Nirmala vandhachuஇன்பம்-6
அவள் முழித்துக் கொண்டே ஓர விழிப் பார்வையால் அவனை காண, "உனக்கு அத பத்தி சுத்தமா தெரியாதா?" என்று கேட்டான் ஈசன்.
"தெ.. தெரியாதுங்க" என்று விக்கினாள்.
அவளின் பதிலில் பின்னந் தலையை அவன் அழுத்தமாய் வருட, "ஆனா அண்ணி சொன்ன அப்புறம் தெரிஞ்சுது?" என்றவளை சட்டென அவன் விழிகளை மட்டும் உயர்த்தி பார்க்க, பட்டென தலையை குனிந்து கொண்டாள்.
வலக்கையால் அவளின் இடையின் பின்னே கை கொண்டு சுற்றிப் பிடித்தவன், "தெரிஞ்சுது சரி.. புரிஞ்சுதா?" என்று வினவ அவளோ நெளித்தாள்.
"உனக்கு என்னை பிடிக்கல தானே?" அவன் நேரிடையாகவே கேட்க, அவளோ விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க, "நீ பேசுனது கேட்டுச்சு" என்றான்.
"இல்லைங்க.. அது வந்து.." அவள் துவங்க, கை உயர்த்தி தடுத்தவன், "இப்பவும் அப்படி இருக்கா? எதுவா இருந்தாலும் சொல்லு" என்று கேட்டான்.
"அப்படி இல்லைங்க.. ஆனா எனக்கு சொல்லத் தெரியல.." என்றாள் சற்று தைரியமாக. அவளிடம் இருந்த நெளிவு இப்போது காணாது போயிருந்தது.
"நான் ஒரே விஷயம் வெளிப்படையா சொல்லிடறேன்.. நீயும் நானும்னு ஆகிட்டோம்.. இருபது வயது ஆகிடுச்சுல உனக்கு.." என்றிட ஆமென்று தலையாட்டியவளுக்கு இப்போது அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கூட முழுதாக புரியவில்லை.
ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தவன், "தூங்கு" என்று பேச்சை முடித்தான்.
அன்றிலிருந்து ஒரு வாரம் கழிய, அன்று வந்த ஞாயிற்றுக்கிழமை கறி விருந்து இருந்தது. இளமதியும் அன்று மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட, உடல் இளைத்து வந்தவளை அனைவரும் சென்று பார்த்து வந்தனர்.
தன்னை பார்க்க வந்த குறிஞ்சியையும் அவளின் கழுத்தில் இருந்த தாலியையும் பார்த்து புன்னகைத்தவள், "என்னடி எப்படி இருக்க?" என்றாள்.
அதில் புன்னகைத்தபடி சகோதரியின் அருகே அமர்ந்தவள், "நீ எப்படி இருக்க?" என்றாள்.
"நல்லா தான் இருக்கேன்" என்றவள், "அப்புறம்?" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவ, சகோதரியின் கேள்வி புரிந்தவள்,
"அதெல்லாம் இல்லக்கா" என்றாள்.
சொந்த பந்தத்தில் உள்ள பெண்கள் எல்லாம் கேட்டு கேட்டு அவளுக்கு இப்போது ஓரளவு புரிந்தது.
அதே சமயம் இளவேந்தன் வர, தங்கையிடம், "வெளிய யாராவது இருக்காங்களாடி" என்று வினவியவள், யாருமில்லை என்று உறுதி செய்த பின்பு, தங்கையை பார்க்க, அவளுக்கோ புரிந்தது.
இருவரும் மனம் விட்டு பேச நினைப்பதை உணர்ந்தவள் எழுந்து கொண்டாள்.
வெளியே வந்தவள் எதிரே வந்த அன்னையிடம், "அக்கா தூங்கறா.. யாரும் தொந்திரவு செய்யாதீங்க" என்றிட, மகளை தனியே அழைத்துச் சென்றார் வள்ளி.
அதாவது அவளின் அறைக்கு.
"எப்படி குறிஞ்சி இருக்க?" வள்ளி கேட்க, "நல்லா இருக்கேன் ம்மா" என்று புன்னகையுடன் சொல்ல, வள்ளி எதையோ சொல்ல வரத் தயங்குவது குறஞ்சிக்கு தெரிந்தது.
"உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் குறிஞ்சி" என்றவரை குறிஞ்சி பார்த்துக் கொண்டே நிற்க, அவரே ஆரம்பித்தார்.
"குறிஞ்சி! இங்க பாரு கல்யாணம் இளமதி ஏற்பாடு பண்ணோம்.. ஆனா நடக்கல.. அவளுக்கு தான் நாங்க நகை சேத்தி வச்சிருந்தோம்டி.. அதை உன்கிட்ட நாங்க தர்ற முடியாது.. அவளுக்காகனு வாங்குனது எல்லாம்.. இன்னும் ஒரு மாசத்துக்கு உள்ளேயே அவங்க கல்யாணத்தை முடிச்சிடலாம்னு உங்க அப்பா யோசனை பண்றாரு..
உனக்கு நகைங்கிறது நாங்க சேத்தவும் இல்ல.. அவளுக்கு தான் மொதல்ல சேத்துனோம்.. அதனால இப்போதைக்கு உனக்கு சீர் எதுவும் நாங்க தர்ற முடியாது.. அக்காவுக்கு முடிச்சிட்டு ஒரு வருஷத்துக்குள்ள செய்யறோம்" என்ற அன்னையை இமைக்காது பார்த்தாள் குறிஞ்சி.
"என்னடி பேசாம நிக்கற?" அன்னை கேட்கும் பொழுதே, "சரி ம்மா" என்று தலையை ஆட்டி புன்னகையை சிந்தினாள் அவள்.
வள்ளி வெளியே வந்தவர்களை கவனிக்க சென்றுவிட, அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு, என்னவோ போல இருந்தது.
ஏன் தன்னுடைய அறையே அவளுக்கு வேறு யாருடையது போல இருந்தது.
நகை மேல் ஆசை கொண்டவள் இல்லை. ஆனால் வள்ளி பேசியது அவளின் உள்ளத்தை வேதனை கொள்ளச் செய்தது.
சிறிய வயதில் இருந்தே இளமதிக்கு செய்த அளவுக்கு குறிஞ்சிக்கு அவர்கள் செய்தது இல்லை என்பது தான் உண்மை. அவளுக்கு படிப்பு ஏறவில்லை தான்.
அதற்காக?
சிறிய வயதில் இருந்து வீட்டில் அனைத்து வேலைகளையும் அன்னையுடன் அவள் பார்த்தால், இளமதி காலை எட்டுமணி வரை தூங்குவாள்.
இவர்கள் தான் இப்படி என்றால், இரு வீட்டுப் பக்கம் பெரியோர்கள் கூட இளமதியை தான் தாங்கி இருக்கிறார்கள்.
மூத்த வாரிசு என்ற செல்லம் இளமதிக்கு எப்போதுமே அதிகம்.
சின்ன சின்ன விஷயங்கள் இன்னும் குறிஞ்சிக்கு மனதில் பதிந்து இருந்தது.
துணிக்கடைக்கு சென்றால் கூட இளமதி விலை அதிகமாக உடை எடுத்துவிட்டால், வள்ளி, "அக்காவோட துணியே விலை அதிகம் குறிஞ்சி.. நீ குறைச்சு எடுத்துக்கோ" என்பார்.
சொல்லப் போனால் வீட்டு வேலைகளை செய்து செய்து பழகி, அதில் மற்றவர்கள் பாராட்டுவதை கேட்டுக் கேட்டுத்தான், குறிஞ்சிக்கு அதில் ஆர்வம் சென்று படிப்பில் பிடிப்பு குறைந்தது.
நன்றாக படிக்கும் பெண் இல்லை என்றாலும், அறுபது சதவீதம் எடுப்பவள் தான்.
வேலை சொன்னால் படிப்பு என்றே தப்பிக்க தெரிந்த இளமதி அளவுக்கு குறிஞ்சிக்கு விவரம் பத்தாது. வள்ளியும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாது சின்ன மகளையே வேலை வாங்கிப் பழகிக் கொண்டார்.
அப்போது எல்லாம் ஏதாவது தோன்றினால் கூட தூர எறிபவளுக்கு இன்று அப்படித் தோன்றவில்லை.
