Aiyo preethi ippadiya poi nippa varun munnadi...maaname poiduche.. sanju bayangara killadi aavi dhan..pei mama va irukka..kothu cha cha sethu vekkariya sanju..very good girl..illa illa pei...???
“டேய்! நீ ஆம்பளைன்னா, என் முன்னாடி வா டா. இப்படி இன்னொரு தடவை போன் ல மிரட்டின, குடலை உருவி அதையே உனக்கு மாலையா சாத்திடுவேன் ஜாக்கிரதை” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு, ரிசெப்ஷனில் அன்று பார்க்க வேண்டிய பேஷண்ட் லிஸ்ட்டை வாங்கி சென்றாள்.
இவளிடம் போனில் பேசியவனோ, போனை தூக்கி எறிந்துவிட்டு அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலியை எட்டி உதைத்தான். அவனின் கோபத்தை பார்த்த, அவனின் விசுவாசி என்னவென்று கேட்டான்.
“ஒரு பொட்டச்சி, என்னை கண்டபடி பேசிட்டா. வருண் கேஸ் ல ரொம்ப தீவிரமா இருக்கா, முதல இதுக்கு காரணம் என்னனு கண்டுபிடிக்கணும்”.
“அந்த சஞ்சனாவை போட்டு தள்ளின மாதிரி, இவளையும் போட வேண்டிய சூழல் வரும் போல தெரியுது. சரியா அவன் கிட்ட இருந்து, நான் கம்பெனியை வாங்க நினைக்கும் பொழுது, இப்படி ஒரு திருப்பம்”.
“அவளை பத்தின புல் டிடைல்ஸ் எனக்கு வேணும், அதுக்கு ஏற்பாடு பண்ணு” என்று அவன் தனது விசுவாசியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றான்.
இங்கே டைரியின் முதல் பக்கத்தை திருப்பிய வருண், அங்கே பாப் கட்டிங் செய்து கோபமாக உர்ரென்று முகத்தை வைத்து இருந்த, நான்கு வயது சிறுமி ப்ரீத்தி கண்ணுக்கு தெரிந்தாள்.
“ஹா ஹா! அப்போவே அவ இப்படி தான் இருந்து இருக்கா போல” என்று நிறைய நாட்கள் கழித்து மனம் விட்டு சிரித்தான் வருண்.
பக்கத்தில் இதை பார்த்த சஞ்சனா, இன்னும் நீ நிறைய சிரிக்கணும் என்று எண்ணிக் கொண்டாள்.
“ஹாய்! நான் ப்ரீத்தி. அப்பா பெயர் சுந்தரம், அம்மா பெயர் மீனாட்சி. நவம்பர் மாசம் எட்டாம் தேதி, தீபாவளி அப்போ தான் நான் பிறந்தேனாம். அஞ்சு வயசு வரை, என் அம்மா, அப்பா கூட இருந்து இருக்கேன்”.
“ரொம்ப லேசா தான் எனக்கு நியாபகம இருக்கு, அவங்க கூட நான் இருந்த நாட்கள். அப்புறம் என் பாட்டி மரகதம் கூட தான், நான் வளர்ந்தேன்”.
“அஞ்சு வயசில், என் அப்பா, அம்மா ஒரு விபத்தில் இறந்த பொழுது யாரும் என்னை பார்த்துக்க முடியாது சொல்லிட்டாங்க. என் பாட்டி தான் என்னை எடுத்து, இங்க கூட்டிட்டு வந்து வளர்த்தாங்க”.
“என்னோட iq லெவல் அப்போ கூட இருக்கு அப்படின்னு ரெண்டு கிளாஸ் தாண்டி போட்டாங்க ஸ்கூல் ல. அப்போ ஆரம்பிச்சது, எனக்கு பிரச்சனை”.
“ஏய்! என்ன பெரிய படிப்ஸா நீ? கிளாஸ்க்கு வர மிஸ் எல்லாம், உன்னையே சொல்லிக்கிட்டு இருக்காங்க. உன்னை மாதிரி நாங்க நல்லா படிக்கணும், பணிவா இருக்கனும், இப்பட, அப்படின்னு”.
