‘பிரச்சனை இருந்தாலும் நம்ம உயிர வாங்குறா.. பிரச்சனை முடிஞ்சுபோய் நிம்மதியா இருந்தாலும் என்னோட தலையை உருட்டுறா.. விச்சுவ இழுத்துட்டுப் போய் ரொமான்ஸ் பண்ணுவாளா..? அதைவிட்டுட்டு இப்படி என்னை வேலை சொல்லிக் கொல்லுறா..” அப்ஸ்ரா தந்த வேலையை செவ்வனே செய்து முடித்தான்.
“ஏய்.. கதவ தொற, உள்ள போய் இவ்வளவு நேரம் ஆச்சு, என்னடி பண்ற.. நீ சொன்ன மாதிரி கோகோபீட், உரம் எல்லாம் கலந்து தனித்தனியா பையில எடுத்து வச்சிட்டேன்” அகிலன் கதவிற்கு அருகே சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜை மீது சரிவாக அமர்ந்து பேசினான்.
சட்டென கதவை திறந்து வெளியே வந்தவளைப் பார்த்தவன் கண்கள் மிரண்டு விரிந்து பார்க்கையில், அவளின் தோற்றம் இன்னும் பெரிதாக அருகில் பார்ப்பது போல் தோன்ற செய்தது.
அவனின் அதிர்வைக் கண்டு சிரித்தவாரே, அவள் காலின் முட்டி அருகே ஊஞ்சல் ஆடிய துணியை இருபக்கமும் பிடித்துக் கொண்டு, “எப்படி இருக்குடா.. இந்த டிரஸ்..?” என்றவளை மேல் இருந்து கீழாக அளவிட்டான்.
தந்தத்தில் இழைத்தது போல் இருந்த அவளின் கைகளுக்கு கரும்பச்சையில் சிறிய கை வைத்து, பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சிப்போல் இறகை விரித்து இருந்தது தோள்பட்டையின் அமைப்பு, முட்டியை மறைத்து இருந்த கரும்பச்சையில் வெள்ளை மணிகள் வைத்திருந்த அந்த கவுனில் மெச்சும் அழகியாக இருந்தாள்.
“அது.. நல்லா இருக்கு.. ஆனா இது என்ன புதுசா இப்படி டிரஸ் எல்லாம் போடமாட்டியே..? உன் மாமியாருக்கு தெரிஞ்சுச்சு.. கதம்.. கதம்..”
“இது கவுன்டா.. என்னோட ப்ரெண்ட் எனக்காக ஸ்பெஷலா டிசைன் பண்ணி தந்தது..”
“எனக்குத் தெரியாம.. அப்படி எந்த ப்ரெண்ட் இருக்காங்க உனக்கு..?” யோசனையுடன் கேட்டான்.
“ஸ்ரேயா.. நம்ம சாஸ்ருதியோட ட்வின் சிஸ்டர்.. அவ பெங்களூர்ல சினிமா ஸ்டார்ஸ்க்கு மெட்டீரியல் டிசைன் பண்ணி கொடுப்பாளாம். அவளே எனக்காக ஸ்பெஷலா மேக் பண்ணிக் கொடுத்தா.. இன்னொரு விஷயம் தெரியுமா..? எனக்கு ரெடிமேட் சேரிஸும் ரெடி பண்ணி தாரேன்னு சொல்லிருக்கா.. அதை போட்டு என்னோட மாமியார இம்ரெஸ் பண்ணி.. அவங்கள காக்கா பிடிக்கலாம்னு பிளான் பண்ணிட்டேன்” தந்திரங்களைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தாள்.
அன்று கடைசியாக சாஸ்ருதியை சந்தித்தபோது அவளது சகோதரியைப் பற்றி உரைத்தது நினைவிற்கு வந்தது. ஏனோ இப்போதெல்லாம் விலகி செல்லும் சாஸ்ருதியை அலுவகத்தில் சந்திக்க முற்படும் போது குற்றவுணர்ச்சியும், தவிப்பும் தாவி.. தாவி வந்து போகிறது அகிலனுக்கு.
“இப்ப யோசிச்சு என்ன செய்யுறது..?” அவனது சிந்தனைகளை களவாடிவிட்டு இவள் பதிலளித்தாள்.
“அவ உன்கிட்ட என்ன சொன்னா..?”
“நீ என்கிட்ட சொல்லாத விவரத்தையெல்லாம் என்கிட்ட பகிர்ந்துகிட்டா..” அகிலனை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.
