அபியின் விலகலுக்குப் பிறகு அவர்கள் முதல் சந்திப்பு நடந்த கோவிலில் அவளைக் காண வெகு நேரமாய் காத்திருந்தான் விஸ்வா. அகிலன் மூலமாக தன் அன்றாட செயலை தெரிந்து கொள்கிறான் என்பதற்காக கோவில் செல்லும் வழித்தடத்தை மாற்றியவள், அதன் பின் வைணவ கோவிலுக்கு வேண்டும் என்றே அகிலனை அழைத்துச் சென்றாள். விஸ்வாவைக் காண வேண்டும் என ஆவல் எழுந்தாலும், அவனை சந்தித்தால் எங்கு தன் மனக்கட்டுகள் உடைந்துவிடுமோ என்று ஒதுங்கினாள். அகிலனை ஆபிஸில் இறக்கிவிடும் போது தன் மீது விழும் விஸ்வாவின் பார்வையை உணர்ந்து, அதை உள்வாங்க மனம் இல்லாமல் அகிலனை முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவாள். எத்திசை சென்றாலும் விஸ்வாவின் விழி வீச்சை கிரகிக்க முடியாமல் இன்னும் மனவேதனைக்கு உட்பட்டாள்.
அவளது அந்த தவிப்பும் அபியின் வீட்டில் விஸ்வாவை காணும் வரையே, அன்றைய இரவு உணவுக்கு அனைவரும் தோட்டத்தில் சமைத்து உண்ண அதில் அவன் உண்ட மிச்சத்தையும் அவளும், அவளின் எஞ்சிய உணவை அவனும் உண்டார்கள். இது மற்றவர்களின் பார்வையில் கவரப்படாமல் இருவரும் விரும்பியே ஏற்றனர்.
விஸ்வாவின் சந்திப்பை தடுக்க மனம் இல்லாமல் மறைமுகமாக இவளும் ஏற்க தொடங்கினாள். அதன் பிறகு குற்ற உணர்வு இல்லாமல் புன்னகையுடன் அடுத்து வந்த நாட்களை கடக்கத் தொடங்கியவளின் அந்த சிறு சந்தோஷத்துக்கும் ஆயுள் குறைவு போல.
கதிரின் எதிர்வினையால் அந்த மென்னகை மீண்டும் மறையத் தொடங்கியது. தன்னை காப்பாற்றுவதாக எண்ணி நடுரோட்டில் விஸ்வாவின் சட்டையைப் பிடித்து மல்லுகட்டிய நிகழ்வுக்கு பிறகு மீண்டும் குற்றஉணர்வில் தவித்தாள். தன்னவனிடம் மன்னிப்பு வேண்டி அலுவலகம் சென்றவள் இதழ்கள் வாயிலாக கேட்டும் விட்டாள். அவள் கேட்ட மன்னிப்பை காதல் தீஞ்சுவையாக மாற்றினான். அவளின் ரசிக்கைக்காரன். இதழின் உவர்ப்பு நிறைந்த சுவையில் தித்திப்பை உணர்ந்த தருணத்தை இப்போது நினைக்கையிலும் அவனின் முகம் பேரொளியாக மிளிர்ந்தது. தன் கண்மணியின் இதழ் ஒற்றலுக்குப் பிறகு துள்ளலுடன் அவர்கள் இடையே காதல் உருவான நாட்களை நினைவு பெட்டகத்தில் இருந்து மீட்டெடுத்தான்.
இன்று மீண்டும் அவளது பள்ளியில் தன் சாராவை சந்திக்க கிளம்ப ஆயத்தமானான். ‘மறுபடியும்.. இன்னைக்கு என்னைய அவாய்ட் பண்ணட்டும், ஒரு கை பார்த்துக்குறேன்’ என அங்கலாய்த்துக் கொண்டே கிளம்பினான்.
அங்கு பள்ளியில் அப்ஸராவின் உதாசீனத்தைத் தாங்க இயலாமல் கதிர் அவள் பின்னேயே சுற்றி வந்தான். இன்று அவர்கள் பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சிக்கு மாணவர்களை தயார் செய்து கொண்டிருந்தவள் கதிரின் உதவியை இந்த ஒருவார காலமாக நாடவில்லை. கதிரின் வருத்தமோ, அன்று ரோட்டில் பொறுமையின்றி சண்டையிட்டதால் தன்னை ரவுடியாக கற்பனை செய்து கொண்டாளோ என தன்னை நிரூபிக்க அவளிடம் பேச அவகாசம் கேட்டுக் கொண்டேயிருந்தான்.
