லேவியின் நவி-எபிலாக்
மார்ட்டினாவின் வளைகாப்பு முடிந்த ஐந்தாம் நாள் அவளுக்கு பிரசவ வலி எடுக்க, உடனே ஜானிடம் விஷயம் கூறப்பட்டது.
அனைவரும் மருத்துவமனைக்கு சென்றார்கள். தொப்புள் கொடி குழந்தையை சுற்றி இருப்பதால் சுகப்பிரசவம் செய்ய இயலாது என அவசரமாக அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தார்கள் மருத்துவர்கள்.
பெர்னத் மிகவும் உடைந்து விட்டார். அவருக்கு பெண் தானே எல்லாமே. அவரை அந்த நேரத்தில் ஆறுதல் படுத்தியது வைஷ்ணவி தான்.
குழந்தைக்கும் தாய்க்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் குழந்தையை காப்பாற்றி ஆயிற்று. அவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது.
ஆனால் குழந்தைக்கு மஞ்சள் காமாலை என்றார்கள் மருத்துவர்கள். எனவே, குழந்தையை ப்ளூ லைட்டில் வைக்க வேண்டும் என்றார்கள்.
“இது குழந்தையின் கல்லீரலை எளிதாக உடைத்து, குழந்தையின் இரத்தத்தில் இருந்து பிலிரூபினை(bilirubin) அகற்றும். ரத்தத்தில் இந்த பிலிரூபின் அளவு அதிகமாவதே மஞ்சள் காமாலை நோய்க்கு காரணமாக அமைகிறது.”
இப்படி மருத்துவர் கூறிய அனைத்தும் மார்ட்டினாவை மிகவும் பயமுறுத்தியது.
அப்பொழுதெல்லாம் வைஷ்ணவி தான் அவளுக்கு துணையாக இருந்தாள். அவளுக்குத் தெரியும் குழந்தைக்கு ஒரு பாதிப்பு என்றால் எப்படி இருக்கும் என்று. அதுமட்டுமா ஆப்ரேஷன் செய்தால் உடலில் எவ்வளவு துன்பம் ஏற்படும் என்பதும் அவளுக்கு தெரியுமே. எனவே, மார்ட்டினாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தாள் அவள்.
மருத்துவமனைக்கு வெளியே ஒரு பிள்ளையார் கோவிலிருந்தது.
அங்கே சென்ற வைஷ்ணவி தன் பிள்ளையாரப்பனிடம் பனியென உருகி வேண்டினாள்.
தூரத்திலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த பெர்னத் மிகவும் கோபமாக மருமகளை திட்டுவதற்காக அருகே வர, அப்பொழுது அவள் வேண்டிக் கொண்டிருந்தது இவர் காதில் தெளிவாக விழுந்தது.
“பிள்ளையாரப்பா மார்ட்டினா அண்ணி ரொம்ப பாவம் ஆல்ரெடி நிறைய கஷ்டப்பட்டு, இப்பதான் அவங்க லைஃப் நல்லா போயிட்டு இருக்கு. ராபர்ட் அண்ணா அவங்கள நல்லா பாத்துக்கிறாரு இந்த நேரத்துல இப்படி நீ அவங்கள கஷ்டப்படுத்துறது சரியில்ல. குழந்தைக்கும் அவங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம அவங்கள நல்லபடியா நீ தான் காப்பாத்தணும்” என அவளின் வேண்டுதலை கேட்ட, பெர்னத் எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பிவிட்டார்.
மார்ட்டினா நன்றாக உடல் தேறும் வரை என்.ஐ.சி.யுவில் இருந்த குழந்தையையும் இவளே சென்று, பார்த்துக் கொண்டாள்.
அவள் தான் குழந்தையை ப்ளூ லைட்டில் வைப்பது, குழந்தையை அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்வது என அனைத்தும் செய்தாள். ப்ளூ லைட்டில் வைக்கும் குழந்தையின் கண்களை கட்டி விடுவர். ஏனென்றால் அந்த லைட் கண்களுக்கு நல்லதல்ல.
அந்த குட்டி செல்லமோ, ‘ஏன் என் கண்களை மூடுகிறீர்கள்’ என்று அதை எடுத்து எடுத்து விடுக் கொண்டிருந்தது. இவளும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் மீண்டும் கட்டிக் கொண்டிருந்தாள்.
