இளங்காலைப் பொழுது தலைவன் வருகைக்காக காத்திருந்ததைப் போல் வெட்கத்துடன் மெல்ல... நிதானமாக தலைதூக்கியது மங்களகரமான சூரியகாந்தி மலர், அந்த ஆதவனின் வருகையை அறிந்து...! அசாதாரணமான சூரனின் வருகைக்காக ஆயிரம் காதலிகள் காத்திருந்ததுபோல் அனைவரும் ஒன்று சேர்ந்து வரவேற்றனர் அந்த சூரியகாந்தி தோட்டத்தில்...!
இருபக்கமும் சூரியகாந்தியை முகிழ் பிரித்து பாத்தியிட்டு நடுவில் நடைபாதையாக அமைந்திருக்க, அதைக் கடந்து செல்ல இறுதியில் இளம்பால் வடியும் ஆலமரத்தின் மத்தியில் தென்னங்குருத்தும், சம்மங்கியாலும் அலங்கரித்து தோரணங்கள் தொடுத்திருக்க.. உறவினர்களின் நெரிசல் இன்றி அனைவரின் கவனமும் ஆலமரத்துக்கு அடியில் கட்டப்பட்ட ஊஞ்சலை நோக்கி இருந்தது. ஆலமரத்துக்கு வலது பக்கம் மங்களநாதம் முழங்க, இடது பக்கம் தேவாரம் பாட, அதற்கு மத்தியில் கூரைப் புடவையில் அழகு மெலிர மணப்பெண் கோலத்தில் அப்ஸ்ராவை ஊஞ்சலில் அமரவைத்தனர் அருகில் அவளின் ரசிக்கைகாரன் கம்பீரத் தோற்றத்தோடு உள்ளூர தன் கண்மணியை ஆலிங்கனம் செய்தாலும், வெளித்தோற்றத்திற்கு முறைக்கவே செய்தான்.
சுமித்ராவின் மனப்பூர்வமான சம்மதத்திற்குப் பிறகு விஸ்வா, அப்ஸராவின் திருமணம் இருவீட்டாரின் முன்னிலையில் பேசி முடிவெடுத்து.. திருமணத்தினத்திற்கு முந்தைய நாள் நிச்சியதார்த்தம் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது. விஸ்வாவின் பார்வை முழுவதும் தன்னவளின் மீதாக விழி அம்புகளை எய்த வண்ணம் இருக்க... செயற்கையாய் தன்னை அலங்கரிக்க மறுப்பவள் இன்று சர்வ அலங்காரத்துடன் ஆளை அசத்தும் சுந்தரியாக அவன் எதிரே வீற்றிருந்தாள்.
பலவித கொண்டாங்களோடு நிச்சியதார்த்த நிகழ்வு நிறைவுபெற, தன் மீது போர்த்தி இருந்த அலங்காரங்களையெல்லாம் களைய மணப்பெண் அறைக்கு சென்றவள். தன் உருவத்தை ஆளுயுற பெல்ஜியம் கண்ணாடியில் கண்டவள் சலிப்பாக உச்சுக் கொட்டிவிட்டு தலையில் இருந்து தொடங்கினாள். தன் நீண்ட பின்னலை முன்பக்கமாக போட்டு தலையில் முடியின் சிக்கல்களில் இருந்து விடுபட மறுத்து அடமாக வீற்றிருந்த மலர் சரங்களை கண்களை சுருக்கி வம்படியாக அகற்றினாள்.
“அந்த பூவும் என்னைப் போல் அந்த கூந்தலின் நறுமணத்தில் சிக்கிக்கொண்டதோ..!” பின் பக்கமாக குரல் ஒலித்தது. தன் எதிரே இருந்த கண்ணாடியின் ஊடே எதிர் கொண்டவனை கண்டு இதழ் கடையில் வெட்கப் புன்னகை பூத்தாள்.
“நீ எப்படி இங்க வந்த விச்சு.. யாரும் பார்த்தா தப்பா நினைக்கப் போறாங்க. சீக்கிரம் வெளியே போயிரு..” பதட்டம் இன்றி சூழலை உணர்ந்து இலகுவாக பதிலளித்தாள்.