அபியோ தன்னவனின் மீது அத்துமீறும் உரிமையை தானே வழங்கி விட்டோமோ என்ற கோபத்தில் கதிரை தவிர்த்தாள்.
“ஏங்க அபி.. ப்ளிஸ்ங்க.. சாரி.. அன்னைக்கு அப்படி நடந்ததுக்கு” அவன் தவறை உணர்ந்துவிட்டான் என நின்று அவன் பேசுவதை கேட்கத் துவங்க, “எப்பவும் ரூடா நடந்துக்குற ஆள் நான் இல்லைங்க, அந்த ஆளு உங்கிட்ட வம்பு பண்ணவும் கோபம் வந்திருச்சு..” என்றவனை அக்னியாக முறைத்தாள்.
‘எப்படி தன்னவனை மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைக்கலாம் இவன்! எத்தனை திமிர் பிடித்தவன்’ என எண்ணியவள் சுலபமாக மறந்து போனாள். விஸ்வா தனக்கு எத்தனை உரிமைபட்டவன் என்பது இவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை..!
“ஹலோ.. மிஸ்டர்..” கதிரிடம் கோபமாக பேச எத்தனிக்கையில், பள்ளியின் முதல்வர் அங்கு வந்தார், “அபி.. இங்க எல்லா அரென்ஜ்மென்ட்சும் முடிச்சாச்சுனா மதியம் சாப்பிடுவதற்கு சீட்டிங் அரேன்ஜ்மென்ட்சையும் பார்த்துக்க..”
“எதுக்கு.. சார்? பசங்களுக்கு லஞ்ச் ஸ்கூல்லயே குக் பண்ணுவாங்களே?”
“அபி.. இன்னைக்கு சத்துணவுல சமைக்க வேண்டாம்னு சொல்லியாச்சு”
‘எதுக்கு?’ என கேட்க வந்தவளிடம், “அறிவியல் கண்காட்சிக்கு சீஃப் கெஸ்டா விஸ்வா சார்தான் இன்வெயிட் பண்ணிருக்கேன். ஸ்டூடன்ஸ், ஸ்டாப் எல்லோருக்கும் மதியம் சாப்பாட்டை விஸ்வா சாரே ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்துட்டார். அது தீடிர்னு டிசைட் பண்ணதால அங்க சூப்பர்வைசிங் செய்ய நீயே யாரைச்சும் அனுப்பி வச்சுரு. விஸ்வா சார் வரவும் நீ அவர் பக்கத்துல இருந்து பார்த்துக்கோ..?”
“சார்.. ஃபுட் டிஸ்ட்ரிபூட் பண்றதை நான் பார்த்துக்குறேன்” கதிர் தானே முன்வந்து பொறுப்பை எடுத்துக்கொண்டான்.
“வெரி குட்.. அப்ப சாப்பாடு ஏற்பாட்டை நீங்க பார்த்துக்கோங்க” என்றார் தலைமையாசிரியர்.
சிறப்பு விருந்தினர் ஆன விஸ்வாவை அருகில் இருந்து வழிகாட்டி மாணவர்களின் படைப்புகளை எடுத்துரைத்து அவன் காணாத நேரம் தன்னவனை ரசித்து, அவள் சிந்தனை மாணவர்கள் பக்கம் சாயும் நேரம் அவளை விஸ்வா ரசித்தும், இதழ்களின் ருசி அறிந்தவன் அவளின் அதரங்களில் ஆழ்ந்தும் இருந்தான். அவன் பார்வையின் குறுகுறுப்பில் இதழ்களை மடித்து ஒளித்துவைக்க முயன்றாள். அவள் கண்டு கொண்டதை தலையை திருப்பி விரல்களால் புருவத்தை நீவி வெட்க புன்னகையை சிந்திக் கொள்வான். இவர்கள் பொழுது மதியம் வரை இவ்வாறு செல்ல மதிய இடைவெளிக்கு விஸ்வா வரவைத்திருந்த உணவுகளை கதிரும், மற்ற ஆசிரியார்களும் தங்கள் கண்காணிப்பில் பரிமாறிக் கொண்டு இருந்தனர். விஸ்வாவுக்கு வேண்டிய உணவுகளை அபி எடுத்துவைக்க, அவளுக்குப் பிடித்த உணவுகளை விஸ்வா பிரித்து எடுத்து அவளுக்கு கொடுப்பதைக் கதிர் கண்டுகொண்டான்.
