மனம்️21
அன்றிரவு இருவருமே நன்றாக உறங்கினார்கள். காலை எழுந்தவுடன் ராம் தன் மனைவியை தேட அவளோ அவன் அருகில் இல்லை.
“பார்றா கும்பகர்ணி சீக்கிரம் எழுந்து போயிட்டு இருக்கா.” என வாய்விட்டு கூறியவனின் முதுகில் பட்டென ஒரு அடி விழுந்தது.
“அது எப்படித்தான் எந்திரிச்ச உடனே என்ன ஓடணும்னு தோணுது உங்களுக்கு?” எனக் கையில் காபியுடனும் முகத்தில் கோபத்துடனும் நின்றிருந்தவளை பார்த்தான் ராம்.
ஜீன்ஸ்சும் அதற்கு மேல் ஒரு டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தாள் அவள்.
“அது எப்படி சது எந்த டிரஸ் போட்டாலும் உனக்கு அவ்வளவு எடுப்பா இருக்கு?”
“என்ன பரஸ் மை புருஸ் எனக்கே ஐஸ்ஸா?”
“ச்ச சீரியஸா தான் சொன்னேன். முன்னாடியே கேட்கணும்னு நினைச்சேன் அது என்ன பரஸ்?”
“நீங்க ஏன் என்ன சதுனு கூப்பிடுறீங்க?”
“அது… நான் உன்னோட ஹஸ்பண்ட் இல்லையா எல்லாரும் கூப்பிடுற மாதிரி எப்படி கூப்பிடுறது. அதான் எதாவது யோசிக்கலாம்னு பார்த்தேன் அப்ப என் வாயில சட்டுனு வந்துச்சு அதான்…” என அவன் இழுக்க,
“அதே தான் இது. அப்புறமா வந்து என்னை ஆராய்ச்சி பண்ணிக்கோங்க இப்ப முதல்ல போய் பிரஷ் பண்ணிட்டு வந்து இந்த காபியை குடிங்க.” என அவனைப் பிடித்து குளியலறைனுள் தள்ளினாள். பல்துலக்கி முகத்தை அலம்பி கொண்டு வந்தவன் அவள் வைத்த காஃபியை பருகிக்கொண்டே அவளுடன் கீழே ஹால் பால்கனிக்கு சென்றான்.
“வ்யூ செமையா இருக்குல்ல!” எனச் சுற்றி முற்றி இருக்கும் அந்த காடுகளை பார்த்துக் கொண்டே கூறினான் பரசுராம்.
“ஆமாங்க ரொம்ப நல்லா இருக்கு.”
“என்ன இவ்ளோ சீக்கிரமா எந்திரிச்சிட்ட.”
“தெரியல சீக்கிரமே முழிப்பு வந்துடுச்சு. நீங்க வேற சேர்ந்து சமைக்கலாம்னு சொல்லிட்டீங்க. அதனால டிபன் எதுவும் இன்னும் பண்ணல ஜஸ்ட் காபி மட்டும் போட்டேன்.” என்றாள் சாத்வி.
“சரி ஒரு பத்து நிமிஷம் இரு, நான் குளிச்சிட்டு வந்துடறேன். டிபன் பண்ணி சாப்பிட்டு வெளியே போலாம்.” என்றவன் சொன்னார் போல் சீக்கிரமே குளித்து வர,
ஒருவரை ஒருவர் வம்பு இழுத்துக் கொண்டும் கேலி பேசிக் கொண்டும் எளிமையாக காலை உணவை செய்து முடித்து. ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு சாப்பிட்டு, ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள். அவர்கள் மட்டுமின்றி தனியாக தங்கியிருந்த அர்ஜுன், சந்தியா இருவரும் கூட இவர்களுடன் சேர்ந்துக் கொண்டார்கள்.
முதலில் பாலியின் மிகப் பிரபலமான பாலினீஸ் பாணியில் அமைக்கப்பட்ட, கரங்கசெமில் உள்ள, லெம்புயாங் மலையின் உச்சியில் இருக்கும், ‘புரா பெனாதரன் அகுங் லெம்புயாங்’ என்னும் கோயிலுக்கு தான் சென்றார்கள்.
