புறகு
அறிவியற்புனைவுச் சிறுகதை - கா. விசயநரசிம்மன்
அறிவியற்புனைவுச் சிறுகதை - கா. விசயநரசிம்மன்
நிலா பரபரப்பு + உற்சாகமாய் இருந்தாள்.
அம்மா தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள். பொதுவாக இதையெல்லாம் எந்திரங்கள் செய்துவிடும். இன்று முக்கியமான நாள் அல்லவா, அதான் அம்மாவே செய்கிறாள்.
நிலா, வயது பத்து. அந்தக் குடும்பத்தின் இளவரசி. இரண்டாவது குழந்தைக்கு அனுமதி வாங்குவது அத்தனை எளிதல்ல. அம்மா பிடிவாதமாய் நிலாவைப் பெற்றிருந்தாள். அகன்ற நீலக் கண்கள். கச்சிதமான உடற்கட்டு. துறுதுறுப்பு, முதுகு முழுவதும் பரவும் கறுகறு கூந்தல் (இதற்கு அனுமதி வாங்க தனியாக இரண்டு படிவங்கள், ஒரு நேர்காணல்!)
‘செல்லக் குழந்தை’ என்று சொல்லாமலே தெரிந்து கொள்வீர்கள் நிலாவைப் பார்த்தாள்.
அவளுக்கு மிகப் பிடித்த அடர்சிவப்பு உடையில் எந்திரத்திற்கும் வாஞ்சை வரும்படி மிளிர்ந்தாள் நிலா! மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவித்தலின் போதும் இதே நிறத்தில்தான் ஆடை அணிந்திருந்தாள்.
இன்று நடந்தது போல நினைவிருக்கிறது அது!
ஏழு வயது நிலா. அழகு + அப்பாவித்தனம். கொஞ்சம் பயந்திருந்தாள். எத்தனை கேள்விகள் கேட்டாள்?
“வலிக்குமா?”
”இல்ல!” அழுத்தமாய் சொன்னாள் அம்மா, இருபதாவது முறையாக இதே கேள்வி!
“அண்ணா சொன்னானே… பின்கழுத்துல, மண்டைக்குள்ள, காதுக்குள்ளலாம் ஊசி ஊசியா குத்தி மின்சாரத் துடிப்பு பாய்ச்சுவாங்கனு…”
”நிலா…”
ஒவ்வொரு பதிலுக்கும் பத்து கேள்விகள் முளைத்தன அவளிடம்! அதன் பின் எத்தனை சுட்டியாய் மாறிவிட்டாள் அவள். இரண்டாயிரம் ஆண்டு ஆராய்ச்சியின் பலன் இது.
ஏழு வயதுவரை குழந்தைகள் கல்வி பற்றிக் கவலைப்பட வேண்டாம். உண்டு உறங்கி விளையாடி ஆரோக்கியமாய் வளர்ந்தால் போதும். ஏழு வயது ஆன பின் மையக் கட்டுப்பாட்டுத் தலைமை விதிக்கும் ஒரு நாளில் குழந்தைக்கு எழுத்தறிவித்தல் நடக்கும். உயிரியல், உளவியல், கணினி கலந்த ஒரு செயல்பாடு அது. தேர்ந்தெடுத்த இரண்டு அல்லது மூன்று மொழிகளில் படிக்கும்-எழுதும் அறிவு நேராக குழந்தையின் மூளையில் பதியப்படும். ழ-கதிர் அலைகளாகச் செய்தி மூளைக்குள் செலுத்தப்படும். மொத்தம் மூன்றே நிமிடம் – ‘படிப்பறிவு’ பெற்றுவிடுவர், அறியாமையில் இருந்து அறிவின் முதல்படிக்குச் சென்றுவிடலாம்!
எட்டு வயதில் நிலா என்னென்ன படித்தாள்… அண்டவியல், அணுக்கரு குவாண்ட இயற்பியல், துணைக்கோள் பயிர்மேலாண்மை, செர்க்கோ மொழியியல் (செர்க்கோ – ஆண்டிரோமெடா பேரடையில் வசிக்கும் ஒர் வளர்ச்சியடைந்த இனம்,) மானுட மருத்துவம் இன்னும் இன்னும்…
”நான் அணுக்கரு இயற்பியலாளி ஆகப் போறேன்” என்பாள், “குவார்க்கு, க்ளூவான் பத்திலாம் இன்னும் தெரிஞ்சுக்கனும்…”
“பேசாம, நான் மொழியியலே படிக்கவா? வேற வேற நட்சத்திரத்துக்குப் போய் அதன் கிரகத்துல இருக்குற இனங்கள் பற்றி ஆராயலாம்…”
மாதம் ஒரு கொள்கை மாறும்!
