மனம்️22
பாலி மர வீடு!
“அது மட்டும் போதுமா?” என்ற ராமின் கேள்வியை நிச்சயம் விரும்பினாள் சாத்வி.
“வேற என்ன வேணும்?” அவள் எதிர்பார்த்தது அவனும் கூறுவானா என கேட்டாள் அவள்.
“நாம ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும் எல்லாம் தானா நடக்கணும்.” இந்த பதிலை தானே அவளும் எதிர்பார்த்தாள் அந்த மட்டும் அவன் மேல் மரியாதை வந்தது. அதுமட்டுமின்றி தான் பேசிய விதத்தில் வெட்கம் வேறு வந்து தொலைத்தது.
எதிரே கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தை பார்த்தான். அதில் குடி கொண்டிருந்தது வெட்கமும் தயக்கமும் மட்டுமே வெறுப்பு அதில் துளி கூட தெரியவில்லை. திடீரென அவன் மனதிற்குள் உதித்தது அந்த கேள்வி அதைக் கேட்டும் விட்டான்.
“ஆமா உண்மையா எதுக்காக என்ன கல்யாணம் செய்ய சம்மதிச்ச?”
“உண்மைய சொல்லனும்மா?”
“நிச்சயமா?”
“கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கு போற மாதிரி இருக்கும் பரவாயில்லையா?”
“நாம எந்த பெரிய வெட்டி முடிக்கிற வேலைக்கும் வரல ஹனிமூன் தான் வந்து இருக்கோம் நிறைய டைம் இருக்கு தாராளமா ஃப்ளாஷ் பேக்குக்கு போயிட்டு வரலாம்.” எனக்கூறியவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து, அவளின் தோள் மேல் கை போட்டு தன் அருகில் அனைத்துவாறு இழுத்துக் கொண்டான். ஏனோ அந்த நேரம் அவளுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது அதை அவளும் தடுக்கவில்லை.
“நான் சொல்றது உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம் நம்ப முடியாதா கூட இருக்கலாம் ஆனா அது தான் உண்மை.” என்ற பீடியுடன் அந்த பழைய நினைவுகளுக்குள் சென்றாள் சாத்வி.
பழைய நினைவுகள்!
அப்பொழுது சாத்வி மிகவும் சிறிய பெண் பரசுராமின் தந்தை தேவராஜ்க்கு சாத்வியின் தந்தை மாணிக்கத்தின் மேல் மிகவும் மரியாதை அதிகம்.
காரணம் முன்பே சொன்னது போல் மாணிக்கம் தான் இவர்களின் தொழில் முதல் முதலில் உருவாக உதவிய மனிதர். அந்த நன்றி கடன் எப்பொழுதுமே தேவராஜுக்கும் ரத்தினசாமிக்கும் உண்டு.
மாணிக்கம் அவரின் தொழில் ஜாகையை தூத்துக்குடிக்கு மாற்றி இருந்தார். காரணம் அவரின் தாய் தந்தையின் ஊர் அதுதான். அவர்களின் கடைசி காலத்தில் அவர்கள் இவர்களுடன் இருக்க பிரிய படவே முதலில் தாய் தந்தையை சென்னைக்கு அழைத்துப் பார்த்தவர் அவர்களுக்கு அந்த ஊரை விட்டு வர விருப்பமில்லை என்றவுடன் தன் மனைவி குழந்தையுடன் அங்கே சென்று விட்டார்.
ஒருமுறை வியாபார விஷயமாக தூத்துக்குடிக்கு சென்ற தேவராஜ் எதிர்பாராமல் மாணிக்கத்தை சந்தித்தார். அவரைப் பார்த்தவுடன் அவருக்கு சந்தோஷம் தாளவில்லை.
“எப்படி இருக்கீங்க மச்சான்?” என ஆவலாய் கேட்டார் மாணிக்கம்.
“நான் நல்லா இருக்கேன் மச்சான் நீங்க எப்படி இருக்கீங்க?” என பதிலுக்கு விசாரித்தார் தேவராஜ் அதில் மகிழ்ச்சி நிறைவே இருந்தது.
