அத்தியாயம் 1
சென்னையின் மிகவும் முக்கியமான இடமது.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த மெஷினரிகள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. பேப்பர் ரீம் சுழன்று உள்ளே சென்று, அச்சாகி பின் அளவாக வெட்டப்பட்டு பத்திரிக்கையின் பக்கங்கள் வெளிவந்துக்கொண்டு இருந்தன.
மக்கள் குரல் பத்திரிக்கையின் அலுவலகம்.
அலுவலகத்தோடு அருகிலேயே பிரஸ் இருப்பதால் எப்போதும் அந்த சப்தம் குறைவதே இல்லை. கவின் மலருக்கு அந்த சப்தம் மிகவும் பிடிக்கும். அது ஏதோ இளையராஜாவின் இன்னிசை போல அவளது காதில் விழுந்து வைக்கும்.
நமக்கு அந்தப்பக்கம் போனால் அந்த சப்தம் என்னவோ நாராசமாக கேட்பது தான் உண்மை. சில நேரங்களில் வசுந்தராவுக்கு தலைவலி கூட வந்துவிடும். ஆனால் கவின் மலரோ அந்த சப்தத்தை அவ்வளவு ரசிப்பாள்.
“இதென்னடி இப்படி ரசிச்சுண்டு கேட்டுட்டு இருக்க? காதே குடையுது...” வசு காதை பொத்திக்கொண்டு கத்த, தடக் தடக் என்ற சப்தத்தை ரசித்து பழகிய கவின் மலருக்கு வசுவை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.
“வசு... இது நமக்கு அன்னமிடற தொழில். தொழிலை வெறும் தொழிலா பார்க்காம அதை ரசிக்கணும். ஆராதிக்கணும்... அதுக்கு நேர்மையா இருக்கணும். மொத்ததுல அது நமக்கு குழந்தைடி. நாம எப்படி அதை கொண்டாடி வெச்சுக்கறோமோ அது மாதிரி தான் அதுவும் நம்ம கொண்டாடும்...”
நீண்ட விளக்கம் கொடுத்தவளை, வசு ஏலியனை பார்ப்பது போல பார்த்து வைத்தாள்.
“நீயெல்லாம் மியுசியம் டிக்கட்டு கவி... என்னை ஆளை விடு...” என்ற வசுந்தரா தப்பித்து போக நினைக்க,
“வசு... உன்னோட ரைட் அப் முடிஞ்சுதா? மெட்டிரியல் இன்னும் எனக்கு வந்து சேரலியே?”
கடமை உணர்வு தவறாமல் கவின் கேட்டு வைக்க, வசு பல்லை கடித்துக் கொண்டாள்.
“இதெல்லாம் மட்டும் நல்லா கேட்டுடு கவி. நாளைக்கு ஒரு நாள் லீவ் வேணும்னு நானும் கழுதை மாதிரி கத்திண்டே இருக்கேன்... அதை கண்டுக்கிட்டயா நீ?”
முகத்தில் பரவிய வெப்பத்தோடு அவள் கேட்டு வைக்க, கவின் சிரித்துக்கொண்டாள்.
“ஏன் வசு, கழுதை வந்து என் காதுல கத்தினா அதோட லாங்குவேஜ் எனக்கு புரியுமா? காழ் காழ் ன்னு ஏதோ கத்திட்டு இருக்குன்னு விட்டுட மாட்டனா?”
“ம்ம்ம்... ஜோக்கு... சிரிப்பே வரலையாக்கும்...” என்றவள் தன்னுடைய வாயை ஆவென்று காட்ட,
“ஐயோ... இப்படியெல்லாம் பயமுறுத்தாதே...” என்று வேண்டுமென்றே பயப்படுவது போல நடித்தவள், “சரி அந்த கழுதை மேட்டரை இன்னொரு முறை தான் சொல்லேன்...” என்று வழிக்கு வர, முறைத்துக் கொண்டிருந்த வசு ஆர்வமாக அவள் முன்னே வந்தமர்ந்தாள்.
“அதாவது உஆ...” என்று ஆரம்பிக்க,
“ஏய் ஏன்டி கொலை பண்ற? சொல்றதுதான் சொல்லித் தொலைக்கற, முழுசா சொல்லக்கூடாதா?” என்று கடுப்படிக்க,
“சரி உதவி ஆசிரியரே...” என்று சிரிக்க, அதை கேட்டு தலையில் தட்டிக்கொண்டு யோசித்த கவின் மலர்,
“ம்ம்ம்... போறலியே...” என்று யோசிக்க,
“ம்ம்ம்... சொல்லித்தொலைக்கறேன்... மக்கள் குரலின் உதவி ஆசிரியரே...” என்று ஆரம்பிக்க,
“இதுவும் போறலை...” என்று குறும்பாக சிரித்தாள் கவின்.
“ஏய்... வேணாண்டி...”
“என்ன டி யா? ஓகே ரிஜக்ட் பண்ணிட வேண்டியதுதான்...” மலையேறிய கவின் மலரின் கையைப் பிடித்துக்கொண்டாள் வசுந்தரா.
“சரி சரி... மக்கள் குரலின் உதவியாசிரியர் மாண்புமிகு கவின் மலர் அவர்களே...” என்றழைத்த வசுவை பார்த்து சிரித்தாள்.
“இன்னும் கொஞ்சம் கூட ஆட் பண்ணலாம்...” என்று சாதாரணமாகக் கூறியவளை கொலை வெறியோடு பார்த்தாள்.