அவளது பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல் கழட்டி வைத்த பூச்சரத்தை எடுத்து முகர்ந்து அதிலிருந்த வந்த நறுமணத்தில் முகத்தை சுழித்துவிட்டு தனக்கானவள் அருகே சென்றான். சாராவின் பின்னலை பிரித்து.. விரித்து விட்டுவிட்டு... அக்கூந்தலை தன் விரல்களால் இசை எழுப்ப முயன்று, அந்தகாரக் காட்டுக்குள்ளே நாசியை நுழைத்து முகர்ந்தான், கண்களை மூடி கூந்தலில் தென்படும் வாசத்தை நாசி துவாரத்தின் வழியாக உடலுக்குள் செலுத்தி பத்திரப்படுத்தினான்.
அந்த கிறக்கத்தில் அவளின் இதழ் தேடும் தும்பியாக மாறியவனை தடுத்து நிறுத்தினாள். “விச்..ச்.சு.. இப்ப வேண்டாமே. கல்யாணத்துக்கு முன்னாடி இது வேண்டாம்..” என்றவளை வித்தியாசமாகப் பார்த்தான். கலாச்சாரத்தின் துகிலை உருவ முற்படுபவள்.. இப்போதோ அதற்கு ஆடை அணிந்து அலங்கரிக்க முற்படுக்கிறாளே..! என்பதே அவனது முரணான பார்வைக்கு காரணம்.
“அன்னைக்கு ஆபிஸ்ல வச்சு கொடுத்தியே.. இட்ஸ் அமேசிங்..!! அப்ப அது தப்புயில்லையா..?”
“அன்னைக்கு உணர்ச்சி வசத்துல கொடுத்துட்டேன்.. இனி அப்படி நடக்க விடமாட்டேன்”
“ப்ளீஸ்.. சாரா.. நேத்து உனக்கு சடங்கு செஞ்சப்ப சந்தனம், மஞ்சள் பூசி அத்தனை அழகா உன்னை வீடியோல பார்த்த பிறகு ஐம் நாட் ஏபில் டூ கன்ட்ரோல் மை செல்ஃப்...” அவள் கன்னம் வருட.. விலகி சென்று, “கன்ட்ரோல் பண்ணு விச்சு.. உங்க அம்மா பார்த்தா நல்லா இருக்காது. நம்மளோட காதலுக்காக அவங்க இவ்வளவு விட்டுக்கொடுத்து இருக்கப்ப, நாமளும் சிலது சேக்ரிபைஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் இப்படி.. இந்த மாதிரி சூழலில் நாம நடந்துக்கிறது, இட்ஸ் நாட் பேஃர்” என்றவளை விடுவதாக இல்லை அவளின் ரசிக்கைகாரன்.
“காதலுக்கு ஏது இடம், பொருள் பெண்ணே..! காதல் அனைத்தையும் துறந்தது...! அதற்கு கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா..?” கேள்வியாக புருவத்தை உயர்த்த,
“இன்னைக்கு எப்படி தத்துவம் பேசினாலும் சரி.. இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். என்னை முழுசா மாத்திக்கலைனாலும், சில மாற்றங்கள் நல்லதுனு சொல்றப்ப கேட்டுக்கிறது ஆரோக்கியமானதே..! அதனால சாத்திரத்தைக் கடைபிடிப்பது தப்பில்ல... விச்சு செல்லம்” கொஞ்சிவாரே தன்னை விட்டு தள்ளி நிப்பாடினாள்.
“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே
கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார்
கன்னத்து முத்தமொன்று’
என்றவன் முத்தமிட முயல்கையில் தப்பிச் சென்றவள். அதன் பின்பு தனிமையில் எங்கும் அவனிடம் சிக்காமல் நழுவினாள். கல்யாணம் முடியும் வரை சின்ன தொடுகைக்கும் அனுமதிக்க மாட்டேன் என்ற அவளின் சங்கல்பத்தை உடைக்க முயற்சிகள் பல செய்தும் அப்ஸராவே வெற்றிகண்டாள். இப்போது திருமண சடங்கின் போதுதான் அவளை அருகேயே காண முடிந்தது. தன் கண்மணி சிறு தீண்டலுக்கும் தன்னை அனுமதிக்காத கடுப்பில் அமர்ந்திருந்தான்.
