Vathsala Raghavan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 239
- Reaction score
- 3,372
ப்ரியங்களுடன் முகிலன் – 20
அன்று இரவு படப்பிடிப்பு முடிந்து முகிலனும் ஷ்யாமும் உதகமண்டலத்தின் அந்த ஐந்து நட்சத்திர ஹோடேலில் இரவு உணவை சுவைத்துக்கொண்டிருந்தனர்.
‘சார்...’ என்றான் முகிலன் அருகில் அமர்ந்திருந்த ஷ்யாம்.
‘சொல்லு ஷ்யாம்’
‘அப்பா அம்மா பார்த்து நாளாச்சு. இங்கே கோவையிலேதானே இருக்காங்க. நாளைக்கு கிளம்பி போய் அவங்களோட ரெண்டுநாள் இருந்திட்டு வரவா சார்?’
‘ஷூர் ஷ்யாம்’ ‘ரெண்டு நாள் என்ன? ஒரு வாரம் இருந்திட்டு வா. நான் மேனேஜ் பண்ணிக்கறேன்’ அவன் முதுகில் பாசத்துடன் தட்டினான் முகிலன்.
ஆனால் இந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து நடக்க போகும் சம்பவங்களை அப்போது இருவரும் அறிந்திருக்கவில்லை.
அப்புறம் இன்னொரு விஷயம் சார். நான் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தனாவை பார்த்தேன். நம்ம தலைவரோட பி.ஏ’
‘ம்...தெரியும் சொல்லு’
‘இங்கே நம்ம பக்கத்து வீட்டிலேதான் தலைவர் தங்கி இருக்கார்.’ ‘வெங்கட்ராமன் படம் ஷூட்டிங் வந்திருக்காங்க சார்’ அவன் சொல்ல
‘ஆஹான்.’ புருவங்கள் உயர கேட்டான் முகிலன்.
தட்டில் இருந்த உணவை வாயில் போட்டு சுவைத்துக்கொண்டே முகிலன் திரும்பிய நேரத்தில் அவன் கண்ணில் விழுந்தார் இன்னொரு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வெங்கட்ராமன்.
படப்பிடிப்புக்காக உதகமண்டலம் வந்து சேர்ந்திருந்தார் அவர். அவரை பார்த்த ஷ்யாமின் முகமுமே மாற்றம் கொண்டது.
‘சார்... நாம சாப்பிட்டு கிளம்பிடலாம் சார்’ என்றான் அவன்.
‘ஏன் ஷ்யாம் பயமா இருக்கா?’ இதழோரம் தேங்கிய அலட்சிய புன்னகையுடன் கேட்டான் முகிலன்.
இல்ல சார் பப்ளிக் பிளேஸ்லே..’ அவன் முடிப்பதற்குள் அவர்கள் மேஜைக்கு வந்து அமர்ந்திருந்தார் வெங்கட்ராமன்.
‘முகிலன்’ என்றார் வெங்கட்ராமன் ‘முகிலன் தி கிரேட்’
‘நீங்களே ஒத்துகிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்’ என்றான் அலட்டல் இல்லாத குரலில்.
‘குணத்திலே உன் சித்தப்பனை அப்படியே உரிச்சு வெச்சிருக்கேடா நீ. என்றார் வெங்கட்ராமன் ஒருமையில்.
‘அவன் கொஞ்ச வருஷம் முன்னாடி இங்கேதான் ஊட்டியிலே என்னை மன்னிப்பு கேட்க வெச்சான். அதுக்கு நான் பதில் கொடுக்க வேண்டாம். உன்னை வெச்சு கொடுக்கிறேன். பார்த்திட்டே இரு. இன்னும் கொஞ்ச நாளிலே இந்த கிரேட் முகிலன் என் காலிலே விழப்போறான். அப்போ அவனை நான் எட்டி உதைக்கணும்’ அவர் குரலில் வன்மம் மிகுந்திருந்தது.
அவரது பார்வையிலும் வார்த்தைகளிலும் முகிலனின் ஒவ்வொரு அணுவும் நெருப்பாக கொதித்தது. சுள்ளென பொங்கி எழுந்த ரௌத்திரத்தை அவரது வயதை கருத்தில் கொண்டு இறுக்கி கட்டியவனின் சுவாசம் இறுகி தடுமாறியது.
மற்றவர்கள் மீது வரும் கோபத்தை விட அவர் மீது வரும் கோபம் மூன்று மண்டங்காக இருக்கிறதே என்ன காரணம்? புரியவில்லை முகிலனுக்கு.
‘என் பொண்ணையும் உன் பக்கம் இழுத்துட்டே இல்ல நீ. இனி உன்னை சும்மா விட மாட்டேன். இதோ ரெண்டு நாளிலே நான் ஷூட்டிங் ஆரம்பிக்க போறேன். இந்த படம் முடியுற வரைக்கும் கூட காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. அந்த பரமசிவன் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகி இருக்கார். அவரை வெச்சு ஒரே வாரத்திலே உன் சினிமா வாழ்கையையே முடிச்சு காட்டறேன்டா நான். அப்புறம் என் பொண்ணு படம் இல்ல யார் படமும் நீ நடிக்க முடியாது’ அவர் பேசிக்கொண்டே போக
‘அவரை போக சொல்லு ஷ்யாம்’ வெறிக்கொண்ட சிங்கமாக உறுமினான் முகிலன் ‘நான் மனுஷனா இருக்கும் போதே போகச்சொல்லு’ அவனது முகம் முழுவதும் கோபத்தில் சிவந்து போய் கிடந்தது.
‘சார் ப்ளீஸ்... நீங்க கிளம்புங்க’ ஷ்யாம் வெங்கட்ராமன் கைப் பிடித்து எழுப்பினான்.
‘எனக்கு என்ன பயமாடா இவனை பார்த்தா?’ சீற்றத்துடன் கேட்டார் வெங்கட்ராமன்.
‘இல்ல சார் எங்க சாரை பார்த்தா எனக்குத்தான் பயம். உங்களாலே என்ன முடியுமோ செய்து பாருங்க. இப்போ கிளம்புங்க’ அவரை எப்படியோ எழுப்பி ஹோட்டலை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வந்து அமர்ந்தான் ஷ்யாம்.
அவன் வருவதற்குள் அங்கே ஒரு பாட்டில் தண்ணீர் முகிலனின் தொண்டைக்குள் இறங்கி இருந்தது. இன்னமும் தணியவில்லை அவன் கோபம். டேபிளின் மீது கையால் குத்தியபடியே அமர்ந்திருந்தான் முகிலன்.
அவன் அருகில் வந்து அமர்ந்து அவன் தோள் அழுத்தினான் ஷ்யாம். ‘சார் ப்ளீஸ் கொஞ்சம் கூல் ஆகுங்க’
‘நானா அடிக்க வேண்டாம் அடிக்க வேண்டாம்னு பார்த்திட்டே இருக்கேன். திரும்ப திரும்ப உரசுறாரே ஷ்யாம்’ என்றான் கன்னங்கள் கோபத்தில் இறுக
‘சரி சரி சார்... நாம அடுத்து என்ன செய்ய போறோம் அதை முடிவு பண்ணுங்க’
‘ம்? திரும்பி அவன் முகம் பார்த்தான் முகிலன்
‘நாம அடுத்து என்ன செய்ய போறோம் சார்?’
‘ஜெயிக்கபோறோம்’ என்றான் உறுதியான குரலில்.