~9~
ருத்ரன் கிளம்பிச் சென்றதும், அப்ஷராவிடம், “அப்ஷா இது யாருமா..?”என வினவினார் ஞானவேல்.
“அது மாமா..இவர் நம்ம ஹோம்க்கு டொனேட் பண்ண நேத்து வந்தாரு..”
“ஓ...சரி மா..அவர் எதுக்கு ருத்ராவ விட வந்ததா சொல்லுறாரு அப்போ நீ அவள கொண்டுவந்து விடலையா..?” என்றவரின் குரலில் சின்னதாய் கோபம் துளிர்த்திருந்தது.
“மாமா..நாங்க பாதி வழியில் வந்துட்டு இருக்கும் போதே ஆபிஸ்க்கு வரச் சொல்லி போன் வந்துட்டு அதான் அங்க வந்துட்டு இருந்த ருத்ரன் சார் கிட்டச் சொல்லி ருத் அக்காவ விடச் சொன்னேன்..” என்றாள் தவறிழைத்த குழந்தையின் பாவனையில்.
“அப்ஷா..உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பொறுப்பில்லாத செயலை எதிர்பார்க்கல டா..” கோபத்துடன் கூடிய நிதானத்துடன் வெளிவந்த வார்த்தைகளுக்கு அப்ஷரா மறுத்து வார்த்தை தெரிவிக்கும் முன்,
“டேய் உள்ளே போய் உட்காரு டா..” ஞான்வேல் ருத்ராவை பார்த்துக் கூற, ஏதோ மனநிலையில் உழன்று கொண்டிருந்த ருத்ராவும் நடக்கும் உரையாடலைக் கவனிக்காமல் காரினுள் அமர்ந்து, விட்ட இடத்திலிருந்து தனது சிந்தனையைத் துவங்கினாள்.
ருத்ரா அமர்ந்ததும் அப்ஷராவின் பக்கம் திரும்பிய ஞானவேல், “அப்ஷா, ஒரு சராசரி பொண்ணு ஒரு பையன் கூடப் போய் காருல இறங்குகிறதும் ருத்ரா வந்து இறங்குகிறதுக்கும் ஆன வித்தியாசம் உனக்குத் தெரியுமா தெரியாதா..?” என்றார் நிதானமாய்.
“சாரி அங்கிள்..” அப்ஷராவின் மன்னிப்பை ஒதுக்கியவர்
“அப்ஷா நீ சாரி கேட்கணும்னு நான் இத சொல்லல டா..அரவாணிகளையே தவறா சித்தரிச்சு பார்க்குற இவங்க கிட்டயிருந்து நம்ம ருத்ரா மட்டும் விதிவிலக்கா என்ன..? இவள் படிக்கிற இந்த டான்ஸ் க்ளாஸ்ல எத்தனைப் பேர் இவகிட்ட பேசுறாங்க..? அவங்க மெல்லுற அவலா நம்ம ருத்ரா இருக்க கூடாதுன்னு தான் நான் ரவிய கூட இங்க அனுமதிக்கிறது இல்ல டா..உன்னால முடியாத அப்போ சொல்லு நம்ம ஏரியால ஒரு லேடி ஆட்டோ ஓட்டுறாங்க அவங்கள ஏற்பாடு பண்ணிக்கலாம்..” என நீளமாய் பேசியவர்.
“எனக்கு அந்த பையனை எங்கயோ பார்த்தது போல இருக்கு..சரி போ மா வண்டியில ஏறு..” என்றதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
‘அங்கிள் சொல்வதும் சரி தானே..இனி இப்படி செய்யக் கூடாது’ என்ற நினைப்போடு காரில் ஏறி அமர்ந்து தன் போக்கில் யோசிக்கத் துவங்கினாள்.
முதலில் ருத்ராவை வீட்டில் விடுவதற்குப் புதிதாய் கட்டிய வீடு நோக்கி வண்டியைச் செலுத்தினார்.
வீடு வந்ததும் காரில் இருந்து இறங்கிய ருத்ரா, “பேபி இன்னைக்கு நீ என்கூட இரு..ப்ளீஸ்..” என்றாள் அப்ஷாவை பார்த்து
மறுக்கவும் முடியாமல் ஒத்துக் கொள்ளவும் முடியாமல் என்ன சொல்வது என அவள் குழப்பத்துடன் பார்க்கும் போதே, “அப்ஷா போடா இவ்வளவு தூரம் அவள் கூப்பிடுறாளே..” என்றவர் அவளையும் சேர்த்து இறக்கிவிட்டு கிளம்ப எத்தனிக்கும் போது
“அப்பா நீங்களும் இன்னைக்கு என்கூட இருங்க..அங்கிளையும் இங்க வர சொல்லிடலாம்” என்றாள் அப்ஷாவின் வற்புறுத்துதலால் வேறு வழியில்லாமல் இவர்கள் இருவருடன் சேர்த்து ஸ்ரீநிவாசனும் சரியென்றுவிட்டார்.
