சரோஜா மயங்கி வீழ்ந்ததும் அஜய்க்கு ஒரு கணம் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சரோஜாவின் கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப அஜய் முயற்சி செய்து கொண்டிருக்க மறுபுறம் மற்றைய காவலர்கள் சொன்ன தகவல்களை வைத்து ராஜஷேகர் ஆம்புலன்ஸ் மற்றும் இன்னும் ஒரு சில காவலர்களை அழைத்து கொண்டு அந்த இடத்திற்கு வந்திருந்தார்.
நவீன் மற்றும் சரோஜா இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து போன ராஜஷேகர் உடனடியாக ஆம்புலன்ஸ் ஒன்றில் சரோஜா மற்றும் நவீனை ஏற்றி அனுப்பி விட்டு அவர்களுடன் அஜயையும் அனுப்பி வைத்தார்.
வாஞ்சிநாதன் மற்றும் சித்தார்த் இரத்தத்தில் முற்றிலும் நனைந்து தங்கள் உயிரை தொலைத்து இருக்க சுற்றிலும் அந்த இடத்தை பார்வையிட்ட ராஜஷேகர் தன் நண்பனின் நிலையை எண்ணி ஒரு கணம் வருந்த அவர் மனமோ
"தவறிழைப்பவன் ஒரு நாள் தண்டனை வாங்கியே தீருவான்..." என்று எப்போதோ ஒரு நாள் தான் கேட்ட கூற்றை எண்ணி பார்த்து அவர் வருத்தத்தை இல்லாமல் ஆக்கியது.
அவர்கள் இருவரினதும் உடலை அப்புறப்படுத்த சொல்லி விட்டு ஏனைய காவல்துறையினர் பிடித்து வைத்திருந்த வாஞ்சிநாதனின் ஆட்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தவர் நவீன் மற்றும் சரோஜா அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையை நோக்கி சென்றார்.
போகும் வழியில் கனகா மற்றும் வித்யாவிடம் ராஜஷேகர் தகவல் சொல்லி இருக்க ராஜஷேகர் ஹாஸ்பிடல் வந்து சேரும் அதே நேரம் வித்யா, கணேஷ் மற்றும் கனகாவும் ஹாஸ்பிடலை வந்து சேர்ந்தனர்.
அழுது கொண்டே ராஜஷேகரைப் பின் தொடர்ந்து சென்றவர்கள் அஜய் தலையை சுவற்றில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருப்பதைப் பார்த்து வேகமாக அவனருகில் விரைந்து சென்றனர்.
"அஜய்...." என்ற ராஜஷேகரின் அழைப்பில் மெல்ல கண் திறந்து பார்த்தவன் எதிரில் நின்ற கனகா, வித்யா மற்றும் கணேஷை குழப்பமாக பார்த்தான்.
"நான் தான் இவங்களுக்கு தகவல் சொன்னேன்....சரோஜா இப்போ எப்படி இருக்கா???"
ராஜஷேகரின் கேள்விக்கு
பதில் கூறாமல் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறையை திரும்பி பார்த்தவன்
"எதுவாக இருந்தாலும் ஐந்து, ஆறு மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க...." என்று கூற
"சரோஜா...." என கதறி அழுது கொண்டே வித்யா மயக்கமானார்.
அவசரமாக அருகில் இருந்த கதிரையில் அவரை அமரச் செய்த கணேஷ் வேகமாக தண்ணீரை ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்தான்.
வித்யாவின் முகத்தில் சிறிது தண்ணீரை தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து எழுந்து அமரச் செய்தவன்
"அம்மா...இங்கே பாரும்மா...சரோஜாவுக்கு எதுவும் இல்லை...இங்கே பாரும்மா..." என அவர் கன்னத்தில் தட்ட
கணேஷின் கைகளை இறுக பற்றி கொண்ட வித்யா
"சரோஜாவுக்கு எதுவும் இல்லை தானே?" என கண்கள் கலங்க கேட்டார்.
வித்யாவின் முன்னால் வந்து முழங்காலிட்டு அமர்ந்து கொண்ட அஜய்
"அத்தை இங்க பாருங்க...சரோஜாவுக்கு எதுவும் ஆகாது...இத்தனை நாளாக ஊரை ஏமாற்றி பொய் வேஷம் போட்ட ஆளுங்களை இந்த உலகத்திற்கு கண்டு பிடித்து காட்டி இருக்கா நம்ம சரோஜா...அத்தனை ஆம்பளங்க முன்னாடி ஒற்றை பொண்ணா தைரியமாக நின்னு இருக்கா அவ...சரோஜாவை நினைத்து நீங்க பெருமைப்படணும்...இப்படி உடைந்து போககூடாது...தனக்கு எதுவும் ஆனாலும் பரவாயில்லைனு இவ்வளவு பெரிய ரிஸ்கை அவ எடுத்து இருக்கா...இங்க பாருங்க கடைசியாக அவ போனில் தான் எங்கே இருக்கேன்னு எனக்கு லொகேஷன் வரை அவ அனுப்பி இருக்கா...ஆனா பதட்டததில் அவ டேட்டாவை ஆன் பண்ணல...அதை மட்டும் சரியாக பண்ணி இ சரோஜாவை கொஞ்சம் முன்னாடி போய் காப்பாற்றி இருக்கலாம்...இப்போவும் எதுவும் கெட்டு போகல...சரோஜா பழைய படி வரத்தான் போறா...எல்லோர் கூடவும் சந்தோஷமாக பேசி சிரிக்கப் போறா...கவலைப்படாதீங்க அத்தை..." என்று கூற வித்யா சிறிது தைரியமாக அஜயை பார்த்து கொண்டு இருந்தார்.