இருவருமே ஒருவரை ஒருவர் மச்சான் முறை வைத்து அழைத்துக் கொள்வதே ஆதிகாலத்து பழக்கமாய் இருந்தது. அதிலும் இந்த வியாபாரத்தில் இந்த அளவு தேவராஜ் ரத்தினசாமியும் முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற்காரணம் மாணிக்கம் தான். அந்த நன்றி எப்பொழுதுமே இவருக்கு உண்டு.
பண தேவை என்பது அவர்கள் தொழில் தொடங்குவதற்கு மிகவும் கம்மியாக தான் இருந்தது. ஏனென்றால் அவர்களும் பரம்பரை பணக்காரர்கள்தான் எனவே, பணம் பெரிய பிரச்சினையாக இல்லை ஆனால் தொழிலின் நெளிவு சுளிவு என அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் மாணிக்கம் தான்.
முதல் முதலில் தொழில் என்று ரத்தினசாமி மற்றும் தேவராஜன் தான் அந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். எனவே, முதன் முதலில் அந்த வியாபாரத்தை நிலைப்படுத்த மாணிக்கத்தின் தேவை அவர்களுக்கு அதிகமாக இருந்தது.
மாணிக்கமும் எந்த பொறாமையும் எந்த அலட்சியமும் காட்டாமல் அவர்களுக்கு தொழிலைப் பற்றி நிறையவே சொல்லிக் கொடுத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தொழிலுக்கு தேவைப்படும் மீதி இருந்த பணத்தையும் அவர்களுக்கு கொடுத்தார். அதை தொழில் நன்றாக சென்ற பின் அவருக்கு திருப்பி விட்டார்கள். இருந்தாலும் அந்த நேரத்தில் அந்தப் பணமும் இவரின் தொழிலை பற்றிய அறிவும் இவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
எனவே, மாணிக்கத்தை பார்த்ததில் தேவராஜன் உண்மையாகவே சந்தோஷமாக இருந்தார். அவரை வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து விருந்து படைத்தார் மாணிக்கம்.
பரிமளாவும் அண்ணா அண்ணா என்று பாசமாகவே இருந்தார் அவர் மட்டுமல்ல அப்பொழுது சாத்வி ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுமி தான். ஆனால் தன் தந்தை மாமாவேன அறிமுகப்படுத்திய தேவராஜை மிகவும் பிடித்து விட்டது அவளுக்கு.
அவளை கண்ணம்மா கண்ணம்மா என்று மிகவும் கொஞ்சினார் அவர்.
அப்பா அம்மா இருவருக்குமே மிகவும் ஸ்ட்ரெட் ஆக இருப்பார்கள் அதே நேரத்தில் பாசம் இருக்க வேண்டிய இடத்தில் பாசமும் இருக்கும் என்றாலும் இந்த மாதிரியான கொஞ்சல்கள் அவளுக்கு புதிதாக இருந்தது. அதனாலேயே அவரை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது.
அங்கே ஒரு உப்பலாம் விலைக்கு வந்திருந்தது எனவேதான் அதை முடிக்கலாம் என்று வந்திருந்தார் தேவராஜ். சாதாரணமாகவே உப்பை பேக் பண்ணி அனுப்பலாம் என்றாலும் அவர்கள் தயாரிக்கும் ரெடிமேட் மாவு மசாலா பொருட்களுக்கும் அந்த உப்பு தேவைப்பட்டது. எனவே, மொத்தமாக ஒரு ஆலையை தாங்கள் எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கு என்பது ரத்தினசாமி தேவராஜ் இருவரின் விருப்பமாக இருந்தது.
தான் வந்த வியாபார விஷயத்தைப் பற்றி மாணிக்கத்துடன் கலந்து ஆலோசித்தார். அவர் அந்த உப்பாலையம் இவர்களுக்கு கிடைக்கும் படி செய்வதாக கூறினார். அப்படி வாக்கு கொடுத்தபடி அந்த முதலாளி இவருக்கு மிகவும் தெரிந்த மனிதராக இருக்கவே, அவரிடம் பேசி இவர்களுக்கு அந்த உப்பாலையும் வரும்படி செய்தார்.