குழந்தைக்கு பால் தேவை என்றால் மட்டும் குழந்தையை மார்ட்டினாவிடம் தூக்கிச் சென்று பால் புகட்டி, மீண்டும் எடுத்து வந்து அந்த இன்குபேட்டரில் சிறிது நேரம் வைத்து விடுவாள்.
குழந்தைக்கு பிலிரூபின் அளவு குறைந்து மஞ்சள் காமாலை சரியாகியிருந்தது.
குழந்தை நன்றாகி, மார்ட்டினாவிற்கும் சிறிது தேறிய பின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள்.
அப்படி அவர்கள் டிஸ்சார்ஜாகி கிளம்ப வேண்டி அனைவருமே காரில் ஏற, வைஷ்ணவி மட்டும் தனக்கு சிறிது வேலை இருப்பதாய் கூறி பின் தங்கினாள்.
ஜான் என்னவென்று கேட்க, அவனிடம் பிறகு சொல்வதாய் ஜாடை காட்டினாள் அவள்.
மருமகள் எதற்காக பின்தங்குகிறாள் என கணித்த பெர்னத் அவள் அறியாமல் அவளை பின் தொடர்ந்தார்.
யாரோ தன்னை பின் தொடர்வது போல் தோன்ற அவள் பின்னாடி திரும்பி பார்த்தாள். அப்போது ஒரு மரத்தின் மறைவில் மறைந்து கொண்டவர், அவள் திரும்பி நடக்கவும் மீண்டும் அவளை தொடர்ந்தார்.
இவ்வாறு வைஷ்ணவி பதுங்கி பதுங்கி சென்ற இடம் என்னவென்று இந்நேரம் உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆம் அவள் வேண்டிக் கொண்டாள் அல்லவா அந்த பிள்ளையார் கோவிலுக்கு தான் வந்திருந்தாள்.
மார்ட்டினாவும் குழந்தையும் நன்றாக குணமாகி வீட்டிற்கு செல்லும் நேரம் அவருக்கு தேங்காயை உடைப்பதாய் வேண்டியிருந்தாள்.
இன்று அவர்கள் டிஸ்சார்ச் ஆகலாம் என்று மருத்துவர் சொன்னவுடனேயே மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் ஒரு கடையில் நூற்றெட்டு தேங்காயை கோயிலில் உள்ளே எடுத்து வந்து வைக்க சொல்லி அதற்கு பணமும் கொடுத்திருந்தாள்.
அந்த கடைக்காரரும் அவள் சொன்னது போல் நூற்றெட்டு தேங்காயை கோயிலினுள் வைத்து விட்டு சென்றிருந்தார்.
“பிள்ளையார் அப்பா உன் மேல நான் வச்ச நம்பிக்கையை என்னைக்குமே நீ அழிச்சதில்லை நல்லபடியா தாயையும் பிள்ளையையும் காப்பாற்றி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிப்பா” என வேண்டிக் கொண்டே முதல் தேங்காயை எடுத்து உடைத்தாள் வைஷ்ணவி.
“நிறுத்து” என இவளின் பின்னே குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள், ஏனென்றால் அந்த குரல் யாருடையது என்று இவளுக்கு தெரிந்தே இருந்தது. அது அவளுடைய மாமியாரின் குரல் தான்.
வேர்க்க விறுவிறுக்க வெடவெடத்து போய் நின்றிருந்தாள் வைஷ்ணவி.
அருகே வந்த வெர்னத் அவளையும் அந்த தேங்காய் மூட்டையையும் மாறி மாறி பார்த்தார். பின் அவளைப் பார்த்துக் கொண்டே அந்த தேங்காய் மூட்டையிலிருந்து ஒரு தேங்காயை எடுத்தவர் அவரும் அந்த பிள்ளையாரப்பனுக்கு நன்றி சொல்லி உடைக்க, இவளுக்கு ஆச்சரியமானது.
“நீ சொன்னது சரிதாம்மா எல்லா கடவுளும் ஒன்னு தான். எந்தக் கடவுளை நான் கும்பிடாதனு உன்கிட்ட சொன்னேனோ அந்த கடவுள் கிட்டயே என் பொண்ணுக்காகவும் அவ குழந்தைக்காகவும் வேண்டிகிட்ட பாத்தியா உன்னுடைய இந்த கள்ளம் கபடமில்லா மனச இத்தன நாள் புரிஞ்சுக்காம இருந்துட்டேன்மா என்ன மன்னிச்சிடு” என்றார் உண்மையாக உணர்ந்து.