“ஒழுங்கா நாங்க சொல்லுறதை கேட்டா, நீ தப்பிச்ச. இல்லை அப்புறம் உன்னை நாங்க வச்சு செஞ்சிடுவோம், ஜாக்கிரதை” என்று அந்த பத்து வயது பிள்ளைகள், எட்டு வயது சிறுமியை ஒவ்வொரு நாளும், படுத்தி எடுக்க தொடங்கினர்.
பாட்டியிடம் தன் மனக்குமுறலை கொட்டி விடுவாள், தினமும். அவர் பொறுமையாக இருக்கும் படி கூறுவார், எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் என.
ஆனால் அதன் பிறகு தான், அவள் வாழ்வில் பெரிய பிரச்னையை எதிர்கொண்டாள்.
பள்ளி வாசலில் இவள் நுழையும் பொழுதே, அவளை வம்பு வளர்க்க எப்பொழுதும் போல் அந்த கூட்டம் கூடி இருந்தனர். இவள் அவர்களை கண்டு கொள்ளாமல், சென்ற பொழுது அவர்கள் கோபத்தில் அவளை பிடித்து நிறுத்தி அடிகள் கொடுக்க தொடங்கினர்.
இவர்களை, ஏற்கனவே பிரின்சிபாலிடம் கம்ப்ளைன்ட் செய்து இருந்தாள் ப்ரீத்தி. ஆனால் அவரோ அவர்கள் எல்லாம் பெரிய இடத்து பிள்ளைகள், முக்கியமாக அரசியல் பின் புலம் உள்ள பிள்ளைகள். நாம் ஒன்றும் செய்ய முடியாது, என்று கையை விரித்து விட்டார்.
“பொறுமையா இரு கண்ணு, அப்போ தான் நம்மனால நல்லா இருக்க முடியும். படிப்பு நமக்கு ரொம்ப முக்கியம், இங்க பிள்ளைகளை தவிர மற்ற எல்லோரும் நல்லா தான இருக்காங்க. அதை பாரு டா கண்ணு, நீ பெரிய ஆள் ஆவுறது தான் உங்க அம்மா, அப்பா கனவு”.
“கனவு நனவாக, நாம கொஞ்சம் இதை எல்லாம் பொறுத்து போகனும். நம்ம கிட்ட இப்போ ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி, பெரிய பின் புலம் கிடையாது. படிப்பு தான் நமக்கு, பெரிய பதவியை கொடுக்கும். அதனால, பொறுத்து போ ராசாத்தி” என்று அவள் பாட்டி, ஒவ்வொரு முறை இவள் சொல்லும் பொழுது, கூறும் ஒரே வசனம்.
இந்த முறை திருப்பி அடிக்க வேண்டும், நம்மிடம் வம்பு வளர்த்தால் என்று அவள் ஒரு உறுதியுடன் பள்ளி சென்றாள். மூன்று நாள் முன் தான், அவர்கள் பள்ளியில் ஒரு பெண் அங்கே ஸ்ட்ரெஸ்சில், தூக்கில் தொங்கி உயிர் விட்டாள் என்று லீவ் விட்டு இருந்தார்கள்.
இன்று பள்ளி உள்ளே வரும் பொழுது, வழக்கம் போல் அவர்கள் இவளை நெருங்கி வரும் பொழுது, அவள் கண்ணுக்கு அந்த தூக்கில் தொங்கிய பெண் கண்ணுக்கு தெரிந்தாள்.
“நீங்க இறந்ததா சொன்னாங்க, உங்க போட்டோக்கு மாலை எல்லாம் போட்டாங்க. நீங்க இங்க என்ன பண்ணுறீங்க, கல்கி அக்கா?” என்று அந்த ஆத்மாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.
அவள் பேசியதை கேட்டவர்கள், அவளை என்ன உளறுகிறாய் என்று மிரட்டினார்கள். அவளோ, தான் பார்த்துக் கொண்டு இருப்பதை எடுத்துக் கூறிக் கொண்டு இருந்தாள்.
