- Joined
- Apr 20, 2018
- Messages
- 110
- Reaction score
- 175
அத்தியாயம் ஐந்து
கையில் கிடைத்த பேப்பரை எல்லாம் கிழித்து எறிந்து, அறைக்குள் அங்குமிங்கும் நடந்து, இரண்டு பாட்டில் தண்ணீரை வாயில் கவிழ்த்த பின்னர் ஒருவாறு ஆசுவாசமாகினாள் கவின்.
முதல் முறை பேசும் பெண்ணிடம் எப்படி இப்படிப்பட்ட கேள்வியை கேட்க முடியும்? அதுவும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்? இவையெல்லாம் எனக்கு மிகவும் சாதாரணம் என்பது போல?
அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து விழிக்கையில், அடுத்தும் அதிரடியாக,
“ஆர் யூ ஸ்டில் எ சிங்கிள் ஆர் கமிட்டட்?” என்று கேட்டானே பார்க்கலாம். என்ன தைரியம்?!
அவனது கேள்வியில் முகம் சிவந்து கோபத்தில் வார்த்தைகளை வீச முயன்ற போது,
“நம்ம பெர்சனல்ல யாராவது மூக்கை நுழைச்சா எப்படி எரிச்சலாகும்ன்னு இப்ப தெரியுதா மிஸ் ஸ்வப்னா கவின் மலர்?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டவனின் மண்டையிலேயே அடித்தால் என்னவென்று தான் தோன்றியது! என்ன திண்ணக்கம்?!
“நீங்க ஒரு பப்ளிக் பிகர் மிஸ்டர் இந்தரஜித்... இந்த மாதிரி கேள்விகளை நீங்க எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்...” முயன்று பொறுமையை இழுத்துப் பிடித்து அவள் கூற, அவன் அலட்சியமாக தோளை குலுக்கினான்.
“பப்ளிக் பிகர்னா எங்களுக்கு இந்த வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருக்க கூடாதா மிஸ் ஸ்வப்னா கவின்மலர்?”
“தாராளமா இருக்கலாமே...” அவனை போலவே தோளை குலுக்கிக் கொண்டு கூறியவள், “புகழை உபயோகப்படுத்தி பெண்களை உங்க வசப்படுத்தி, மயக்கி, ஆசை வார்த்தைகளை சொல்லி, அவர்களை உபயோகப்படுத்திவிட்டு, அவர்களை குப்பையாக தூக்கி எறிபவர்களுக்கு இந்த வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் தேவையா மிஸ்டர் இந்தரஜித்?” என்று ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாக கூறியவளை வெற்றுப் பார்வையொன்றை பார்த்தான் இந்தர். இவ்வளவு தைரியமாக யாருமே அவனிடம் பேசியதில்லை. பேச முயன்றதுமில்லை.
ஸ்ரீநாத் பதட்டமாக ஏதோ கூற வர, அவரை கையமர்த்தி நிறுத்தினான் இந்தர்.
“நீங்க சொல்றதுக்கு என்ன ஆதாரம் மிஸ் ஸ்வப்னா கவின்மலர்?”
அவனது முகம் இறுகிக் கிடந்தது. கேள்வியிலேயே அவனது கோபம் தெரிந்தது.
“ஆதாரம் இல்லாம நான் பேச மாட்டேன் மிஸ்டர் இந்த்ரஜித்...” பதிலுக்கு இவளும் கோபப்பட, அவனது கைகள் இறுகி அவனது இருக்கையை கோபமாக பற்றியது.
இதுவரை யாருமே இந்தளவுக்கு அவனது முகத்திற்கு முன் குற்றசாட்டுகளை அள்ளி வீசியதில்லை. இந்த பெண் வந்ததே பேட்டி எடுக்க அல்ல என்பது புரிந்தது.
“உங்க குற்றசாட்டு உண்மைன்னு எனக்கு நிருபிச்சு காட்டுங்க...” இது அவன்!
“காட்டிட்டா?” இது அவள்!
“இனிமே நடிக்க மாட்டேன்னு பகிரங்கமா அறிவிக்கறேன். நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்...” சீரியஸ் மோடுக்கு சென்றிருந்தான் இந்தர், இதுவரை இல்லாத அளவு... யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவு!
