- Joined
- Nov 5, 2021
- Messages
- 592
- Reaction score
- 1,073
ஏதும் பேசாமல் தீராதினி..
உச்சி வெயிலில் நின்று கொண்டிருந்த ஜானுவிற்கு எரிமலை போல தலையே வெடித்து விடும் போலிருந்தது.. வெப்பம் எல்லாம் காரணமில்லை.. மனது அவளுக்கு விதிக்கும் கப்பங்கள் தான் காரணம்..
மேலும் கோபப்படுத்தாமல் டப்பா பஸ்ஸும் வந்துவிட்டது.. எப்போதும் போல யாருமேயில்லை.. கோவில் திருவிழா முடிந்த மைதானம் போல காட்சி தந்த இருக்கைகள் மயானமாய் இருந்திருக்கலாம்..
ஜன்னலோரமாய் சாய்ந்து ஹெட்போனை துழாவும் சமயத்தில், “கண்ணே கலைமானே..” பாடல் ஒலித்தத்தில் அவனின் முகமே நினைவிற்கு வந்தது..
தர்ஷன்.. பேரழகன் இல்லையென்றாலும் ஊர் பெண்கள் பேசிட துடிக்கும் உள்ளூர் அழகன்.. பார்த்த மாத்திரத்திலேயே பஜக்கென ஒட்டிக்கொண்டான்.. கல்லூரி காலங்களில் முதலில் நட்பாக தொடங்கி காதலில் கொணர்ந்து முடித்தது..
முதல் மூன்று மாதங்கள் மல்கோவா மாம்பழம் போல அத்தனை தித்திப்பு.. செல்ல திட்டுக்களும் குட்டி கொஞ்சல்களும் எப்போதாவது ஊருக்கே தெரியும் சண்டைகளும் எப்பொழுதுமே ஒட்டிக்கொண்டிருக்கும் புத்தக பைகளும்.. காதலர்கள் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாய் ஒன்றி விட்டனர்..
பிரச்சனையே பர்த்டே பார்ட்டிகளில் தான் தொடங்கியது.. பாதுகாப்பு என்று அவன் நடத்தும் அக்கறைகள் ஒருகட்டத்தில் கழுத்தை நெறிப்பது போலிருந்தது..
“ப்ரொடெக்டிவ்வா இருக்குறேன்னு சொல்ற பாதி பசங்க ஓவர் பொசசிவ்னஸ்ல தான் மாட்டியிருக்குறாங்க..” என பாத்ரூம் கிசுகிசுவில் கேட்டதும் சுர்ரென தலைக்கு ஏறியது..
அவளின் வாழ்க்கையில் ‘பொசசிவ்னஸ்’ என்ற வார்த்தைக்கு மதிப்புமில்லை.. இடமுமில்லை..
“பொசசிவ்னஸ் ஒரு சிவி பேய் மாதிரி.. மேல ஏறி உக்கார்ந்து பிடிச்சு ஆட்டிடும்..” என்பாள் பிடிக்காத முகபாவம் காட்டி..
ஆனால் தர்ஷனோ, “லவ்னா எல்லாமே சேர்ந்தது தான் ஜானு.. வித்தியாசமான ரெண்டு பேரை நிமிஷத்துல சேர்த்து வைக்கும்..” என புரிய வைக்க முயன்று பிரிவில் முடிந்து விடகூடாது என்பதால் அளவோடு நிறுத்தி கொள்வான்..
பேசி தீர்க்காமல் விட்டதினால் பெரிய பூகம்பமாய் வெடித்தது ஒருநாள்.. “இவ்ளோ அடமென்ட்.. எங்க இருந்து வந்துச்சு ஜானு.. நமக்குள்ள எப்பவுமே நான் தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்.. ஒரு இன்ச் கூட எனக்காக நீ எதுவும் செய்ய போறதில்லை.. ரிலேஷன்ஷிப்ல நான் மட்டுமே சின்சியரா இருக்குற மாதிரி இருக்குது.. அட்லீஸ்ட் ஒன் பெர்சென்ட் கூட நம்மளை பத்தி யோசிக்குறதே இல்லை.. எல்லாமே நான்.. நான்.. செல்பிஷ்..” என பொறுமையிழந்து கத்திவிட்டான் தர்ஷன்..
