“உன்னிடம் என்ன கேட்டான் இவன்..?” என்று கேட்டதும், “என்னோட சொத்து பத்து ஏக்கரையும் சேர்த்து இவனுக்கு எழுதிக் கொடுக்கணும் என்று மிரட்டுகிறான்.. இவனோட சுயநலத்தால் என்னோட வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என்று இதோ இவளுக்காக எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறேன்.. இவளை நான் பெரியவளாக கொண்டுவர நான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.. இவன் என்ன எங்களுக்கு செய்தான்.. நான் பெருந்தன்மையாக இவனுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும் அளவிற்கு..? இதை கேட்டது தப்பா ஜெயந்திம்மா..” என்று சொல்ல முத்துகுமார் பக்கம் திரும்பினார் அவனோ அவளை கொன்று புதைக்கும் கொலைவெறியில் நின்றிருந்தான்..
அவனைப் பார்த்தவர், “ஏன் முத்து உன்னோட அப்பா விட்டுசென்ற ஐந்து ஏக்கர் நிலத்தில் பங்குக் கேட்டால் அதில் தப்பில்லை.. ஆனால் அதிலும் பங்குதான் கேட்க உரிமை இருக்கிறது.. உனக்கு எப்படி அந்த சொத்தில் பங்கு இருக்கிறதோ, இவர்கள் இருவருக்கும் அதில் பங்கிருக்கு அந்த பங்கைக் கொடுக்க சொல்லி கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது.. ஆனால் நீ அவள் கஷ்டப்பட்டு சம்பாரித்த சொத்தை எதுக்கு நீ கேட்கிறாய்..? அதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்ல.. சட்டத்திலும் இடமில்லை..” என்று சொல்ல அவனுக்கு கோபம் எகிறியது..
“ஏய் உன்னோட வயதிற்கு நீயெல்லாம் ரூல்ஸ் பேச வந்துவிட்டாய்.. இந்த வயதிலும் இன்னமும் எல்லாவிதமான புக்கையும் படித்துக் கொண்டிருக்கிறாய்.. இதுவரை உனக்கு கொடுத்த மரியாதை எல்லாம் போய் விட்டது.. இது எங்களின் குடும்ப விஷயம் நீ வெளியே போ..” என்று ஜெயந்தியம்மாவை மரியாதை இல்லாமல் பேசினான் முத்துக்குமார்..
அவன் அப்படி கேட்பான் என்று ஜெயந்திம்மா நினைக்கவே இல்லை.. அவன் அப்படி கேட்டது அவருக்கு தலை குனிவாகிவிட அமைதியாக வாசலை நோக்கி திரும்ப, அவரின் கைகளை அழுத்ததுடன் பற்றியவள்,
“இப்பொழுதும் நான் தைரியமா வெளியே போய்ட்டு வீட்டுக்கு வருகிறேன் என்றால் அது இந்த அம்மா இருப்பதால் தான்.. எனக்கும் என்னோட தங்கைக்கும் இவங்க அம்மா மாதிரி.. அவங்களுக்கு தெரியாமல் ஒரு துரும்பு கூட அசையாது அவங்களைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய்..?” என்று கேட்டதும் ஜெயந்திம்மா அவளை நிமிர்ந்துப் பார்த்தார்...
அவளோ சரிக்கு சரி சண்டை காட்டிக் கொண்டிருந்தாள், “அவங்களை நீ பேசுகிறாயே.. நீயெல்லாம் இன்னமும் சீட்டாடிட்டு ஊதாரியா திரிகிறாயே உன்னைவிட இவங்க எதில் தாழ்ந்து போய்ட்டாங்க..? இரண்டு மகனை பெற்று வளர்த்தி அவங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் பார்த்து, அவங்களின் பேரப்பிள்ளைகளையும் வளர்த்து வராங்க.. அதுமட்டும் இல்லாமல் இன்னும் தனியாக நின்று நிர்வாகம் அனைத்தையும் பார்க்கிறாங்க.. நீயென்ன செய்தாய்..?” என்று கேட்டதும் அவன் பேயைப் பார்ப்பது போல முழித்தான் முத்துகுமார்..
“அவங்களின் அனுபவத்திற்கு தகுமா உன்னோட வயது..? எப்படியோ சீட்டாடி எல்லாவற்றையும் தொலைத்துவிட்டாய்.. இப்பொழுது நான் சம்பாரிந்த நிலம் உன்னோட கண்ணை உறுத்துதா..?” என்று கேட்டவளின் பார்வை வாசலுக்கு செல்ல அங்கே கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தாள் தனம்,
அவர்களைப் பார்த்தவள், “என்னோட அண்ணன் என்ற முறையில் நீ எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் அதோ நிற்கிறான்களே என்னோட அண்ணி அவங்க எனக்கு எவ்வளவோ பண்ணிருக்காங்க.. அவங்களுக்கும் அவங்களின் பிள்ளைக்கு மட்டும் தான் பாட்டன் சொத்தில் பங்கு கொடுப்பேன்.. உனக்கு சல்லி பைசா கூட கொடுக்க மாட்டேன்..” என்றவள்,
“நான் சம்பாரித்த நிலம் மட்டும் இல்ல அப்பா சொத்திலும் உனக்கு சல்லிக்காசு கொடுக்க மாட்டேன்.. நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்க..” என்று கூறியவள் தங்கையையும், ஜெயந்திம்மாவையும் அழைத்துக் கொண்டு திரும்பியவள்,
“அண்ணி இவனுக்கெல்லாம் பயப்படாதீங்க.. இவனை மாதிரி இருக்கும் ஆளுங்களுக்கு பொண்டாட்டியின் பயம் அவங்களுக்கு சாதகமாக மாத்திக்கிட்டு என்ன வேண்டுமாலும் செய்வாங்க..” என்று கூறியவள்,
அங்கே நின்று வேடிக்கைப் பார்த்த ஊர் மக்களைப் பார்த்து, “என்ன இங்கே வேடிக்கை.. எல்லோரும் போங்க..” என்று சொல்ல, அந்த ஊர்மக்களில் ஒருத்தி,
“இவள் என்னடி பேயாட்டம் ஆடிட்டு போகிறாள்..?” என்று கேட்டதும் மற்றொருத்தி, “சாது மிரண்டால் காடு கொள்ளாது அக்கா.. இவளும் இத்தனை நாள் வரை பொறுமையாக இருந்தாள்.. இப்பொழுது அவளின் பொறுமைக்கும் சேர்த்து ஆடிவிட்டு போகிறாள்..” என்று கூறியவர்கள் அவரவர் வீட்டை நோக்கிச் சென்றனர்..
