அமர்ந்தான் இவன் உயிர் நண்பன். மெதுவாக அவனருகில் வந்து நின்றான் கண்ணன். அவன் கவனத்தை கலைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தான் நண்பன்.
ஒரு வருடத்தில் கொஞ்சம் இளைத்தார் போல்தான் இருந்தான் மாதவன். இந்த காலை நேரத்திலும் அழகாக டக்கின் செய்யப்பட்ட முழுக்கை சட்டையும், பேண்ட்டும் ஷூவும் என படு நேர்த்தியான உடையுடன் அமர்ந்திருந்தான் அவன்.
சிறு புன்னகையுடன் நண்பனை ரசித்திருந்தான் கண்ணன். மாதவன் எப்போதும் இப்படிதான். எதை செய்தாலும் திருந்த செய்துவிடுவது அவனது பிறவிக்குணம். செய்யும் வேலை எல்லாவற்றிலும் பொறுப்பும் அக்கறையும் உண்டு அவனுக்கு, அவனுடன் சேர்ந்த பிறகு அவனிடமிருந்து. நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறான் கண்ணன்.
கல்லூரி காலத்தில் துவங்கிய நட்பு இது.
அப்போது இவர்கள் இருவரும் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தனர். கண்ணனுக்கு எப்போதும் கேமரா என்றால் உயிர். பார்க்கும் எதையும் புகைப்படம் எடுப்பது அவனது பொழுதுபோக்கு.
பார்த்தவுடன் நட்பெல்லாம் மலர்ந்து விடவில்லை இருவருக்கும். அடிக்கடி வரும் பல சண்டைகள். அந்த வயதுக்கேற்ற கோபம் இருவரிடமும் அப்போது நிறையவே இருந்தது. அன்றும் அப்படித்தான் ஏதோ ஒரு பெரிய சண்டை. அதன் பிறகு இவன் காண்டீனில் அமர்ந்து தனது கேமராவில் எதையோ திருகிக்கொண்டிருந்தான்.
நேரே உள்ளே வந்தான் மாதவன். அந்த கேமராவை இவன் கையிலிருந்து பிடுங்கி விட்டெறிந்தான் தூரமாக. அது சுவற்றில் சென்றி மோதி தெறித்தது. அவ்வளவுதான் இவனுக்கு தலை முதல் கால் வரை பற்றி எரிந்தது.
‘பொறுக்கி... ராஸ்கல்....’ மாதவன் மீது பாய்ந்தான் இவன். ஓங்கி அவன் கன்னத்தில் ஓர் அடி. அருகில் இருந்தது டொரினோ குளிர்பான காலி பாட்டில். அதை எடுத்து அவன் தலை மீது ஒரு போடு.
‘ஆ..’ வென்ற.. அலறலுடன் ரத்தம் வழிய கீழே சரிந்திருந்தான் மாதவன். சுற்றி நின்ற அனைவரும் திகிலடைந்து விலகி இருந்தனர்,
ஒரு நிமிடம் தான் என்ன செய்துவிட்டோம் என்பது கண்ணனுக்கே புரியவில்லைதான். எப்படி அவனை கைகளில் அள்ளிக்கொண்டான். எப்படி அவனை மருத்துவமையில் கொண்டு சேர்த்தான் இந்த நிமிடம் வரை அவனுக்கு நினைவில்லைதான். சில மணி நேரங்கள் கழித்து தலையில் போடப்பட்ட சில, பல தையல்களுடன் கண் திறந்தான் மாதவன்.
இதுவரை மாதவன் வீட்டிற்கு, அதாவது அவனது மாமா மீராவின் தந்தைக்கு கூட தகவல் சொல்லி இருக்கவில்லை கண்ணன். அப்பா எப்போதும் கொடுக்கும் பாக்கெட் மணியை வைத்து எப்படியோ மருத்துவமனையில் சமாளித்திருந்தான் அவன் .
கட்டிலில் படுத்துக்கிடந்தவனை பயத்துடன் பார்த்தபடியே அருகில் அமர்திருந்தான் அவன். மாதவன் கண் திறக்க
‘சாரிடா மாதவா...’ என்றான் இவன் ரொம்பவுமே இறங்கிய குரலில். மெதுமெதுவாய் மாதவனின் இதழ்களில் ஒரு புன்னகை ஓடியது.
