அவளின் கன்னத்தில் தன் கையை வைத்தவர், “மன்னிச்சிடு மா... உனக்கு அவன் பண்ணின துரோகத்துக்கு நீ அவனுக்கு என்ன தண்டனை வேணும்ணாலும் குடு.. நான் எதுவும் கேட்க மாட்டேன் ஆனா நீயும் என் பேத்தியும் எங்களுக்கு வேணும்... எனக்காக நம்ம வீட்டுக்கு என் மகளா வந்துடு கண்ணா...” என்றவருக்கு குரல் தழுதழுத்தது.
ஏற்கனவே அவள் கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீர் இப்போது அவரது அன்பில் அணையை உடைத்து வெளியே வர அவரை அணைத்துக் கொண்டாள்..
“ம்மா...” சிறு வயதிலே தாய் பாசத்தை இழந்தவள் சுதாவின் உருவத்தில், தன் அன்னையே மீண்டும் வந்துவிட்டதாக பாவித்து அவரை அணைத்துக் கொண்டு விசும்ப, அவர் அவள் தலையை கோதிவிட்டார்..
தன் தங்கையை அவர்கள் எந்த குறையும் கூறாமல் ஏற்றுக் கொண்டதை காணும் போது திருவிற்கு இனி தங்கையின் வாழ்வை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை என்றே தோன்றியது.
“அத்தை லேட்டாச்சு” திரு ஞாபகப்படுத்த, சுதா வேகமாக சுமியை தன்னிடமிருந்து பிரித்தார்.. அவளையும் வினுவையும் ஒருமுறை பார்த்தவர், தன் தலையில் அடித்துக் கொண்டார்..
“என்னப் பிள்ளைங்க நீங்க.. கல்யாணத்துக்கு இப்படி தான் வருவீங்களா ரெண்டு பேரும்...” என்று அலுத்துக் கொண்டவர் அனுவிடம் திரும்பி, “அனு அந்த பெட்டியை எடுத்துட்டு வா” என்க, அனுவும் நிகிலும் காரிலிருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தனர்...
அருகில் இருந்த கோவில் வளாகத்துக்குள் வினுவையும் சுமியையும் அழைத்து சென்றவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த நகைகள் அணைத்தையும் அவர்களுக்கு போட்டுவிட்டு அழகு பார்த்தார்..
சுமி எவ்வளவு மறுத்தும் கேளாமல் சுதாவே அவளை அலங்காரம் செய்தார்.. திருமணம் வினுவிற்கு தானே என்று அவள் தடுத்த போதும் அவர் தன் மருமகளுக்காக, தான் செய்கிறேன் என்றுவிட அதற்கு மேல் அவளால் தடுக்க முடியவில்லை. அகிலை காயப்படுத்த வேண்டும் என்று நினைப்பவளால் சுதாவின் அன்பின் முன்பு ஒன்றும் செய்ய இயலாமல் போனது.
வினு ஹனியோடு பேசியவாறே அனுவிடம் தன்னை அலங்காரம் செய்யும் பொறுப்பை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள்... தன் குடும்பத்தை பார்த்த பின் அவளுக்கு யானை பலம் வந்தது போல் இருந்தது.
இருவரையும் தயார் செய்தவர்கள் சாமி சந்நிதிக்கு அழைத்து வந்தார்.. அங்கே அகிலும் வேஷ்டி சட்டையில் மாறியிருக்க, அவன் அருகில் சுமியை நிற்க வைத்தார்கள்.. அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது புரிய, சுமி இறுகிய தேகத்தோடு நின்றிருந்தாள்..
அவளின் இறுக்கத்தை கண்டுக்கொண்ட அகில் தன் அன்னையிடம் திரும்பி, “அம்மா… எதுக்கு இதெல்லாம்... நீங்க வினுவை பாருங்க.. ஏற்கனவே” தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மனதில் வைத்துக் கொண்டு அகில் கூற, சுமிக்கு கோபமாக வந்தது..
தனக்கு ஊரறிய தாலி கட்டுவதில் இவனுக்கு என்ன தான் பிரச்சனை என்று அவளின் கோபம் சுடர்விட்டு எரிய, அது தெரியாத அகில் அவளுக்கு சங்கடத்தை அளிக்க வேண்டாம் என்பதற்காக தன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தான்..
“போதும் நிறுத்து அகில்.. நாங்க சொல்றதை மட்டும் செய்...” என்றவர் கட்டளையிட அவன் வேறு வழியில்லாமல் அமைதியானான்.