“ஆக்சுவலி நீ என்கிட்ட சொல்லியிருப்பேன்னு நினைச்சு சொல்ல ஆரம்பிச்சா, கொஞ்ச நேரத்திலயே எனக்கு தெரியாதுன்னு புரிஞ்சுக்கிட்டு.. நீ சொல்லாத விவரத்தை அவளும் சொல்ல மறுத்துட்டா..” முகத்தில் சோர்வை சேர்த்துவைத்து, சற்றுத் தள்ளி இருந்த நீள்விருக்கையில் அமர்ந்தாள். அவள் பின்னாலேயே சென்றவன், அவளருகில் அமர அகிலன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவளின் சோர்வை எதற்காக என யூகித்தவன், “உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எதுவும் இல்லடி.. அன்னைக்கு சாஸோட நிபந்தனையைப் பத்தி சொல்ல வந்தப்பதான் விச்சு அம்மா போன் பண்ணி வரச் சொல்லிட்டாங்க.. அதுக்கு அப்புறம்...” மூச்சை இழுத்துவிட்டான். அவளது வேதனைகளை தன் கவலையாக கிரகித்தவன் ஆயிற்றே..! அவனது கைகளை அரவணைப்பாக தன் கைகளுக்குள் புகுத்தினாள்.
“நானே உன் லைஃப்க்கு பிரச்சனையா இருக்கேன். இதுல அவ சொல்ற நிபந்தனை இருக்கு பாரு.. ஒத்துவராதுடி.. அவளோட சேர்ந்து வாழ்றது..” சாஸ்ருதியுடன் நடந்த பேச்சுவார்த்தை முதற்கொண்டு இறுதியில் அவளிடம் மட்டமாக உரையாடிய அனைத்தையும் சொல்லி முடித்தான். அவளின் நிபந்தனையைவிட அகிலன் உதிர்த்த வார்த்தையில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“ஏய்.. அப்படி பார்க்காத. தப்பு பண்ணிட்டேன். அப்படி பேசி இருக்க கூடாது தான். ஆனா அவள என்னோட வாழ்க்கையில கொண்டு வந்தா நிச்சயம் உனக்கும்.. எனக்கும் இருக்கிற உறவு முறிவது உறுதி”
“நீ சாஸ்ருதியோட ப்ரேக் அப் பண்ணிட்ட விஷயம் சொல்லாமலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். அதுக்குப் பின்னாடி காரணமா நான் இருப்பேன்னு நினைக்கலைடா, ஏன்டா..? நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..!”
“நீ ஏன்டி பீல் பண்ற.. எனக்கு அவளவிட்டு பிரிஞ்சத நினைச்சு எந்த கவலையும் இல்ல..”
“உண்மையா இல்லையாடா..? “
“ம..ம்.ச்.. அன்னைக்கு அப்படி பேசுனத நினைச்சு கஷ்டமா இருந்துச்சே தவிர, சாஸ் பிரிஞ்சதுக்கு....” உதட்டை பிதுக்கி வருத்தம் இல்லையென மறுத்தான்.
“நீ அவசரப்பட்டு முடிவு பண்றடா.. உனக்கு வருத்தம் இல்ல. பட் சாஸ் வருத்தப்படுவாளேடா.. அதுவும் தன்னை காதலிக்கிறவன்கிட்ட இருந்து அந்த வார்த்தை போடா..” அகிலன் முதுகில் தரமாக கை ரேகை பதிய சாத்தினாள். அதை மறுக்காமல் வாங்கியும் கொண்டான்.
“அகி.. அவ நல்லா பொண்ணுடா. நீ அவசரப்பட்டுட்ட... அவளோட பேமிலி... ஆண்களால் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கு, அப்படி சூழலில் இருந்து வந்த பொண்ணு இந்த மாதிரி எதிர் பார்க்கிறது தப்பு இல்லடா. அவ அப்படியும் உன்னதா நம்பியிருக்கா.. நம்பிக்கிட்டும் இருக்கா..!” அவனின் வினவிய பார்வைக்கு ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“ஆமா.. நீயா ப்ரேக் அப் ஆனதா சொல்ற வரைக்கும், அவளும் என்கிட்ட சொல்ல பிரியப்படல பார்த்தியா..? இப்பக்கூட உனக்கு சாதகமாதான் இருக்கா.. உன்னை மனசார விரும்புறா.. அதே சமயம் பயப்படவும் செய்றா. நீ அவளுக்கு நம்பிக்கையை கொடுக்க மறந்துட்ட அகி..”