‘ரொம்ப பயந்துட்டியா?’ என்று மெல்ல சிரித்தான் ‘எப்படியோ என்கிட்டே தோத்து சாரி கேட்டுட்டே இல்ல அது போதும்’
‘டேய்... போடா பொறுக்கி...’ என்றான் இவன்.
அதன் பிறகு அவனை வீட்டில் கொண்டுவிட்டான் கண்ணன். அதன் பிறகு இரண்டு நாட்கள் அவன் ஓரளவு குணமடையும் வரை மாதவனுடனே இருந்தான் கண்ணன். இருவரும் ஒருவர் தோளில் ஒருவர் கைப்போட்டுகொண்டு உள்ளே நுழைந்ததை பார்த்து கல்லூரியே விக்கித்து நின்றது.
வீட்டிலும் சரி, கல்லூரியிலும் சரி கண்ணனை காட்டிக்கொடுக்கவே இல்லை மாதவன். ஏதோ தற்செயலாக நடந்த ஒரு விபத்தினால் தனக்கு காயம் பட்டதைப்போலவே அந்த சம்பவத்தை சித்தரித்து விட்டிருந்தான் அவன்.
அங்கே வேர்பிடித்தது இருவருக்குமான நட்பு. அன்று முதல் எதற்கெடுத்தாலும் கண்ணா, கண்ணா என்பான் அவன் மாதவா மாதவா என்பான் இவன். அப்போது இவர்கள் அறிந்தார்களா என்ன சில வருடங்கள் கழித்து முகிலன், வருணன் என எதிர் எதிர் துருவங்களாய் இருவர் வந்து பிறக்கப்போவதை!
பழைய நினைவுகள் மனதினில் ஓட நண்பனையே புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்தான் கண்ணன். அவன் வெறித்த பார்வை இந்த பக்கம் திரும்பவே இல்லை. அவன் அருகில் சென்று அமர்ந்தவன்
‘டேய்...’ என்றான். இன்னமும் தரை இறங்கவில்லை அவன். ‘டேய்.... மாதவா...’ திடுக்கென திரும்பினான் கலைந்து.
கண்ணன் வந்திருக்கிறான் என புரிந்துக்கொள்ள சில நொடிகள் பிடித்திருக்க வேண்டும் அவனுக்கு. பேச வார்த்தைகள் எழாதவன் போல் நண்பனையே பார்த்திருந்தவன் விழிகளில் கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்த்தது போல் தோன்றியது கண்ணனுக்கு.
‘என்னாச்சுடா மாதவா. என்னமோ டல்லா இருக்கே?’ தனிச்சையாய் அவன் தோள் அணைத்தது கண்ணனின் கரம்.
‘உன்னை பத்திதான் நினைச்சேன். என்னடா திடீர்னு வந்து நிக்கறே?’
‘உன்னை பார்க்க, உன்னை கூப்பிட நான் வராம வேறே எவன் வருவான்? நான்தான்டா உன்கூட எப்பவும் இருக்க போறவன். எப்பவும்! வாழ்கையிலே கடைசியிலே கூட!’ அவன் சொன்ன வார்த்தைகளுக்கு மேலிருந்த எந்த தேவதை ததாஸ்து சொன்னதோ அவர்கள் அறியவில்லை.
‘அதை விடு நீ ஏன் டல்லா இருக்கே?’ கேள்விக்கு பதில் சொல்லாமல் தலையை இடம் வலமாக அசைத்துக்கொண்டான் மாதவன்.
‘நீ சொன்னதை நான் கேட்டிருக்கணும்டா...’ என்றான் தாழ்ந்த குரலில்.
‘புரியலை. என்னதுடா?’ கண்ணன் கேட்க
சட்டென தன்னை இயல்புக்கு நகர்த்திக்கொண்டவன் ‘அதை விடு அப்புறம் சொல்றேன். வீட்டிலே எல்லாரும் எப்படிடா இருக்காங்க?’
‘யாருக்கும் எந்த குறைவும் இல்லை. வா முதல்லே வீட்டுக்கு போகலாம்.’ சொல்லிவிட்டு நண்பனின் பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தான் கண்ணன்.
‘மீ... மீரா... ‘எப்படிடா இருக்கு?’ இவன் நகரவில்லை
‘அவளுக்கென ஜாலியா கோலம் போட்டுட்டு இருக்கா. இன்னைக்கு காலையிலே கூட பார்த்தேன்’ நின்று திரும்பி புன்னகையுடன் சொன்னான் கண்ணன். ‘நீ எத்தனை நாள் இருப்பே?’