உலகிலேயே மிகவும் புராதான கோவில் அது. இந்தக் கோவிலை மூன்று பகுதிகளாக பிரித்து இருக்கிறார்கள். அடிபகுதியை சங் அனந்த போகா என்றும், நடுப்பகுதியை சங் நாகா பாசுகிஹ் என்றும், உச்சிப் பகுதியை சங் நாகா தக்சகா என்றும் அழக்கிறார்கள் அது முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனை குறிக்கிறது.
அந்த கோவிலை வணங்கியவர்கள் இயற்கை சூழலோடு இருந்த அந்த கோவிலில் புகைப்படங்களும் நிறைய எடுத்துக் கொண்டார்கள்.
அதன்பின் லெம்பொன்கண் பீச்சிற்கு சென்றார்கள்.
அர்ஜுனும் சந்தியாவும் நீரில் இறங்கி விளையாட ஆரம்பிக்க, சாத்வியோ வழக்கம் போல மணலில் அமர்ந்து விட்டாள்.
“உனக்கு தண்ணியில விளையாடவே பிடிக்காதா?” ராம் கேட்க,
“யார் சொன்னா அப்படி? எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
“அப்புறம் ஏன் எப்ப பீச்சுக்கு போனாலும் மண்ணில் மட்டும் உக்காந்துக்குற தண்ணில போய் விளையாடவே மாட்டேங்குற.”
“அது…” என அவள் சொல்லத் தயங்க,
“பரவால்ல சொல்லு.” என அவளை ஊக்குவித்தான்.
“தண்ணில நனைஞ்சா துணி உடம்புல அப்படியே ஒட்டிக்கும். எல்லாரும் முன்னாடியும் கம்ஃபோர்டபுலா இருக்காது.” என மனதில் நினைத்ததை வெளிப்படையாக கூறினாள்.
“ஓ!” என கேட்டுக் கொண்டான் ராம்.
அதன்பின் அர்ஜுனும் சந்தியாவும் விளையாடிவிட்டு வர, அவர்களும் இவர்களைப் பார்த்து அதே கேள்வியை கேட்டார்கள்.
“சதுக்கு கொஞ்சம் உடம்பு முடியல அதனால தான் அவ தண்ணில விளையாடல.” என மனைவிக்கும் சேர்த்து இவனே ஒரு பதிலை கூறி வைத்தான்.
அதன்பின் அனைவரும் அன்று இன்னும் சில இடங்கள் பார்த்துவிட்டு மாலை அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு திரும்பினார்கள்.
அவளை ரெப்ரஷ் ஆகி வரச் சொல்லிவிட்டு, இருவருக்குமாக காபியைக் கலக்கி வைத்தான் ராம்.
“செம காபி.” என ரசித்து குடித்தாள் சாத்வி.
“காஃபியை குடிச்சிட்டு போய் கிளம்பி வா.”
“ஓ! இன்னும் வெளியே போக வேண்டியது இருக்கா? அண்ணா அண்ணிகிட்ட சொல்லி இருந்தா இங்க வந்து ரெப்ரிஷ் ஆயிட்டு அப்படியே கிளம்பி போய் இருக்கலாமே?”
“நீயும் நானும் மட்டும் தான் போறோம்.” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே,
“நாம மட்டுமா எங்க?”
“அது சர்ப்ரைஸ்… சீக்கிரம் கிளம்பி வா.” என்றவன் அவனும் சென்று ரெப்ரிஷாகி அவளுக்காக காத்திருக்க துவங்கினான்.