அவருக்கு வைஷ்ணவியை மிகவும் பிடித்து விட்டது. ஏனென்றால், தன் காலத்திற்குப் பின் தன் மகன் மட்டுமல்ல தன் மருமகளும் தன் மகளை தாயாக இருந்து பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு வந்துவிட்டது. இதுதான் அவரின் இந்த மாற்றத்திற்கான காரணம்.
போனவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்க்க வந்த ஜானும் தன் அன்னையின் பேச்சைக் கேட்டு, தலைகுனிந்தான்.
அவன் இதுவரை இரண்டு தெய்வங்களையும் பிரித்து பார்க்கவில்லை என்றாலும் தன் தந்தைப் போன பிறகு, அவரின் வழிப்படி நடக்க வேண்டும் என்று யோசித்தான் அல்லவா அதை நினைத்து. இதைப் புரிந்து கொள்ள தன் தந்தை இப்பொழுது உயிரோடு இல்லையே என்ற ஏக்கமும் வந்தது அவனிற்கு.
பின் அவனுமே வந்து அடுத்த தேங்காயை எடுத்து உடைத்தான். அந்த இறைவனுக்கு நன்றி சொல்லி.
மார்ட்டினா மற்றும் ராபர்ட்டும் அங்கே வந்து சேர, அனைவருமே அந்த இறைவனை வேண்டி நூற்றெட்டு தேங்காயையும் உடைத்து விட்டு வீடு திரும்பினார்கள்.
அந்த இறைவனிடம் வேண்டியது மட்டுமல்ல தங்கள் பங்கிற்கு தந்தையிடம் சொல்லி இவர்களுக்காக சர்சில் வேண்ட சொல்லியும் இருந்தாள் வைஷ்ணவி.
சர்ச்சுக்கு சென்று அந்த வேண்டுதல் நிறைவேறியதால் இறைவனுக்கு நன்றி செலுத்தி, காணிக்கையாக அங்கிருக்கும் ஏழை மக்களுக்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இவ்வாறு இறைவனுக்கு நன்றி நவிழ்தல்கள் முடிந்த பின், வீடு வந்து சேர்ந்தார்கள்.
மார்ட்டினாவை ஒன்பது மாதங்கள் அவளின் தாய் வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டார்கள்.
பெர்னத் மற்றும் வைஷ்ணவி இரண்டு பேருமே மார்ட்டினாவை தங்கத்தட்டில் வைத்து தாங்கி, அவளின் உடலை நன்றாக தேற்றிய பின்பே மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
***
சில வருடங்களுக்குப் பின்
அன்று மாலை வைஷ்ணவி வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள்.
அவள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இடையில் ஏதோ ஊர்வது போல் தோன்ற, அவளுக்கு புரிந்து விட்டது தன் கணவன் வேலையிலிருந்து வந்து விட்டான் என்று.
இப்பொழுது அவர்கள் இருப்பது சென்னையில். அவர்களின் ஆபிஸ் சரி செய்யப்பட்டு இப்பொழுது சோழிங்கநல்லூரில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறான் ஜான்.
சென்னை அலுவலகம் சரி செய்யாமல் இருந்தது, தந்தையின் மரணம், என்று இவ்வளவு நாட்களும் வீட்டில் இருந்தே வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது சில வருடமாக ஆபீசுக்கு சென்று கொண்டிருக்கிறான்.
ஜான் மட்டுமல்ல வைஷ்ணவியும் அங்கே தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். இன்று அவளுக்கு அதிகாலை சிப்ட். எனவே, அதை முடித்துக்கொண்டு வீட்டில் சாவகாசமாக அமர்ந்திருந்தாள்.
“என்ன பண்றீங்க அதுவும் வெளியவே” என கோபமே இல்லாமல் திட்டினாள் இவள்.
“என் பொண்டாட்டிய நான் கட்டிப்பிடிக்கிறேன் என்னை எவன் கேட்பான்” என இவன் கூறிக் கொண்டிருக்கும் போதே,
அவர்களின் சீமந்த புத்திரன் இனியன் வந்து சேர்ந்தான். “அப்பா வெரி பேட்” என தன் தந்தையை திட்ட,
இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னடா சொல்ற ஏன் அப்பா பேட்” என்று புரியாமல் கேட்டாள் நவி.