ராஜஷேகர் அஜய் கூறிய வார்த்தைகளைக் கேட்டு புன்னகத்து கொண்டே சற்று தள்ளி போடப்பட்டிருந்த கதிரையில் சென்று கண் மூடி அமர்ந்து கொண்டார்.
அஜய் கூறிய அந்த வார்த்தைகள் வித்யாவிற்கு மாத்திரம் கூறப்பட்டது அல்ல அஜய் தனக்கு தானே தைரியம் கூற கூறி கொண்ட வார்த்தைகள் என்பதை உணர்ந்து கொண்ட ராஜஷேகர் அடுத்து என்ன செய்வது என்று மனதிற்குள் திட்டமிட்டு கொண்டிருக்க சிறிது நேரத்தில் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்து டாக்டர் ஒருவர் வெளியேறி வந்தார்.
டாக்டரை நெருங்கி வந்த அஜய்
"சரோஜா இப்போ எப்படி இருக்கா டாக்டர்?" என்று கேட்கவும்
அவனது தோளில் தட்டி கொடுத்த டாக்டர்
"பயப்படுற அளவுக்கு எதுவும் ஆகல அஜய்...கொஞ்சம் ஓவர் பவரான போதை மருந்து அவங்க பிளட்ல கலந்து இருக்கு...நீங்க கரெக்ட் டைம்க்கு அவங்களை கொண்டு வந்ததனால் அவங்க உடம்பில் அந்த போதை மருந்து பரவ விடாமல் பண்ணிட்டோம்...இப்போ அவங்க மயக்கத்தில் இருக்காங்க...கொஞ்ச நேரம் கழித்து நீங்க போய் அவங்களை பார்க்கலாம்..." என்று விட்டு செல்ல சுற்றி நின்ற அனைவரும் நிம்மதியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
பழைய நினைவுகளில் நின்று கொண்டிருந்த அஜயின் தோளில் ராஜஷேகர் கை வைக்க தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு அவரை திரும்பி பார்த்தவன் அவரின் பின்னால் நின்ற ருத்ரா மற்றும் சித்ராவை தவிப்போடும், கவலையுடனும் நோக்கினான்.
ருத்ராவின் அருகில் அஜய் வரவும் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவர் எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிக் கொண்டு அழ அஜய்க்கு அவரை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.
"அம்மா...ப்ளீஸ் அழாதீங்க..." அஜய் ருத்ராவின் கை பற்றி கூறிக் கொண்டு நிற்க சித்ரா அவர்களை கண்கள் கலங்க வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
சிறிது நேரத்தின் பின்னர்
அழுதழுது ஓய்ந்து போய் அங்கிருந்த கதிரையில் ருத்ரா அமர்ந்து கொள்ள ராஜஷேகர் மற்றும் சித்ரா கவலையுடன் அவரை பார்த்து கொண்டு நின்றனர்.
யாரிடம் யார் எதைப் பற்றி பேசுவது என்று யாருக்கும் அந்த நொடி புரியவில்லை.
அஜய் மாத்திரம் அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க சிறிது நேரம் கழித்து சரோஜா வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியேறி வந்த நர்ஸ் ஒருவர்
"ஸார்...மேடம் கண் முழிச்சுட்டாங்க...உங்களை உள்ளே வரச் சொல்லி கூப்பிடுறாங்க..." என்று கூறியதும் தான் தாமதம் அடுத்த கணம் அஜய் அந்த அறைக்குள் நுழைந்து இருந்தான்.
அறைக்குள் நுழைந்த அஜய்க்கு சுற்றி நின்ற எதுவும் கருத்தில் படவில்லை.
வாடிய கொடி போல கட்டிலில் துவண்டு போய் கண் மூடி படுத்து இருந்த தன் மனைவியை ஒரே எட்டில் நெருங்கி சென்றவன்
"ரோஜா..." என குரல் கம்ம அழைத்தான்.
