சரோஜாவின் இதயத்துடிப்பு வீதம் குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்க இரண்டு, மூன்று மருத்துவர்கள் சேர்ந்து சரோஜாவை பழைய நிலைக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருந்தனர்.
வித்யா பதட்டத்துடன் கணேஷின் கைகளை இறுக பற்றி கொள்ள கணேஷ் தவிப்போடு அஜயை பார்த்து கொண்டு நின்றான்.
உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் அஜய் பயத்தோடும், தவிப்புடனும் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறை வாயிலில் நின்று கொண்டிருக்க சரியாக ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர் ஒருவர் அந்த அறையில் இருந்து வெளியே வந்தார்.
"டாக்டர் சரோஜாவுக்கு என்ன ஆச்சு?? எதுவும் ஆபத்து இல்லை தானே??" பதட்டத்துடன் கேட்ட அஜயின் தோளில் ஆதரவாக கை வைத்த டாக்டர்
"ஐ யம் ஸாரி அஜய்..." என்று கூற சுற்றி நின்ற அனைவரும் அதிர்ச்சியாக அந்த டாக்டரைப் பார்த்தனர்.
"டாக்டர் என்ன சொல்லுறீங்க?? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?? கணேஷ் அவங்க என்னடா சொல்லுறாங்க?? சரோஜாவுக்கு என்ன ஆச்சுனு சொல்ல சொல்லுடா?? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?? சரோஜா....சரோஜா...." பதட்டத்துடனும், அழுகையுடனும் நின்ற தன் அன்னையை ஆதரவாக அணைத்துக் கொண்ட கணேஷ்
"ம்மா சரோஜாவுக்கு எதுவும் ஆகாது ம்மா...நீ கொஞ்சம் பதட்டப்படாம இரும்மா...." என சமாதானப்படுத்தியவன்
டாக்டரின் புறம் திரும்பி
"சரோஜாவுக்கு என்ன ஆச்சு டாக்டர்??" என்று கேட்டான்.
"அவங்களுக்கு ஓவர் டொக்ஷினான போதை மருந்து கொடுத்து இருக்காங்க....நாங்க அவங்களை இங்க அட்மிட் பண்ணதுமே அதை கண்டு பிடித்து அதற்கு மருந்தா அன்டி டொக்ஷின் கொடுத்தோம்....பட் அது அந்த டொக்ஷின் அளவை விட கம்மியாக இருந்திருக்கு....அதை நர்ஸ் சரியாக கவனிக்காம விட்டுட்டாங்க....அவங்க உடம்பில் எஞ்சி இருந்த அந்த போதை மருந்து தான் இப்போ அவங்க ஹார்ட் பீட்டை லோ ஆக்கிடுச்சு...இப்போ மறுபடியும் நாங்க அன்டி டொக்ஷின் கொடுத்தோம்...அவங்க பழைய நிலைக்கு வர்றதுக்கு எப்படியும் ஒரு 24 டூ 48 மணி நேரம் ஆகும்...எங்க மேல தான் பிழை...ஆரம்பத்தில் சரியான அளவில் மருந்து கொடுத்து இருந்தா இந்த கிரிடிக்கல் ஸ்டேஜ் வந்து இருக்காது...அதனால தான் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேன்....ஐ யம் ஸாரி அஜய்...." என்று அந்த டாக்டர் கூறவும் கண்கள் கலங்க அங்கிருந்த நாற்காலியில் கால்கள் தள்ளாட அமர்ந்தான் அஜய்.
ராஜஷேகர் அஜயின் அருகில் வந்து நிற்க அத்தனை நேரம் மனதிற்குள் வெதும்பி கொண்டிருந்தவன் அவர் வயிற்றில் முகம் புதைத்து கண்ணீர் விடத் தொடங்கினான்.
கனகா, வித்யா மற்றும் கணேஷ் கூட அஜயின் அந்த தோற்றத்தை பார்த்து மௌனமாக கண்ணீர் வடித்து கொண்டு நின்றனர்.
எதற்குமே கலங்காத தன் மகன் முதன்முதலாக கண்ணீர் விட்டு அழுவதை பார்த்த ராஜஷேகர் அந்த நொடி சரோஜாவின் மேல் அஜய் வைத்திருந்த அன்பை எண்ணி வியந்து போனார்.