“செல்பிஷ்னு தெரிஞ்சு தானே லவ் பண்ணுன தர்ஷன்.. ப்ரொபோஸ் பண்றதுக்கு முன்னாடியே என்னை பத்தி கம்ப்ளீட்டா தெரியும்ல.. அப்பவே யோசிச்சிருக்கலாம்ல..” என பொறுப்பேயின்றி பதிலுறுத்தாள் ஜானு..
“யோசிக்கலையே.. பாழா போன காதல் கண்ணை மறைச்சிடுச்சு.. ஒரு பிரெண்டா இந்த கேரக்டர்ஸ் எதுவும் நெகட்டிவ்வா தோணலை.. ஷி இஸ் மைன்னு சொல்லும் போது தானே எக்ஸ்பெக்டேஷன்ல வந்து நிக்குது.. டூ இயர்ஸ்... டூ இயர்ஸா குட்டி குட்டி எக்ஸ்பெக்டேஷனோட உன்னை சுத்தி வந்துருக்குறேன் ஜானு.. பட் இது எதுவுமே உனக்கு தெரியாது.. ஏன்னா உன்னோட சோஷியல் லைப் தான் முக்கியம் இல்லையா??” என குற்றங்களை முன்வைத்தான் அவன்..
மூக்கிற்கு மேலே கோபம் ஏற, “ஹே, டூ இயர்ஸ் உன்னை வெயிட் பண்ண சொன்னேனா?? செட் ஆகலைன்னு தெரிஞ்சா ப்ரேக்அப்னு சொல்லிட்டு போ.. இருந்தாலும் கேர்ன்ற பேருல கேவலமா சந்தேக புத்தியோட கூடவே சுத்தியிருக்க வேணாம்.. ப்ரேக்அப் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டு அதுக்கு ஒரு சாக்கு..” அலட்சியமாய் முகத்தை திருப்பி கொண்டாள்..
மொத்த பொறுமையும் காற்றோடு கரைந்திட, “போதும்.. இதோட எல்லாம் போதும்.. உன் முகத்துல முழிச்சா அந்த இடத்துலேயே என்னை செருப்பால அடி...” என கோபத்தில் கத்திவிட்டு கடக்க முயன்றவன், “ஆனா ஒரு விஷயம்.. ப்ளேம் பண்ணினது ப்ரேக்அப் பண்ணிக்குறதுக்காக இல்லை.. அப்படியாவது யாருக்கிட்ட எப்படி நடந்துக்கணும்?? யாரு வாழ்க்கையில முக்கியம்னு புரிஞ்சிப்பன்னு தான்..” என மூக்கை தேய்த்து கொண்டான்..
சென்றவனின் முதுகை வெறித்த ஜானு, “போ.. யாருக்கு வேணும்?? இப்ப இருந்து என்னோட ப்ளாக்லிஸ்ட் ட்வென்டியா மாறுது.. அவ்ளோ தான்.. அன்ப்லாக் பண்றேன்னா மேரேஜ் இன்விடேஷன் அனுப்புறதுக்காக மட்டும் தான்..” என பதிலுக்கு சவால் விட்டவளுக்கு எந்நேரத்திற்கு எந்த உணர்வுமேயில்லை..
காதல் தோல்வியில் ஏற்படும் பிசையும் மனது, சிரமப்படும் சுவாசம், ரணமாய் கொதிக்கும் இதயரத்தம், பசிக்காத இரைப்பை போன்ற எந்த அறிகுறியும் தெரியவில்லை.. சொல்லபோனால் எப்பொழுதும் போல விடிந்தது அவளது காலை.. தலை மீது அழுத்திய பாரம் நீங்கி சிறகில்லாமல் பறப்பது போலிருந்தது..
‘தர்ஷன் முகத்துல இருந்த சந்தோசமே போயிடுச்சு..’ ‘பாவம் அவன், ஒரு லவ்வுனால எப்படி இருந்த பையன்..’ என்று சகாக்கள் பேசுவதை கேள்வியுறுவாள்.. பெரிதாய் எடுத்து கொள்வதில்லை.. யாரவன்?? என்ற அலட்டல் தான்..