அஜயின் அழைப்பில் சட்டென்று தன் கண்களை திறந்து கொண்ட சரோஜா
"அஜய்..." என்றவாறே எழுந்து அமர்ந்து கொள்ள போக அவளை பார்த்து வேண்டாம் என்று தலை அசைத்தவன் அவள் கையை பற்றி கொண்டு அவளருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
எவ்வளவு நேரமாக இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசிக் கொண்டு இருந்தனர் என்பது அவர்களுக்கே தெரியாது.
கதவு தட்டப்படும் ஓசையில் நனவிற்கு வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகத்து கொண்டனர்.
அஜய் எழுந்து சென்று கதவைத் திறக்க வெளியே ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சரோஜாவைப் பார்க்க போகிறோம் என்ற ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர்.
"அம்மா...அத்தை...வந்துட்டீங்களா? ஸாரி...ரொம்ப நேரமாக வெளியில் நிற்க வைச்சுட்டேனா..." கவலையுடன் அஜய் கேட்கவும்
அவனை பார்த்து புன்னகத்து கொண்ட கனகா
"அப்படி எல்லாம் இல்லை அஜய்...இப்போ தான் நாங்க வந்தோம்...சரோஜா கண் முழிச்சுட்டா நீ உள்ளே இருக்கேன்னு அப்பா சொன்னாரு அது தான் கதவைத் தட்டி பார்த்தோம்..." என்று கூறவும் அவர்களைப் பார்த்து பதிலுக்கு புன்னகைத்தவன் அவர்கள் உள்ளே வருவதற்கு வழி விட்டு சற்று விலகி நின்றான்.
சரோஜாவை பார்த்ததும் வித்யா கண்கள் கலங்க
"சரோஜா..." என்றவாறே அவளை நெருங்கி அவளது தலையை வருடிக் கொடுக்க சரோஜாவும் கண்களில் நீர் சூழ தன் அன்னையின் மறு கையை பற்றி கொண்டாள்.
எல்லோரையும் சுற்றி ஒரு முறை தன் பார்வையை சுழல விட்டவள் அந்த அறைக் கதவருகில் தயங்கியவாறு நின்ற சித்ரா மற்றும் ருத்ராவை பார்த்து கலவரத்தோடு வித்யாவின் கைகளை மேலும் இறுக பற்றி கொண்டாள்.
வித்யா குழப்பமாக சரோஜாவை திரும்பி பார்க்க சரோஜாவின் பார்வையோ ருத்ரா மற்றும் சித்ராவின் மீதே இருந்தது.
சரோஜாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த அஜய் சரோஜாவின் இந்த திடீர் மாற்றத்தை பார்த்து கேள்வியாக அவளை பார்த்த வண்ணம் அவளருகில் சென்று அவள் தோளில் கை வைக்க பதட்டத்துடன் அவனைப் பார்த்த சரோஜா
"நான் உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்..." என்று கூறினாள்.
"இப்போ எதுவும் அவசரமாக பேச தேவையில்லை சரோஜா...கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..." சரோஜாவின் தலையை வருடிக் கொடுத்தவாறே வித்யா கூறவும்
அவரைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்
"இல்லை நான் இப்போவே பேசணும்..." என பிடிவாதமாக கூறினாள்.
வித்யா மறுப்பாக ஏதோ கூற போக அவரை பார்த்து வேண்டாம் என்பது போல தலை அசைத்த அஜய் சரோஜாவின் கையை ஒரு முறை மெல்லமாக அழுத்திக் கொடுத்து
"என்ன சொல்லணுமோ சொல்லு சரோஜா..." என்று கூறினான்.
அஜயை பார்த்து சரியென்று தலை அசைத்த சரோஜா மேற்கொண்டு பேசத் தொடங்கினாள்.
சரோஜா தன்னுடைய ஸ்கூட்டரில் தங்கள் வீட்டின் பின்னால் நின்று மர்ம நபர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வேனை விடாமல் துரத்திக் கொண்டு சென்று கொண்டிருக்க அந்த வேனில் உள்ளவர்களோ இதை கவனிக்கவில்லை.
ஆள் அரவமற்ற ஒரு சாலையில் அந்த வேன் நுழைந்ததும் தன்னால் முடிந்த மட்டும் தன் ஸ்கூட்டரை வேகமாக செலுத்திய சரோஜா ஒரு கட்டத்தில் அந்த வேனைக் கடந்து சென்று அந்த வேனின் முன்னால் தன் ஸ்கூட்டரை நிறுத்தினாள்.
சரோஜா திடீரென்று அந்த வேனின் முன்னால் ஸ்கூட்டரை நிறுத்த அந்த வேனிற்குள் இருந்த நபர்களோ கோபமாக வேனை விட்டு கீழிறங்கி வந்தனர்.
"ஏய் உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? நீ சாகுறதுக்கு எங்க வண்டி தான் கிடைச்சதா?" அந்த கும்பலில்