வழக்கம்போல் அவளே காரை எடுத்தாள். அவள் தூங்கி வழிவது அவளுக்கே பிடிக்கவில்லை. இவ்வளவு நாள் அதை தொந்தரவாக அவள் நினைத்தது கிடையாது. ஆனால் இப்பொழுது ராமுடன் தன் நேரத்தை செலவழிக்க விரும்பியவள் தூக்கத்தை அதற்கு தடையாக நினைத்தாள். முக்கியமாக வெளியில் செல்லும் பொழுது அவனுடன் வாயாடி நேரம் செலவழிக்க விரும்பியவள் எப்பொழுதும் அவளே காரை எடுக்க துவங்கினாள். அது மட்டுமில்லாமல், ‘இந்த மாதிரி காரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவது நன்றாகத் தான் இருக்கிறது.’ என்று ஒரு நாள் ராம் சொன்னதும் அவளுக்கு காதில் கேட்டுக் கொண்டே இருக்க, அவனை தான் இருக்கும் பொழுது காரை ஓட்ட விடக்கூடாது என்ற அவளின் எண்ணமும் கூடவே சேர்ந்து கொள்ள, எங்கே சென்றாலும் அவளே காரை எடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.
ராம் வழி சொல்லச் சொல்ல, அவர்கள் கார் ஒரு காட்டுப்பகுதியை நோக்கி சென்றது ஒரு கட்டத்திற்கு மேல் காரில் செல்ல முடியாது என்று கூறினான்.
எனவே, காரில் எடுத்து வந்திருந்த சில பொருட்களை கையில் எடுத்துக் கொண்டு, அங்கேயே காரை நிப்பாட்டி விட்டு இருவரும் நடந்தே சென்றார்கள்.
சிலுசிலுவென காத்து, எங்க பார்த்தாலும் பச்சை பசேல் என்று உடலுக்கும் கண்ணிற்கும் குளிர்ச்சியாக இருந்தது அந்த இடம்.
“இந்த இடம் செமையா இருக்குப்பா இத எங்க புடிச்சீங்க?” என சாத்வி கேட்க,
“செய்யணும் நினைச்சா எப்படி ஆச்சு செஞ்சுடுவேன். நீ சொன்னா மாதிரி இந்த இடம் சூப்பரா தான் இருக்கு. ஆனா இந்த இடத்துக்கு நம்ம வரல. இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி போனா, இன்னொரு இடம் இருக்கு அங்க தான் நம்ம போகப் போறோம்.”
“இதுவே சூப்பரா இருக்கு இன்னும் தூரம் போன என்ன இருக்கும்?”
“போனா தெரியப்போகுது.”
“ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறீங்க பரஸ்.” என அவள் கூறவும் சிரித்துக் கொண்டான்.
சிறிது தூரம் நடந்து சென்ற பின், அவன் சொன்ன அந்த இடம் வந்தது. முழுவதுமாக கொடிக்கள் சூழ்ந்து இருக்க அந்த கொடிகளை விலக்கிப் பார்த்த சாத்வியின் வாய்ப்பிளந்து, கண்கள் விரிய, பிரமிப்புடன் அதை பார்த்தாள்.
“வாவ்!” என வாய் திறந்து கூறியவள் இவனை திரும்பி பார்த்தாள்.
“பிடிச்சிருக்கா?” மிக மென்மையாக அவன் கேட்க,
“ம்…” என்றவள் சற்றும் தாமதிக்காது அதை நோக்கி சென்றாள்.
அது ஒரு நீர்வீழ்ச்சி மலை உச்சியில் இருந்து நீர் அழகாக ஊற்றியது. நீரூற்றும் வேகத்தில் அதன் கீழ் ஒரு அழகிய குளத்தை உருவாக்கி இருந்தது அது.
அதைவிட விசேஷமான விஷயம் என்னவென்றால் அந்த நீர்வீழ்ச்சியை சுற்றி மலை சூழ்ந்து இருக்க அங்கே கொடிகள் முழுவதுமாக படர்ந்து அந்த நீர்வீழ்ச்சியை மறைத்திருந்தது. அந்த கொடிகள் இயற்கை திரைசிலையாக அந்த நீர்வீழ்ச்சியை மறைத்து இருக்க, இப்படி ஒரு இயற்கை சூழலை பார்த்த சாத்வி தன்னை மறந்திருந்தாள்.