அன்று ரோட்டில்க் தான் அபிக்காக சண்டையிட்ட ஆடவன் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டவன், அடுத்து அவர்கள் இருவரிடையே நடக்கும் மவுனபாஷையையும், புரிதலுடன் இருவரும் பழக்கிக் கொள்வதையும் பார்த்தான். இருவரிடையே தென்படும் ஒட்டுதலும் விளங்காமல் இல்லை, இருப்பினும் தனக்கு முழுமையாக தெரிந்தே ஆகவேண்டும் என்கிற போது அபியின் தோழியும், பள்ளி ஆசிரியாருமான சந்தியாவிடம் கேட்டும் விட்டான்.
அவள் அளித்த பதிலில் அனைத்தும் புரிந்துவிட்டது. அபிக்கு கதிர் மீதான கோபம் உட்பட. இவர்கள் பணிபுரியும் அரசு பள்ளிக்கு விஸ்வா மூலமாக கிடைத்த நன்கொடை, மாணவர்களுக்கான அறிவியல் கூடம், மற்ற அரசு பள்ளியைவிட தரம் உயர்வான பள்ளியாக கொண்டு சென்றதில் விஸ்வாவின் பங்கு அதிகம், இவை அனைத்தும் அப்ஸராவின் காதலன் என்பதால் கிடைத்த வெகுமானம் என்பதை கூடுதல் தகவலாக தந்துவிட்டு சென்றாள்.
“நீ கிளம்பு விச்சு.. டைம் ஆச்சு”
“எங்க கிளம்ப சொல்ற சாரா?” தவிப்பாக வந்தது.
“ஆபீசுக்கு போ.. மார்னிங் இருந்து இங்கேயே இருக்க, உன்னோட ஓர்க் பார்க்க வேண்டாமா?”
“நீ இருக்க இடத்திலதான் எனக்கு வேலையே இருக்கு, அப்புறம் எப்படி போக சொல்ற..?” கிறாக்கமாக வந்தது குரல்.
“விச்சு.. உன்னோட பேச்சு வித்தியாசமா இருக்கு”
“புரிஞ்சா சரி சாரா..” சிணுங்கியவன், “எனக்கு வேணும்..” என்றான் சில்மிஷமாக.
மெல்லிய சிரிப்புடன், “இந்தா..” என தன் உள்ளங்கையை நீட்டினாள்.
அவளை முறைத்துப் பார்த்தவன், அவளின் உள்ளங்கையில் தன் விரல்களால் குறுகுறுப்பு மூட்டினான். சட்டென உதறியவளின் கையை இருக்கமாகப் பிடித்துக் கொண்டே ஆட்காட்டிவிரலால் கிச்சு.. கிச்சு செய்ய, “விச்சு.. ப்ளிஸ்.. லீவ் இட்..” நெளிந்தவளின் அழகை ரசித்துக்கொண்டே, “அப்ப.. கிளம்பு. இன்னைக்கு உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்”
“ஏய்.. இங்க ஒர்க் முடிய, இரண்டு மணி நேரமாச்சு ஆகுமே.. நீ எப்படி வெயிட் பண்ணுவ”
“இவ்வளவு மாசம் வெயிட் பண்ணவனுக்கு ரெண்டு மணி நேரம் காத்திருக்க முடியாதா..!” தோள்களைத் தூக்கி சரியென ஒப்பந்தம் தந்துவிட்டு அவள் கிளம்ப, விஸ்வாவை தேடி கதிர் வந்தான்.
தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தவனை, கதிரின் தடுமாற்றத்தை அனுமனித்துவிட்டு விஸ்வா சகஜமாக சிரித்தபடி, “வாங்க கதிரேசன்.. உங்க தலைமையாசிரியர் அறைக்குள் வரதுக்கு எதுக்கு தயக்கம் மேன்.. கம் இன்”
எந்த விரோதமும் காட்டாமல் எதார்த்தமாக பேசியவனைக் கண்டு மனக் குன்றலுடன் தலை குனிந்தவாரே, “சாரி சார்.. அது..”
“கதிர்.. புரியுது, இப்ப நான் யார்னு தெரிஞ்சு வந்துருக்கீங்க. நத்திங் டூ ஒரி மேன்”
“அது.. சார், அன்னைக்கு... உங்க சட்டை...” கதிர் தயங்க.