ரவிக்கு போனில் அழைத்த ருத்ரா, இவர்கள் மூவரும் தங்குவதைப் பற்றித் தெரிவித்தவள் அவனுக்கு இரவு உணவு என்ன வேண்டும் எனவும் கேட்க மறக்கவில்லை.
ஸ்ரீனிவாசன், ஞானவேல், ருத்ரா மற்றும் அப்ஷரா எனக் கச்சேரி களைக்கட்ட, பக்கத்திலிருக்கும் இவர்களது டிரெஸ்ட்டில் உள்ள திருநங்களையும் உடன் சேர்த்து கொண்டு ஆட்டம் பாட்டம் தொடங்கியது.
இரவு உணவைக் கடையில் ஆர்டர் செய்தவர்களுக்குச் சமைக்கும் வேலையும் இல்லாமல் போக, கிண்டல் கேலி என அப்ஷராவின் மனநிலையும் மொத்தமாய் மாறியிருந்தது.
இவர்களின் சந்தோசத்தில் எனக்குக் கொஞ்சமும் பங்கில்லை என்பது போன்றதொரு நிலையில் தான் ரவி இருந்தான்.
அன்றுஒரு நாள் பட்ட வலியின் உச்சம் அவனை நிகழ்வுகளில் ஒன்றவும் முடியாமல் கடந்த சுமையான நேரங்களை அசைபோடவும் முடியாமல் திக்கி திக்கற்று நின்றான் ரவி வர்மன்.
வேலையிலும் ஒன்ற முடியவில்லை..மூன்று வருடமாய் வேண்டாம் இது வேண்டவே வேண்டாம் என ஒதுக்கிய ஒன்று இன்று அவனை ஆக்டோபஸாய் வாரி அமிழ்த்தியது.
தன் மனதில் இன்னும் சக்தி தான் இருக்கிறாளா..? என்ற விடையில்லா கேள்விக்கு மூளை ஆணித்தரமாக இல்லை என்ற பதிலை இவனிடம் கொடுக்க.. மனமோ, பின் ஏன் எதார்த்தத்தை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற கேள்வியை வேகமாய் இவனது பக்கம் வீசியது.
‘காதல்’ ஒரு வார்த்தை தான் ஆனால் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அகராதி..சிலருக்குத் தித்திக்கும் தீயாய் குளிர்விப்பதும் பல பேருக்கு தகிக்கும் தீயாய் சுட்டெரிப்பதும் தான் இதன் இயல்பு.
உணர்வுகள் கண்ட காதல் இறுதிவரை வர.. கையிருப்புகளைக் கண்ட காதல் அது கரைந்து போகும் வரையே வாழ.. நன்மையை மட்டுமே கண்ட காதல் தீமையைக் கண்ட நொடி உருகிக் குழைய.. உள்ளதை உள்ளது போல் ஏற்று, குறையை நிறையாய் மாற்றும் காதல் இறுதி மூச்சையும் கடந்து காற்றிலும் கலந்து அழகான காவியமாய் நிற்கிறது.
இதில் ரவி வர்மனின் காதல் கையிருப்புக்கு வந்ததா இல்லை அவனுக்கான காதலா எனப் பிரித்தறியா நிலையிலிருக்கிறான்.
இதுவும் கடந்து போகும் என நினைத்து மனதைத் தேற்ற காதலில் இடம் இல்லை.
‘சக்தி..சக்தி...சக்தி…’ என வாய் அதன் போக்கில் பிதற்ற, மனமோ அவளின் நினைவுகள் என்னிடம் இல்லை என்று சொல்லியது.
சக்தியைத் தான் மறந்துவிட்டோமா..? என்ற கேள்விக்கான பதிலைத் தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வெகுநேரம் வரையில் கடற்கரை ஓரம் கால்கள் மணலில் புதைய சிந்தித்தவன் ஒரு வழியாய் வீட்டிற்குச் செல்லலாம் என்ற முடிவோடு கிளம்பினான்.
காலையில் இருந்து உண்ணாமல் இருந்தவனுக்குப் பசி இப்போது அதிகமாய் தெரிய, விரைந்து வீட்டுக்கு வந்தவனுக்கு நிசப்தமான அவர்களது வீட்டின் சூழலில் இருந்து அனைவரும் தூங்கி விட்டனர் எனத் தெளிவாய்த் தெரிந்தது.
வேக எட்டுகளுடன் படிகளில் ஏறியவன் அவனிடம் உள்ள சாவிக் கொண்டு கதவைத் திறந்து, காலை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுடன் படிகளில் ஏறியவனின் கால்கள் டைனிங் ஹாலில் எரிந்த விளக்கின் ஒளியால் நின்றது.
‘லைட்டை ஆப் பண்ணக் கூடவா மறந்துட்டாங்க..’ என்றவனுக்கு அப்ஷரா இன்று இங்கே தங்குவது நினைவுக்கு வர, ‘தனக்கு சாப்பாடு இடுவதற்குத் தான் காத்திருக்கிறாள்’ எனப் புரிந்தது..