வேகமாக நீரை நோக்கி சென்றவள் அதனுள் பாய, ராம அங்கிருந்த ஒரு பாறை மேல அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நீரை கண்டவுடன் குழந்தையாய் மாறி, குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அவள்.
அவ்வளவு நேரம் சாதாரணமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் நீரில் இறங்கி அவள் விளையாடியதும் நீரில் நனைந்த அவளை பார்க்க அவன் பார்வை மாற்றம் கொண்டது.
வழக்கம் போல ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு ஷார்ட் குர்த்தாவும் போட்டுக் கொண்டு வந்திருந்தாள் அவள். அந்த மெலிதான குர்தா நீரில் நனைந்தயுடன் அவளின் அழகை அப்பட்டமாக காட்ட, இவனின் பார்வை கணவனின் பார்வையாக மாறியது.
எவ்வளவுதான் முயன்றும் தன் பார்வையை மாற்ற இயலவில்லை இவனால். அவள் தனக்கு உரிமையானவள் என்ற எண்ணம் மனதில் எழ, பார்வையை மாற்றவும் தோன்றவில்லை அவனுக்கு.
நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தவளின் மேனி முழுவதுமாக நீர் துளிகளால் நிரம்பி இருந்தது. பார்ப்பதற்கு பணியில் நனைந்த பூவாய் தெரிந்தால் அவள்.
நீரில் விளையாடுவது மிகவும் பிடித்திருக்கவே அதிலேயே கவனமாக இருந்தவள் தன்னுடன் ஒருவன் வந்தான் என்பதை நினைவில் கொண்டு வருவதற்கு சிறிது நேரம் பிடித்தது அவளுக்கு. நினைவு வந்த பின் அவனையும் விளையாட அழைக்கலாம் என்ற எண்ணத்தில் திரும்பி பார்க்க அப்பொழுது தான் அவன் பார்வையை உணர்ந்தாள் பாவை.
உணர்ந்த பின் அவளால் சகஜமாக இருக்க முடியவில்லை. அவள் பார்த்த பிறகும் கூட அவன் பார்வையை அவன் மாற்றிக் கொள்ளவில்லை.
பெண்மைக்கே உரிய நாணம் அவளை முழுவதுமாக ஆக்கிரமிக்க, அதற்கு மேல் அந்த நீரில் விளையாட முடியாமல். அதிலிருந்து வெளிவரவும் முடியாமல் தயங்கிக் கொண்டு நீரிலேயே மூழ்கி இருந்தாள்.
நீரில் மூழ்கியபடி தன்னைப் பார்ப்பதும் நீரை பார்ப்பதுமாக இருந்த பெண்ணை கண்ணெடுக்காமல் பார்த்தான். நெற்றியில் சொட்டிய நீர் துளி பயணித்த இடங்களுக்கு அவன் பார்வையும் பயணித்தது. அவளின் இமைகள், மூக்கு, ரோஜாக்கலாய் சிவந்திருந்த அந்தக் கண்ணம், உதடு என பயணித்தவன் அப்பொழுது தான் அதை கவனித்தான்.
நீரின் குளுமையும், அந்த மாலை நேரத்தில் சிலு சிலுவென்ற காற்றும், அவர்கள் இருந்த அந்த காட்டின் குளுமையும், என அனைத்தும் சேர்ந்து சிறிது நேரத்தில் அவளை நடுங்கச் செய்தது.
அவள் உதடு நடுங்க ஆரம்பிக்கவும் தான் அவளின் நிலையை உணர்ந்து கொண்டான் ராம்.
உணர்ந்து கொண்டவன் தன்னையே நொந்துக் கொண்டு தான் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றினான். உள்ளே ஒரு டி-ஷர்ட்டும் அதற்கு மேல் ஒரு சட்டையும் அணிந்து வந்திருந்தவன் டி-ஷர்ட்வுடன் அவளை நோக்கி சென்றான்.