மின்விளக்கு இல்லாத இயற்கை ஒளியும், குளிர்சாதனம் இன்றி இயல்பாக வீசும் காற்றும் அலைபாய கல்யாண விதிகளில் முதன்மையான தாய்மாமனின் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தேற அதை மிதமான அசைவில் ஊஞ்சலில் அமர்ந்தவாரே கண்டனர் அந்நாளின் நாயகனும், நாயகியும். இருவரிடையே ஊடல் நிகழ அவனை சீண்டிக் கொண்டே இருந்தாள். இரு கண்களையும் சிமிட்டி அவனை உசுப்பேற்றினாள். பட்டு வேஷ்டியில் தகிக்கும் சூரியனுக்கு இணையாக மாப்பிள்ளை கோலத்தில் இருந்தவனுக்கு ரோஷம் வர.. விருட்டென எழுந்தவன் இருகைகளிலும் தன் சாராவை தூக்கி ஆனந்தத்தில் சுற்றினான். பல சுற்றுகள் சுற்றியவன்.. அவளை இறக்கிவிட தலை கிறு..கிறுக்க அவனின் தோள் மீதே சாய்ந்தாள். மெல்ல அவள் தலை தடவி நிதானப்படுத்தியவன்.. முகவாயை இரு உள்ளங்கையிலும் தாங்கி நுதல் முத்தம் பரிசளித்தான். அம்முத்தத்தில் கிறங்க வேண்டியவளோ அதிர்ந்து போய் சுமித்ராவின் முகபாவத்தைக் கணக்கிட்டாள். ஆனால் சுமித்ராவோ இவர்களின் காதல் நுண்ணுறவை உணர்ந்து இருகைகளையும் மடக்கி சத்தம் வர திருஷ்டி கழித்தார். அதைக் கண்ட அகிலன் தன் நெஞ்சில் கைவைத்து அலங்கரிக்கப்பட்ட தூணில் சாய்ந்து நின்றான். அகிலனின் சேட்டையிலும், தன் மாமியாரின் செய்கையிலும் மனமார புன்னகை புரிந்தவளை ரசித்தவாறே தன் கைகளில் சாய்வாக தூக்கி வந்தவன், மலர்களை கையாள்வது போல் மிருதுவாக மணமேடையில் அமரவைத்தான். அதன் பின் சுற்றம் சூழ ஆசிர்வாதிக்க மரகதம் பதித்த பொன் தாலியை தன்னவள் கழுத்தில் அணிவித்தான் விஸ்வா.
சுபநிகழ்ச்சி முடிந்திருக்க அங்கே.. அங்கே.. களைப்பில் அமர்ந்து அன்றைய நிகழ்வுகளை பேசிக் கொள்ள, “சுமி.. உன்னோட ஆசைப்படி பாரம்பரியப்படியும், நம்ம மருமகளுக்கு பிடிச்ச மாதிரி புதுமையான திருமணத்தை சிறப்பா நடத்தி வச்சிட்ட.. யூ ஆர் கிரேட் டார்லிங்” கன்னத்தைக் கிள்ளி பாராட்டை வெளிப்படுத்தினார் ஜனார்த்தனன்.
“நான் எதுவும் பெருசா செய்யல, தமிழ் முறைப்படி கல்யாணம் பண்ணலாம்னு சொல்ல மட்டும் தான் செஞ்சேன். இந்த ஐடியா முழுக்க நம்ம சாஸ்ருதியோடது. விஸ்வா, சாரா இரண்டு பேரும் லவ் புரபோஸ் பண்ணிக்கிட்ட இடம், அதோட நம்ம மருமகளுக்கு சூரியகாந்தி ரொம்ப பிடிக்குமாம், திறமையா யோசிச்சு இந்த ஏற்பாட்ட பண்ணிட்டா..”
சுமித்ரா தனது தாய்மை என்ற சொல்லில் பரிதவித்து மகனின் காதலை அங்கீகரித்தார். ஜனார்தனனின் திரெளபதி, கிருஷ்ணன் உவமையில் தடுமாறியவர், எங்கோ அவர்கள் நட்பை அங்கீகரிக்க மனம் வரவில்லை. அதனால் அகிலன் பேச்சை தவிர்தே வந்தார்.
“சாஸ்ருதிக்கு மட்டும் இந்த பாராட்ட கொடுக்க முடியாது, அகிலனுக்கும் இதில் சரி பங்கு இருக்கு..” இவர்களின் பேச்சை அங்கு வந்த அப்ஸராவும், விஸ்வாவும் ஆமோதிக்க. அபியின் நிழலாக சுற்றி கொண்டு இருந்த அகிலனின் காதிலும் இது விழுந்தது.
