவன் முக மலர்ச்சியோடு சிரித்துவிட்டு ஓடிவிட்டான். கெளதம் கடைக்கு செல்கிறான். வழியில் முருகன் கடை உள்ளது. திரும்பி பார்கிறான், கடை முடபட்டிருந்தது.
கெளதம், முருகன், சைமன், சந்தோஷ் நால்வரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். முருகன் சிவகுரு அய்யாவின் மூத்த மகனான சிவசங்கர் அவர்களின் மகன். சிவகுரு அய்யாவிற்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் சிவசுந்தரம். முருகனின் அப்பா சிவசங்கர், சிவகுரு அய்யாவை போன்றே நல்லவர், திறமையானவர், படித்தவரும் கூட. முருகனின் தாய் உமா, முருகன் பிறந்ததுமே இறந்துவிட்டார். அப்பா, தாத்தாவின் வளர்ப்பில் முருகனும் நன்றாக வளர்ந்தான். ஒருமுறை சிவசங்கர் அவர்கள் எஸ்டேட் வாங்குவதற்காக வக்கீல் ஒருவருடன், குலசேகரனை உதவிக்கு வைத்துகொண்டு சென்றார். அவர்கள் சென்றுவிட்டு திரும்பும் போது கார் விபத்தில் அனைவரும் இறந்துவிட்டனர். அநாதை ஆனான் கெளதம். அவனுக்காக சிவகுரு அய்யா அவருக்கு சொந்தமான நீலமேக பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு கடையை கொடுத்தார். முருகன் சித்தப்பாவிடம் வளர்ந்தான். முருகன் எட்டாம் வகுப்பு படிக்கும் போது சிவகுரு அய்யா இறந்துவிட்டார். அதன் பின் முருகன் படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலை செய்து தொழில் செய்ய ஆரம்பித்தான்.
கெளதம் கடைக்கு சென்று பொருள்களை எடுத்து வைத்து வேலையை செய்ய தொடங்கினான். சிறிது நேரம் சென்றது. மஞ்சள் நிறத்தில் பூக்கள் போட பாவாடையும், நீல நிற தாவணியும் அணிந்தவாறு, கையில் ஒரு கூடையுடன், பார்வையில் தெளிவும் முகத்தில் சர்வலட்சனம் பொருந்திய அழகிய தேவதை போல் நடந்து வருகிறாள் சௌந்தர்யா. கெளதம் கடைக்கு அருகில் உள்ள பூக்கடை, அவளது கடை. அவளை பார்த்தாலே கெளதமிற்கு முகத்தில் சந்தோசம் தானாக வந்து விடும். அவள் அருகில் வந்தவுடன்
“என்ன இவ்ளோ நேரம் ஆகிடுச்சு நீங்க வர”
“இல்ல, பாட்டிக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டு வர நேராயிடுச்சு.”
“பரவாயில்ல, கொஞ்ச பேர் தான் வந்துட்டு இருக்காங்க. மணி இன்னும் எட்டு ஆகலேல. நீங்க கடைய திறங்க.”
“ம்ம்” என கூறிவிட்டு கடையை திறந்தாள். பூக்களை எடுத்து வைத்து, மாலையை கட்ட ஆரம்பித்தாள். இடையிடையே இருவரும் பார்த்து கொண்டனர். இருவரது பார்வையிலும் சொல்லப்படாத அன்பு வெளிப்பட்டது. கண்களில் பேசி கொண்டனர் இருவரும். இடையில் சிலருடன் வியாபாரமும் நடைபெற்றது. நேரம் செல்ல செல்ல பசி எடுக்க ஆரம்பித்தது கெளதமிற்கு. அவன் அவளை பார்த்தான். அவள் வேலை செய்வதில் ஆர்வமாக இருந்தாள். அவளை அவன் கூப்பிட்டான்.
“ஏங்க!” அவள் திரும்பவில்லை. சிறு இடைவெளிவிட்டு மீண்டும்
“சௌந்தர்யா, ஒரு நிமிஷம் இங்க பாருங்க”
திரும்பினாள், கண்கள் என்ன என்றது.