சேரில் அமர்ந்து தலையை டைனிங் டேபிளில் சாய்த்து அமைதியாய் உறங்கும் அப்ஷராவைப் பார்த்தவன்,மேலும் ஐந்து நிமிடங்கள் அவளது முகத்திலே தனது பார்வையை நிலைக்க விட, சில நாட்களாய் மனதை அறுத்துக் கொண்டிருக்கும் கேள்விக்கான விடை கிடைத்தது.
ஆனால் கிடைத்த விடையை ஏற்கத் தான் அவன் தயாராக இல்லை. குழப்பத்துடனே அவளை நெருங்கியவனின் கைத் தவறி மேஜையில் இருந்த தண்ணீர் கொட்டிவிட அதில் பதறி விழித்தாள் அப்ஷரா.
கீழே விழுவப் போன கண்ணாடி டம்ளரை கேட்ச் பிடித்தவன், தனது பார்வையை அப்ஷராவின் பக்கமாய் திருப்பினான்.
பத்து நாட்களுக்குப் பின் தனிமையில் இருவரும் சந்திக்கின்றனர்..பலவருடங்களுக்குப் பின் கணவனின் அருகாமையை உணருகிறாள்.. நேற்று அவன் கொடுத்த முத்தத்தைக் கூட அவன் உணர நேரம் கொடுக்க வில்லை..
அரண்டு விழித்தவளின் கண்களில் பயம் வந்து பின் குழப்பம் வந்து இப்போது எல்லையில்லா காதலைத் தேக்கி அவனது விழிகளில் தனது பார்வையை நிலைக்கவிட்டிருக்கிறாள்..
அவளது பார்வையின் ஒவ்வொரு மாற்றத்தையும் உள்வாங்கியவனுக்கு இறுதியில் பார்வை கொடுத்த செய்தியை மனம் உணர்ந்து சேமித்துக் கொண்டாலும் மூளை ஏற்க மறுத்தது.
இவள் உனது மனைவி என்று மனம் சொல்ல, மூன்று வருடத்திற்குப் பின் இப்போது தான் இவள் உனது மனைவி என்று புரிகிறதா என மனசாட்சி முறைக்க, மூளையோ இவளை நம்பாதே ஒருதடவை நீ பட்ட அவமானங்கள் போதாதா என மிரட்டியது.
கோபத்தோடு கையில் இருந்த கண்ணாடி தம்ளரை நெறிக்க, உடைந்த தம்ளர் கொடுத்த மெல்லிய சத்தத்தில் அவனது கண்களில் இருந்து தனது பார்வையை நொடிப் பொழுதில் விலக்கியவளுக்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது.
“ரத்தம் வரு..ரத்தம்…” நடுங்கும் குரலில் அவனது கைகளைப் பற்றியவளை இப்போதும் அதே பார்வையுடன் எதிர் கொண்டவன், வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை..
சொட்டு சொட்டாய் இரத்தம் தரையில் தெறிக்க, அதன் வலியைக் கூட உணராமல் பதறும் அவளையும், நடுங்கும் அவளது உடலையும், ஒட்டுமொத்த துயரத்தை பிரதிபலிக்கும் அவளது விழிகளையுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘தனக்காகத் துடிக்கிறாளா..?’ கண்ணீர் சிந்தும் அவளது விழிகளைக் காணும் போது நியாயமாய் வருத்தம் வந்திருக்க வேண்டும் ஆனால் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் தன்னை வெறுத்துவிட்டார்கள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளது அழுகை மனதில் ஒரு வகை அமைதியை தூவிச் சென்றது.
அவனது யோசனையுடன் அவளைப் பற்றி பார்த்திருந்தவனுக்கு அவள் எப்போது அவனை கிட்சனுக்குள் இழுத்து வந்தாள் என்பதும் தெரியவில்லை, காயத்தில் அவள் தண்ணீர் விட்டுக் கழுவும் எரிச்சலைக் கூட அவன் உணரவில்லை.
“வரு..வலிக்கதா..” அவனின் தோள் தொட்டு அவள் அசைத்ததும், தனது சிந்தனையில் இருந்து வெளி வந்தவன்,
“இட்ஸ் ஓகே..வலிக்கல” என்றான் தன்மையாய்.
அவனது தன்மையான பதிலில் அவள் வாயடைத்து அவனை நிமிர்ந்து பார்க்க, அவனது பார்வையோ அவளது கழுத்தில் இன்னும் மெருகு குறையாமல் அவன் கட்டிய தாலியில் நிலையாய் நின்றது.
அவன் பார்வை தொட்டு மீண்ட இடத்தில் நினைவுகளைத் தேடி எடுத்தவனுக்கு முகத்தில் எவ்வுணர்வையும் காட்டாது இறுகிப் போனாலும் அவனது கை தானாய் உயர்ந்து மஞ்சள் கயிரை வருடத் துவங்கியது.
ருத்ராங்கி வருவாள்.
*******அடுத்த அத்தியாயம் நாளை*********