அலங்காரங்களை கவனிப்பதற்காக முன்தினம் இரவு அகிலன் மேற்பார்வையிட வர, இருட்டில் அவனது இதயத் துடிப்பே அவனுக்கு கலவரத்தை தர.. அதை வேலையாட்களிடம் இருந்து மறைப்பதற்காக பாடலை பாடுவதற்கு பதிலாக கத்திக் கொண்டே வந்தான்.
“அர்ஜீனரு வில்லு.. ஹரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது
எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு...”
‘அதுக்கு அப்புறம்... மறந்துப்போச்சே. அப்படியே ரீபிட் மோடில் கத்த வேண்டியது தான்’ அர்ஜீனரு வில்லு....
அன்று முழுவதும் கல்யாண ஏற்பாட்டை கவனிக்க வந்திருந்தாள் சாஸ்ருதி. அங்கே இருந்து கிளம்ப எத்தனிக்க, அவனின் பாடலில் உள்ள தடுமாற்றத்தை உணர்ந்தவள், கிளம்பாமல் அவன் அருகே சென்று பேச்சை பலப்படுத்தினாள். அது அவனுக்கு இருட்டில் இருந்து தப்பித்த உணர்வை தந்தது.
அபியின் பேச்சைக் கேட்டு அடுத்த அலுவலக சந்திப்பிலேயே அவளிடம் மன்னிப்பைக் கேட்டான். அதற்குப் பிறகும் இருவரின் பேச்சும் சகஜமாக மாறவில்லை.
“நீ கிளம்பு..” என்றான்,
அவனின் பயம் அறிந்து, “பரவாயில்ல.. உன்னோட ஒர்க்க முடிச்சிட்டு வா.. சேர்ந்தே போவோம்..”
‘நாம பயப்படுறத கண்டுபிடிச்சிட்டாளோ... இருக்கும் இல்லாட்டி எதுக்கு கிளம்பினவ எனக்காக வெயிட் பண்ணப்போறா.. இருந்தாலும் கெத்த விட்டுக்கொடுக்க கூடாது’ என யோசித்தவன்.
“இட்ஸ் ஒகே.. நீ கிளம்பு..” இதற்கு மேல் அங்கு இருப்பது சாஸ்ருதிக்கு சங்கடத்தைத் தந்தது. சம்மதமாக தலை அசைத்துவிட்டு திரும்பி நடக்க, அவளை பின்பக்கமாக பார்த்தவாரே நடக்க அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது.
அச்சத்தில் கத்தி, “ஐயோ.. பாம்பு..” என குதித்து ஓட முயன்றவனின் கைகளை பிடித்து நிறுத்தி, “அது கொச்சை கயிறு..” என்க, அதில் அசிங்கப்பட்டவன் ஈ..ஈ.. என பல்லை இளித்துக் காண்பித்தான்.
அகிலனின் பயத்தை அறிந்து அவனின் கைகளைப் பிடித்தே இருந்தாள். அவள் விடப்போவதை அறிந்து அகிலன் அவளின் கைகளை இருக்கமாக பிடித்துக் கொண்டான்.
“யாரு பெத்த பிள்ளையோ.. நல்லாயிருப்ப... என்னைய அப்படியே பத்திரமா இந்த இருட்டில இருந்து கூப்பிட்டு போயிரு.. சாஸ்..” என கிண்டலாக கெஞ்சியவனை கண்டவளுக்கு குழந்தைத்தனம் மாறா வாலிபனகாகவே தோன்றினான் அகிலன்.
அப்படியிருக்க அவன் உதிர்த்த வார்த்தைகளை மட்டும் எப்படி அவளால் சுமக்க முடியும். மீண்டும் அவனின் அன்பை சொந்தமாக்க பேதையவளுக்கோ ஆசை துளிர்விட்டது. இதை அறியாத அகிலனோ அபியின் சிரிப்பு சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தான். இப்போது அங்கு இவர்கள் மூவர் மட்டுமே அமர்ந்திருக்க, “எங்க போனாங்க..? விச்சுவோட அம்மாவும், அப்பாவும்..?”