“மா நேத்து பார்த்த அந்த படத்துல அந்த அங்கிள் அந்த ஆன்ட்டியை கட்டிப்புடிச்ச உடனே இன்னொரு அங்கிள் வந்து அடிச்சாருல, அப்போ நீ என்ன சொன்ன கட்டிப்பிடிக்கிறது பேட் அதனால தான் அந்த அங்கிள் வந்து அடிக்கிறார்னு சொன்னல்ல” என இவன் பெரிதாக கேட்க,
வைஷ்ணவிக்கு அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிந்து விட்டது.
“அப்பா இப்போ உன்ன கட்டிப்புடிச்சாருல அப்போ அப்பாவும் பேட் தானே” என கேட்டானே பாப்போம்.
வைஷ்ணவிக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
“டேய் அப்பா அம்மாவ கட்டி புடிச்சா தப்பு இல்லடா வேற யாரையாவது கட்டிப்புடிச்சா தான்டா தப்பு” என ஜான் பிள்ளைக்கு விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க,
“பிள்ளை கிட்ட போய் என்ன பேசிட்டு இருக்கீங்க” என தன் கணவனை கடிந்துக் கொண்டாள் வைஷ்ணவி.
“நான் சொன்னதுல என்ன தப்பு” என மனைவியிடம் மல்லுக்க நிற்க,
“அப்போ நீங்க அம்மாவ கட்டி புடிச்சா தப்பில்லையா?” என தன் தந்தை கூறியதிலிருந்து ஏதோ அவனுக்கு புரிந்ததை கேட்டான்.
“இல்லடா கண்ணா அவங்க அவங்க பொண்டாட்டிய கட்டி புடிச்சுக்கலாம் அது தப்பு கிடையாது” என்ற ஜானின் விளக்கத்தில் பிள்ளை சுமத்தாக தலையாட்டி உள்ளே சென்று விட,
“பாத்தீங்களா இதுக்கு தான் அவன் எதிர்க்க இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்கன்னு சொல்றது கேட்டா தானே” என கணவனை பொரிந்து தள்ளினாள் வைஷ்ணவி.
“அப்படி என்ன வெளிய வச்சு பெருசா பண்ணிட்டேன் கட்டி தானே புடிச்சேன் அது ஒரு தப்பா” என்றவனை அடிப்பதற்காக துரத்த,
அவனோ அவள் கைகளில் பிடிபடாமல் ஓடிக் கொண்டிருந்தான்.
அங்கே கையில் ஒரு ட்ரெயில் டீயுடன் வந்த பெர்னத் அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு டீயை கொடுத்தார்.
குட்டி பையனையும் அழைத்து அவனுக்கும் பாலை கொடுத்தார்.
“நீங்க எதுக்கத்த கஷ்டப்படுறீங்க நானே வந்து டீ போட்டு இருப்பனே” என வைஷ்ணவி கேட்க,
“இல்லம்மா ஜான் வந்த சத்தம் கேட்டுச்சு. எப்படியும் அவன் வந்தவுடனே நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்பீங்கல்ல அதனால தான் நானே டீயை போட்டுட்டேன்” என்றார் பெர்னத்.
பெர்னத் இப்பொழுது ரிட்டயர் ஆகிவிட்டார் அவரையும் அவர்களுடனே சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்கள் லேவியும் நவியும்.
“அத்த அம்மா தீபாவளிக்கு வீட்டுக்கு வர சொல்லி போன் பண்ணி இருந்தாங்க” என வைஷ்ணவி தன் அத்தையிடம் ஆரம்பிக்க,
“ஆமாமா எனக்கும் போன் பண்ணாங்க எல்லாருமே கிளம்பி போயிட்டு வருவோம். மார்ட்டினாவையும் ராபர்ட்டையும் கூட அங்க வர சொல்லி இருக்கேன்” என்றார் பெர்னத்.
ஆம், இப்பொழுதெல்லாம் தீபாவளி, பொங்கலுக்கு இவர்கள் அனைவரும் கிளம்பி வைஷ்ணவியின் வீட்டிற்கு சென்று கொண்டாடுவதும், ஈஸ்டர், கிறிஸ்மஸ்க்கு காமாட்சியும் திலகவதி அம்மையும் இவர்களிடத்திற்கு வந்து அனைவரும் ஒன்றாக கொண்டாடுவதும் வழக்கமாக இருந்தது.
ஜான் பெர்னத்துடன் பேச துவங்க, சிறிது நேரம் தாயும் மகனும் உரையாடட்டும் என்று எண்ணி தன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள் வைஷ்ணவி.
