Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
தண்டனை
வீரேந்திரன் அத்தனை கோபத்தோடு வேகமாய் தமிழ் இருந்த அறை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
தமிழோ தேவியும் விக்ரமனும் சொல்லும் எதையும் கேட்கவும் விருப்பப்படவில்லை.
அவள் எதற்காகவும் யாருக்காகவும் துளியளவும் இறங்கி வரவும் தயாராக இல்லை. விக்ரமவர்மனுக்கு அவளை சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையற்று போனது.
அப்போது அந்த அறையின் வாசலில் வந்து நின்ற வீரேந்திரனை மூவருமே கவனிக்க தவறினர்.
விக்ரமன் கடைசி முயற்சியாய் அவளிடம் இறங்கியபடி, "இந்த கல்யாணம் நடக்கலன்னா எல்லார் முன்னாடியும் நான் தலைகுனிஞ்சி நிற்க வேண்டியிருக்கும்... உனக்கு அதை பத்தி எல்லாம் கொஞ்சங் கூட கவலை இல்லையா?!" என்று கேட்கவும் அவள், "உங்களுக்கே என் மேல அக்கறையில்லன்னும் போது எனக்கும் மட்டும் என்ன... ?! எனக்கும் எதைபத்தியும் கவலை இல்லை" என்று அவர் முகத்தை கூட ஏறிட்டு பார்க்காமல் அலட்சியமாய் பதிலளித்தாள்.
தேவி தன் அக்காவின் அருகில் வந்து "கொஞ்சம் யோசிச்சி பாருக்கா... இவ்வளவு தூரம் வந்துட்ட பிறகு" என்று தயக்கத்தோடு கேட்க
"என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதே தேவி... நான் இங்கே வந்ததே இந்த கல்யாணத்தை நிறுத்திறதுக்குதான்" என்று தமிழ் அழுத்தமாய் சொல்லிவிட்டு திரும்பும் போது வீரேந்திரனை பார்த்துவிட, அவளின் விழிகள் அவனின் முகத்தில் வெளிப்பட்ட கோபத்தையும் சேர்த்தே உள்வாங்கி கொண்டது.
அப்படி அவள் யாரை பார்த்து அதிர்ச்சியுறுகிறாள் என்பதை அறிந்து கொள்ள விக்ரமவர்மனும் தேவியும் தங்கள் பார்வையை திருப்ப, அங்கே கம்பீரத்தோடு நின்றிருந்த வீரேந்திரனை பார்த்து இருவருமே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.
தமிழின் பிடிவாதமும் கோபமும் அவனை பார்த்த நொடி அதிகரித்தாலும், அதனை அவனிடம் வெளிப்படுத்த லேசான அச்சமும் ஏற்பட்டது.
வீரேந்திரன் விக்ரமவர்மனை நோக்கி, "நான் தமிழ்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் அங்கிள்" என்றான். தமிழ் இடைமறித்து "எதுக்கு பேசனும் ?... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்" என்றாள்.
வீரேந்திரனின் விழிகள் கோபமாய் அவளை பார்க்க, தேவியும் விக்ரமனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி கொண்டனர்.
அப்போது விக்ரமவர்மன் தயக்கத்தோடு வீரேந்திரனை நோக்கி, "இல்ல மாப்பிள்ளை... அவ" என்று ஏதோ சொல்ல யத்தனிக்க அவன் தெளிவான பார்வையோடு, "கோபமா இருக்கா... அதானே அங்கிள்... நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்னதும் தமிழ் எரிச்சலோடு, "என்ன நீங்க பார்த்துக்க போறீங்க ?!" என்று கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் விக்ரமனை பார்க்க, அவர் தேவியை பார்த்து கண்ணசைக்க இருவரும் வெளியேறினர்.
அவர்கள் வெளியேறுவதையே பார்த்ததும் எரிச்சலோடு அவள் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு என்ன பேசப் போகிறானோ என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அப்போது அந்த அறையில் ஒருவித அமைதி ஆட்கொண்டது.
அவள் யோசனைகுறியோடு ஏன் அவன் எதுவும் பேசவில்லை என்று திரும்பியவள் அதிர்ச்சியடைந்தாள். அவன் கதவை அடைத்துவிட்டு வர அவள் மனதில் துளிர்விட்ட அச்சத்தை மறைத்தபடி "இப்ப எதுக்கு டோரை க்ளோஸ் பண்ணீங்க..." என்று அறை கதவை திறக்க முன்னேறியவளை வழிமறித்து நின்றவன், "நீ பேசிறது ஊருக்கெல்லாம் கேட்கனுமா... அதான் கதவை மூடினேன்" என்றான்.
அவள் அவனை முறைத்தபடி "கேட்கட்டும் ஏசிபி சார்... எல்லாருக்கும் கேட்கட்டும்... எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பமில்லைன்னு எல்லாரும் தெரிஞ்சிக்கட்டுமே ?!" என்றாள்.
அவனின் கோபம் அதிகரிக்க, "உன் மனசில என்ன நினைச்சிட்டிருக்க... ஏற்கனவே என்னை பத்தி தப்புதப்பா எழுதி அவமானப்படுத்தின... இப்ப ஊரையே கூட்டி வைச்சி இந்த கல்யாணம் வேணான்னு சொல்லி என்னை மறுபடியும் அவமானப்படுத்தலாம்னா பார்க்கிறியா...?!" என்று கேட்க
"உங்களை அவமானப்படுத்தனுங்கிறது என் மோட்டிவ் இல்ல... எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பமில்ல... அவ்வளவுதான்"
"என்ன விளையாடிறியா?... இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த கல்யாணத்தில விருப்பமில்லைன்னா சொன்ன... யார் என்ன பண்ண முடியும் ?"
"என்னவாச்சும் பண்ணுங்க... ஐ டோன்ட் கேர்... ஆனா எனக்கு இந்த கல்யாணம் நடக்க கூடாது... அவ்வளவுதான்"
அவனின் கோபம் அவளின் அலட்சியமான வார்த்தைகளால் எல்லையை மீறி கொண்டு போக குரலை உயர்த்தி "நீ நினைச்ச மாறியெல்லாம் செய்ய முடியாது... உனக்கு விருப்பமில்லைன்னா என்கிட்ட சென்னையிலேயே சொல்லிருக்கனும்... அதை விட்டுவிட்டு இங்க வந்து நின்னுகிட்டு வேண்டாங்கிற" என்று சீறினான்.
அவள் இறங்கியபடி "முதல்ல ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க... எனக்கு இன்னைக்கு காலையிலதான் கல்யாணம்ங்கிற விஷயமே தெரியும்... அதுவும் நீயூஸ் பேப்பர்ல பார்த்துதான் நானே தெரிஞ்சிக்கிட்டேன்" என்று அவள் சொன்னதும் அவர்களுக்கிடையில் நிகழ்ந்த அனல் தெறிக்கும் விவாதம் சற்று தணிய, யோசனையோடு நின்றவன் மீண்டும் அவளை நோக்கி "நீ சொல்றது கொஞ்சம் கூட நம்பிற மாதிரி இல்லையே... வீட்டில கல்யாண ஏற்பாடு பண்றது கூடவா உனக்கு தெரியாதா ?!" என்று சந்தேகமான பார்வையோடு கேட்டான்.
"எனக்கு உண்மையிலேயே தெரியாது... நான் இரண்டு நாளா ஊர்ல இல்ல... என்கிட்டயும் யாரும் இதை பத்தி சொல்லல" என்றாள்.
"ஊர்ல இல்லாம மேடம் எங்க போனீங்க ?" என்று புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, போலீஸ் புத்தி அவனை அவ்விதம் கேட்க வைக்க அவளுக்கு ஆர்க்கியாலஜிஸ்ட் வீட்டிற்கு சென்றதெல்லாம் அந்த ஒரு நொடி கண்முன்னே தோன்றி திகிலூட்டியது.