“ஏன்டா.. கனவு காணப் போயிட்டியா..? நேரா கோவிலுக்குப் போகணும்.. அதுக்கு எல்லாம் தயாரா இருக்கான்னு பார்க்கப் போயிருக்காங்க”
“ஓ..” அவனை உணர தனியாகக் கற்றுக்கொள்ள வேண்டுமா என்ன..? அவனது சிந்தனையை களவாடினாள்.
“ஏன்.. விச்சு.. இன்னைக்கு சாஸ்ருதியோட சிஸ்டர் ஸ்ரேயா வந்திருந்தா பார்த்தியா..? ரெண்டு பேரும் செம்ம அழகுல்ல.. அதுவும் ஒரே மாதிரி லெகாங்கா மேட்சிங்கா போட்டு வந்திருந்தாங்க. நம்மள கன்ஃபியூஸ் பண்ணுறதுக்காகவே போட்டுட்டு வந்த மாதிரி இருந்துச்சு”
“ஏய்.. டிரஸ் கலர்ல வித்தியாசம் காண்பிச்சாங்களே..? அப்பவும் உன்னால கண்டுபிடிக்க முடியாலையா?” அகிலன் பொருக்க முடியாமல் கேட்டு விட்டான்.
“அகி.. உன்னால கண்டு பிடிக்க முடிஞ்சதா..?”
“ஆமாம்.. ஆலீவ் கிரீன் போட்டிருந்தது சாஸ், நீல கலர்ல டிரஸ் பண்ணிருந்தது ஸ்ரேயா..”
“ஏய்.. அவங்க அம்மாவே கண்டுபிடிக்க கஷ்டப்படுவாங்களாம், நீ எப்படி டா கண்டுபிடிச்ச..?”
......
“உன்கிட்ட மட்டும் அடையாளப் படுத்திக்கிட்டாங்களா..?”
“ஆமா..” பொய்யாக ஆமோதித்து விட்டான். அவனது மனமோ எவ்வாறு கண்டாறிந்தாய் என ஆராய முடிவெடுத்தது. பதில் தான் தெரியவில்லை.
தாயிடம் இரு பிள்ளைகளும் அன்பை வெளிப்படுத்துவதில் எந்த பேதமும் காட்டப் போவதில்லை. ஆனால் காதல் பார்வை வீசும் பெண்ணை தன்னவள் என யூகிக்க முடியாமல் போகுமா என்ன..? சாஸ்ருதியின் கண்களில் அவனுக்காக உதித்த நேசம்.. உள்ளுணர்வால் அவளை மட்டுமே திரும்பி பார்க்க வைத்தது, அருகில் இருந்தவளின் மாசற்ற விழிகள் இவனை அசைய விடவில்லை.
இத்திருமண வைபோகத்தில் எல்லையற்ற ஆனந்தத்தில் இருந்தது ஜானவியும், ரித்திகாவுமே... இருவரும் கைக்கோர்த்து அன்றைய பொழுதே இன்னும் சிறப்பாக மாற்றினார்கள்.
உத்தமி மட்டுமே சற்று சோர்வாக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட விசாலாட்சி அருகே சென்று அமர, “என்ன உத்தமி.. மகள கட்டிக்கொடுத்துட்டு எல்லா தாயரையும் போல் நீயும் அழுதுக்கிட்டே வழியனுப்ப போறீயா?”
மறுப்பாக தலையசைத்து, “எனக்கு அவ இல்லாம இருக்கிறது கஷ்டம்தான், இல்லன்னு சொல்ல முடியாது... ஆனா அதுக்கு பலகாலமா பழக முயற்சி செஞ்சிட்டு இருக்கேன். என்னோட கவலை அதுயில்ல விசா.. அபி மாமியார் வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் அவங்க அப்பா, அகி எல்லாம் இவ இல்லாம எப்படி சமாளிக்கப் போறாங்கன்னு தெரியல.. அவங்க இரண்டு பேரையும் நினைச்சுதான் எனக்கு கதிகலங்குது...” அனைத்தும் அபியாக இருந்தவர்கள் அவள் இல்லாத வீட்டில் எவ்வாறு வாழ்வார்களோ..! என உதித்த அச்சமே.
“நம்ம பாடு கஷ்டம் தான்..!” என விசாலாட்சியும் ஆமோதிக்க, இருவரும் சிரித்துக் கொண்டனர்.
Last edited: