Vathsala Raghavan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 239
- Reaction score
- 3,372
ப்ரியங்களுடன் முகிலன் 03
வருண் அப்படி படீரென அழுத்தம் திருத்தமாய் கேட்பான் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான் வெங்கட்ராமன்.
‘அது இல்லை சார் வந்து..’ அவர் இழுக்க
‘அதுதான் நான் இல்லைன்னு சொல்லிட்டேனே. உள்ளதை சொல்லுங்க’ சொல்லிக்கொண்டே அவர் சொல்லும் அடுத்த கதைக்கு தயாராக இருப்பவன் போல் கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்துவிட்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு சாய்ந்தான் வருண்.
‘சரி சார் நான் நடந்ததையே சொல்றேன். உங்ககிட்டே சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை அதான் கொஞ்சம் வேறே மாதிரி சொன்னேன். அந்த படத்திலே முகிலனுக்கு வில்லன் ரோல்தான். அது பிடிச்சிருக்குன்னுதான் ஒத்துகிட்டார். ஆனா ஹீரோ ரோலுக்கு நான் தெரியாம வருண்னு பேர் வெச்சிட்டேன். அது அவருக்கு பிடிக்கலை. பேரை மாத்த சொல்லியிருந்தா கூட நான் செய்திருப்பேன் ஆனா சட்டுன்னு நாம முடிச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டார்.’
அவர் சொல்ல சொல்ல யோசனையில் முடிச்சிட்ட அவனது புருவங்கள் சில நொடிகளில் சீராகின.
‘வருண்ங்கிற பேர் மேலேயே அவருக்கு ஏன் அவ்வளவு கோபம். அதுதான் எனக்கும் பிடிக்கலை. அதனாலேதான் உங்களையே வெச்சே அந்த படத்தை முடிச்சிடலாம்னு ஒரு வேகம் எனக்கு.’ அவர் மெல்ல தூண்டில் போட கண்களை மூடி கைகளை தேய்த்து விட்டுக்கொண்டான் வருண்.
அவன் முகத்தில் இருந்த அந்த பாவத்திலிருந்து எதையுமே கண்டுப்பிடிக்க முடியவில்லை அவரால். மெல்ல கண்களை திறந்தான் வருண்.
‘என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?’ சற்றே முன்னால் சாய்ந்து இதழோரம் மறுபடியும் வந்த புன்னகையுடன் அவர் கண்களை ஊடுருவியபடியே கேட்டான் அவன்.
‘சார்...’ அவர் சற்றே திகைக்க
‘நீங்க இதுவரைக்கும் நடந்த உண்மைகளை முழுசா சொல்லலை, நீங்க சொல்லலைனாலும் என்ன நடந்ததுங்கிறதை நான் தெரிஞ்சுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாதுன்னு உங்களுக்கும் தெரியும் இல்லையா மிஸ்டர் வெங்கட்ராமன்’? புருவம் உயர்த்தி சிரித்தான் வருண்.. பதில் பேசாமல் சட்டென அவன் பார்வையை .தவிர்த்தார் அவர்.
சட்டென அவன் முகம் மாற ‘வெரி சாரி சார். எனக்கென்னமோ என்னை வெச்சு நீங்க முகிலனோட விளையாடற மாதிரி தோணுது. எனக்கும் முகிலனுக்கு நடுவில் ஆயிரம் இருக்கும் தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ் மிஸ்டர் டைரக்டர்.’ சூடான குரலில் நிதானமாக சொன்னான் வருண்.
விருட்டென நிமிர்ந்தார் அவர். அவன் சொன்ன விதத்தில் அப்படியே முகிலனை ஒரு முறை மறுபடியும் பார்த்தது போலேதான் இருந்தது அவருக்கு.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என அவன் யோசித்து முடிப்பதற்குள்
‘எனக்கு இந்த படம் பண்றதிலே இஷ்டம் இல்லை’ என்றான் வருண் தெள்ளத்தெளிவாக.
சினிமா துறையை பொறுத்தவரை இருவரும் பரம எதிரிகளாக இருந்தபோதிலும் இருவருக்கும் நடுவில் ஏதோ ஒரு மெல்லிய இணைப்பு நூல் இருப்பது போலவே தோன்றியது அவருக்கு.