'உனக்கு நாங்கள் எதுவும் சேர்த்தவில்லை' என்று கூறியது அவளுக்கு வலித்தது.
ஏன் நானும் அவர்களின் மகள் தானே!
எனக்கு ஏன் இரண்டாம்பட்சம்!
அவளுக்கு நகை, சீர்வரிசையின் மேல் எல்லாம் ஒன்றும் ஆசை இல்லை. ஆனால், அவளுக்கு அன்னை சேமிக்கவில்லை என்று சொன்னது நிரம்ப வேதனையாகிப் போனது.
'படிப்பு வராதவள்' என்ற நினைப்பா?
அனைத்து கேள்விகளும் அவளின் மூளையில் முட்டி மோத, அடுத்த நொடி அங்கிருந்து எழுந்த குறிஞ்சி, வெளியே வந்துவிட்டாள்.
அன்றைய நாள் என்ன என்பதை கூட அனைவரும் மறந்து போனார்களே என்ற ஆற்றாமை வேறு அவளுக்கு சேர்ந்து கொண்டது.
அவளால் சாதாரணமாக அன்று இருக்க முடியவில்லை.
ஒருவழியாய் விருந்து முடிந்து அறைக்கு வந்தவளை துணிகளை அடுக்கியபடியே அவளை முறைத்த ஈசன், "ஏன்டி எடுத்து வைக்கணுமானு கூட கேக்க வேணாம்.. ஏதாவது வேணுமானு கேக்க மாட்டியா?" என்று திட்டிவிட, அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
அவளின் முகம் கலங்கி இருப்பதை கண்டு நிமிர்ந்தவன், "உனக்கு தேவையானதை நீ தான் கேக்கணும்.. இங்கு வந்து என்கிட்ட அழறதுல பிரையோஜனம் இல்ல" இடையின் இரு பக்கமும் கை கொடுத்து சொல்ல, சரியென்று மட்டும் தலையாட்டியவள், அவனுக்கு எடுத்து வைக்க உதவி செய்தாள்.
அவனோ அவ்வப்போது தன் ஆள்காட்டி விரலாலும், பெரு விரலாலும் மீசையை வருடியபடியே அவளை பார்க்க, அவளோ அவ்வப்போது கலங்கிய கண்களை உள்ளிழுத்துக் கொண்டிருந்தாள்.
முழுதாக அனைத்தையும் அவன் பேக் செய்ய, இரவு தான் அவனுக்கு பஸ் இருந்தது.
மாலை எங்கோ வெளியே சென்றவன், இரவு வீட்டிற்கு வர, கணவனுக்கு சாப்பாட்டை பரிமாறியவளின் முகம் உம்மென்றே இருந்தது.
சாப்பிட்டபடியே தன்னவளை ஏறிட்டுப் பார்த்தவன் எதுவும் பேசவில்லை.
கொஞ்சம் சாதத்தை போட்டுக் கொண்டவன், குறிஞ்சியை பார்த்து, "ஒரு தோசை" என்றிட, அதையும் சுட்டு எடுத்து வந்தாள்.
அவன் சாப்பிட்டு விட்டு எழ, அவனின் பின்னேயே சென்றாள் குறிஞ்சி.
இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அமுதா. விருந்திற்கு வந்த உறவினர் அனைவரும் கூட கிளம்பியிருந்தனர்.
வேலைகளை எல்லாம் விரைவாக முடித்தவள், அறைக்கு வர, ஈசன் தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டிருந்தான்.
சிவப்பும் கருப்பும் நீலமும் கலந்த கட்டம் போட்ட சட்டையும், நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்தவன், பெல்ட்டை அணிந்தபடியே தன்னிடம் ஏதோ கேட்க தவிப்புடன் நிற்பவளை பார்த்தான்.
"என்ன?" ஈசன் கேட்கும் போதே அவளின் விழிகள் கலங்கிவிட, "எவ்வளவு நாள் ஆகும்?" என்றாள்.
கன்னங்களில் இரு துளி நீர் வழிந்தது.
ஒரு மாதம் என்று அவன் சொன்னது நினைவில் இருந்தாலும், கேட்டால் விரைவிலேயே வந்துவிட மாட்டானா என்ற நப்பாசை.
ஏனோ அவளுக்கு அவனின் பிரிவு வருத்துவதை போது இருந்தது.