அவன் தான் செய்ததை கண்டுபிடித்துவிடுவானோ என்ற அச்சம் தொற்றி கொள்ள அத்தனை நேரம் அவன் முகத்தை பார்த்து பேசி கொண்டிருந்தவள் லேசான தடுமாற்றத்தோடு நின்றாள்.
வீரேந்திரனின் பார்வை அவளை ஊடுருவியபடி "பொய் சொல்றியா ?" என்று கேட்டான்.
இவனிடம் தானே சிக்கி கொள்ள போகிறோமோ என சுதாரித்து கொண்டவள் "நான் பொய்யெல்லாம் சொல்லல" என்றாள்.
"அப்ப எங்க போயிருந்த ?!"
தன்னை கேள்வி கேட்க 'அவன் யார் ?' என்ற எண்ணம் எழ "நான் எங்கயோ போனேன்... அதெல்லாம் உங்ககிட்ட நான் எதுக்கு சொல்லனும்... நீங்க என்கிட்ட கேட்கிறதுக்கு உங்களுக்கு உரிமையையும் இல்ல... எனக்கு உங்ககிட்ட சொல்றதுக்கு விருப்பமும் இல்ல" என்று அவள் உரைக்க எதையோ மறைக்கிறாள் என்பதை அவன் போலீஸ் மூளை குறித்து கொண்டது. இன்னொரு புறம் அவள் சொன்னதை எண்ணியவன் மனதிற்குள் 'உரிமை இல்லையாமே... இருக்கட்டும்... கூடிய சீக்கிரம் அந்த உரிமை வரும்... அப்போ உன்னை பார்த்துக்கிறேன்' என்று எண்ணிக் கொண்டான்.
இவன் தன்னை பற்றிதான் ஏதோ ஏடாகூடாமாய் சிந்திக்கிறான் என்பதை யூகித்தவள் வாழ்க்கை முழுவதும் இவனிடம் மட்டும் போய் சிக்கி கொள்ளவே கூடாது என்று தீர்க்கமாய் எண்ணி கொண்டாள்.
வீரேந்திரன் அவள் முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என யோசித்தவன் அவளிடம் பொறுமையாக "இவ்வளவு ஏற்பாடுகள் பண்ண பிறகு இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது தமிழ்... ஸோ இதை நீ அக்செப்ட் பண்ணிக்கதான் வேணும்" என்று முடிவாய் சொல்லிவிட்டு வெளியேற போக., அவள் தன்னிலையில் இருந்து இறங்கிவராமல் "முடியவே முடியாது... நான் இந்த கல்யாணத்தை நிறுத்ததான் போறேன்... என்னை யாராலும் தடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டு நின்று கொண்டாள்.
அவள் சொன்னதை கேட்டு போகாமல் நின்றவனுக்கு கோபமும் எரிச்சலும் அளவு கடந்து போக வேகமாய் அவளை நோக்கி "என்னடி ஓவரா பண்ணிட்டிருக்க... இந்த கல்யாணம் நின்னா எவ்வளவு பெரிய லாஸ் தெரியுமா? " என்றான்.
அவன் அப்படி பேசியதும் மிரட்சியோடு நின்றவள் ஒருவாறு சுதாரித்துவிட்டு அவனை நேர்கொண்டு பார்த்தபடி "எனக்கு எதை பத்தியும் கவலை இல்லை... இந்த கல்யாணம் மட்டும் நடந்தா என் வாழ்க்கையே லாஸாயிடுமே... அதை யார் திருப்பி தருவா?" என்றாள்.
அந்த வார்த்தை வீரேந்திரனின் மனதை அழுத்தமாய் காயப்படுத்தவும் அவமானப்படுத்தவும் செய்தது. அவளின் பிடிவாதம் அவனின் திடமான மனதையும் அசைத்து பார்த்திட மூச்சை இழுத்துவிட்டபிடி "இப்ப என்ன... உனக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தனும்... போ... போய் நிறுத்திக்கோ... எல்லாரையும் கூப்பிட்டு நிக்க வைச்சி நீயே மைக் போட்டு சொல்லிடு... எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பமில்லைன்னு... போ" என்று மிரட்டலாய் அந்த இடம் அதிர கத்தினான்.