ஃபேர்வெலின் போது கூட கல்லூரியின் கடைசி மூலையில் ஆண்களும் பெண்களுமாய் நின்று கலர்பலூன்கள் அடித்து விளையாட, பார்த்த மாத்திரத்திலேயே திரும்பி கொண்டாள்.. என்னவோ அதை பார்க்க பிடிக்கவில்லை..
அடுத்தடுத்து வாழ்க்கை வட்டசக்கரத்தை கட்டிக்கொண்டு சுழல, பெருசுழலில் மாட்டிக்கொண்டாள்.. மணிகணக்காய் பேசும் நண்பர்களின் அழைப்பு இல்லை.. வாரம் இருமுறை அசைவத்திற்காக ஹோட்டல் செல்லும் பணசேகரிப்பு இல்லை.. மாதகடைசியில் சொதப்பும் சுற்றுலா திட்டங்கள் இல்லை..
எதுவுமே இல்லை.. சமுதாயத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு வேலை.. யாரையும் சார்ந்து வாழாத நிலை.. சொல்லபோனால் யாரையும் அணுகாத அர்த்தமற்ற வாழ்க்கை.. இது போதாதா?? போதும் தான்.. ஆனால் இதுதான் வாழ்க்கையா?? என்ற கேள்வி எழும்பியது..
வேளாவேளைக்கு வயிற்றை நிரப்ப வருமானம் வேண்டி ஒவ்வொரு நாளும் ஒரே வேலை.. சலிப்பை தாண்டி வெறுமை வந்து ஒட்டிக்கொண்டது.. ஜன்னலோர இருக்கையில் இளையராஜா பாடல் காதில் ஒலிக்க தென்றல் காற்று தழுவி சென்றும் உணரில்லை..
வறட்சியான வாழ்க்கை.. ம்ஹும்.. எண்ணும்போதே எரிச்சல் மண்டியது.. மெதுவாய் பக்கவாட்டு இருக்கையை பார்த்தாள்..
ஊட்டி செல்லும் போது, ஜன்னலின் அழகில் லயித்து தர்ஷன் கூறிய ஆயிரமாயிரம் கதைகளோடு சேர்த்து ஜேசுதாசின்
“உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே..
நீ இல்லாமல் எது நிம்மதி..
நீதான் என்றும் சந்நிதி..” குரலும் தாலாட்ட, அப்படியே உறங்கியிருந்தாள்..
மீண்டும் கண்விழிக்கையில் போர்வை போர்த்தி தலையணையாய் தன்னுடைய தோள்களை தந்திருந்தான் தர்ஷன்.. அவனறியாது தஞ்சம் தந்த கையை நெஞ்சோடு அணைத்து இரவு முழுவதும் துயில் கொள்ளும் அழகை ஒயிலாய் வேடிக்கை பார்த்ததெல்லாம் பசுமையான நினைவுகளாய் தேங்கி நின்றது..
‘ச்சே.. தப்பு பண்ணிட்டோமோ??” என தொடங்கிய யோசனைகள், “அட்லீஸ்ட் ஒரு சாரியாவது கேட்கணும்..” என்ற தீர்வில் கொண்டுபோய் நிறுத்தியிருந்தது.. முதல்முறையாக ப்ளாக்லிஸ்டை திறந்து அன்ப்ளாக் செய்கிறாள்.. வேண்டுமென்ற விருப்பத்தினால்..
ஆனாலும் சுயமரியாதை என்ற ஒன்று எதற்காக இருக்கிறது?? கொஞ்சமாய் இறங்கி வந்தாலும் அதையும் இதயுமாய் கூறி ஏற்றிவிடுவதற்கு தானே.. சுயமரியாதையை மீறினாலும் மனசாட்சி, “சாரி சொன்னா நடந்ததெல்லாம் மாறிடுமா??” என்று மிரட்டியது..
“சப்போஸ் இன்னும் அவனுக்கு கோபம் இருந்தா?? இத்தனை வருஷத்துல கோஇன்சிடேன்டா கூட மீட் பண்ணிக்கலியே.. மொத்தமா அவாய்ட் பண்ணனும்னு தானே..” பட்டிமன்றங்கள் பல நடத்தி இறுதியாய் முடிவு வந்தாள்..