அவளின் அருகே வந்தவன், அவளின் கை விரல்களை பிடிக்க, "நான் போறது கஷ்டமா இருக்கா?" என்று வினவ, "தெரியல" என்றவள் வேறொங்கோ பார்த்தாள்.
"அதுதான் உன் பிரண்டு இருக்கா இல்ல?" என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை.
மேலும் விழி நீர் பொங்க, அவளை அருகே இழுத்தவன், "என்னடி?" என்று வினவ, "ஒரு மாதிரி இருக்குங்க" என்றாள்.
இருவருக்குமே இது என்ன விதமான உண்ரவு என்று தெரியவில்லை.
திடீரென ஞாபகம் வந்தவனாக தன்னுடைய பர்சில் இருந்த பணத்தை எடுத்து அவளிடம் நீட்டியவன், "செலவுக்கு வச்சுக்கோ.. கம்மியா தான் இருக்கு.. மறுபடியும் வேணும்னா கேளு.." என்று கேட்க மறுப்பாக தலையசைத்து அவனிடம் பணத்தை ஒப்படைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் விழிகள் அவனிடம் எதையோ சொன்னது.
அவளின் தோள்கள் இரண்டையும் பிடித்தவன், "இங்க பாரு நீ ஏதாவது சொன்னாதான்டி எனக்கு புரியும்.. கண்ணால சொன்னா புரியாது" என்றான்.
அதில் நிமிர்ந்திருந்த தலையை இறக்கி அவனின் சட்டை பொத்தானைப் பார்த்தவள், "இன்னைக்கு என்னோட பிறந்தநாள்" என்றாள்.
சொல்லும் போது குரல் கூட உடைந்துவிட்டது.
"யாருக்குமே நான் முக்கியம் இல்ல.." என்றவளுக்கு தன் பிறந்தநாள் தன் வீட்டில் கூட யாருக்கும் நினைவில் இல்லை என்ற வலி.
சட்டென அவளின் நாடியை பற்றி நிமிர்த்தியவன், அவளின் விழிகளுக்குள் விழுந்தவனாக, "சத்தியமா தெரியாதுடி.. சொல்லி இருக்கலாம்ல" என்றான்.
அவளுக்கோ அவன் பேசுவது காதில் விழவில்லை.
"எங்க வீட்டுல கூட நியாபகம் இல்லைங்க.. அம்மா கூட.." என்றவளின் வாயை பொத்தியவன், "நான் கேட்டேன் எல்லாத்தையும்" என்றான்.
அவள் பொட்டு பொட்டு என்று கண்ணீர் விடுவதை கண்டவனுக்கு ஏனோ சின்னக் குழந்தையை திருமணம் செய்தது போன்று இருந்தது.
அவன் வாயை பொத்தியதை கூட பொருட்படுத்தாதவள், "ஒரு வாழ்த்தாவது சொல்லி இருக்கலாம்" என்றிட, அவளின் தலையை பிடித்து அருகே இழுத்தவன்,
"நான்தான் பர்ஸ்ட் வாழ்த்து சொல்லணும்னு இருக்கு போல இந்த வருஷம்" என்றவன் அவளின் இதழை தன் இதழால் அழுத்தமாய் பிடித்து இழுத்து, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் குறிஞ்சி" என்று முதல் முதலாக அவளின் பெயரை அவளிடம் உச்சரித்தான்.
அவளும் அவனின் விழிகளை பார்த்தபடியே, "ம்ம் தேங்க்ஸ்" என்றாள்.
பின் அவளின் இரு கன்னங்களையும் தாங்கியவன், "எனக்கு வேலை இல்ல தெரியுமா?" என்று அவன் கேட்க, "ம்ம்.." என்றாள்.
"சீக்கிரம் கிடைச்சிடும்.. இங்க நிலம் எல்லாம் இருக்கு.. ஆனா கவர்ன்மென்ட் எக்ஸாம் எழுதியிருக்கேன்.. ரிசல்ட் வந்திடும்டி.. நானும் பாஸ் பண்ணிடுவேன்னு தான் நினைக்கறேன்" என்றவன், "அதுதான் பணத்தை தந்தேன்.. செலவு இருக்காது தான்.. ஆனா ஏதாவது வேணும்னா யார்கிட்டையும் வாங்காத.. இது நான் பார்ட் டைம் ஜாப்ல இருந்தப்ப சம்பாதிச்சு சேத்துனது" என்றான்.