இந்த கோபத்தை ஸ்ரீநாத் கண்டதே இல்லை. அவருக்கு நடுங்கியது. எப்படியாவது அந்த பெண்ணை நிறுத்தப் பார்த்தார். ஆனால் அவளோ யாரையும் கண்டுக்கொள்ளவே இல்லை.
இந்தரையாவது நிறுத்த முடியுமா என்றும் பார்த்தார். அவன் அவளுக்கு மேல் இருந்தான்.
ஹாசனோ என்ன செய்வது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சப்போஸ்... நீங்க சொன்ன வார்த்தைகள் பொய்ன்னா?” அவளை நோக்கி அவன் வார்த்தையை வீச, அவனை எரிப்பது போல பார்த்தாள்.
“கண்டிப்பா இல்லை. என்னுடைய வார்த்தைகளை நான் நம்புகிறேன்.” தீர்க்கமாக அவள் கூற, அவன் அலட்சியமாக அவளைப் பார்த்தான்.
“அதே நம்பிக்கை என் மேல் எனக்கிருக்கிறது மிஸ் ஸ்வப்னா கவின்மலர்... உங்க வார்த்தைகள் பொய்யாகும் பட்சத்தில் என்ன செய்ய போகிறீர்கள்?” தனது கொடுக்கால் கொட்டி, தேள் இரையை கவ்வுவது போல, அவளை வார்த்தையால் வளைத்தான் இந்தர்.
“நான் என்னுடைய தொழிலை விட்டுவிடுகிறேன். அப்படி பொய் என்றாகும் பட்சத்தில் இனி என்னுடைய பேனாவை தொட மாட்டேன்...” அவனை போலவே அறிவித்தாள் கவின், அதே கோபத்தோடு!
“அது போதாது மிஸ் கவின் மலர்... என் மேல ரொம்ப பெரிய குற்றசாட்டை அள்ளி வீசியிருக்கீங்க...” என்று அவன் கமா போட்டான்.
“என்ன சொல்றீங்க?” அவனை வெறித்துப் பார்த்தபடி இவள் கேட்க, அவனிடம் அதே அலட்சியம்!
“நான் சொல்வதை செய்ய வேண்டும்... நான் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும்... முடியுமா? இந்த சவாலுக்கு தயாரா?” என்றவனின் பார்வையில் உறைந்து நின்றாள் கவின். அப்படியொரு பார்வையை எங்குமே அவள் கண்டதில்லை. எக்கை போல இறுகி நின்றவனின் பார்வையில் நெருப்புப் பொறி பறந்தது. வார்த்தைகளில் அத்தனை சவால்!
முடிந்தால் மோதிப் பார் என்று நின்றான் இந்தர்!
இந்த சவாலை ஏற்கவில்லை என்றால் தானென்ன சத்தியவாதி?
மக்கள் குரலின் உதவி ஆசிரியரை பார்த்து சவாலை ஏற்க முடியுமா என்று கேட்கிறான். அதிலும் அவனொரு ஏமாற்றுக்காரன், வஞ்சகன், பொய்யன், வேடதாரி!
அதிலும் உயிருள்ள ஆதாரமாக ஷைலா இருக்கும் போதே இப்படியொரு சவாலா? அவள் மட்டுமா?
இன்னும் எத்தனை பேர்?
சினிமா ஆசையால் இவனிடம் வாய்ப்புக்காக நின்று சீரழிந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சமா நஞ்சமா?
இவனை கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டும். இவனது முகத்திரையை கிழித்தாக வேண்டும். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன். யாரிடம் வேண்டுமானால் வாலாட்டி விடலாமா? தானென்ன அவ்வளவு எளிதானவளா? முடியாது... இவனை விட முடியாது!
“தயார் தான் மிஸ்டர் இந்தரஜித்...” நிமிர்ந்து நின்று அறிவித்தாள் கவின்மலர்.
****
“என்ன தைரியத்துல அப்படி ஒரு சவாலை விட்டுட்டு வந்துருக்க நீ?” வசுந்தரா பயத்தோடு கேட்க, கையில் கிடைத்த பேனாவை வைத்து டேபிளின் மேல் குத்து குத்தென்று குத்தினாள் கவின்மலர். அத்தனை ஆத்திரம் அவன் மேல்!
