லம்போகினி சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க , கிருஷ்ஷின் அருகே வெளியே வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வைஷாலி .
பின்னால் தர்ஷினி ஏதோ பாடலை முணுமுணுத்தபடி வர , அந்த மெல்லிய சத்தத்தைத் தவிர வேறு எந்த ஒலியும் அங்கே கேட்கவில்லை.
பரபரப்பான சாலையில் நினைத்த நேரத்தில் நினைத்தபடி செல்ல முடியாததால் வைஷாலி பதட்டமாகவே இருந்தாள் .
தந்தையைக் கண்ட மோசமான நிகழ்வையும் , தாயைக் காணப் போகின்ற இனிய தருணமும் அவளை ஆட்டிப் படைத்தது.
ஏற்கனவே வீட்டில் அவளைக் காணாமல் பதறிப் போயிருந்தனர் அனைவரும் .
உண்மை மறைக்கப்பட்டதில் கண்காணாமல் சென்றுவிட்டாளோ என்று அவளின் எண்ணிற்கு ஏகப்பட்ட தடவை அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
சற்று நேரம் முன்பே அதைக் கவனித்தவள் , கிருஷ்ஷுடன் இருப்பதைக் கூறி அவர்களை சமாதானம் செய்வதாக எண்ணி அவர்களின் நிம்மதிக்கு மேலும் சமாதி கட்டியிருந்தாள் அவளறியாமல் .
நடந்தவற்றை அறிந்து , சத்யவதியின் மனம் சற்றே ஆறுதலுற்றது .
ஷாலினியின் நன்மைக்காகத் தான் பெற்ற மகனையே தியாகம் செய்தவர்களைத் தவறாக எண்ணியதை உணர்ந்து வேதனை கொண்டார் சத்யவதி .
மேலும் , அவர்கள் ஷாலினியை அப்பொழுதே தங்களிடம் விட்டிருந்தால் , தன் கணவன் அந்த ரஞ்சித்துடன் சேர்ந்து ராகவைப் பழி வாங்குகிறோம் என்று இவளைப் பலியாக்கிருப்பார்கள் என்று நன்கு புரிந்து கொண்டார்.
ஆனால் , அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஷாலினி இப்பொழுது கிருஷ் என்று ஒருவனை விரும்புவதைத் தான் .
இவளைப் பிரிந்து ராகவ் என்ன பாடு படுவான் என்று அவருக்குத் தெரியாதா என்ன !
அதனால் உடனே அவனிடம் இதைக் கூற வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடிக்க , முடியவே முடியாது என்று சிவசங்கரியும் அடம் பிடித்தார்.
" இப்ப தான் வைஷாலி சந்தோஷமா இருக்கா . அவகிட்ட அதையும் இதையும் சொல்லி எதையும் கெடுக்க வேணாம் .
கிருஷ் தான் அவளுக்கு கரெக்டான ஜோடி . கொஞ்ச நாள் போனா ராகவ் இவளை மறந்திடுவான். எல்லாம் சரியா போயிடும் "
சிவசங்கரி வாதாட ,
" அப்போ ஷாலினிக்குப் பழசெல்லாம் நியாபகம் வந்து , எதுக்கு ராகவ் பத்தி மறைச்சீங்கன்னு நம்மகிட்ட கேட்டா என்ன பண்ணறது ?
அது துரோகம் பண்ண மாதிரி ஆகாதா ? இந்த கிருஷ் கிட்டப் பேசி நான் சரி பண்ணறேன் "
என்று சத்யவதியும் பிடியாக நின்றார்.
இவர்களின் நடுவே மஹேந்திரன் முழித்துக் கொண்டுத் தன் பணியில் தனியாய் நின்றார்.
அப்பொழுது ,
" ம்மா !!"
என்று அக்கறையில் சர்க்கரை கலந்த குரல் கேட்க , திரும்பிப் பார்த்த மூவரும் கப்சிப் ஆயினர்.
கொஞ்சம் கூட நகராமல் அவர்கள் அவளையே பார்க்க , ஆடாமல் அசையாமல் நின்றிருந்தவர்களைக் கண்டு
' நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ! ' என்ற ரீதியில் மெல்ல நடந்து வந்தாள்.