“ஆக்சுவலி உங்களுக்கு நான் தேங்க்ஸ் சொல்ல நினைச்சேன்” என்ற தலையை நிமிர்த்தி கண்களை உருட்டி எதற்கு என பார்த்தவனிடம், “சாரா திருப்பி என்கிட்ட வந்ததுக்கு காரணம் நீங்க, அழுகைய வெறுக்குறவ என்னோட சாரா.... அப்படி பட்டவளிடம் இருந்து எனக்காக வந்த கண்ணீர் துளிகள்.. அவ அழுதது எனக்கு வலிச்சாலும்… அந்த ஒவ்வொரு துளிகளும் ஆழ்கடல் முத்தைவிட உயர்ந்தது இல்லையா..? அப்படிப்பட்ட முத்தை சுமந்த தங்கத்தையும் என் கையில தாங்குனப்ப எனக்கு இருந்த பீல் எக்ஸ்பிளைன் பண்ண முடியல.. ஐ பீல் டிவைன்” விஸ்வாவின் அலுவல் அறையில் கண்ணீரில் கரைந்தவளை அணைத்து சமாதனப்படுத்திய தருணத்தை நினைவு கூர்ந்தான்.
“சார்.. முதல்ல அப்ஸரா மாதிரி ஒருத்தவங்கள கல்யாணம் பண்றவங்க கொடுத்துவச்சங்கன்னு நினைப்பேன். ஆனா இப்ப உங்கள மாதிரி ஒருத்தர் லைப் பார்ட்னரா கிடைக்க அவங்களும் கொடுத்து வச்சங்கதான் சார். ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்த மாதிரி இருக்கீங்க சார்” மனதார புகழ்ந்தான் கதிரேசன்.
“வாவ்.. தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமென்ட் மேன்”
“மன்னிப்பு கேட்க வந்த என்கிட்ட இவ்வளவு தேங்கஸ் எதுக்கு சார்? அப்புறம் எனக்காக அப்ஸரா மிஸ்கிட்ட நீங்கதான் ரெக்கமண்ட் பண்ணனும். அவங்க என்மேல கோபமா இருக்காங்க, நீங்க சொல்லி என்னைய மன்னிக்க சொல்றீங்களா?”
“என்னைய ரோட் சைட் ரோமியோன்னு நினைச்சு அவள காப்பாத்தியிருக்கீங்க. அதுக்கு எதுக்கு கோபப்படணும், லீவ் இட் கதிர். அவ வரவும் கண்டிப்பா பேசுறேன்”
****
“சாரா.. நம்ம சூரியகாந்தி தோட்டத்த பார்க்கவாச்சு போவோம். காருக்குள் இப்படி உட்கார்ந்திருக்கிறதுக்கு, வெளியே எங்கேயாச்சும் போலாமே?”
“விச்சு.. புரிஞ்சுக்கோ, உங்க அம்மா நம்ம காதல ஏத்துக்கிற வரைக்கும் வெளிய எங்கேயும் மீட் பண்ண வேண்டாம். அவங்களுக்கு பிடிக்காத வேலையை செஞ்சு இன்னும் வெறுப்ப சம்பாதிக்க விருப்பமில்லை. நம்மள சார்ந்த யாரையும் கஷ்டப்படுத்த கூடாது, அதுக்காகதான் விலகி இருக்க முடிவு பண்ணேன். ஆனா நாமும் கஷ்டப்பட்டு, நம்மள சுத்தியிருக்கவங்களையும் வருத்தப்பட வைக்க விரும்பல, கடைசியா உங்க அம்மாகிட்ட போராட முடிவு பண்ணிட்டேன். நம்ம ரெண்டு பேரும் வெளிய சந்திக்கிறத உங்க அம்மா பார்த்தா, அதுக்கும் சாஸ்திரம் பேசுவாங்க. எதுக்கு தேவையில்லாத இஸ்யூஸ்?”
“போராடலாம்னு சொல்லிட்டு, இப்படி தனியா காருக்குள்ள உட்கார வச்சுருக்க. வாட் இஸ் த மேட்டர்? ஒருவேளை அந்த போராட்டம் இங்க இருந்துதான் ஆரம்பிக்குதோ!”
அவனது பேச்சில் வில்லங்கத்தை உணர்ந்தவள் விலகி அமர்ந்தாள். அவளது செய்கையில் கண்களைச் சுருக்கி, அவளருகே நெருங்கி அமர்ந்தவன். அவளின் இருகைகளையும் பிடித்து அவனது கன்னத்தில் அழுத்தியும், இதழ் பதித்தும், “உன்னோட இந்த உள்ளங்கை வெப்பத்தைவிட வேற எதுவும் என்னை உருக்குலைக்க முடியாது கண்மணி..” அபியின் உள்ளங்கை சூட்டை நேத்திரங்கள் மூடி அணு.. அணுவாக அந்த தருணத்தை மனதுக்குள் வண்ணங்கள் தீட்டினான் ரசிக்கைகாரன்.
ஆழ்ந்த இதழ் ஒற்றல்கூட பொய்த்துப்போகும், இவனின் செய்கையில் மங்கையவளோ சொக்கிதான் போனாள்.