“பின்ன என்ன செய்றது? அவன் மோசமானவன்னு நிருபிக்க எனக்கு வேற வழி தெரியல வசு?”
“நிருபிச்சு என்ன பண்ண போற சோப்பு? அவன் சவுத் இந்தியாவோட கனவு கண்ணன். அவனோட புகழை பிடிக்காத யாரோ ஒரு பொறமை பிடிச்ச ஜென்மம் இப்படி ஒரு கதை கட்டி விடறதா சொல்லிட்டு போயிட்டே இருப்பான். இது உனக்கு தேவையா?”
“அதுக்காக நம்ம கண் முன்னாடி நடக்கற அநியாயத்தை அப்படியே பார்த்துட்டு போகணும்ன்னு சொல்றியா?”
“இது இந்த பீல்ட்ல நடக்கற சாதாரண விஷயம். இதுக்கு நீ இவ்வளவு வெய்டேஜ் கொடுக்கனுமா?”
“ஆமா கொடுக்கணும். உனக்கு ஷைலாவை ஞாபகம் இருக்காது. ஆனா எனக்கு நல்லா இருக்கு. அவளோட கண்டிஷனை பார்த்துமா நீ இப்படி பேசற?” மனதின் ஆதங்கத்தை தாங்க முடியாமல் அவளிடம் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் கவின்மலர்.
“அதுக்கு காரணம் இவன் தான்னு உனக்கு உறுதியா தெரியுமா சோப்பு? அப்படி உறுதியா தெரியாதபட்சதுல, பெனிபிட் ஆப் டவுட்டை நீ இந்தருக்கு கொடுத்துதானேயாகனும்?”
வசுந்தராவை கோவமாக பார்த்தாள் கவின்மலர்.
“நீ அவன் மேல பைத்தியமா இருக்க. உனக்கு என்ன சொன்னாலும் புரியாது வசு..” ஒரு பெருமூச்சோடு கவின் கூற, அவளை பாவமாக பார்த்தாள்.
“இப்ப நான் கேக்கற கேள்விகளை எல்லாரும் கேப்பாங்க. நீ இதுக்கெல்லாம் தயாரா இருக்கணும் சோப்பு. எனக்கே தெரியனும்... ஏன் இவ்வளவு கோபத்தோட இருக்க, அவன் மேல நீ? ஒரு வாலிட் ரீசன் இல்லாம ஒருத்தர் மேல இவ்வளவு பெரிய அபாண்டமான குற்றசாட்டை வீச கூடாது...” கவின்மலர் முன் அமர்ந்து பொறுமையாக கேட்ட வசுவின் முகத்தை நிராசையாக பார்த்தவள், முகத்தை கைகளால் மூடி அழுத்தி துடைத்தாள்.
“நீ ஷைலா கூட அவ்வளவா பழகினதில்லை வசு. ஆனா அவ என்னோட ரொம்ப க்ளோஸ்...” என்றவள், மேஜை மேலிருந்த புகைப்படத்தை கண்ணீரோடு பார்த்தாள்.
“ம்ம்ம்...”
ஷைலா கவின்மலரின் மிக நெருங்கிய தோழி. வசதியான பெண். அவளது ஆசை கனவு அனைத்தும் நடிகையாவதே! அதற்காக மிகவும் முயன்று கொண்டிருந்தாள். திடீரென ஒருநாள் விஷம் அருந்திவிட்டதாக அவளை மருத்துவமனையில் சேர்க்க, அவளை காப்பற்றிய மருத்துவர்களால் அவளது மூளை செயல்பாட்டை மீட்க முடியவில்லை.
“அவளோட இன்றைய நிலைக்கு காரணம், அவ சாப்ட்ட பாய்சன். அவ விஷத்தை சாப்பிட்டவுடனே அவளை காப்பாத்திட்டோம். ஆனா அந்த விஷத்தோட வீரியத்துனால தான் அவளோட மூளை கலங்கி இப்ப சித்தப்ரம்மை பிடிச்ச நிலைமைல இருக்கா...”