ஐயர் மாலையை எடுத்து வந்து சுமியிடமும் அகிலிடமும் மாலையை மாற்றக் கூற, சுமி அசையாது அவனை பார்த்தாள்... கண்களாலே ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அகில்.. அவன் அருகில் திருவும் சுமியை பார்த்தவாறே தான் நின்றிருந்தான்...
தன் அண்ணனை பார்த்தவள் அவனின் “போடு மா” என்ற உதட்டசைவில் இயந்திரமாக அகில் கழுத்தில் மாலையை அணிவித்தாள்... அவனும் மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான்.. அடுத்ததாக ஐயர் தாலியை எடுத்து வந்து கொடுக்க, அகிலில் கைகள் நடுங்கியது.. அதை வாங்கிக் கொண்டவன் சுமியை பார்க்க அவளோ குற்றம் சுமத்தும் விழிகளோடு அவனை பார்த்தாள்..
‘மன்னிச்சிடு சுமிம்மா.. என்னால நீ ரொம்பவே கஷ்டத்தை அனுபவிச்சிட்ட... ஒருதடவை கல்யாணம் பண்ணி அதை அர்த்தம் இல்லாததா மாத்திட்டேன்.. ஆனா இந்த தடவை என் உயிரே போனாலும் உன்னை பிரிய மாட்டேன்...’ அவளுக்கு மனதளவில் வாக்களித்தவன் அவள் கண்களை பார்த்தவாறே அவள் கழுத்தில் மூன்று முடிச்சையும் போட்டான்...
அகில் தன் கழுத்தில் தாலியை கட்டவும் சுமிக்குள்ளும் பழைய நியாபகங்கள் அலையலையாக எழுந்தது... தான் இன்று இருக்கும் நிலைக்கு அவனே காரணம் ஆனால் அவனை ஒன்றும் செய்ய முடியாமல் அவன் கையாலே தாலி வாங்கிக் கொள்ள நேர்ந்த தன் அவல நிலையை நினைத்து அவள் கண்கள் கண்ணீரை வடித்தது...
அவளின் உணர்வுகள் புரிந்தாற் போல, அகில் அவள் கையை அழுத்தமாக பற்றிக் கொள்ள.. அதையெல்லாம் சுமி உணரும் நிலையில் இல்லை..
அவர்களின் திருமணம் முடியவும் சுதா சுமியை அணைத்துக் கொள்ள, நிகில் அகிலை அணைத்துக் கொண்டான்..
“கங்கிராட்ஸ் அகி..” அனு குதுகாலிக்க, அகில் அவளை பார்த்து புன்னகை புரிந்தான்..
“சரி அடுத்த ஜோடியை வர சொல்லுங்க..” சுதா பெரியவராக குரல் கொடுக்க, அனு வினுவை அழைத்து வந்து திருவின் அருகில் நிறுத்தினாள்..
அருகில் தேவதை போல் ஜொலித்துக் கொண்டிருந்தவளை யாருமறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் திரு.. வினு எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. தான் மிகவும் எதிர்பார்த்த தருணம் ஆனால் அவளால் மகிழ முடியவில்லை. அவனது வார்த்தைகள் நெருஞ்சி முள்ளாக உறுத்தினாலும் அவனை தவிர்க்கவும் முடியவில்லை.. மனம் காதலுக்கும் கோபத்திற்கும் மத்தியில் ஊஞ்சலாடியது. இருந்தாலும் தனக்காக யோசித்து தன் குடும்பத்திடம் பேசி அவர்களை வரவைத்து, என அவன் அவளுக்காக செய்தது எல்லாம் அவளை அவனிடம் மயங்கவே செய்தது..
இந்த நொடி இந்த நிமிடத்தை மட்டுமே நிஜம் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அவன் விழிகளை நோக்க, அதில் தெரிந்த அளவுக்கடந்த காதல் அவளின் மனதில் இருக்கும் சஞ்சலங்களை நீக்கியது.. அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் ஐயர் கொடுத்த மாலையை அவன் கழுத்தில் அணிவித்தாள்... அவனும் தன் கையில் இருந்த மாலையை அவள் கழுத்தில் அணிவித்துவிட்டு தாலியை வாங்கினான்...
அவள் முகத்திற்கு தாலியை நீட்டியவன் கண்களால் சம்மதம் கேட்க, அவள் அவனை விழிவிரிய பார்த்தாள்.. அந்த நிமிடம் அவளுக்கு அவன் அவளது திரு என்பது மட்டுமே மனதில் நிலையாய் நின்றது..