“இப்ப எதுக்கு முடிஞ்சு போனதப் பத்தி பேசுற.. நான் பேசியதுக்கு வேணா அவகிட்ட மன்னிப்பு கேக்குறேன். இந்த பேச்சு இனி வேண்டாம். செம்ம அடி மொத்திட்ட..” பின்பக்கமாக கைகளை வைத்து தேய்த்துக் கொண்டே பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.
*****
“வாவ்.. இந்த நகை ரொம்ப அழகா இருக்கு.. இப்ப எதுக்கு தீடீர்னு பரிசு எல்லாம் கொடுக்குறீங்க..?” தங்க மாலையை கையில் வைத்துத் தடவிக் கொண்டே கேட்டார் சுமித்ரா.
“எவ்வளவு பெரிய சக்ஸஸ் பண்ணியிருக்க..! நீ நடத்துன அரிய கலைப்பொருட்கள் நிகழ்ச்சி இந்தியா முழுக்க பிரபலமா ஆயிருக்கு தெரியுமா..! இதேமாதிரி ஒவ்வொரு ஸ்டேட்ம் முன்னெடுத்து செய்யச் சொல்லி என்.ஜி.எம்.ஏ(நேஷனல் கேலரி ஆஃப் மார்டன் ஆர்ட்) அவேர்னஸ் புரோகிராம் நடத்தப்போறாங்களாம். இப்படி ஒவ்வொரு மாநிலமும் முன்னெடுத்து செய்யுறப்ப பழமை அழியாம, புதுமையோட செயல்படத் தொடங்கிடும். இவ்வளவு பெரிய அச்சீவ்மென்ட் பண்ணியிருக்க என்னோட செல்ல பொண்டாட்டிக்கு ஒர் கிப்ட் வாங்கி கொடுக்காட்டி எப்படி..?”
தன் கணவரின் புகழ்ச்சிக்கு மயங்காத பெண் உண்டா..? அதிலும் தங்க ஆபரணங்களை அவர்கள் கையில் தந்து புகழாரமும் சூட்டியதில் முதிய தம்பதியினர் இடையே அன்னியோன்னியம் கொடி கட்டிப் பறந்தது.
“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இதை அணியுறதுக்காகவே ஏதாவது பெரிய பங்கஷனுக்குப் போகணும் போல இருக்கு” கழுத்தில் நகையை வைத்து அழுகு பார்த்தார் சுமித்ரா.
ஆன்ட்டிக் டிசைனில் கிருஷ்ணன், ராதா ஒரு விருட்சத்துக்கு அடியில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பரஸ்பரம் காதலை பரிமாறும் நிகழ்வை தத்ரூபமாக அமைந்து இருந்த அந்த நகையின் மத்தியில் பெரிதாக சித்திர வேலைப்பாட்டை அமைத்து டாலரில் பொறித்து இருந்தனர். கிருஷ்ணன், ராதா மத்தியில் இதய வடிவில் வெள்ளை, நீலம் கலந்த கல் பதிக்கப்பட்டு இருந்தது.
“உனக்கு ஆன்ட்டிக் ஜீவல்லரி பிடிக்கும். அதில கிருஷ்ணன், ராதா உருவம் இருந்தா இன்னும் கொஞ்சம் டிரெண்டியாவும் இருக்கும்னு யோசிச்சு உனக்காக ஸ்பெஷலா செய்ய சொல்லி வாங்கினது. உன்னோட விருப்பமான கடவுள் கிருஷ்ணர் ஆச்சே..!”
“ம்.. உண்மையிலே.. அந்த கான்சப்ட்தான் ரொம்ப பிடிச்சு போச்சு. இதுக்கு நடுவுல இருக்க ஸ்டோன் வைரம் மாதிரி தெரியலயே..” இதய வடிவில் உள்ள கல்லை உற்று பார்த்தார்.
“ஆமா சுமி, இது வைரம் இல்லை, பணத்தோட கம்பேர் பண்ணா இது கம்மிதான், பட் நம்மள மாதிரி காதலர்களுக்காக சிருஷ்ட்டிக்கப்பட்ட சந்திரனின் குளுமை நிறைந்த சந்திரக்கல் இது..! நீ கூலா இருந்தா....“ சொல்லாத அவரின் நயன பாஷையால்.. கண் சிமிட்டி காதலைக் கொண்டாடினார்.