இதன்பின் அதை கவனிக்க கொள்ள வேண்டி அடிக்கடி தூத்துக்குடி வந்த தேவராஜ் இவர்களின் வீட்டிற்கு போகாமல் வந்ததில்லை.
தனக்கு ஒரு பெண் பிள்ளை இல்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. சாத்வியை பார்க்கப் பார்க்க அந்த ஏக்கம் குறைவது போல் இருந்தது அவருக்கு. எப்பொழுதும் அவள் அவருக்கு கண்ணம்மா தான்.
ஒரு நாள் விளையாட்டாக அவளிடம், “ஏன் கண்ணம்மா பேசாம என் பிள்ளையை கட்டிக்கிட்டு என் வீட்டுக்கு என் கூடவே வந்துடேன்?” அந்த சின்ன பிள்ளையிடம் அவர் விளையாட்டாக கேட்க,
“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு மாமா நெஜமா நான் உங்க கூட வந்துடவா?” என சீரியஸ்ஸாக கேட்ட சாத்வியை பார்த்தவர் சிரித்துவிட்டார்.
“நிச்சயமா என் கூட வரலாம் கண்ணம்மா ஆனா இப்ப இல்ல நீங்க நல்லா படிக்கணும். படிச்சு முடிச்ச உடனே என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களை என் கூட கூட்டிக்கிட்டு போயிடுறேன்.” என்றார் தேவராஜ் ஆசையாக.
அதன்பின் அங்கே வரும் போதெல்லாம் ராமை பற்றிய பேச்சு அடிக்கடி வந்தது. அதிலும் அவன் அப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கவே அவனுடைய படிப்பு எப்படி சொல்கிறது? அது இது என்று மாணிக்கம் அவனைப் பற்றி நிறையவே விசாரிப்பார். இவை அனைத்தையும் சாத்வியும் கேட்டுக் கொண்டுதான் இருப்பாள்.
இப்படியே வருடங்களோட சாத்வி கல்லூரியில் கால் பதித்தாள். அப்பொழுதும் தேவராஜின் போக்குவரத்து இருந்தது.
“என்ன கண்ணம்மா காலேஜ் எப்படி போகுது?”
“அதை ஏன் மாமா கேக்குறீங்க அது ஒரு பக்கம் போகுது நான் ஒரு பக்கம் போறேன்.” என்றாள் சாத்வி.
“என்ன கண்ணம்மா இப்படி சொல்லிட்ட? ராம் என்னடானா அங்க படிப்புல அவன் தான் முதல் நீ என்னடா ஏதோ கடனேனு படிக்கிற மாதிரி சொல்றியேடா.”
“ஏன் மாமா உங்களுக்கு தெரியாது வீட்டில் ஒருத்தர் அப்படி இருந்தா இன்னொருத்தர் இப்படித்தான் இருப்பாங்களாம். ஏன் நான் முதலாவது வந்தா தான் உங்க மகன் என்ன கல்யாணம் பண்ணிப்பாறா?” என அவரிடம் நன்றாக வாயடிப்பாள் சாத்வி.
மாணிக்கமும் பரிமளாவும் கூட இந்த பேச்சு வார்த்தைகளைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் இந்த மூன்று நான்கு வருடங்களாக இப்படித்தான் இருவரும் விளையாடிக் கொள்வார்கள் என்று.
அடுத்து ஒரு வருடம் தேவராஜ்க்கு ஏனோ உடல்நிலை மிகவும் பாதித்தது. முதலில் சுகர், பிபி என்று ஆரம்பித்தது இறுதியில் ஸ்ட்ரோக்கில் வந்து முடிந்தது. மிகவும் அவஸ்தை பட்டு போனார் அவர். இறுதியில் ஹார்ட் அட்டாக் வந்து அவர் உயிரை பறித்து விட்டது.
இந்த விஷயம் மாணிக்கத்தின் குடும்பத்தாருக்கு தெரியாது. கடந்த ஒரு வருடமாக உடல்நிலை காரணமாக அவர் தூத்துக்குடி பயணம் மேற்கொள்ளவில்லை அங்கு இருக்கும் மேனேஜரை வைத்து அந்த ஆலையை பற்றி நிர்வகித்துக் கொள்வார் தேவையென்றால் அர்ஜுனோ ராமோ அங்கே சென்று விட்டு வருவார்கள்.
உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு அதிகமாக கம்பெனியின் பொறுப்புகள் பற்றி அவரிடம் பேசிக் கொள்வதில்லை. ரத்தினசாமி மட்டும் கம்பெனியை பற்றியவரிடம் அவ்வப்போது பேசுவது உண்டு. ஆனால் அந்த தூத்துக்குடி ஆலையை பற்றி பெரிதாக பேச்சு வராமல் போனது. அவரும் உடல் நிலையில் கஷ்டமாக இருந்ததுனால் மாணிக்கம் குடும்பத்தோடு இருந்த போக்குவரத்து கடந்த ஒரு வருடமாக தடைப்பட்டிருந்தது.
தேவராஜ் இறந்து ஒரு வருடம் கழித்து தான் விஷயம் மாணிக்கத்தின் காதுக்கே வந்து இருந்தது.
இதைப் பற்றி அவர் வீட்டில் கூறும்போது சாத்வி மிகவும் வருந்தினாள். தன் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர் அவர். அவருக்கு இப்படி ஆகிவிட்டதே? அதைக் கூட தெரிந்து கொள்ளாமல் நாம் இருந்து விட்டோமே அவரின் இறுதி சடங்குகளில் கூட கலந்து கொள்ள முடியாமல் போனதே என்ற வருத்தம் சாத்விக்கு அதிகமாகவே இருந்தது.
அதன்பின் அவளுடைய போஸ்ட் கிராஜுவேஷனல் அவளுடைய கவனம் திரும்ப, அப்படியே இரண்டு வருடம் கழிந்தது. அவளுடைய தாத்தா பாட்டியின் இறப்புக்கு பின் அந்த ஊரிலிருந்து அவர்களின் தொழில்களின் முக்கிய மேனுஃபாக்சரிங் யூனிட் இருந்த சென்னைக்கு குடும்பம் மொத்தமும் வந்தார்கள்.
அப்பொழுதுதான் ஒரு நாள் எதிர்ச்சியாக கோயிலுக்கு சென்றவர்கள் ரத்தினசாமியையும் வரலட்சுமியையும் பார்த்தார்கள்.
எதர்சியாக தான் ராமிற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி வரலட்சுமி அவர்களிடம் பேசியது. ஆனால் பரிமளாவுக்கு தேவராஜ் தங்கள் பெண்ணிடம் உரிமையாய் கண்ணம்மா கண்ணம்மா என்று அழைத்து மருமகளைப் போல பேசியது நினைவுக்கு வர, அதை மறையாமல் வரலட்சுமியிடம் பகிர்ந்து கொண்டார்.
வரலட்சுமிடம் தூத்துக்குடி சென்றதும் அங்கே மாணிக்கம் குடும்பத்தாரை பார்த்ததை பற்றியும் கூறியிருந்தார் தேவராஜ். ஆனால் சாத்வியை தன் மருமகளாக அழைத்த விஷயத்தை பற்றி மனைவியிடம் கூறவில்லை.
சாத்வியுடைய தந்தையின் தொழில் எப்படியும் சாத்வி தான் பார்க்க வேண்டும் என்பது தேவராஜிக்கு நன்றாக தெரியும். அதேபோல் பரசுராமும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான் படிப்பை முடித்தவுடன் வியாபாரத்தில் பொறுப்பெடுத்து அதை நன்றாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.
இப்படி இருவருக்குமே பொறுப்புகள் பல இருப்பதால் அந்த பொறுப்புகளை முடித்துவிட்டு திருமணத்தை பற்றி பேசலாம் என்றிருந்தார் தேவராஜ் மனைவியிடம் கூறினால் படிப்பை முடித்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பார். எனவே, அவரிடம் இதைப் பற்றி கூறவில்லை.