எழுத்தறிவித்த மூன்றாவது ஆண்டில் (பத்து வயதில்) தொழில்நிர்ணயம் செய்வர்.
மூன்று ஆண்டுகளில் அக்குழந்தை படித்த விஷயங்களால் அதன் மூளை ஒருவித தயார் நிலைக்கு வந்திருக்கும். மூன்று ஆண்டும் ஒரு பிரத்யேக மீக்கணினி மூலம் குழந்தையின் ’அவ்வை ’ (அறிவு விரிவு அளவை) அலசப்படும். மூன்றாவது ஆண்டின் முடிவில் அதற்கு ஏற்ற தொழில் முடிவாகும். இந்த ‘அவ்வை’ மீக்கணினி ஒரு சிறிய பதக்கத்தின் வடிவில் குழந்தையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். இதன் தகவல்கள் அவ்வப்போது வீட்டின் முதன்மைக் கணினிக்கும், அக்குழந்தை வசிக்கும் கோளின் கட்டுப்பாட்டுத் தலைமைக்கும், அங்கிருந்து மையக் கட்டுப்பாட்டுத் தலைமைக்கும் அனுப்பப்பட்டுக் குழந்தையின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.
பத்து வயதில் ழ-கதிர் மூலம் குழந்தைக்கு அதற்குரிய தொழில்சார்ந்த அறிவு முழுமையாக பதியப்படும். ஓராண்டு களப்பயிற்சிக்குப் பின் அவன்/அவள்/அது (இனி ‘குழந்தை’ இல்லையே!) பரந்த மானிடத்தற்குத் தன் சேவையைச் செய்ய தயார். பதினொன்றாம் வயதில் தொழில்வல்லுநர்!
சில மாதங்களுக்கு முன் நிலா மருத்துவராக ஆவலாய் இருந்தாள், அவளது ‘அவ்வை’ “மொழி வல்லுனர்” என்று காட்டிக்கொண்டிருந்தது, இரண்டு வாரங்களில் அதுவும் ‘மருத்துவர்’ என்றது… கடந்த இரண்டு மாதமாக அது ‘மருத்துவர்’ என்றே இருக்கிறது (அவ்வை-யின் அலசல் முடிவுகள் உடனுக்குடன் வீட்டின் முதன்மை சுவர்த்திரையில் தெரியுமாறு அம்மா ஆணை கொடுத்திருந்தாள்!) மூன்றாண்டுகளில் அது தொடர்ந்து ஒரே நிலையைக் காட்டியது இதுவே அதிகம்!
“ரவிக்கு இந்தளவுக்கு மாறிட்டே இருக்கலல?”
”குழந்தை பக்குவம் அடைய அடைய அவ்வை-யின் கணிப்பும் சீராகும்!”
என்ன இருந்தாலும் நிலா கொஞ்சம் அதிகமாகவே சுட்டிப்பெண்தான். இதோ இன்று இறுதியாக ஆழமாக ஒருமுறை அவளது மூளையை அலசி அவளுக்கான வாழ்நாள் தொழிலை முடிவுகட்டப் போகும் நாள். அம்மாவே அவளைத் தயார் செய்துகொண்டிருக்க, பத்து வயது நிலா ஆழ்ந்த சிந்தனையில் கொஞ்சம் முதிர்ச்சியின் அழகோடு சிலை போல அமர்ந்திருந்தாள். தன் கழுத்தில் இருந்த அந்த வெளிர் நீல ‘அவ்வை’ பதக்கத்தைப் பற்களுக்கு இடையில் வைத்து மெல்ல கடித்துக்கொண்டிருந்தாள் (ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது இது பழக்கம்!)
“அத கடிச்சுட்டே இருக்காத நிலா, ஏற்கனவே அது ஒழுங்கா வேல செய்யுதா இல்லயானு தெரியல” அம்மா அவளைக் கொஞ்சம் அச்சுறுத்தும் நோக்கத்துடனேதான் சொன்னார்,
“அம்மாஆஆ…”
“என்னடி இழுக்குற? சொல்லு?”
“நான் என்ன ஆகப் போறேன்?”
”அநேகமா மருத்துவர், அப்படித்தான உன் அவ்வை ரெண்டு மாசமா காட்டிட்டு இருக்கு!”
“எனக்கு அது வேண்டாம் இப்ப!”