அவனை விழி விரிய பார்த்தவள், "வேலைக்கு போனீங்களா?" என்றாள்.
"ம்ம் ஆமா.. எம்எஸ்சி சேந்த அப்புறம் ஒரு பெரிய தியேட்டர்ல வொர்க் போனேன்" என்றான்.
சட்டென மின்சாரம் தடைபட, இருவருமே மேலே பார்த்தனர்.
"கரென்ட் போயிடுச்சு போல" குறிஞ்சி முணுமுணுக்க, அவளின் சந்திர வதனத்தை பார்த்தவனின் விழிகள் பெண்ணவளின் மூக்குத்தியில் பதிந்தது.
வெண் கல் பதித்த மூக்குத்தி ஜன்னலின் ஊடே வந்த நிலவின் ஒளியால் மின்ன, காளையவனின் சித்தம் சற்று கலங்கியது.
அவளுக்கோ அவனின் வதனம் தெரியவில்லை என்றாலும், அவளின் கன்னங்களை பிடித்திருந்த விதம் மாற, அவளுக்கு புரிந்து போனது அடுத்து அவன் முத்தமிடப் போகிறான் என்று.
ஆனால் அவள் நினைத்ததை எல்லாம் அவன் செய்வானா என்ன?
அது மட்டுமின்றி எத்தனை நாட்கள் அவனும் முத்தத்துடன் நிறுத்துவான்?
சட்டென அவளின் கழுத்தில் அவன் முகம் புதைக்க, பெண்ணவளின் தொண்டைக் குழியோ நடுங்கியது.
"ஏங்க.." அவள் ஏதோ சொல்ல வந்தது அறையின் சுவற்றில் கரைய, அவன் அவளின் கழுத்தில் கொடுத்துக் கொண்டிருந்த முத்தம் அவளை இந்த உலகத்தை மறக்கச் செய்து கொண்டிருந்தது.
பெண்ணவளின் விழிகள் தாமாய் கிறங்கி மூட, அவளின் விரல்களோ அவனின் சட்டையை இறுக்கி பிடித்துக் கொண்டது.
அவளவனின் கரங்களோ அவளின் இடையில் ஊர்ந்து அப்படியே மேலே ஏற, அவளின் மின்னல் வேகத்திற்கு இணையான இதயத்துடிப்பை அவனால் உணர முடிந்தது.
அவள் வதனம் மொத்தமும் முத்தமிட்டான்!
இதழில் சரணடைந்தான்!
மீண்டும் கழுத்தில் தஞ்சமடைந்தவன் அவளின் புடவை கொசுவத்தில் கை வைக்க, அவளின் கரமோ அவனை தடுத்தது.
அவனும் விடவில்லை அவளும் விடவில்லை.
இருவரின் பிடிவாதத்தில் இறுதியில் அவனே வென்றிருக்க, அவளின் புடவை முந்தானை நிலத்தை அணைத்திருக்க, அவளின் வெட்கம் கூரையை பிய்க்க அவணை அணைத்திருந்தாள்.
அவனின் இதழ்களோ அவளின் தோள்களில் சின்னதாய் சின்னதாய் தொட்டு மீள, தன்னவளின் மேனி மொத்தமும் நடுங்கியதை அவன் உணர்ந்தான்.
அவளின் செவியருகே தன் இதழை கொண்டு சென்றவன், "பயமா இருக்கா?" என்று வினவ, "ம்ம்" என்றவளின் மனம் அவன் தூண்டி விட்ட உணர்வுகளுக்கும், தான் செவி வழியாய் கேட்டறிந்த கலவியை பற்றிய பாடத்துக்கும் இடையே ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.
சட்டென அவளிடம் இருந்து அவன் விலக, தடைபட்ட மின்சாரமும் வர, "ஐயோ" என்ற சிறிய அலறுடன் தன்னை கைகளால் மறைத்துக் கொண்டு மடங்கி அமர்ந்தவள் கீழே இருந்த முந்தானையை எடுத்து தன்னை மூட, ஒரே நிமிடம், அந்த ஒரே நிமிடம் தன்னவளை அந்தக் காட்சியில் கண்டவனது ஆண்மை சூடேறியது.
அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க நாணப்பட்டுக் கொண்டு முகத்தை மூடியே அமர்ந்திருக்க, அவனோ சிரிப்பும் கேலியுமாக, "பாத்தாச்சுடி.. அப்புறம் ஏன் மறைச்சுட்டு இருக்க?" என்றிட காதுகளையும் பொத்திக் கொண்டாள்.
"ஈசா.. நேரம் ஆச்சு" வெளியே இருந்து இளவேந்தனின் குரல் கேட்க, கீழே இருந்தவளை பார்த்தபடியே, "வந்துட்டேன்" என்றவன் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு வெளியேற, அவன் சென்ற பிறகு அவசர அவசரமாக புடவையை சுற்றிக் கொண்டு வெளியே ஓடி வந்தாள்.
தனியார் பேருந்து என்பதால் அவர்களின் ஊரைத் தாண்டி பத்து கி.மீ மேல் சென்றுதான் ஈசன் ஏற வேண்டும். அதனால் இப்போதே கிளம்பிவிட்டான்.
ஈசன் கிளம்ப, அனைவரும் வந்து வழியனுப்ப, குறிஞ்சியோ அவனை பார்க்கவும் முடியாது, பார்க்காமல் இருக்கவும் முடியாது தவிப்புடன் நின்றிருந்தாள்.
அவனோ அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அவளை அவ்வப்போது தன் கடைக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான்.
இளவேந்தன் இரு சக்கர வாகனத்துடன் தயாராக இருக்க, தன் அன்னையிடம் எதையோ சொன்ன ஈசன், குறிஞ்சியிடம், "போயிட்டு வர்றேன்" என்றிட, கன்னங்கள் சிவந்திருந்தவளோ தலையை மட்டும் ஆட்டினாள்.
அவன் செல்லும் திசையையே பார்த்திருந்தவளின் இதயத்தில் அவள் அறியாது அவன் நுழைந்நிருந்தான்.
அவள் சற்று நேரத்திற்கு முன் அழுததிற்கு அவன் யாரையும் குறை கூறவில்லை.
அவளையும் திட்டவில்லை.
ஆனால், அவளிடம் பேசியே அவளின் கண்ணீரை துடைத்திருந்தான்.
ஈசனை நினைத்தபடியே உள்ளே வந்தவள் அறையில் நுழைந்து கொள்ள, சிறிது நேரத்தில் அறைக்கதவு தட்டப்பட்டது.
குறிஞ்சி வந்து கதவைத் திறக்க செல்வி நின்றிருந்தாள்.
"என்னக்கா?" குறிஞ்சி கேட்க,
"வெளிய வா" என்றாள் செல்வி.
குறிஞ்சியை அவர்கள் வெளியே அழைத்து வர, மருமகளின் வாயில் வந்து இனிப்பை ஊட்டிய மல்லிகா, "நாங்க மறந்துட்டாலும் சொல்லி இருக்கலாம்ல குறிஞ்சி.. வெளி ஆளா நாங்க" என்றார்.
சுடச்சுட கேசரியை செய்திருந்தார் அவர்.
முகத்தைச் சுளித்து கொண்டு இருந்த அமுதாவோ, "ரொம்ப தான் போறாங்க" என்று முணுமுணுக்க, அது செல்வியின் செவியில் தவறாது விழுந்தது.
அமுதாவை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.
கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை எதுவும் சொல்லக் கூடாது என்று அமைதியாக இருந்தாள் செல்வி.
அன்று இரவு அனைவரும் உறங்கிவிட, பெண்ணவளுக்கோ ஈசனின் ஞாபகமாகவே இருந்தது.
அதே சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்த ஈசனின் மனம் மொத்தமும் குறிஞ்சியும் அவர்களின் எதிர்காலமுமே இருக்க, அவனின் அலைபேசி அதிர்ந்தது.
எடுத்துப் பார்த்தவன், "ப்ச்" என்று சலித்தான்.
எடுத்துக் காதில் வைத்தவன், "பஸ் ஏறிட்டேன்" என்று பதிலுக்கு காத்திடாது வைத்துவிட்டான்.