சொன்னவள், மேஜையில் கவிழ்ந்து கண்ணீர் விட, அவளை பார்த்து வசுவும் கண்ணீர் விட்டாள். ஆனாலும் அவளால் இதற்கும் இந்தருக்கும் என்ன தொடர்பு என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
“அதுக்கும் இந்தருக்கும் என்னடி தொடர்பு இருக்கு?” சற்று சலிப்பாக கேட்டாள் வசு.
“அவ இந்தரஜித் கூட பழகியிருக்கா வசு. அந்த பழக்கம் அதிகபட்சமா போயிருக்கு...” என்றவள், “சூசைட் அட்டெம்ப்ட் பண்ற அன்னைக்கு இந்த்ரஜித்தை பார்த்து இருக்கா... கடைசியா அவன் வீட்டுக்குத்தான் போன் பேசியிருக்கா...” என்று கூற, வசு அதிர்ந்து பார்த்தாள்.
அவள் இதை எதிர்பார்க்கவேயில்லை.
அவளது கனவுக்கண்ணன், தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் இந்தரஜித் இந்தளவு மோசமானவன் என்று அவளால் நம்பவே முடியவில்லை.
“சும்மா சொல்லாத சோப்பு...” அவளது குரல் பிசிறடிக்க, வசுவை நேராக பார்த்தாள் கவின்மலர்.
“நான் சொல்றது நூறு சதவித உண்மை... உண்மையை தவிர வேறில்லை...”
“இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?”
“நான் தான் ஆதாரம்...” என்றவளை கோவமாக பார்த்தாள் வசு.
“லூசாப்பா நீ?”
“பின்ன என்ன? அவ என்கிட்ட சொல்லிட்டு தான் அவனை பார்க்க போயிருக்கா. ஒவ்வொருதடவையும் இதுதான் நடந்தது. அன்னைக்கும் அதுதான் நடந்தது. நான் போன் பண்ணா இந்தர் கூட இருக்கேன்டின்னு எத்தனை தடவை சொல்லியிருக்கா தெரியுமா? அவனுக்கு மத்த பொண்ணுங்க கூட இருக்க ரிலேஷனை பற்றி எவ்வளவு வேதனையா சொல்வா தெரியுமா?” துயரத்தோடு கூறினாள் கவின்மலர். தோழியின் இன்றைய நிலையை நினைக்கும் போது வந்த துயரமது!
“இதையெல்லாம் நீயே பார்த்தியா?”
“ஒரு தடவை ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு பார்த்து இருக்கேன்... அவ கடைசியா அவனுக்குத்தான் போன் பண்ணிருக்கா. அதையும் வெச்சுருக்கேன். இன்னும் என்னடி ஆதாரம் வேணும்?”
“இல்ல சோப்பு. என்னால கன்வின்ஸ் ஆக முடில. என்னாலையே முடியலைங்க போது இவ்வளவு பெரிய ரசிகர் படைய நீ எப்படி கன்வின்ஸ் பண்ணுவ? நீ பெரிய ரிஸ்க் எடுக்கற சோப்பு...” உண்மையிலேயே வருத்தமாக இருந்தது வசுவுக்கு. அவனுடைய ரசிகர் படையின் வீரியம் தெரியாமல், கவின்மலர் காலை விடுகிறாளே என்ற பயம் அவளுக்கு. அதுவுமில்லாமல், இதில் தோற்றால் அது கம்ப்ளீட் வாஷ் அவுட் இவளுக்கு. தொழில் ரீதியாக மட்டுமில்லாமல், இந்தர் இவளை இல்லாமலே செய்து விடும் வாய்ப்புகள் நிறைய உள்ள நிலையில் இது தேவையா என்று தான் கேட்டாள்.
“எனக்கு ரிஸ்க் எடுக்கறதை பத்தி கவலை இல்லடி...” என்றவளின் முகத்தில் துயரம் கப்பியிருந்தது.
“அந்த இந்தரை எப்படியாவது ஷைலாவ ஏத்துக்க வைக்கணும்..” என்று சாதாரணமாக கூற, அவளை பயந்த பார்வை பார்த்தாள் வசு.
காளை மாட்டிடம் பால் கறக்க முடியுமா என்ன?