நேற்று வரை இதை பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று? எது எப்படிப்போனாலும் முகலனிடத்தில் மட்டும் தோற்றுப்போவதாக இல்லை அவர்.
சின்னதாய் ஏதோ ஒரு நம்பிக்கை அவருக்குள்ளே . இருவரையும் இணைக்கும் அந்த ஒரு மெல்லிய நூலை நாசூக்காய் வெட்டி விடலாம் என்று ஒரு நம்பிக்கை.
வருண் பேசிய விதத்தில் சட்டென உள்ளுக்குள் பரவி ஓடிய ஏமாற்றத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தார் வெங்கட்ராமன்.
‘நல்ல ரோல் சார். டைம் எடுத்துக்கோங்க. நான் வெயிட் பண்றேன். நீங்களே கொஞ்ச நாளிலே எனக்கு இது விஷயமா போன் பண்ணுவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.’ என்றார் அவர்.
மெல்ல கோபம் உள்ளே அடங்க இதழோரம் தேங்கிய சின்ன சிரிப்புடன் மறுப்பாக அசைந்தது வருணின் தலை.
‘நோ! அது மட்டும் நடக்காது சார்.. நீங்க தேவை இல்லாமல் நம்பிக்கை வளர்த்துக்காதீங்க. வருண் ஒரு தடவை நோ சொல்லிட்டா அது எப்பவுமே நோ தான்’
‘சரி அதையும் பார்க்கலாம்.’ என்றவர் ‘இன்னும் பத்து நாளிலே உங்களுக்கு கல்யாணம் இல்லையா? நான்தான் அவசரப்பட்டு தப்பான டைம்லே வந்திட்டேன். என்றார் அவர் மெல்ல பேச்சை திசை திருப்பியபடியே
‘கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு மாசமாவது ப்ரேக் வேணுமில்லையா? முதல்லே அது நல்லபடியா முடியட்டும். அதுக்கு அப்புறம் இதை எல்லாம் யோசிப்போம். ஏன் சார் உங்க கல்யாணத்துக்கு எங்களுக்கெல்லாம் பத்திரிக்கை கிடையாதா சார்?’ அவர் குரல் நட்பு பாவத்தை தொட்டிருந்தது.
அவரது வார்த்தை ஜாலங்கள் புரியாமல் இருக்கும் அளவுக்கு வருண் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லைதான். இருப்பினும் அப்போதைக்கு எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவன்..
‘எங்க ‘டைரக்டர் ஸார்’க்குத்தான் முதல் பத்திரிகை கொடுக்கணும். நான் இன்னும் அவருக்கு கொடுக்கலை.. அவருக்கு கொடுத்த பிறகுதான் மத்தவங்களுக்கு. கண்டிப்பா உங்களுக்கு இன்விடேஷன் வரும். அவசியம் நீங்க கல்யாணத்துக்கு வரணும்’ என்றான் வருண் புன்னகை சேர்ந்த முகத்துடன்.
அந்த ‘டைரக்டர் ஸார்’ அவரை கொஞ்சம் சுருக்கென குத்தியது. அந்த ‘டைரக்டர் ஸார்’ முகிலனின் தந்தை அல்லவா? அவர் இவனை அறிமுகப்படுத்தியவர் அல்லவா? சடசடவென ஏதேதோ கணக்குகள் வெங்கட்ராமனின் மனதிற்குள்.
‘கண்டிப்பா வருவேன். நான் இல்லாம உங்க கல்யாணம் நடக்காது. சரி சார் அப்போ நான் கிளம்பறேன்’ எழுந்து விட்டார் வெங்கட்ராமன். இவனும் எழுந்து கைகுலுக்கி அவரை வழி அனுப்பி வைத்தான்.
‘முகிலன்கிட்டே இவர் சவால் விட்டிருக்கார் சார். உங்களை வெச்சு இந்த படத்தை முடிச்சிட்டு அவரை காலிலே விழவைக்கிறேன்னு’ வெங்கட்ராமன் நகர்ந்ததும் சொன்னான் தனா. இவர்கள் இருவரும் பேசி முடிப்பதற்குள் விவரங்களை சேகரித்துவிட்டிருந்தான் அவன்.
‘முகிலன் காலிலே விழணுமா? சற்றே திகைத்து திரும்பினான் வருண். ‘இவர் காலிலேயா?’