தன் கண்களை துடைத்து கொண்டே அஜயின் முகத்தை நிமிர்த்தியவர்
"எல்லோரையும் தைரியமாக இருக்க சொன்ன நீயே இப்படி உடைந்து போகலாமா அஜய்?? சரோஜா ரொம்ப தைரியமான பொண்ணு...அவளுக்கு எதுவும் ஆகாதுனு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ தானே சொன்ன....இப்போ நீ அழுவுறதை பார்த்தா அது உண்மை இல்லையோ??" கேள்வியாக அஜயை பார்க்க அவசரமாக தன் கண்களை துடைத்து கொண்டு எழுந்து நின்று ராஜஷேகரை நிமிர்ந்து பார்த்தவன்
"நான் அப்போ சொன்னது தான் இப்போவும் சொல்லுறேன்....சரோஜாவுக்கு எதுவும் ஆகாது...எதுவும் ஆக நான் விட மாட்டேன்....அம்மா, அத்தை நீங்க எல்லோரும் காலையில் இருந்து எதுவுமே சாப்பிடலயே....கணேஷ் நீ அம்மாவையும், அத்தையையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ....வீட்டுக்கு போய் குளித்து ப்ரெஸ் ஆகிட்டு ஈவ்னிங் அவங்களை கூட்டிட்டு வா....அப்பாவும், நானும் இங்க ஹாஸ்பிடல்ல இருக்கோம் நீங்க போயிட்டு வாங்க..." என்றவாறே மறுப்பு கூறிய கனகாவையும், வித்யாவையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தவன் மறுபடியும் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்கு முன்னால் வந்து நின்று அங்கிருந்த கண்ணாடி தடுப்பின் வழியாக சரோஜாவை பார்த்து கொண்டு நின்றான்.
சரோஜாவையே பார்த்து கொண்டு நின்ற அஜயின் நினைவுகளோ சுமார் பதினைந்து மணி நேரங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகர்ந்து சென்றது.
சித்தார்த்திடம் போன் பேசி விட்டு வைத்த பின்பும் அஜயின் மனம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வில் சிக்கி தவித்தது.
சிறிது நேரம் கண்களை மூடி யோசித்தவன் சட்டென்று தன் கண்களை திறந்து
"வினோத்...சித்தார்த்தோட போன் நம்பரையும் ட்ரேஸ் அவுட் பண்ணுங்க....எப்படியும் வாஞ்சிநாதன் இருக்குற இடத்திற்கு கண்டிப்பாக சித்தார்த் போவான்....அவனை வைத்து தான் வாஞ்சிநாதனைப் பிடிக்க முடியும்..." என்று கூற
அஜயினால் வினோத் என்று அழைக்கப்பட்ட நபர்
"ஓகே ஸார்..." என அஜயை பார்த்து கூறி விட்டு சித்தார்த்தின் போன் நம்பரையும் கண்காணிக்க தொடங்கினர்.
அஜய் மும்முரமாக இந்த வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்க அவனது தொலைபேசியோ விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது.
வீட்டில் இருந்து அழைப்பு வருவதைக் கவனித்தவன்
"இப்போ எதுக்கு வீட்டில் இருந்து போன் பண்ணுறாங்க? இருக்குற டென்ஷன்ல ஏதாவது கத்தி வைத்தாலும் வைப்பேன்...கொஞ்ச நேரம் கழித்து போன் பண்ணி பேசலாம்..." என நினைத்து கொண்டு அந்த அழைப்பை கட் செய்தான்.
மறுபடியும் மறுபடியும் வீட்டில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க அஜயின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து செல்ல பார்த்தது.
ஆழ்ந்த மூச்சுக்களை விட்டு தன்னை சமன் செய்து கொண்டவன் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்ததும் தான் தாமதம் மறுமுனையில் கனகா பதட்டத்துடன் பேசத் தொடங்கினார்.
"டேய் அஜய் எங்கே டா போன? எவ்வளவு நேரமாக போன் பண்ணுறேன்...சரோஜாவும் போனை எடுக்க மாட்டேங்குறா...நீயும் எடுக்க மாட்டேங்குறா...எங்க இருக்கீங்க இரண்டு பேரும்?" என்ற கனகாவின் கேள்வியில் அதிர்ச்சியான அஜய்
"இரண்டு பேருமா? யார் இரண்டு பேர்? சரோஜா வீட்டில் தானே இருக்கா..." குழப்பமாக வந்த அஜயின் பதிலில் கனகா திகைத்து போய் நின்றார்.
"ம்மா...ம்மா...என்ன ஆச்சு? சரோஜா எங்கே?" அதட்டலாக வந்த அஜயின் குரலில் தன்னை மீட்டு கொண்ட கனகா
"டேய் அஜய் சரோஜா உண்மையாகவே உன் கூட இல்லையா? வீடு முழுவதும் தேடி பார்த்துட்டு வெளியே தோட்டத்திலும் சரோஜாவைப் பார்த்தேன்...அவ இல்லை...அவ ஸ்கூட்டரும் இல்லை...ஒரு வேளை அவங்க வீட்டுக்கு போய் இருக்கலாம்னு அங்கேயும் போய் கேட்டேன்...அங்கேயும் வரலனு சொன்னாங்க...ஒரு வேளை நீங்க இரண்டு பேரும் ஒண்ணா போய் இருக்கீங்களோ தெரியாதுனு தான் ஒரு மணி நேரமாக உனக்கு போன் பண்ணேன்...நீ என்னடானா இப்படி சொல்லுற...இப்போ சரோஜாவை எங்கேனுடா போய் தேடுறது? எங்கே போனாலோ தெரியலையே..." பதட்டத்துடனும், தவிப்புடனும் கூறி கொண்டிருக்க
அஜய் கனகா கூறிய சரோஜாவைக் காணவில்லை என்ற வார்த்தைகளிலேயே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
எத்தனை நேரமாக அஜய் அவ்வாறே நின்றான் என்பது அவனுக்கே தெரியவில்லை.