உள்ளே சென்றவள் தன் மகனை ஹோம் ஒர்க் செய்ய சொல்லி அவனின் ரூமுக்கு அனுப்பி வைத்து விட்டு, கீழே இருக்கும் பூஜை அறைக்கு வந்தாள்.
அங்கே மாதா, ஜீசஸ் மற்றும் ஜோசப் இவர்களின் படங்களுக்கு இடையே இருந்த அந்த பிள்ளையாரப்பனை வணங்கினாள்.
“எனக்கு தெரியும் உங்கள நம்புனா என்ன நீங்க கைவிடமாட்டீங்கன்னு. இப்ப இந்த வீட்ல இருக்க சந்தோஷம் என்னைக்குமே நிலைத்து இருக்கணும்” என அந்த இறைவனை வேண்டிக் கொண்டாள்.
பின் படத்தில் தெய்வமாய் மாறிய தன் மாமனாரை பார்த்தவள், எப்பவும் எங்க கூடையே இருங்க அப்பா என வேண்டினாள்.
நிச்சயம் அங்கிருக்கும் ஜீசஸ், மாதா, ஜோசப், பிள்ளையாரப்பன் மற்றும் அவளுடைய மாமனார் இவளின் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.இந்த குடும்பம் இனி என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கும். இனி இவர்களின் வாழ்வில் மதச் சண்டைகள் இருக்காது. அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன என்ற உண்மையை புரிந்து கொண்டார்கள் இவர்கள்.
இவர்களின் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை என்றும் தொடரட்டும் என்று நாமும் வாழ்த்திக்கொண்டு இவர்களிடமிருந்து விடை பெறுவோம்.
மதங்கள் வேறாக இருக்கலாம்
உடல் வேறாக இருக்கலாம்
ஆனால் இருவரின் உயிரும் ஒன்றாகிப் போனது அவர்களின் காதலினால்
திகட்ட திகட்ட காதல் தந்து,
எந்த ஒரு நிலையிலும் தன் கணவனை கைவிடாது,
தன் கணவனின் கோபதாபங்களை பொறுத்து,
என்னதான் புகுந்தவீட்டு நபர்கள் தன் மேல் வெறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கும் அன்பு காட்டி,
அனைவரையுமே அவள் புறம் இழுந்தவள் தான் இந்த லேவியின் நவி
***
இந்தியால எல்லா மதமும் கலந்திருக்கு. அதுலயும் நம்ம தமிழ்நாட்டுல நிச்சயம் நம்ம எல்லாரும் ஒத்துமையா தான் இருக்கோம்.
அதுக்கு ஒரு எடுத்துக்காட்டா சொல்லணும்னா பக்கத்து வீட்டு காதர் பாயோட பிரியாணியும் நோன்பு கஞ்சியும் ருசிக்காமல் இருந்திருப்போமா நாம?
எதிர்த்த வீட்டு அலெக்ஸோட கிறிஸ்மஸ் கேக்க சுவைக்காம இருந்து இருக்கீங்களா?
பக்கத்து வீட்டு சரஸ்வதி ஆண்டியோட தீபாவளி பலகாரங்களுக்கு எத்தனை வீடு அடிமையா இருந்திருக்கு.
இப்படி நமக்கு அருகிலிருக்கும் முஸ்லிம் நண்பர்கள், கிறிஸ்துவ நண்பர்கள், ஹிந்து நண்பர்கள் எல்லாருமே அவங்க அவங்க வீட்டு சமையல்களை பரிமாறி சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்குகோம்.
நமக்குள்ள சிலர் பாக்குற இந்த மத வேறுபாடுகள் ஒழியனும். மதம் என்ற பாகுபாட்டை விட்டுட்டு அன்பால எல்லாரும் ஒத்துமையா இணைஞ்சு வாழனும்.
நண்பா நண்பா
நீ நான் நாம் ஆவோம்
நண்பா நண்பா
நீ நான் நாம் ஆவோம்
தமிழ் சொல்லி தந்தது
மனிதத்தை மனிதத்தை மனிதத்தை
இனம் என பிரிந்தது போதும்
மதம் என பிரிந்தது போதும்
மனிதம் ஒன்றே தீர்வாகும்
உயிர்களை இழந்தது போதும்
உறவுகள் அழிந்தது போதும்
அன்பே என்றும் தீர்வாகும்
சுபம்