“என்ன ஆட் பண்றது மேடம்? அதையும் நீங்களே சொல்லிடுங்க...” கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு வசுந்தரா கேட்க,
“ம்ம்ம்... தானைத்தலைவி, பொன்மன செம்மல், அழகு சுந்தரி, அதிரூப முந்திரி... இப்படி ஏதாவது அடைமொழி கொடுத்து சொல்லேன் வசு...” என்று சிரிக்காமல் கூற,
“ஏய்.. என்னடி நீ இம்சை அரசி இருபத்தி ஒன்பதாம் புலிகேசியா இருக்க?” வசுவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“வசு... பின்னாடி வர்றவங்க எல்லாம் பார்த்து தெரிஞ்சுக்கணும் இல்லையா?” என்று கூற, வசு தன் பின்னால் பார்த்தாள். விஷமமாக!
“ஹலோ... உனக்கு பின்னாடி வர்ற ஜூனியர்சை சொன்னேன். அதுக்காக உன்னோட பேக்கை பார்க்காத! அது ஆல்ரெடி...” என்று ஆரம்பிக்க வசு அவசரமாக கையெடுத்து வணங்கினாள்.
“போதும்டி என்னை இதுக்கு மேலயும் டேமேஜ் பண்ண முடியாது... போதும் விட்டுடு...”
“அட சின்ன பாப்பா...” என்று ஆரம்பித்தவளை கண்களில் கொலை வெறியோடு பார்த்தாள் வசு.
“இந்த பேரை வெச்சு கூப்பிடாதே சொப்பன சுந்தரி...” ஸ்வப்னா கவின்மலர் என்ற அழகான பெயரை கடுப்பில் சொப்பன சுந்தரியாக்கி இருந்தாள் வசு.
“என்ன சின்ன பாப்பா நீ? வரலாறு முக்கியம் சின்ன பாப்பா...” என்று அவளை விடாமல் கலாய்த்தவளை ஏதாவது வைத்து மொத்தும் வெறியில் இருந்தாள் வசுந்தரா.
“அடியே... நீ லீவுக்கு ரெக்கமன்ட் பண்ணவும் வேண்டாம்... நான் லீவ் எடுக்கவும் வேண்டாம்... போதும்டி...” என்று அவளைத்தாண்டி போக,
“அட இரு சின்னப்பாப்பா... இதுக்கெல்லாம் கோச்சுட்டா என்னவாறது? பாரேன்... உன்னோட டொமேட்டோ கன்னம் அப்படியே மின்றது...” என்று ஐஸ் வைக்க, தன்னையும் அறியாமல் அவளது கன்னத்தை தடவிப் பார்த்தாள் வசு.
“அந்த டொமேட்டோ மேட்டர் ஓகே டி... ஆனா...” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே,
“ஆனா என்ன சின்னப்பாப்பா? இந்த சின்னபாப்பா மேட்டர் தானே சின்னபாப்பா?” என்று அதற்கும் கலாய்க்க, அவளது கழுத்தை நெரிக்க வந்தாள் வசு.
எதற்குமே அசைந்துக் கொடுக்காத வசு கடுப்பாவது என்றால் இந்த சின்னபாப்பா என்ற வார்த்தைக்குத்தான். சற்று பூசிய உடல்வாகில் இருப்பவளை வேண்டுமென்றே கலாய்ப்பது தான் ஸ்வப்னா கவின்மலரின் வேலை. அதற்கு வசு அவளை சொப்பன சுந்தரி என்று கிண்டல் செய்தாலும் அதையெல்லாம் கவின் துடைத்து போட்டுவிட்டு போகும் ரகமானதால் அவளை என்ன சொல்லி நாக் அவுட் செய்வது என்று ரொம்பவே யோசித்து மெனக்கெட்டு, ஒன்றும் புலப்படாமல் தான் வசு காண்டாவது!
“உனக்கு வாய் இருக்கே வாய்... அது செங்கல் காளவாய்... கொஞ்சமாச்சும் அடங்கறதா பார்...” என்று கடுப்படிக்க,
“அது எதுக்குடி அடங்கணும்? அதுபாட்டுக்கு சுதந்திரமா திரியட்டுமே...” என்று சிரிக்காமல் கூற,
“உன்னோட இந்த வாயை அடக்க ஒருத்தன் வராமையா போய்ட போறான்? அப்ப இருக்குடி உனக்கு...”
“அவன் வரும் போது வரட்டும்... இப்ப உன் மேட்டருக்கு வாம்மா ராசாத்தி...”
“எங்கடி வர விட்ட? விடாம கழுவி ஊத்தி ஒருத்தரை எப்படி ஆப் பண்றதுன்னு உன்ட்ட தான்டி கத்துக்கணும்...” உதட்டை சுளித்துக்கொண்டு கூற,
“சரி... சரி... நாளைக்கு நீ பையன் பார்க்க போற! அதுக்காக லீவ் கேக்கற... சரியா?” இதழோரம் துடித்த புன்னகையை அடக்கிக்கொண்டு கவின் கேட்க,
“அட இதுவும் நல்லாத்தானே இருக்கு. அதென்ன அவன் பொண்ணு பார்க்க வர்றது? நான் தான் பையன் பார்க்க போறேன்...” என்று அவள் சிரித்துக்கொள்ள,
“ரைட்... அந்த பையனுக்கு ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமான்னெல்லாம் கேட்டுக்கடி... அப்புறம் சமைக்க தெரியுமான்னு முக்கியமா கேட்டுக்க...” ஐடியா மணியாக ஐடியாக்களை வாரி வழங்கினாள் கவின்.