என்ன நான் பேச பேச பதில் சொல்ல மாட்டேங்கிற? திமிரா?
மறுபடி மறுபடி அவளிடம் எகிறினான். அமைதியாய் இருந்தால் அடங்கிப் போவார்கள் என்று பயப்புள்ளைக்கு யாரோ தப்பு தப்பா சொல்லிருப்பாங்க போலிருக்கு. “வொய் ப்ளட்? சேம் ப்ளட்” வடிவேலாக மாறி மாத்து வாங்க போறது அவனுக்கு தெரியாமல் போயிற்று.
ரிஷாவிற்கு எப்போதுமே ஸ்டார்டிங்க் ப்ராப்ளம் மட்டும் தான், ஆரம்பித்து விட்டாளென்றால் அவளை நிறுத்தவே முடியாது. இது அவனுக்கு புரியவில்லை.
ஏய் …
என்னாது ஏயா?... ஜெர்க் ஆனான் அந்த குள்ளக் கத்திரிக்கா.
ஏண்டா டேய் எனக்கு அறிவில்லையான்னு கேட்டியே? உனக்கு அறிவிருக்காடா டால்டா?
??
உன் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்தா நீ ஏண்டா என் கையை பிடிச்சி இழுக்கணும்?
“என்ன கைய பிடிச்சு இழுத்தியா?”
அவள் சொன்ன டயலாகை கேட்டதும் உடனே ஆஜராகி வடிவேலு மண்டைக்குள் மைண்ட் வாய்ஸில் அலட்டிக் கொண்டிருந்தார்.
அவன் தன் மண்டையை ஒரே உதறு உதறி வடிவேலை தூக்கி எறிந்தான். எங்கே போனாலும், என்ன வேலை செஞ்சாலும் இவரு முன்னாடி வந்து நிப்பாரு. ஒரு சிச்சுவேஷனை விட்டு வச்சுருக்கிறீங்களா வடிவேலு சார்? .எங்க போனாலும் பின்னாடியே வந்துகிட்டு ஹ்க்கும்
மனதிற்குள்ளாக பொருமி தீர்த்தான். ரிஷா எங்கே அவனை விட்டாள். அவளது அர்ச்சனைகள் விடாமல் தொடர்ந்தன.
என்னது பொண்ணுங்களுக்கெல்லாம் ஹீரோ வந்து காப்பத்தணுமா? ஏன் நான் உன் கிட்ட என்னை காப்பாத்த சொல்லி கேட்டேனா? இல்ல நீ தான் ஹீரோவா? காமெடியன் மாதிரி இருந்திட்டு பேசற பேச்சப் பாரு.
கேட்டவன் முகம் சுருங்கினான்.
அதுக்கப்புறம் என்னச் சொன்ன ஆம்பளைங்க முன்னேறாம போறதுக்கு காரணமே நாங்கதான் காரணமா? ஏன் முன்னேறாம உங்க காலை பிடிச்சோமா? இல்ல கையப் பிடிச்சோமா? நீயா வந்து என்னை கையப் பிடிச்சு இழுத்துட்டு வந்து பேசற பேச்சப் பாரு.
விட்டால் அடித்து விடுவாளோ? என ரிஷாவைக் குறித்து அவன் எண்ணிக் கொண்டிருக்கையில் பெருமளவில் நெருக்கடி இல்லாவிட்டாலும் இருந்த ரயில்வே பெட்டியில் சிலர் இவர்களைச் சுற்றி வந்து என்ன நிகழ்கின்றது? என காண கூட்டமாக சேர்ந்து விட்டனர்.
க்யா ஹுவா பெஹன்? (என்னாச்சுமா தங்கச்சி?)
இஸ்னே குச் கந்தி ஹர்கத் கி க்யா? (இவன் எதுவும் தப்பா நடந்துகிட்டானா?)
போலோ மை இஸ்கோ தோட் கே ரக் தேதா ஹீ ( நீ சொல்லும்மா நான் இவனை ஒரு வழி பண்ணிடுறேன்?)