தர்ஷனோடு பல்லி வால் போல ஒட்டிக்கொண்டு திரியும் பசுபதி இன்னும் காண்டாக்டில் தானே இருக்கிறான்.. உடனே, “ஹாய்..” என அனுப்பிவிட்டாள்.. நலவிசாரிப்புக்கே இரண்டு பக்ககங்கள் வீணாகிட, “உன் பிரெண்ட் எப்படி இருக்குறான்??” என இரண்டு மூன்று பேக் ஸ்பேஸ்க்கு பிறகு கேட்டாள்..
“ம்ம்.. நல்லா இருக்குறான்.. எதுவும் விஷயமா??” என விசாரித்தவனிடம், “இல்ல.. சும்மா தான்.. கேட்டேன்.. வேற ஒண்ணுமில்லை..” என பேச்சை சுருக்கி கொண்டாள்.. அடுத்த கேள்வி கேட்கும் முன்பே டேட்டாவை ஆப் செய்துவிட்டாள்..
என்ன ஒரு மடத்தனம்.. இவ்வளவு கேவலமாக வாழ்க்கையில் எந்த படிநிலையிலும் சொதப்பியதே இல்லை.. கண்களை சுருக்கி நெற்றியில் அடித்து கொண்டாள்..
மீண்டும் யோசித்திட கூடாது என்பதில் தெளிவாய் ஹெட்போனில் காதை நுழைத்து கண்களை மூடிக்கொண்டாள்..
பாலைவனத்தில் பயணிப்பது போல பைய நகர்ந்து கொண்டிருந்த பஸ்ஸில் யாரோ பக்கத்தில் உட்காருவது போலிருக்க, மெல்ல கண்விழித்தாள்..
கண்கள் நம்பமறுத்தது.. குறுந்தாடி வைத்திருந்த கல்லூரி மாணவன், முறுக்கு மீசையும் அடர் தாடியும் கொண்டு ஆறடி ஆடவனாய் அமர்ந்திருக்கிறான்.. பார்த்த அடுத்த நிமிடத்தில் சட்டென திரும்பி கொண்டாள்..
இதயம் வேகமாய் அடித்து கொள்கிறது.. பயமா பரவச நிலையா?? என யோசிப்பதற்கெல்லாம் நேரமில்லை.. ஆனால் முகத்தை நேருக்கு நேர் நோக்க முடியாத நோய் ஆட்கொண்டிருந்தது..
“ஹலோ.. நீங்க பார்த்ததை நான் பார்த்துட்டேன்.. யாரையோ பார்த்த மாதிரி பாக்குற ட்ராமா எதுவும் பண்ணாதீங்க..” என்றவனின் குரல் கேட்கும் போது வயிற்றிற்குள் ஏதோ செய்தது..
“முகத்துல முழிச்சா அதே இடத்துல செருப்பால அடின்னு யாரோ சொன்னாங்க..” எனும் போது இதயம் தாறுமாறாய் துடித்து கொண்டிருந்தது.. இதற்கு தான்.. இதற்காக தான்.. இருவருமே பிரிய நேர்ந்தது.. வாய் சரியில்லை..
“மேரேஜ் இன்விடேஷன் அனுப்புறதுக்காக அன்ப்ளாக் பண்ணின அடமென்ட் ஜானு சென்ட் மறந்துட்டாங்கன்னு சொல்றதுக்காக தான் வந்தேன்..” என்று போனை காட்டி என்னவோ இயல்பாக தான் பேசுகிறான்.. ஆனால் நெருஞ்சி முள்ளாய் இவளுக்கு தானே தைக்கிறது..
அவ்வார்த்தையில் முகம் வாடிட, எதுவும் பேசாமல் ஜன்னலை வேடிக்கை பார்த்தாள்.. அவனுடைய பார்வையிலிருந்து தப்பிப்பதற்கான பாசாங்கு.. நடுக்கத்தில் விரலை கடித்து கொண்டிருந்த கையை மெல்ல அகற்றி தன் கையோடு கோர்த்து கொண்டான்..
வெறுமை விரக்தியில் நகர்ந்து கொண்டிருந்த வேதனையான வாழ்க்கையில் முதல்முறை அவனின் ஸ்பரிசம் பெரும் ஆறுதலாக இருந்தது.. “நான் விட்ட சவாலுக்கு நீ விட்டது சரியா போச்சு.. ஈக்குவளா முடிஞ்சிருச்சு.. இப்ப பிரெஷ்ஷா ஸ்டார்ட் பண்ணலாம்..” என்று கைகளில் முத்தமிட, மூச்சு வரவில்லை..