சரி என்று அவள் தலையசைத்த மறுநொடி அவள் கழுத்தில் தாலியை கட்டியவன் அவள் காதுக்குள், “லவ் யூ ஸோ மச் புஜ்ஜி” என்க, அதில் அவள் கண்களாலே அவனை கபளிகரம் செய்துவிடுபவள் போல் அவனை பார்த்தாள்..
எத்தனை நாட்கள் அவனிடம் லவ் யூ சொல்ல சொல்லி கெஞ்சியிருப்பாள், இன்று எதிர்பார தருணத்தில் அவன் சொன்ன காதல் அவளை புல்லரிக்க வைத்தது... இந்த திருமணம் இப்போது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் சரியே என்று பதிலளித்தது அவள் இதயம்...
தான் காதலை சொன்னதும் அவள் சந்தோஷப்படுவாள், நானும் டா அரசு என்று ஆர்பப்ரிப்பாள் என்று திரு எதிர்பார்க்க அவளோ ஆச்சரியமாக ஒரு பார்வை பார்த்தாளே தவிர வேறேதுவும் செய்யவில்லை.. அதில் திருவின் முகம் வாடி போனது..
நிகில் தான் திருவை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.. அகில் சுமியின் கையை பற்றியவாறு அவள் அருகிலே நிற்க, விக்கி முறைத்தவாறே வந்து திருவின் கைகளை பற்றிக் கொண்டான்..
“இங்க பாருங்க ஹிட்லர்.. என் அக்காவை நீங்க அழ வைக்கிறிங்கன்னு நான் எதாச்சும் கேள்விபட்டா...” யாருக்கும் கேட்காமல் முகத்தை சிரிப்பது போல் வைத்துக் கொண்டு திருவிடம் கூறியவன் அவன் கண்களை நேராக பார்த்து, “நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றவன் எச்சரிப்பது போல் கூற, திரு அசந்து போனான்.
‘புள்ளபூச்சியெல்லாம் நம்மளை மிரட்டுதே..’ மனதில் சிரித்துக் கொண்டவன் விக்கியை பார்த்து புன்னகைக்க, அவனோ “பீ கேர்பூல்” என்று எச்சரித்துவிட்டு சென்றான்... அதில் திருவின் புன்னகை விரிந்தது.
சாமி சந்நிதிதானத்தை ஒரு முறை வலம் வந்தவர்கள் பின் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு சென்று வினு மற்றும் திருவின் திருமணத்தை பதிவு செய்தனர். அதற்கு பிறகு அனைவரும் திருவின் வீட்டிற்கு கிளம்ப,. அனைவரும் தங்குவதற்கு திருவின் தற்போதைய வீடு போதாது என்பதால் திருவின் பழைய வீட்டிற்கு வந்தனர்.
வீட்டிற்கு வந்தவர்களை அனு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, பூஜையறையில் சென்று விளக்கேற்றினாள் வினு. அதன்பின் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டவர்கள், வினு மற்றும் விக்கியின் சிறுவயது சேட்டைகளை பற்றி பேசிக்கொண்டிருக்க திரு ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான்.. சுமி யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அமர்ந்திருந்தாள்..
இரவு நெருங்க ஆரம்பிக்க, ஹனியை விக்கியோடு தூங்க வைத்துவிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான் திரு.. வினுவோடு நிறைய பேச வேண்டும், எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும் என பல பல திட்டங்களோடு திரு உள்ளே நுழைய, அவன் வந்ததும் வேகமாக அவன் கையில் பெட்ஷீட்டை திணித்தாள் வினு.
“நீ என்ன பண்றன்னா?? அப்படியே மொட்ட மாடிக்கு போற.. அங்க தான் எங்கண்ணன் தூங்கிட்டு இருப்பான்.. அவன்கிட்ட இதுல ஒரு பெட்ஷீட்டை குடுத்துட்டு, நீயும் ஒரு பெட்ஷீட்டை அவன் பக்கத்துலயே விரிச்சி படுத்துக்கிற” என்றவள் இன்னொரு பெட்ஷீட்டையும் அவன் கையில் கொடுக்க, திரு அதிர்ச்சியில் வாய் பிளந்தான்..
அவன் அதிர்ச்சியை கண்டவள், “என்னடா எதுக்கு அப்படி பார்க்கிற?? போ போய் என் அண்ணா கூட தூங்கு” என்க,
திருவோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, “ஏன் புஜ்ஜி மா?? எனக்கும் உங்க அண்ணாவுக்கும் தான் ஃபர்ஸ்ட் நைட்டா??” என்றான் கேள்வியாக...
விழிகள் தொடரும்……