கேட்டவாறு டர்பன் அணிந்த பஞ்சாபி ஒருவர் அருகில் வரவே தான் அதுவரை இந்த கு. க அதுதான் குள்ளக் கத்தரிக்காவிடம் இவ்வளவு நேரமும் தமிழில் பேசிக் கொண்டிருந்தது ரிஷாவுக்கு புரிய வந்தது. அப்படின்னா இவன் தமிழா? அதுவரை பேசிக் கொண்டிருந்ததை மறந்து அவனிடம் கேட்டு வைத்தாள்.
ஏன்டா நீ தமிழா?
ஏற்கெனவே வாட்டசாட்டமான அந்த பஞ்சாபி இவனது எலும்புகளை எண்ணும் நோக்கத்தோடு “தோட்கே ரக் தே தா ஹீ” என்றுச் சொனதிலிருந்தே குளிர்காய்ச்சல் வந்த மாதிரி இருக்க, ரிஷா “ஏண்டா” என ஏக வசனத்தில் பேசவும் இன்னுமாய் கடுப்பானான். ஆனால், வாயைத் திறந்து ஒன்றும் சொல்லவில்லை. சொல்லும் நிலையிலும் இருக்கவில்லை.
ரிஷாவிற்கு திடீரென தமிழன் ஒருவனை கண்ட மாத்திரம் மொழிப் பற்று, பாசம் ஏகத்திற்கும் பீறிட்டு எழ தன்னிடம் பதில் எதிர்பார்த்திருந்த அந்த சர்தார்ஜியிடம்,
நஹி பாய்சாப் யே தோ மேரா தோஸ்த் ஹை. இஸ்ஸே மை கபி பீ ஐசே ஹி பாத் கர்த்தி ரெஹ்தீ ஹூ. (இல்ல அண்ணா, இவன் என்னோட நண்பன். நான் எப்பவுமே இவன் கிட்டே இப்படித்தான் அதட்டி உருட்டி பேசிட்டு இருப்பேன்) எனச் சொல்லவும் நம்பாத பார்வை பார்த்து வைத்தார்.
அப்படித்தானே சொல்லுடா? நண்பா?
என்னாது நண்பனா? குட்டியா இருந்துட்டு இந்த பொண்ணு என்ன போடு போடுதுடா சாமி? வாயைப் பிளந்தான் அவன்.
அவன் காதுக்குள் “டேய் அடி வாங்கணுமா? ஆமான்னு தலையை ஆட்டுறியா மாட்டியா? குசுகுசுத்தாள்.
ஹா சர்தார்ஜி ஹம் தோனோ தோஸ்த் ஹை (நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் சர்தார்ஜி) எனச் சொன்னவன் தன் வயமில்லாமல் "நண்பேண்டா" என்றபடி அவளை தோளோடு இழுத்தணைக்க வரவும்,
10 ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்குது பாரு பக்கி , பக்கி"
என அவனை மனதிற்குள்ளாக திட்டிக் கொண்டு கடினமாய் முறைத்தாள் ரிஷா.
தன் ஓவர் ஆக்டிங்கின் தவறு புரிந்து ஹி ஹி என அவன் விலகவும் அவர்களை சுற்றி இருந்தவர்கள் விலகிச் சென்றனர்.
தேங்க்ஸ் என்றான் அவன்.
ம்ம் ச்சூ ச்சூ என காக்கையை விரட்டுவது போல விரட்டினாள் அவள்.
போதும் போதும், நீ தமிழ் அதனாலதான் நான் உன்னை காப்பாத்தி விட்டேன். தமிழன் தனக்குள்ள சண்டை போட்டுக்குவான், மத்தவன் முன்னாடி விட்டுக் கொடுக்க மாட்டான்னு புரிய வைக்கிறதுக்குதான் இதெல்லாம் செய்ய வேண்டியதா போச்சு.
எதையோ பெரிதாய் சாதித்தது போல கைகளை தட்டி விட்டுக் கொண்டாள் ரிஷா.
இப்போது முறைப்பது அவனது முறையாயிற்று.