‘நானா? இருப்பேன். தீபாவளி வரைக்கும் இங்கேதான் இருப்பேன்’ சொல்லியபடியே புன்னகைத்தான் மாதவன்.
‘குட்... வெரி குட் டா’ சந்தோஷமாக கூவியபடியே அவனை இழுத்துக்கொண்டு நடந்தான் கண்ணன்.
மாதவன் வந்து இறங்கியவுடன் மீராவின் வீடே உற்சாகத்தை தத்தெடுத்துக்கொண்டது. பார்த்து பார்த்து எல்லருக்குமென ஏதாவது ஒரு பொருள் வாங்கிக்கொண்டுதான் வந்திருந்தான் மாதவன்.
கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள் மீரா. சென்னையின் ஒரு பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள் அவள்.
‘ஹேய்... மாதவ்’ கூவினாள் அவள். அவனை எப்போதும் அப்படி அழைத்துதான் பழக்கம் அவளுக்கு. ‘பார்த்து எத்தனை நாளாச்சு. எப்படி இருக்கே நீ?’
‘ஒரு வருடத்தில் ரொம்பவும் வளர்ந்துவிட்டாளா மீரா?’ வாஞ்சையுடன் பார்த்திருந்தான் அவளையே
‘அது என்னது அது? காதிலே தோடு, பொட்டு, வளையல் எல்லாம் மேட்ச் மேட்சா? ஓ.. இதுதான் நதியா தோடு... நதியா வளையலா அவன் கேட்க ‘
‘ஆமாம் ஏதோ கையிலே கிடைச்சதை எதையோ மாட்டி இருக்கேன். இந்த மூஞ்சிக்கு இது போதாதா?’ என்றாள் அலுப்பாக.
‘எத்தனை தடவை சொல்றேன் உன்னை நீயே தாழ்த்திக்காதேன்னு..’ மாதவன் இடைப்புக
‘அதை விடு உனக்கு எப்படி இந்த நதியா பத்தி எல்லாம் தெரியும்...’ வியந்தாள் அவள்.
‘சினிமா பத்தி என்னென்ன டீடைல்ஸ் வேணும் கேளு கரெக்டா சொல்வான் இவன்...’ சொன்னபடியே அவர்களை கடந்து சென்றார் அவள் அப்பா.
‘இந்தா இதெல்லாம் பிடிச்சிருக்கா பாரு..’ அவள் அப்பாவின் வார்த்தைகளுக்கு சிரித்தபடியே கையிலிருந்ததை அவளிடம் நீட்ட
‘நெயில் பாலிஷா..’ என்றாள் சுவாரஸ்யமற்ற குரலில் ’இதெல்லாம் எதுக்கு மாதவ் வேஸ்டா?’ அவள் சற்றே தளர்வுடன் கேட்டாள் ‘எது போட்டாலும் நான் எல்லாம் அழகாக மாட்டேன்’
‘பச்.... மீரா...ஏன் இப்படி இருக்கே நீ? சரி வேறே என்னதான் உனக்கு பிடிக்கும் சொல்லு வாங்கிடுவோம்’
ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டாள் மீரா ‘பொருள் எல்லாம் வேண்டாம். நான் வேறே ஒண்ணு கேட்டா செய்வியா?’
‘சொல்லுமா என்ன வேணும்’
‘அது வந்து...இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்ல... ‘
‘ஆமாம்... அதுக்கென்ன..’
‘இல்ல பக்கத்து வீட்டிலே உன் ஃப்ரெண்ட் கண்ணன் இருக்கார் இல்ல..’
‘ம்...’
‘அவங்க வீட்டிலே டி.வி. இருக்கு. அதுவும் கலர் டி.வி. இப்போ புதுசா வாங்கி இருக்காங்க. அதிலே ஒளியும் ஒலியும் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஒளியும் ஒலியும்லே சினிமா பாட்டெலாம் வரும். அம்மா என்னை தனியா அனுப்ப மாட்டங்க. இன்னைக்கு ஒரே ஒரு நாள் நீ என்னை கூட்டிட்டு போய் காட்டறியா? அதுக்கு அப்புறம் நான் கேட்க மாட்டேன் சத்தியமா’ தனது தலைமேல் கை வைத்து சத்தியம் செய்தபடியே அவள் கேட்க, புருவங்கள் உயர அவளை வியப்புடன் பார்த்தான் மாதவன்.
தொடரும்.....