“டார்லிங்.. லவ்வுல ஒழுக்கம், கண்ணியம் தாராளமா இருந்தும், ஏற்றுக்கொள்ளுதல்... என்கிற பண்பு இல்லாட்டி அந்த உறவு மணலரிப்பைப் போல அரித்துவிடும் இல்லையா..? நம்மை நேசிக்கிறவங்க எப்படி இருக்காங்களோ.. அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் தானே சிறப்பு..!”
“நிச்சயம்.. இந்தனை வருஷத்தில ஏற்றுக்கொள்ளுதல் பண்பு இருக்கிறதால.. நாம் மனசு ஒத்துப்போய் வாழ்றோம்” இருவருக்குமிடையே உள்ள குணநலன்களை சுமித்ரா விளக்கினார்.
“அன் கண்டிஷனல் லவ் அண்ட் அக்செப்ட்ன்ஸ் கொடுத்தா அந்த அன்பு இன்னும் அழகு சேர்த்து பக்குவமா மாத்திக்காட்டும் இல்லையா..?” சுமித்ராவை எதிராக அமரவைத்து அவருக்கு எதிராக வினா தொடுத்தார்.
ஜனார்த்தனை ஒர் மார்க்கமாக பார்த்துவிட்டு, “ஆம்..” என்றார். அங்கே சுமித்ராவுக்கு அபாய மணி அடித்துவிட்டது.
“அந்த அக்செப்டன்ஸ் விஸ்வாகிட்ட இருக்கிறப்ப.. நீ ஏன்..? அவனோட காதலுக்கு குறுக்க நிக்குற?”
“ஓ.. இவ்வளவு நாள் இல்லாம.. இப்ப எதுக்கு தீடிர்னு முடிஞ்சு போன காதல பத்தி பேசுறீங்க..?”
“எப்படி முடிஞ்சு போச்சுன்னு சொல்லுற சுமி..?”
“விஸ்வா அந்தப் பெண்ணை பார்க்கப் போறது இல்லங்க.. அவனுக்கு அந்த காதல் அவ்வளவு தீவிரமா இருந்தா என்கிட்ட பேசிருப்பானே..? நான் சொன்னத கேட்டு அந்த பொண்ணும் விலகி போயிட்டா.. இந்த சூழல்ல நீங்க தேவையில்லாம பழைய கதைய கொண்டு வராதீங்க..” தான் பார்த்து.. பார்த்து ஆளாக்கிய மகனின் காதல் விவாகரத்தில் அவர் மட்டும் முடிவெடுப்பது எப்படி என ஆவேசம் கொண்டார்.
“நீ என்மேல கோவப்படுறதுல நியாயம் இருக்கு சுமி.. உனக்கு ஏற்ற மருமகளா வேணும்னு நினைச்சா தப்பில்ல, விஸ்வாவோட எதிர்பார்ப்பு அவன் காதலிக்கிற அப்ஸராகிட்ட இருக்கே..! அவனோட மனைவியை தேர்ந்தெடுக்கிற உரிமையை கொடுக்க மறுக்கிற உன்கிட்ட... தாய்மையை எப்படி முழுசா உணர்வான்னு நினைக்கிற..?” எதில் அடித்தால் தன் மனைவி பிடிவாதத்தை விடுவாள் என நன்கு சிந்தித்தே நங்கூரத்தைப் போட்டார்.
சோர்ந்து போய் அருகில் உள்ள மெத்தையில் அமர்ந்தவர். சில நிமிடங்களுக்கு பிறகு, “அவனோட ஆசைக்காக நான் எதிர் பார்க்கிற எல்லாத்தையும் விட்டுக் கொடுக்குறேன். ஆனா அந்த பொண்ணு எப்பவும் அந்த அகிலன் கூடவே சுத்திக்கிட்டு இருக்க.. அந்த நட்பு மட்டும் நம்ம குடும்பத்துக்கு வேண்டாங்க..”
“இந்த காலத்துல போய் ஆண், பெண் நட்ப சீர்கேடா பார்க்கிறயா சுமி..?”
“கலாச்சார சீர்கேடு எந்த காலமா இருந்தாலும் தப்புதாங்க.. பிறந்ததுல இருந்து அப்பா என்கிற உறவைவிட, வாழ்க்கைத் துணையா புருஷன் என்கிற உறவைவிட மேன்மையை இந்த ஆண் நட்பு கொடுத்திருமா..?”