“நீ எத்தனவாட்டி ஆசையை மாத்திட்ட, கணக்கே மறந்து போச்சு நிலா எனக்கு!”
“இல்லம்மா… என் பேரு ஏன் நிலானு வெச்சீங்க?”
“சொல்லிருக்கேனே… அப்பாவோட மூதாதைகள் இருந்த கிரகத்தோட துணைக்கோளோட பேரு அது… அவரு சொல்லி நான் அதைப் பற்றிப் பார்த்தேன், எனக்குப் பிடிச்சுது, அதையே உனக்குப் பெயரா வெச்சுட்டோம்!”
”ம்ம்… நானும் நிலாவைப் பற்றிய கோப்புகளைலாம் பார்த்தேன்… எனக்கும் அதை ரொம்ப பிடிச்சுப் போச்சு… பூமிலேர்ந்து பார்க்க எவ்ளோ வெள்ளையா, குளிர்ச்சியா, வட்டமா அழகா…. ஏவ்ளோ கவிதை எழுதியிருக்காங்க… இலட்சக்கணக்கா துணைக்கோள்கள் இருக்கு, ஆனா அதெல்லாம் ஒரு பெரிய கல், ஆனா ‘நிலா’ அப்படியில்லை… அது…”
“ஆமா ஆமா… கிளம்பு…”
“எனக்கு மருத்துவர் ஆக வேண்டாம்…” நிலாவின் பதக்கத்தில் இருந்த புள்ளி போன்ற சிறிய எலக்ட்ரான் விளக்கு வழமையான பச்சையைவிட்டு நீல நிறத்தில் ஒளிரத் தொடங்கியிருந்தது…
”ம்ம்ம்… சரி, நீ என்ன ஆகலாம்னு கணினி சொல்லும், வா போய்த் தெரிஞ்சுக்கலாம்…”
”இல்ல…” நிலா அம்மாவின் கையை உதறினாள் “எனக்கு வேண்டாம்!”
“நிலா…” அம்மா தனது அச்சத்தைத் தன்னை அறியாமல் முகத்தில் காட்டினாள், இபோதுதான் அவள் அவ்வை-யைக் கவனித்தாள், நீல ஒளிப்பொட்டு இப்போது விட்டு விட்டு ஒளிர்ந்தது,
“நி…லா…” அம்மா மீண்டும் இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
”நி- நிலா…” அம்மா இலேசாக விம்மி அழுதாள். நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவைச் சமாதானம் செய்ய முயன்றாள், “நீ சொல்றபடியே கேட்குறேன் மா, மருத்துவரே ஆயிடுறேன், அழாத ம்மா…”
“இ- இல்லமா…” இலேசாக மூச்சுத் திணறியது அம்மாவிற்கு, நிலாவிற்கும் படபடப்பு அதிகரித்தது.
“வாம்மா போலாம்…”
“இ- இல்லமா, நாம அங்க போக முடியாது… போகக் கூடாது…” அம்மாவின் கண்ணீர் கன்னம் உதடு தாடை என்று மெல்ல ஓடை போல வழிந்தது, நிலா துடைத்துவிட்டாள்…
‘கவனிக்கவும். நிர்வாகத்தின் காவலர் வருகின்றனர். அவர்கள் வரும்வரை வீட்டு உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்திருக்கவும். கையில் எதுவும் வைத்திருக்கக் கூடாது. எச்சரிக்கை: நிர்வாகத்தின் கட்டளை, மீறினால் உயிர்வாழும் அனுமதி ரத்தாகும் ’
எந்திரக் குரல் சுவரிலிருந்து ஒலித்தது.
அம்மா நிலாவைக் கட்டிக்கொண்டு நன்றாகவே அழுதாள்.
நிலா எதுவும் புரியாமல் விழித்தாள். அவள் கண்களிலும் காரணமே அறியாமல் கண்ணீர் வழிந்தது. அம்மாவைத் தேற்ற முயன்று கொண்டிருந்தாள். “ஏம்மா…”
அம்மா சட்டென அழுவதை நிறுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். நிலா எதற்கோ தயாரானாள்.
“பாரு…” அம்மா சுவர்த்திரையை நோக்கி கைகாட்ட, நிலா திரும்பிப் பார்த்தாள், அவளது அவ்வை இப்போது மருத்துவம், மொழியியல் என்று எதையும் காட்டவில்லை, நீல நிறத்தில் ‘புறகு’ என்ற சொல் பளிச்-பளிச்சிட்டது.
நிலா புரியாமல் அம்மாவைப் பார்த்தாள்.
[அடுத்த பகுதியில் முற்றும்...]