ராமிடமோ சொல்லவே வேண்டாம் ஏதோ அவனுக்கு பெண்களை பெரிதாக பிடிக்காது என்பது போன்ற பேச்சு ஒரு முறை அர்ஜுன் அவனை கிண்டல் செய்யும் போது இவர் காதில் விழுந்தது. மகன் இப்படி ஒரு கருத்தில் இருக்கிறானா என பயம் அவருக்கு வந்தது அவன் கல்யாணத்தை எண்ணி. ஆனால் இது எதனால் இருக்கும் என்பதும் அவருக்கு புரிந்து இருந்தது. அவரிடமே அவன் பகிர்ந்து விஷயங்கள் தானே. ஆனால் சாத்வி மிகவும் நல்ல பெண் திருமணம் என வரும் பொழுது சாத்வியை கை நீட்டினால் நிச்சயம் அவன் மணந்து கொள்வான் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. எனவே, மகனிடம் இப்பொழுது சொல்ல வேண்டாம் என்று அவனிடமும் கூறவில்லை.
அப்பொழுதுதான் வரலட்சுமிக்கு அது தோன்றியது தன் கணவரின் ஆசை ஏன் இதையே செய்து விடக்கூடாது என யோசிக்க ராமுக்கு சாத்வியை கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் அது சம்பந்தமாகவே இருக்க ஒத்துக்கொண்டார்கள்.
பரிமளா தான் இந்த விஷயத்தை சாத்வியிடம் கூறினார்.
“சாத்வி தேவராஜ் மாமா ஞாபகம் இருக்கு இல்ல.”
“மாமாவ எப்படிமா மறக்க முடியும்? கண்ணம்மா கண்ணம்மானு அவ்வளவு பாசமா இருப்பாரே.” என அந்த நாள் ஞாபகத்தில் மூழ்கினாள் சாத்வி.
“இது தெய்வ சங்கல்பமா என்னன்னு எனக்கு தெரியல சாத்விமா அவர் நினைத்தா மாதிரியே அவரோட பையன் ராம்க்கு உன்ன பொண்ணு கேட்டு இருக்காங்க அவங்க அம்மா.” எனக் கூறியவர் தன் பெண்ணின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தார்.
“ம்மா என்ன சொல்றீங்க?” என சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது அவளிற்கு.
“நீ என்ன சொல்ற சாத்விமா உனக்கு இந்த விஷயம் சம்மதமா?” என அவர் பெண்ணை கேட்க, அவளோ தன் பெற்றோருக்கு சம்பந்தம் என்றால் தனக்கும் சம்மதம் எனக் கூறி முடித்து விட்டாள்.
இன்று!
“நிச்சயமா எனக்கு பெரிய அதிர்ச்சி தான் பரஸ். மாமா சின்ன வயசுல விளையாட்டா என்ன வீட்டுக்கு மருமகளா வர சொல்லி கேட்டப்ப நான் விளையாட அவர் கிட்ட பேசி இருக்கேன். ஏன் நான் காலேஜ்க்கு போகும்போது கூட அவர் அது மாதிரி பேசும் போதெல்லாம் விளையாட்டா நானும் உங்கள வச்சு பேசி இருக்கேன். ஆனா இப்படி நான் உங்களையே கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சு கூடப் பார்த்ததே இல்லை. முதல் முதலா உங்கள அந்த காபி ஷாப்ல பார்க்கும்போது மாமா உங்கள பத்தி பேசி இருந்ததுனால பழகுன எண்ணம் தான் வந்துச்சு புதுசா பாக்குற மாதிரி தோணல. அது மட்டும் இல்லாம உங்கள பாக்கும்போது தேவராஜ் மாமா கண்ணு முன்னாடி வந்தாரு அவர் என்கிட்ட எவ்ளோ பாசமா, எவ்வளவு அன்பா பேசுவார் தெரியுமா? ஏனோ அந்த குடும்பத்துக்கு நான் கல்யாணம் பண்ணி போக போறன்றத நினைச்சு ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் ஆச்சரியம். இதுதான் பரஸ் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கான உண்மையான ரீசன். லைஃப் போற போக்குல போய் பாக்கணும்னு நினைக்கிறவ தான் இருந்தாலும் இந்த கல்யாண விஷயம் தேவராஜ் மாமா என்ற ஒருத்தர் என் கண்ணுக்கு தெரிஞ்சு இல்லனா கொஞ்சம் யோசிச்சு இருப்பேன்.” என அவள் கூறிக் கொண்டே இருக்க இதெல்லாம் ராமிற்கு அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது.
மனம் கொள்ளை போகுமா…