அவனின் மேல் சட்டையை அவளிடம் நீட்ட அதை போட்டுக் கொண்டவளை இறுக்கமாக அனைத்தப் படி நீரை விட்டு வெளியில் அழைத்து வந்தவன் பின், மெதுவாக அவளை அப்படியே அனைத்தப்படி கார் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான்.
காரில் ஏசியை ஆன் செய்யாமல் ஜன்னலை திறந்து விட்டவன் அவள் புறம் திரும்பவே இல்லை. தானே டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்ட துவங்கினான்.
சிறிது நேரத்தில் அந்தப் புறம் திரும்பிப் பார்க்க, அவள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆனால் உடலின் நடுக்கம் நிற்கவில்லை. சிறிது தூரத்தில் அவர்கள் தங்கி இருந்த இடம் வர, அவளை எழுப்ப முயன்றான்.
சும்மாவே இவ்வாறு தூங்கி விட்டால் அவளை எழுப்ப முடியாது. அதுவும் இப்பொழுது குளிரும் சேர்ந்து கொள்ள, அவனின் சூடான கரங்களை நன்றாக தன் கன்னத்தில் அழுத்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள் சாத்வி.
இவனோ தன் உணர்வுகளை அடக்க போராடிக் கொண்டிருந்தான். அவளின் நிலை அவனை வேறு எதுவும் யோசிக்க விடாமல் தடுத்தது.
விடாப்படியாக அவளை எழுப்பி பொறுமையாக மாடிக்கு அழைத்து சென்றான். அறையில் அவளை விட்டு விட்டு,
“ஈர டிரஸ சீக்கிரமா மாத்து சது.” என்றவன் வெளியே செல்ல,
அவசரமாக அந்த ஈர உடைகளை களைந்து வேறு உடைக்கு மாறினாள். கதவு திறக்கும் ஓசை கேட்டவுடன் அவன் கையில் வைத்திருந்த ட்ரையருடன் உள்ளே வந்தான்.
“இங்க வா.” என அவளை அழைத்தவன் அருகில் இருக்கும் நாற்காலியில் அவளை அமரச் சொல்லிவிட்டு அவள் முடிக்கு ட்ரையர் போட்டு விட்டான்.
ட்ரையரில் இருந்து வந்த சூடான காற்று அவ்வளவு இதமாக இருந்தது அவளின் அந்த குளிர்ந்த உடலுக்கு.
“சாரி என்னால தானே.” என அவன் பேச்சை துவங்க,
“உங்களால இல்ல பரஸ் என்னால தான்.” என்றாள் சாத்வி.
“உன்னாலயா?”
“ஆமா நான் இப்படி எல்லாம் ஃபீல் பண்ணதில்லை எங்க இருந்துதான் திடீர்னு அவ்ளோ வெட்கம் வந்துச்சோ தெரியல. ஆல்ரெடி நீங்க ஒரு மாதிரி பாத்துட்டு இருந்தீங்களா இதுல அதே ஈர ட்ரெஸ்ஸோட உங்க பக்கத்துல வரத்துக்கு ஒரு மாதிரி ரொம்ப கூச்சமா இருந்துச்சு. அதான் அப்படியே தண்ணிளையே இருந்துட்டேன்.”
“அப்படி பாத்தாலும் அது என்னால தானே? அது என்னவோ தெரியல உன்கிட்ட என்னோட கண்ட்ரோல் மிஸ் ஆகிட்டே இருக்கு. நான் எவ்வளவு ட்ரை பண்ண பாக்க கூடாதுன்னு ஆனா முடியல ஐ அம் சாரி.” தன்னால் அவள் இவ்வளவு நடுக்குகிறாளே என்ற வருத்தத்தில் கூறினான் அவன்.
“அப்படி மாத்திக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே? நான் உங்க வைஃப்.” என்றாள் சாத்வி எங்கோ பார்த்தபடி.
“அது மட்டும் போதுமா?” என்ற ராமை கண்ணாடியின்னூடே பார்த்தால் அவள்.
மனம் கொள்ளை போகுமா…