ஆம், அசைந்தது ... அவளுக்கு அனைத்து உண்மையும் தெரியும் என்று அறியாத அவர்களின் இதயம் மட்டும் வேகமாக மேலும் கீழும் அசைந்தது.
தன்னைத் தான் அம்மா என்று அழைக்கிறாளோ என்று சத்யவதியின் கரங்கள் முன்னே செல்லத் துடிக்க ,
' கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவகிட்ட வாங்குன பல்பு மறந்து போச்சா ? '
என்று மனதின் குரல் மண்டையில் அடிக்க , அப்படியே பின்வாங்கினார் சத்யவதி.
ஆனால் எதிர்பாரா விதமாக சத்யவதியைக் கட்டிக் கொண்டு வைஷாலி கதறி அழ ஆரம்பிக்க , அனைவரும் ஒன்றும் புரியாமல் தவித்துப் போயினர்.
"ம்மா , என்னை மன்னிச்சுடு . உன்னை எனக்கு அடையாளம் தெரியல "
என்று கதறலுக்கிடையில் கூற , அவளுக்கு உண்மை தெரிந்ததில் ஆனந்தம் கொண்ட சத்தியவதி தன் மகளை ஆரத் தழுவினார்.
மஹேந்திரன் , சிவசங்கரி இருவருக்கும் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வே மிஞ்சியது .
என்னதான் இருந்தாலும் மாற்றான் வீட்டு மல்லிகையைத் தினமும் சூடிக்கொள்ள இயலுமா!
வைஷாலியின் பின்னோடு வந்திருந்த தர்ஷினி , கிருஷ் இருவரும் வாயிலோடு நின்றுகொண்டனர்.
சற்று நேரம் அனைவரும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்க , அந்த அமைதியைக் கிருஷ் தான் கலைத்தான் .
" போதும் ஷாலு , இன்னும் எவ்ளோ நேரம் தான் அழுத்துட்டே இருப்ப ? "
அவனின் அந்த உரிமை தெறித்த குரலில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர் .
" நீயா !! "
என்ற அதிர்ச்சி கலந்த ஆனந்தம் சத்யவதியிடம் வெளிப்பட,
சிவசங்கரியோ
" நீயா ?? "
என்று ஆனந்தம் கழிந்த அதிர்ச்சியுடன் நின்றார் .
அவனைக் கண்டதும் கண்களைத் துடைத்துக் கொண்ட வைஷாலி ,
" சரிங்க சர் , நீங்க இப்ப உள்ள வாங்க . அப்படியே எஸ்கேப் ஆக ஐடியா பண்ணறீங்களா ! "
என்று லேசாக சிரித்தாள் .
ஆனால் , உள்ளே வந்தால் நடக்கப் போகும் கலவரத்தை அவனல்லவோ அறிவான்.
இவள் சகஜமாக அவனிடம் பேசுவதைக் கேட்டதும் இன்னமும் ஷாக் ஆனவர்கள் அப்படியே நிற்க , வைஷாலி சென்று அவனின் கையை விடாப்பிடியாகப் பிடித்து இழுத்து வந்தாள் .
கூடவே தர்ஷினியும் வர , யார் என்ன பேசுவது என்றே தெரியாமல் முழித்தனர் .
அதற்குள் வைஷாலியே ,
" என்னப்பா !! கிருஷ்ஷைப் பார்த்ததே இல்லாத மாதிரி நிக்கறீங்க ? "
என்று கேட்க , சர்வமும் விளங்கியது அனைவருக்கும் .
' அவனா நீ ??!! '
" ஆனா , அன்னைக்கு வந்தது நீங்க இல்லையே ? "
மஹேந்திரன் சந்தேகமாகக் கேட்க , பிரகாஷ் செய்த குளறுபடியைக் கூறி நடந்தவற்றிற்கு விளக்கமும் தந்தான் கிருஷ் .
" ஓஹோ , அப்போ எங்களுக்குப் பயந்து தான் கிளம்புனீங்களா ! வைஷாலிக்கு சந்தோஷம்னா , எங்களுக்கு அது போதும் ராகவ் . இது புரியாம நீங்க வேற ..."
என்று மஹேந்திரன் வாய் விட்டு சிரிக்க , அதிலேயே சூழ்நிலை சகஜமானது.
ஆனால் அப்பொழுது தான் மிக முக்கியமான பிரச்சனையைப் பிறக்க வைத்தார் சிவசங்கரி.
" அதெல்லாம் சரி தான் . ஆனா , இனிமே வைஷாலியை கூட்டிட்டுப் போறேன்னு யாராச்சும் வந்தீங்க , நான் கண்ணகியா மாறிடுவேன் "
சிவசங்கரியின் கூற்றைக் கேட்டு, அவ்வளவு நேரம் பொங்கிய பாலில் நீரை ஊற்றியது போல் இருந்த சத்யவதி , அணையும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் மாற , அதற்குள் மஹேந்திரன் முந்திக் கொண்டார்.
" ஆமா இப்ப மட்டும் என்ன காந்தாரி மாதிரியா இருக்க ? கொஞ்ச நேரம் சும்மா இரேன் "
" அட அட சண்டை போடாம நான் சொல்லறதைக் கேளுங்க .
பேசாம நான் ஷாலுவை சீக்கரமே கல்யாணம் பண்ணிக்கறேன் . அதான் கரெக்ட்டா இருக்கும் . என்ன ஷாலு !! "
என்று அவளைப் பார்த்து கண்ணடிக்க , அவள் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தாள்.
அவன் கூறியதைக் கேட்ட சத்யவதி அதை ஆமோதிக்க , சிவசங்கரிக்கோ வைஷாலியைப் பிரிவதில் உடன்பாடே இல்லை .
அப்பொழுது சத்யவதியின் மொபைல் அடிக்க , எடுத்துப் பேசியவரின் முகம் கலவையான உணர்ச்சிகளை உரித்துக்காட்ட , கைகள் வேகமாக சென்று டீவியை ஆன் செய்தது .
அங்கே , தலைப்பு செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது தமிழ்நாடை உலுக்கிக் கொண்டிருந்த ஒரு சம்பவம் .
" தலைமறைவான தொழிலதிபர் ரஞ்சித்தை நடு ரோட்டில் கட்டிப் போட்டு தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக சுட்டுத் தள்ளிய கமிஷனர் ராஜஷேகர் .
துடிதுடித்து இறந்த ரஞ்சித் .
கோரக் காட்சியைக் கண்டு பதறிய பொதுமக்கள் !! "
என்று செய்தியாளர் கூற , சம்பவம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
ராஜஷேகரின் மிருகத்தனமான செயலுக்குப் பலர் கண்டனம் தெரிவிக்க , சிலர் காரணம் தெரியாமல் கட்டுக் கதையைப் புனைந்து கொண்டிருந்தனர் .
ரஞ்சித்தின் சிதைந்த உடலைக் காண சகிக்காமல் அனைவரும் கண்ணை மூடிக் கொள்ள , கிருஷ் மட்டும் உணர்வே இல்லாமல் திரையில் தெரிந்த அடையாளம் தெரியாதவனை வெறித்துக் கொண்டிருந்தான்.
" நீங்க பண்ண தப்புக்குப் பிராயச்சிதமா ஒரு தண்டனையை முடிவு பண்ணிக்கோங்க ரெண்டு பேரும்.
நீங்களா முடிவு பண்ணலன்னா , நான் வேற மாதிரி ரியாக்ட் பண்ண வேண்டி இருக்கும் "
இவ்வளவே அவர்களிடம் அவன் கடைசியாகக் கூறியது . அவர்கள் அதற்கு மேல் என்ன பேசினார்களோ தெரியாது .
ராஜஷேகர் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தி இருந்தார்.
ரஞ்சித்தின் பொறாமை , ஆற்றாமை இரண்டும் சேர்ந்து அவனின் கடமையைக் கூட கருத்தில் பதிய விட்டதில்லை .
பணத்தின் பின்னே சென்று குணத்தை உணர மறுத்தவன் ரஞ்சித் .
சிறு சிறு தவறுகள் செய்து அதில் சுகம் கண்டுவிட்டால் பெரிய தவறுகள் தன் அகத்தை அழித்துவிடும் .
கிருஷ்ஷைப் போல் குறுகிய காலத்தில் மாற வேண்டும் என்று குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து அவனின் அழிவை அவனே தேடிக் கொண்டான் ரஞ்சித்.
இதில் கிருஷ்ஷின் காழ்ப்புணர்ச்சியும் இருப்பதாகத் தோன்றலாம்.