அன்று மட்டும் அல்லாமல், அவள் கண்ணுக்கு தெரிந்தவற்றை எல்லாம் அவள் கூறும் பொழுது, அவள் கண்ணுக்கு பேய் தெரிகிறது என்று உணர்ந்து, அவளிடம் இருந்து ஒதுங்க தொடங்கினர்.
இது பற்றி அவள் பாட்டியிடம் பேச, அவர் இதைக் கேட்டு மேலும் அதிர்ந்து, தனக்கு தெரிந்த வழிமுறைகளை எல்லாம் சொல்லிக் கொடுத்து, அவளை பயப்படாமல் இருக்க செய்ய, சில தாயத்துக்களை கையிலும், கழுத்திலும் கட்டி விட்டார்.
அவளுக்கு முதலில் இது பயப்படும் விஷயமாக தோன்றவில்லை, ஆகையால் படிப்பில் முழு கவனம் செலுத்தி, அதில் நல்ல மதிப்பெண்களை வாங்க தொடங்கினாள்.
பாட்டிக்கோ, மனது நெருடிக் கொண்டே இருந்தது. இது நல்லதற்கா, அல்லது கெட்டதற்கா என்று. ஆகையால் இவளின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, புகழ் பெற்ற ஜோசியர் ஒருவரிடம் சென்றார்.
அவள் ஜாதகத்தை கணித்த அந்த ஜோசியர், அவளுக்கு ஆன்மாக்கள் கண்ணுக்கு தெரியும் என்பதை கூறினார். மேலும், அவர்களால் அவளுக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறிய பிறகு தான், பாட்டி சற்று ஆசுவாசமானார்.
ஆனாலும், பேத்திக்கு பாதுகாப்பாக எப்பொழுதும் அவர் கூடவே இருந்து வந்தார். பள்ளி முடிந்து கல்லூரிக்கு அடி எடுத்து அவள் வைக்கும் பொழுது தான், அங்கே சஞ்சனாவை அவள் கண்டாள்.
“ஹாய்! ஐ அம் சஞ்சனா, பி.காம்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“ஹாய்! நான் ப்ரீத்தி, பி.ஏ.(pshycology)” என்று இவளும் கை கொடுத்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
இருவரும், வேறு வேறு வகுப்பு என்றாலும் ஆங்கிலம் ஒரே வகுப்பு இருவருக்கும். அங்கு தான் இவர்களின் நட்பு பூத்து குலுங்க தொடங்கியது.
“ஹே ப்ரீத்தி, இந்த தடவை லீவ்க்கு என் கூட எங்க வீட்டுக்கு வரியா” என்று சஞ்சனா அழைத்தாள்.
“இல்லை சஞ்சு, பாட்டி வீட்டுல தனியா இருப்பாங்க, அவங்களை விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். படிக்க நான் இப்படி வெளியே வர மாதிரி, அவங்க அரசு பள்ளியில், சத்துணவு தயாரிக்க போயிடுவாங்க”.
“நானும், அவங்களும் மட்டும் தான் வீட்டுல. சோ நான் எங்கேயும் போக மாட்டேன், நீ வேணும்னா எங்க வீட்டுக்கு வாயேன் இந்த தடவை, எங்க பாட்டிக்கு உன்னை அறிமுகப்படுத்துறேன்” என்று ப்ரீத்தி அழைக்கவும், சஞ்சு அவள் அன்னையிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடைசி பரீட்சை முடிந்தவுடன், ப்ரீத்தியுடன் அவள் வீட்டுக்கு வந்தாள் சஞ்சனா.
சஞ்சனா விடுதியில் தங்கி படிப்பதால், அவள் பெட்டியுடன் அப்படியே இங்கே வந்துவிட்டாள். அந்த பத்து நாட்கள் முழுவதும், அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக பொழுது கழித்து, சந்தோசம் அடைந்தனர்.
அப்பொழுது தான் சஞ்சுவுக்கு, ப்ரீத்திக்கு ஆன்மாக்களை பார்க்கும் திறன் இருப்பதை அறிந்தாள். அதை வைத்து கேலி செய்தவள், தானே ஒரு ஆன்மாவாக இன்று அவள் முன்னே நின்று கொண்டு இருப்போம் என்று அவள் எண்ணி இருப்பாளா?
தொடரும்...