‘ஆமாம் சார். அப்படித்தான் சவால் விட்டிருக்காங்க ரெண்டு பேரும்’ தனா சொல்ல
‘அப்படியா? கேட்டவனின் குரலில் இருந்தது வியப்பா? கோபமா? அதிர்ச்சியா? மகிழ்ச்சியா? புரியவேயில்லை தனாவுக்கு.
அது ஏனோ நம் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மனிதர்களின் திறமைகளைவிட நம்மை விட்டு தூரத்தில் இருப்பவர்களின் திறமைகளைத்தான் நம்மால் வியந்து ரசிக்க முடிகிறது.
அங்கே முகிலனின் மானேஜர் ஷ்யாம் வருணின் விசிறி என்றால் இவன் முகிலனின் அபிமானி. அது வருணுக்கும் தெரியும்.
தனாவின் முகத்தை படித்தபடியே கேட்டான் வருண் ‘அப்போ நான் நினைச்சா முகிலனை தோற்கடிக்க முடியும்ங்கிற’
‘அதெல்லாம் உங்களாலே முடியாது’ பட்டென வந்துவிட்டிருந்தன தனாவின் வார்த்தைகள்.
தனா சொன்ன வித்ததில் வருணின் விழிகளும் உதடுகளும் சேர்ந்து சிரித்தன. ‘அப்படியா? பார்த்துடலாமா?’
‘அய்யோ.. வேண்டாம் சார். யாரோ தூண்டி விட்டதுக்காக நீங்க ரெண்டு பேரும் எதுக்கு மோதிக்கணும்’ முகிலன் மீதிருந்த அபிமானத்தில் கொஞ்சம் படபடத்தான் தான் தனா.
‘பச்,..பச்...பச்’ புன்னகையுடன் இடம் வலமாக தலை அசைத்தான் வருண்.
‘எனக்கும் முகிலனுக்கும் நடுவில் ஆயிரம் இருக்கும் மிஸ்டர் தனா. தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்’ திறந்திருந்த தனாவின் சட்டையின் மேல் பட்டனை மாட்டியபடியே சொல்லிவிட்டு சின்ன கண்சிமிட்டலுடன் அவன் முதுகில் தட்டிவிட்டு செல்லும் வருணையே குழப்பத்துடன் பார்த்திருந்தான் தனா.
மூன்று நாட்கள் கடந்திருந்தன.
முகிலனின் வீட்டுக்கு சென்று அவனது தந்தைக்கு பத்திரிக்கை கொடுத்தாக வேண்டும். எப்போது போகலாம் என யோசித்தபடியே வருண் அமர்ந்திருக்க ஒலித்தது அவனது கைப்பேசி
‘டைரக்டர் சார்’ என ஒளிர்ந்தது அவன் திரை. அவனை பொறுத்தவரை டைரக்டர் என்றால் அவர்தான். \சட்டென எழுந்தேவிட்டான் இருக்கையை விட்டு. அது அனிச்சை செயல்.
அவர் அமுதன்! இயக்குனர் அமுதன்!
முகிலனுக்கு அவர் ஒரு நல்ல தந்தையா? அதற்கான பதில் அவருக்கே தெரிந்ததில்லை. ஆனால் வருணை பொறுத்தவரை அவனுக்கு எல்லாமுமாகவே இருந்திருக்கிறார். இருந்துக்கொண்டும் இருக்கிறார். இந்த திருமணத்தை கூட அவரிடம் அனுமதி பெற்றுத்தான் நடத்திக்கொண்டிருக்கிறான் வருண்.
அழைப்பை ஏற்று ‘எப்படி இருக்கீங்க சார்?’ என்றான் மரியாதை கலந்த குரலில்.
‘நல்லா இருக்கேன்பா. சொல்லு கூப்பிட்டிருந்தியா?’ என்றார் அவர். அவரது குரலில் நிறையவே வாஞ்சை கலந்திருந்தது.
‘ஆமாம் சார் கூப்பிட்டிருந்தேன்.. உங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வீட்டுக்கு வரணும். எப்போ வரட்டும் சொல்லுங்க. முதல் பத்திரிக்கை உங்களுக்கு கொடுத்திட்டுத்தான் மத்தவங்களுக்கு’
‘அட முதல் பத்திரிக்கை கோவிலிலே கொண்டு வைப்பா, நீ பத்திரிக்கை கொடுத்தாதான் நான் வருவேனா என்ன?’ என்றார் அவர் சட்டென.