ராஜஷேகர் ஸ்டேஷனுக்கு வந்து அதிர்ச்சியாக நின்ற அஜயின் தோளில் கை வைத்த பின்னரே அஜய் தன் சுய உணர்வை அடைந்தான்.
"என்னாச்சு அஜய்?" என ராஜஷேகர் கேட்கவும் தன் கையில் இருந்த போனை ராஜஷேகரிடம் கொடுத்தவன் அங்கிருந்த நாற்காலியில் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு அமர்ந்தான்.
கனகா சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியாக அஜயை நிமிர்ந்து பார்த்த ராஜஷேகர் கனகாவை சமாதானப்படுத்த ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அஜயின் அருகில் வந்து நின்றார்.
"அஜய்...." ராஜஷேகர் தவிப்போடு அஜயின் தோளில் கை வைக்க
எந்தவித உணர்வும் இன்றி அவரை நிமிர்ந்து பார்த்தவன்
"அடுத்து என்ன செய்யப்போறேன்னே தெரியலப்பா...." என்று கூற
அவனருகில் இருந்த மற்ற நாற்காலியில் அமர்ந்த ராஜஷேகர் அஜயை கூர்மையாக நோக்கினார்.
ராஜஷேகரையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவன்
"நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்...சரோஜாவை காணவில்லைனு சொன்னதும் ஒரு சராசரி ஹஸ்பண்டா நான் உடைந்து போய் இருந்துட்டேன்....நான் ஒரு போலீஸ் ஆபீஸராக தான் இனி இந்த கேஸை பார்க்கணும்....சரோஜாவோட ஹஸ்பண்டா இல்லை..." என்று கூற
அவனது தோளில் தட்டி கொடுத்த ராஜஷேகர்
"இதற்காக தான் நான் எதுவும் பேசாமல் உன்னை பார்த்துட்டு இருந்தேன்...எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம நம்ம பீலிங்க்ஸை வெளிக்காட்டி அது பின்னால் போக ட்ரை பண்ணா நிச்சயமாக நம்ம நினைச்சதை சாதிக்க முடியாது...அந்த பீலிங்க்ஸையே கட்டுப்படுத்தக் கூடிய ஒரே விஷயம் நம்ம மைண்ட் கிட்ட இருக்கு...." என்று கூறியவர்
அவன் நெஞ்சில் கை வைத்து சுட்டிக் காட்டி
"இங்க இருந்து யோசிக்காதே...."
"இங்க இருந்து யோசி...." என அவன் தலையில் ஒற்றை விரல் வைத்து சுட்டிக் காட்டினார்.
"வாஞ்சிநாதன் பற்றி டீடெய்ல்ஸ் கேட்டியே அது எல்லாம் இந்த பைலில் இருக்கு...இதை உன் கிட்ட கொடுத்துட்டு போகலாம்னு வந்தா இங்க பிரச்சினை ரொம்ப பெரிதாக போயிட்டு இருக்கு போல இருக்கு...இப்போ அடுத்து என்ன செய்ய போற அஜய்?" என ராஜஷேகர் கேட்கவும்
அவர் கொடுத்த பைலை வாங்கி பார்த்தவன் சட்டென்று அந்த பைலை மூடி விட்டு ராஜஷேகரின் புறம் திரும்பி
"எஸ் நான் கண்டுபிடிச்சுட்டேன்...சரோஜா இன்னைக்கு காலையில் என் கிட்ட பேசிட்டு இருக்கும் போது நைட் தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டதுனு சொன்னா...அது கண்டிப்பாக என்னை கண்காணிக்க வாஞ்சிநாதன் அனுப்பிய ஆட்களோட சத்தமாக தான் இருக்கும்...இன்னைக்கு காலையிலேயும் அதே சத்தம் அவளுக்கு கேட்டு இருக்கலாம்...ஒரு வேளை நான் கெஸ் பண்ணது கரெக்ட்னா சரோஜா இப்போ வாஞ்சிநாதன் கஸ்டடியில் தான் இருப்பா...அப்பா இனி ஒரு நிமிஷம் கூட நாம தாமதிக்க கூடாது...ஏற்கனவே நவீனையும் மிஸ் பண்ணிட்டோம்....இப்போ சரோஜா...அடுத்து வாஞ்சிநாதன் தவறான காரியம் எதுவும் செய்ய முன்னாடி நாம வாஞ்சிநாதனைக் கண்டு பிடித்தே ஆகணும்..." என்றவன்
"வினோத் இப்போ ஒரு நம்பர் தர்றேன்...அதோட முழு தகவலும் எனக்கு கொடுங்க..." என்று விட்டு அடுத்த கட்ட வேலைகளை மும்முரமாக கவனிக்க தொடங்கினான்.