ஆனால் , கிருஷ் என்றும் பகையைத் தொகை தந்து அழைத்ததில்லை .
சாதாரண குடும்ப சண்டையாக இருந்தால் பரவாயில்லை . அந்த எல்லையை ரஞ்சித் எப்பொழுதோ தாண்டிவிட்டான்.
அதற்கு மேல் , சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து சமூகத்தின் அவலத்தைக் கண்டு அடங்கிப் போக வேண்டும் என்ற அவசியமும் கிருஷ்ஷிற்கு இல்லை.
சிங்கத்தின் பிடரியைப் பிடித்திழுத்து விட்டு என்றேனும் பொன்மான் பத்திரமாக சென்றதுண்டா !!
ரஞ்சித் ஆசைப்பட்ட அதிகாரம் , பணபலம் இரண்டுமே அவனின் மானத்தை வெளி உலகில் வெளிச்சம் போட்டு விற்றது .
இத்தனைக்கும் அவன் ஈடுபட்டிருந்த கேவலமான செயல் சொல்லப்படவில்லை அப்பொழுது வரை.
சொல்லவேண்டியவர்கள் சொன்னால் தான் அந்த சொல்லுக்கு மதிப்பு என்று உணர்ந்திருந்த கிருஷ் அதை சொல்லாமல் அமைதியாக இருந்திருந்தான்.
அதற்கேற்ப ராஜஷேகர் மீடியா முன்பு இரத்தக்கறை படிந்த நிலையில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் .
ரஞ்சித் செய்த செயல் , அதற்குத் தான் உடந்தையாக இருந்தது என அனைத்தையும் ஒரு வித நடுக்கமுடன் தெரிவித்தார் அவர்.
"நம்ம நாட்டுல பெண்களுக்கான அநீதியைத் தட்டிக் கேட்க சட்டத்தில இடம் இருக்கு தான்.
ஆனா , என்னைப் பொறுத்த வரைக்கும் தண்டனைன்னா அது அடுத்தவனை அடங்கிப் போக வெக்கணும் . அடுத்த முறை எவனும் அதைப் பண்ண துணியவே கூடாது.
நாலு பேருக்கு முன்னாடி இப்படி நடுத்தெருவுல சுட்டுத் தள்ளுனா , அடுத்து எவன் தைரியமா பொண்ணுங்களை நாசமாக்க வருவான் ?
என்னை மாதிரி இல்லாம உடனுக்குடனே ஆக்ஷன் எடுத்தா எவன் இழிவா நடந்துக்கத் துணிவான் ?? .
ஆனா , இதுல நம்ம நாடு கருணைக்கு துணை போகும் . அதுனால அவ்ளோ கெடுபிடியான சட்டம் எல்லாம் இங்க இல்லை.
இருந்திருந்தா வாட்ஸப் , ட்விட்டர்னு பெண்களுக்கு எதிரா நடக்கற சம்பவங்களை ஷேர் மட்டும் பண்ணிட்டு , வேற எதையும் செய்ய முடியாத நிலைமை இருந்திருக்காது.
எனக்கே என் பொண்ணு தான் தப்பை உணர வெச்சது.
யாருக்கும் என் நிலைமை வரவே கூடாதுன்னு நினைக்கறேன்.
என்னை மன்னிச்சுடு ஷாலினி . நாட்டுக்கு சேவை பண்ண வந்துட்டு எதுக்கும் உதவாம சுடுகாட்டுக்குப் போறேன் "
என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார் ராஜஷேகர் .
ஒரு நிமிடம் உலகமே ஸ்தம்பித்தது . சத்யவதி முதல் தர்ஷினி வரை அனைவரும் அதிர்ச்சியில் அலறக் கூட முடியாமல் நிற்க , சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து ராஜஷேகர் உடனே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் , சென்றவர் சென்றவர் தான் . மாசிவ் அட்டாக் என்று மட்டும் இவர்களின் வீட்டிற்கு ரிப்போர்ட் வந்தது.
அனைவரும் இந்த சோகத்தில் இருந்து வெளியே வர சில காலம் எடுத்துக் கொண்டனர் .
அவர்களின் மனக் காயத்தை காலமே ஆற்றியது என்பதை விட காலம் தந்த பரிசு மாற்றியது என்றும் கூறலாம்.