முத்துகுமார் எழில்விழி பேசியதைக் கேட்டு சிலையென்று நின்றுகொண்டிருந்தான்.. அவனைப் பற்றிய உண்மை அவளுக்கு எப்படி தெரிந்தது என்று!
அப்பா விட்டுச்சென்ற சொத்தை அடைய முடியவில்லை என்று இருந்தவனுக்கு தங்கையின் வளர்ச்சி இன்னும் எரிச்சலைக் தூண்ட தன்னுடைய சுயநலம் வெற்றி அடைய சீட்டாட்டத்தில் இறங்கினான்.
அவனின் சீட்டாட்டத்தில் ஊர் முழுக்க கடனாளியாக மாறியதுதான் மிச்சம்.. அதிலும் தங்கை அடைத்த வளர்ச்சியில் நேற்று ஒருவன், “உன்னோட தங்கை இன்னும் பத்து ஏக்கர் வாங்கி இருக்கிறாள் இது உனக்கு தெரியுமா..?” என்று கேட்டதும் முத்துகுமாருக்கு அவமானாக போய்விட்டது..
அதுதான் அவளின் வளர்ச்சிக்கு காரணம் தனது அப்பாவின் சொத்து.. அது இல்லை என்றால் அவள் இந்த நிலத்தை வாங்க முடியாது என்று நினைத்தவன் அனைத்தையும் அவளிடமின்று மிரட்டி வாங்க நினைத்தான்..
ஆனால் இவன் சீட்டாட்டத்தில் விளையாடுவதை கண்டவள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்ததன் பலன் தான் இந்த பேச்சு! தனம் வீட்டை நோக்கி செல்ல, ஜெயந்திம்மா எழில்விழி நெற்றியில் முத்தமிட்டு, “என்னோட மானத்தைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறாய்..” என்று கூறியவர் அவரின் வீடு நோக்கிச் சென்றார்..
இவற்றை எல்லாம் அங்கே வந்த ஆஷா கவனித்துவிட்டு, “நம்ம எழிலுக்கு கூட கோபம் வருமா..?” என்று கேட்டவள் வீட்டின் உள்ளே செல்ல அவள் பயத்தில் அமர்ந்திருப்பது பார்த்து,
“ஏய் என்னடி இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறாய்..? இதுதான் நான் பார்த்த எழிலா..?” என்று சந்தேகமாகக் கேட்டதும்,
“வா ஆஷா..? நீ எப்பொழுது வந்தாய்..?” என்று கேட்டாள், “நான் வந்தது இருக்கட்டும் நீ எவ்வளவு தைரியமாக பேசினாய்..? இப்பொழுது என்ன இப்படி பயப்படுகிறாய்..?” என்று கேட்டதும்,
“அண்ணனைப் பற்றி உனக்கு தெரியாது ஆஷா அவன் என்ன வேண்டும் என்றாலும் செய்வான்..” என்று கூறியவள் அடுத்த வேலைகளை கவனிக்க அடுத்த இரண்டு நாளில் அவளைத் தேடி வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருந்தான் முத்துக்குமார்..
அதைப் பார்த்தும் பயந்தவள் விழியைப் பார்த்து அதை வாங்கிய ஆஷா, படித்துப் பார்த்துவிட்டு, “இதுக்காக பயப்படுகிறாய்.. இனி ஆகவேண்டியதைப் பாரு.. நான் உனக்கு உதவியாக இருக்கிறேன்.. நான் ஒரு பெரிய வக்கீல் இடம் ஜூனியராக இருக்கிறேன்.. நீ சென்னை வா எழில்.. அங்கே வந்துவிட்டு எனக்கு போன் பண்ணு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்லிவிட்டு சென்னை வந்துவிட்டாள் ஆஷா..
அந்த வக்கீல் அன்பு என்று எழில் இடம் சொல்லாமல் வந்துவிட்டாள்.. இப்பொழுது எழில் அண்ணியிடம் தங்கையை ஒப்படைத்துவிட்டு சென்னை வருகிறாள்.. அன்பு என்ன செய்ய போகிறான்.. தன்னை காணவருவது தனது காதலி என்பதை அறிவானா..? இவர்கள் சந்திப்பு எப்படி நிகழும்..?!