‘நீங்க சொல்றது சரிதான் சார். முதல் பத்திரிக்கை கோவிலிலேதான் வைக்கணும். அதுக்குதான் என் கோவிலுக்குத்தான் வரேன்ங்கிறேன்’ என்றான் அவன் அழுத்தம் திருத்தமாய்.
அவை வெறும் வார்த்தைகள் இல்லைதான். அவர் மீது அவன் வைத்திருக்கும் அபிமானமும், மரியாதையும் ரொம்பவும் அதிகம். அது என்றும் குறையவும் போவதில்லை.
சிரித்தே விட்டார் அமுதன். ‘சரி வாப்பா. முகிலன் பாண்டிச்சேரி வரைக்கும் போயிருக்கான் போலிருக்கு. நீ வா இப்போ’ இருவரையும் ஒரே இடத்தில சேர்த்து மோதிக்கொள்ள வைக்க அவரும் என்றும் விரும்பியதில்லைதான்.
‘இதோ சார் அரை மணி நேரத்திலே வரேன்’ கிளம்பி விட்டிருந்தான் வருண்.
பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவே இதுவரை முகிலன் வீட்டுக்கு வந்ததில்லைதான் வருண். வீட்டுக்குள் வந்ததும் கூடத்தில் அவனை புன்னகையுடன் வரவேற்றது முகிலனின் ஆளுயர புகைப்படம்.
நின்று விட்டான்! ஏனென்றே புரியாமல் அதை பார்த்துக்கொண்டே இரண்டு நிமிடங்கள் நின்றே விட்டான்தான் வருண். அவனை கலைத்தவன் ஓடி வந்து மனமும் முகமும் மலர அவனை வரவேற்ற ஷ்யாம்.
‘நான் ஷ்யாம். முகிலன் சாரோட மானேஜர்’ அவன் சொல்ல புன்னகைத்து கைகுலுக்கினான் வருண்
‘உங்களை பார்க்கணும் எத்தனை நாள் ஆசை தலைவா எனக்கு. நீங்களே வந்துட்டீங்க. வாங்க தலைவா வாங்க வாங்க ’ மகிழ்ந்து போய் பரபரத்தான் ஷ்யாம்.
‘தலைவனா? ஹேய்.. இது உங்க பாஸுக்கு தெரியுமாயா?’ மலர்ந்து சிரித்தான் வருண்.
‘தெரியுமே நல்லாவே தெரியுமே’ பதிலுக்கு புன்னகைத்தான் ஷ்யாம்.
‘என்கிட்டேயும் ஒருத்தன் இருக்கான். ஜஸ்ட் லைக் யூ. அவன் முகிலனுக்கு ஜால்ரா’ வருண் மலர்ந்து சிரிக்க அவனது சிரிப்பை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை ஷ்யாமால்.
அமுதனின் அறைக்கு சென்று இவன் பாதம் அவர் தொட்டு வணங்க அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் அமுதன். அதே நேரத்தில் வருணின் மனதில் ஏனோ முகிலனின் ஊர்வலம் நடந்துக்கொண்டே இருந்தது.
‘இப்படி என்றாவது முகிலனை இவர் தோளோடு அணைத்துக்கொண்டிருப்பாரா?’ சில நொடிகள் மின்னலென கேள்வி ஒன்று ஓடி மறைந்தது வருணின் மனதில். ‘இல்லையோ? ஒரு வேளை இல்லை என்பதுதான் பதிலோ?
பத்திரிக்கையை கொடுத்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு இவன் கிளம்ப மாலை ஆகி இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் இவனை தாக்க வந்துக்கொண்டிருந்த அந்த புயலை பற்றி அறியாமல் கிளம்பினான் வருண்.
இவர்களிடம் விடைப்பெற்றுக்கொண்டு அவன் காரை திருப்பிக்கொண்டு வீட்டின் கேட்டை அடைந்த நேரத்தில் முழு வேகத்தில் அவன் காருக்கு முன்னால் வந்து சரேலென பிரேக்கடித்து நின்றது அந்த கார். அது முகிலனின் கார், கொஞ்சம் தடுமாறி பிரேக்கை அழுத்தினான் வருண்.