“ஒரு விஷயத்தில் நமக்கு ஆழ்ந்த அறிவு இல்லன்னா அதைப் பற்றி எப்படி கருத்து சொல்ல முடியும்..? கருத்து சுதந்திரம் வாய் வந்தத பேசுறதுக்கு கிடையாது.. சொல்ற கருத்து நாம உணர்ந்து சொல்றதுல இருக்கு..” சுமித்ராவின் அமைதி அவரை மேலும் பேச தூண்டியது.
“நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிச்சு பாரு சுமி.. உன்னோட விருப்ப கடவுளா இருக்க கிருஷ்ணனை சுத்தி எத்தனை பெண்கள் இருந்தாலும் அவர் மனம் சகியா ஏத்துக்கிட்டது பாஞ்சாலியை தானே..! அதே திரெளபதிக்கு அப்பா, சகோதரன், ஐந்து கணவர்கள் என ஆண்கள் குழுமி இருந்தும் பாஞ்சாலிக்கு ஏன் கிருஷ்ணனோட நட்பு தேவைப்பட்டுச்சு..!
எத்தனை பேர் நம்மை சுற்றி இருந்தாலும் ஆபத்பாந்தவனாக சில உறவுகளை மட்டுமே மனம் ஏற்றுக்கொள்ளும். இந்த மாதிரி புனிதத்தோட உச்சமா இருக்கிறது சில தோழமைகள் தான். அப்படி அழகான தேன் கூடு உன் கையால சிதைச்சிடாத சுமி..” என தன்னவள் சிந்திக்க தனிமையைத் தந்து அறையைவிட்டு வெளியேறினார்.
சுமித்ரா தன் மகனை வளர்க்கையிலே இவனது குணத்திற்கு இப்படிப்பட்ட பண்பு உள்ளவளே பெண்ணாக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் அப்ஸராவின் சிறு நாகரீகத் தோற்றத்தைக்கூட ஏற்க அவருக்கு ஒப்பவில்லை. பெண்களுக்கென உள்ள சில கோட்பாடுகளை எதிர்பார்த்தவருக்கு அதற்கு போராடும் மங்கை மீது வெறுப்பைவிட ஏமாற்றமே பிரதிபலித்தது. அப்ஸராவை வீட்டில் சந்தித்தபோது அவளின் தெளிவான பார்வையும், அழுத்தமான பேச்சும் அவரின் கொள்கையை மீறி அத்தனை பிடித்திருந்தது. அந்த பிடித்ததையும் தாண்டி தான் வரைந்த கோட்டுபாடுகளை உடைக்க மனம் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தது.
‘நீங்கள் வகுத்த கோட்பாடுகளை உடைக்கவும் மாட்டாள்.. அதற்குள் அடங்கவும் மாட்டாள். இதுவரை எழுதப்படாத இலக்கியம் அவள்..!’ அப்போது விஸ்வாவின் பிரதான சொல்லே அந்த அறை முழுவதும் ரீங்காரம் இட்டது.
அன்று அப்ஸராவிடம் நடந்த விவாதத்தை விஸ்வா வரவும் ஒப்பித்தார் சுமித்ரா. அதைக் கேட்டவன் கோபம் கொள்ளவில்லை, அனைவரையும் பேசி.. பழகி மயக்கிவிடுப்பவள் அல்லவா..! தன் தாயுடன் ஒட்டுதல் ஏற்பட்டால் நிச்சயம் இவரையும் கவர்ந்துவிடுவாள் என எண்ணியே வாக்குவாதத்தை தவிர்த்து தன் கருத்தை பகிர்ந்துவிட்டு, சாராவை சந்திக்க முற்பட்டவனுக்கு தடையாக முடிந்தது அவளின் முடிவு. இரு பெண்களின் கொள்கைக்கு மத்தியில் மத்தளமாக மாட்டிக்கொண்டான் விஸ்வா. சுமித்ரா கடந்த நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்த்தார்.
அவளின் மீது விஸ்வாக்கு ஏற்பட்டிருக்கும் தெளிவு, தன் கணவரின் அறிவுரையுரையும் ஏற்று இருமனங்களையும் இணைத்து இணைபிரியாஜோடியாக ஏற்றுக்கொள்வாரா சுமித்ரா..?