பதற்றமில்லாமல் முகவாயை சுட்டுவிரல் கொண்டு நிமிர்த்திடும் போது மூக்கு சிவக்க, கன்னங்களை சுருக்கி கொண்டிருந்தாள் அவள்.. “ஜானு..” என தொடங்கும் முன்பே நெஞ்சில் புதைந்து விட்டாள்..
காதல் தந்த ஏக்கம்.. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.. கண்ணீர் தாரை தாரையாய் கொட்டுகிறது.. துடைக்க வழியில்லை.. நெஞ்சில் சாய்ந்து குலுங்குகிறாள்.. தேற்ற வழியில்லை.. முதலில் தயங்கிய கரங்கள் தயவாய் தோள்களில் பதிய, கண்ணீர் நெஞ்சை நனைத்தது..
அவனுக்கு தெரிந்த ஜானு இப்படியில்லை.. வருத்தமோ சோகமோ சம்பந்தமேயில்லாமல் தன்னை திட்டிவிட்டு திருப்தி படுத்திகொள்வாள்.. ஆனால் இப்படி நிறுத்தாமல் கதறி அழுவது இதுவே முதல்முறை என்பதால் எப்படி கையாள்வது என தெரியாது விழிபிதுங்கி நின்றான்..
நெஞ்சிலிருந்த பாரம் அனைத்தும் தீர அணைத்து கரைந்தவள், விலகும் போது கண்ணிலிட்ட மை தாறுமாறாய் கலைந்திருந்தது.. சிவந்த முகத்தில் கைகுட்டையால் அழுந்த துடைத்து மூக்கை உறிஞ்சி கொண்டாள்..
எங்கோ நோக்கியவளை அவன் சில நிமிடத்திற்கு ஊடுருவ முயற்சித்து கொண்டிருக்க, மௌனமாய் நொடிகள் கடந்தது.. பக்கவாட்டில் வீசிய பலத்த காற்றும், பஸ்ஸிற்குள்ளே நடந்த கண்டக்டரின் செருப்பு சத்தத்தையும் தவிர வேறொன்றுமில்லை..
அவளாகவே ஆசுவாசப்படுத்தி திரும்ப, “பயமா??” என மெல்லிய குரலில் கேட்க, “ம்ம்..” என்றவள் உதட்டை கடித்துக்கொண்டாள்.. “ம்ஹ்ம்..” என புன்னகைத்தபடியே எங்கோ பார்த்தவனின் தொண்டைக்குள் எச்சில் கவளம் இறங்கியது..
யாருக்கு தான் கிடைக்கும்.. இப்படி கல்நெஞ்சக்கார காதலியின் காதலை கண்கூடாக காணும் பாக்கியம்.. ஆனந்த கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்க, உள்வாங்கியவள் சாதாரணமாக இருப்பது போல சமாளித்தான்..
“ஹே லூசு, பிரிஞ்சு பதினெட்டு மாசம் இருக்குமா??” என கேட்க, குழப்பத்தோடு தலையசைக்காமல் அவனையே நோக்கியிருந்தாள்.. “மாசம் என்ன வருஷமே ஆனாலும் இந்த பொசசிவ்னஸ் பேய் போகாது.. முதுகுல ஏறுன வேதாளம் மாதிரி..” என குறும்பாய் கண்ணசைக்க, கண்தட்டாது பார்த்து கொண்டிருந்தாள்..
“ஹோய்..” என முகத்திற்கு நேராய் சொடுக்கிட்டு கவனத்தை கலைக்க, “ஸாரி..” என அடக்கப்பட்ட அழுகையோடு பட்டென தோள்களில் சாய்ந்து கொண்டாள்.. “லவ்ல எல்லாமே இருக்கும் ஜானு.. இப்படி..” என தங்களிருவரையும் சுட்டிக்காட்டினான் காதலோடு..
ஆயிரமாயிர காதல்வர்ணத்தில் கரைத்தாலும் கண்மணியே
நின்விழி காட்டும் வர்ணஜாலங்களில் கரைந்திட்டேன்..
காலம் பிரித்திடா நம்காதல் கிலோமீட்டரில் கடந்திடுமோ??