அவள் என்ன செய்வது என்று புரியாமல் நிற்க மீண்டும் அவன் குரலை உயர்த்தி "இன்னும் ஏன் நிற்கிற... போய் சொல்லு" என்றான்.
அவளும் தீர்க்கமாக "கண்டிப்பா நான் சொல்லத்தான் போறேன்... நீங்க இப்படியெல்லாம் கத்திறதினால நான் பயந்திருவன்னு மட்டும் நினைக்காதீங்க... இப்பவே போய் எல்லார்கிட்டயும் சொல்றேன் " என்று சொல்லிவிட்டு முன்னேறி செல்லப் போனவளிடம் "இந்த ஊருக்குள்ள நான் வந்ததில் இருந்து ஒரு பேர்தான் திரும்ப திரும்ப என் காதில கேட்டுகிட்டே இருந்தது... " என்று சொல்ல அவன் இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் உளறுகிறான் என்று யோசனையோடு நின்றாள்.
அவன் மேலும் "யாரோ உங்க தாத்தாவாமே... அவரை பத்திதான் பெருமையா பேசிட்டிருந்தாங்க" என்று அவன் சொல்ல அவள் அவன் புறம் திரும்பி "எங்க தாத்தா யாரோ இல்ல... சிம்மவர்மன்... கேள்விப்பட்டதில்லையா நீங்க... இந்த சிம்மவாசலை உருவாக்கின ராஜசிம்மன்ங்கிற மன்னர் குலம் வழிவந்த குடும்பம்... எங்க தாத்தா எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார் தெரியுமா உங்களுக்கு... ஓலை சுவடிகளா இருந்த தமிழ் இலக்கியங்கள் அழிஞ்சி போயிடாமா இருக்க அதை எல்லாம் புத்தகங்களா மாற்றியிருக்காரு... இந்த ஊருக்கே தன்னோட பல சொத்துக்களை தானமா கொடுத்திருக்கிறார்... அவரை பத்தி கேள்விபடாதவங்க யாருமே இந்த ஊர்ல இருக்க முடியாது... ஏன் தமிழ் நாட்டிலயே" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் மின்னிக் கொண்டிருந்த கர்வத்தையும் திமிரையும் உற்று கவனித்தவன் அவளை நோக்கி "அப்போ உங்க தாத்தா ரொம்ப பிரபலமானவர்தான் போல... பட் எனக்குதான் சரியா தெரியல" என்றான்.
தமிழ் இறுக்கமான பார்வையோடு "அவரை பத்தி தெரிஞ்சிக்காதது உங்களோட தப்பு" என்றாள்.
"ஆனா உனக்கு தெரியும் இல்ல, இந்த ஊர்ல... ஏன் தமிழ் நாட்டிலயே உங்க தாத்தாவோட பெருமை புகழ் எல்லாத்தையும் பத்தி?" என்று கேட்க அவளோ குழப்பமானாள்.
இவன் சுற்றி வளைத்து தன்னை மாட்டிவிட யத்தனிக்கிறானோ என்று எண்ணும் போதே "உங்க தாத்தாவோட பேரும் புகழும் இந்த ஊர் முழுக்க கொடி கட்டி பறக்குது... நீ இப்ப என்ன பன்ன போற தெரியுமா... அவரோட பேரு உங்க குடும்பத்தோட வரலாறு பெருமை கௌரவம் எல்லாத்தையும் ஒண்ணுமே இல்லாம தவிடு பொடியாக்க போற..." என்றான்.
அவன் எங்கே சுற்றி எங்கே வருகிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் அவனை கோபமாய் முறைத்தபடி "நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா... எங்க தாத்தாவோட பேரையும் எங்க குடும்பத்தோட கௌரவத்தையும் கெடுத்ததாகிடுமா... புல் ஷிட்... பைத்தியகாரத்ததனமா பேசாதீங்க" என்றாள்.